Logo

ஆகாயத்தில் இருந்து வந்த அஸ்தி கலசம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 9608

மீபத்தில் டில்லியில் இருக்கும் என் நண்பனின் கடிதம் வந்தது. அவன் ரகசிய போலீஸ் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் எழுதியிருக் கிறான்: "நண்பனே... நீ ஒரு எழுத்தாளன் தானே! நீ ஒரு சாதாரண துப்பறியும் நாவலை எழுதக்கூடியவனாக இருந்தா லும். நீ ஒரு எழுத்தாளன்தான். நான் இப்போது கூறப்போகும் சம்பவம் உனக்கு எந்த விதத்திலாவது உதவுமா என்று பார். ஞாயிற்றுக்கிழமையாதலால்  நான் வெறுமனே வராந்தாவில் உட்கார்ந்து தெருவில் போவோர் வருவோரைப் பார்த்தவாறு இருந்தேன். அப்போது ஒரு ஆள் திடீரென்று என்னையே உற்றுப் பார்த்தவாறு கேட்டைத் திறந்து என் வீட்டுமுன் இருக்கும் பூச்செடிகளைத் தாண்டி என்னை நோக்கி வந்தான்.

தோளில் ஒரு துணி மூட்டை தொங்கிக்கொண்டி ருக்கிறது. கையில் ஆட்டு இடையர்கள் பயன்படுத்தும் ஒரு மரக்கொம்பு. தலையில் ஒரு தலைப்பாகை. அதற்கு மேல் ஒரு கம்பளித் தொப்பி. இந்த உஷ்ண நேரத்தில் இப்படியொரு வேஷம்! அவன் அணிந்திருந்ததுகூட ஒரு கிழிந்துபோன கம்பளி ஆடைதான். காலில் இறுக்கிப் பிடிக்கிற மாதிரி பைஜாமா அணிந்திருந்தான். அந்த ஆளுக்கு முப்பது... முப்பத்தைந்து வயது இருக்கும். சிவந்த முகத்தில் சிறு தாடி இருந்தது. இமாலய மலைப்பகுதியில்  இருந்து வரக்கூடிய ஆள் என்பதைப் பார்த்தபோதே புரிந்துகொள்ள முடிந்தது. ஏதாவது உதவி எதிர்பார்த்து வந்திருக்க வேண்டும். அவன் சிறிது நேரம் என்முன் எதுவுமே பேசாமல் நின்றிருந்தான். நானும் அவனையே உற்றுப் பார்த்தேன். அடுத்த நிமிடம் அவன் தலைதாழ்த்தி என்னை வணங்கினான். தொடர்ந்து சொன்னான்: “பொறுத்துக்கணும், ஸாப்... கொஞ்ச நேரம் நான் உங்கக்கிட்ட பேசணும்...''

“என்ன சொல்லு...'' நான் சொன்னேன்: “இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே. நேரம் நிறைய இருக்கு. தாராளமா பேசு. பணம் மட்டும் கிடையாது!''

நான் இப்படிச் சொன்னதும் அவன் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அவன் கேட்டைத் திறந்து பாதைப் பக்கம் தன் கையிலிருந்த கொம்பைக் காட்டினான். அடுத்த நிமிடம்- கேட் வழியே முதலில் ஒரு ஆட்டுக்குட்டி வந்தது. அதைத் தொடர்ந்து சுமார் அறுபது... எழுபது செம்மறி ஆடுகள் ஒரு பெரிய கூட்டமாக உள்ளே நுழைந்தன. வளைந்த கொம்புகளையும், சிவப்பு நிற மூக்குகளையும், பூனைக் கண்களையும், உடல் முழுக்க அழுக்கடைந்துபோன பஞ்சு போன்ற மிருதுவான ரோமத்தையும் கொண்ட ஆடுகள்.

இவ்வளவு பெரிய ஆட்டுக் கூட்டத்தைப் பார்த்த நான் உண்மையிலேயே பதறிப் போனேன். திடுக்கிட்டுப் போய் அந்த ஆளிடம் சொன்னேன்: “என்ன இது! என்னோட பூச்செடிகளை எல்லாம் இந்த ஆடுகள் தின்னுறப் போகுது.''

அதற்கு அந்த ஆள் சொன்னான்: “பயப்படாதீங்க, ஸாப். நான் சொல்லாம இந்த ஆடுங்க ஒண்ணுமே பண்ணாது. வழியில் ஏதாவது வண்டிகள் இடிச்சிடும்னு...''

சில ஆடுகள் என்னையே உற்றுப் பார்ப்பதுபோல் எனக்குத் தோன்றியது. எது எப்படியோ... தங்களின் குட்டையான வால்களை ஆட்டியவாறு ஏதோ ஒரு அபய கேந்திரத்திற்குள் நுழைந்தது மாதிரி என் பூச்செடிகள் நிறைந்த தோட்டத்தில்  பொறுமையுடன் அவை காத்துக்கிடந்தன.

அப்போது இடையன் தன் கையில் இருந்த துணி மூட்டையை அவிழ்த்தவாறு சொன்னான்: “ஸாப்... நான் இந்தப் பொருட்களோட சொந்தக்காரரை இந்தப் பட்டணத்துல இப்போ தேடிக்கிட்டு இருக்கேன்.... இதை அவங்க கையில ஒப்படைச்சா பெரிய அளவுள சன்மானம் கிடைக்கும்னு சொன்னாங்க ஸாப். இதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? படிப்பு வாசனை இல்லாத இந்த ஏழைக்கு ரொம்பவும் உதவியா இருக்கும்.''


அவன் அந்த மூட்டையைத் திறந்து காண்பித்தான். உடைந்த ஒரு பானையின் துண்டுகளும், கொஞ்சம் கரிக்கட்டைகளும், ஒரு எரிந்துபோன சாமந்திப்பூ மாலையும் அதில் இருந்தது.

“இதெல்லாம் என்ன.'' நான் பயந்துபோன குரலில் கேட்டேன். “மந்திர தந்திர காரியங்கள் ஏதாவது...''

“இல்ல ஸாப்...'' அவன் ஆடுகளை ஒருமுறை திரும்பிப் பார்த்தவாறு சொன்னான். “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நான் கங்கோத்ரிக்கு மேலே மலைச்சரிவுல இருந்து புல்வெளியில ஆடுகளை மேய்ச்சிக்கிட்டு இருந்தேன். நல்ல வெயில். ஆடுகள் இலைகளையும், வேரையும், பனி உருகி பச்சைப் பசேல்னு வளர்ந்திருந்த புல்லையும் மேய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. நான் ஒரு கல்மேல உட்கார்ந்து வெயில் காய்ஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்படியே என்னை மறந்து தூங்கிட்டேன். அப்போ திடீர்னு ஒரு பெரிய சத்தம்... ஒரு ராட்சசத்தனமான ஒலி. அதைக் கேட்டு அதிர்ச்சியடைஞ்சுபோய் கண்ணைத் திறந்தேன். என்னன்னு பார்த்தா, மலை இடிஞ்சு கீழே விழுந்துக்கிட்டு இருக்கு. பனிப் பாறைகள் கீழே உருண்டு வந்துக்கிட்டு இருக்கு. பூமி குலுங்குது. உலகம் அழியப் போகுதுன்ற முடிவுக்கு நான் வந்துட்டேன். ஆடுகள் அத்தனையும் பயந்துபோய் என்ன செய்றதுன்னு தெரியாம ஒண்ணு சேர்ந்து கூட்டமா நின்னுக்கிட்டு இருக்கு. எல்லா ஆடுகளும் ஆகாயத்தையே பயந்து போய் பாக்குது. மேகங்களுக்குப் பின்னாடி யாரோ போறாங்க வர்றாங்கன்ற மாதிரி ஆடுகள் பாக்குது. மனிதனோட பாவச் செயல்கள் அதிகமாகி, சகிச்சுக்க முடியாத பகவான் கைலாசத்துல இருந்து எல்லாத்தையும் விழுங்குறதுக்கு இறங்கி வர்றாப்போல இருக்குன்னு நான் நினைச்சேன். நான் மனம்விட்டு சொன்னேன்: "பகவானே... ஒண்ணும் தெரியாத இந்த ஏழை ஆட்டு இடையன்மேல கருணை காட்டு.' நான் தலை குனிஞ்சு நின்னு பகவானைக் கும்பிட்டேன். "இந்த ஆடுகளை நான் ஒருநாள்கூட துன்புறுத்தினது இல்ல... இந்தக் கம்பை வச்சு சும்மா பயமுறுத்தி இருக்கேன். அவ்வளவுதான். என்னோட அப்பாவும் அம்மாவும் வயசாகிப்போய், நடக்க முடியாம வீட்டுல இருக்காங்க. அவங்க இனிமேலும் கவலையும் கஷ்டமும் படுறமாதிரி தயவுசெஞ்சு எதுவும் செஞ்சிடாதே. நான் அவுங்களுக்கு இருக்குற ஒரே மகன். நான் இல்லைன்னா யாருக்குமே தெரியாம அவுங்க பட்டினி கிடந்து செத்துப்போயிடுவாங்க. நீதான் எனக்கு எதுவும் கேடு வராம காப்பாத்தணும்...'

அடுத்த நிமிஷம் என் தலையில ஏதோ வந்து மோதுச்சு. அவ்வளவுதான்- நான் மயக்கம் போட்டுக் கீழே விழுந்துட்டேன். ஆடுங்க என் முகத்தை நக்குறது தெரிஞ்சு நான் எந்திரிச்சேன். என் தலையின் ஒரு பக்கம் வலிச்சது மாதிரி இருந்துச்சு. தொட்டுப் பார்த்தா, ஒரே ரத்தம். என் கால் பாதத்துக்குக் கீழே இந்த உடைஞ்சு போன சட்டியும், அதுக்குள்ள இந்த கரிக்கட்டைகளும், சாமந்திப்பூ மாலையும் இருக்கு. இது எப்படி என் காலுக்குக் கீழே வந்துச்சுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. நான் கேட்ட சத்தத்துக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோன்னு நினைச்சேன். ஆகாயத்தில் இருந்து வந்து என் காலுக்குப் பக்கத்துல விழுந்துகிடந்த பொருட்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து முட்டை கட்டினேன். தலை ஒரேயடியா சுத்துச்சு. அதையெல்லாம் பெரிசா எடுக்காம நான் பாட்டுக்கு நடந்தேன். கடைசியில பால் விக்கிற பட்டாள போஸ்ட்டுக்கு ஓடினேன். அங்கேயிருந்த பட்டாளக்காரங்ககிட்டே விஷயத்தைச் சொன்னேன். நான் சொன்ன விவரங்களைக் கேட்டு முதல்ல அவங்க சிரிச்சாங்க.

பட்டாளக்காரங்கள்ல ஒரு ஆள் பந்தாவான குரல்ல என்கிட்ட சொன்னார். "டேய்... உனக்கு ஒரு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு. உனக்குக் கிடைச்சிருக்கிறது ஒரு மிகப்பெரிய பொக்கிஷம். இதோட சொந்தக்காரர் டில்லியில் இருக்காரு. நீ இதை எடுத்துட்டு டில்லிக் குப் போயி அவர் யாருன்னு  தேடு. அவர் ஒரு பெரிய மனிதர். நீ அவரை விசாரிச்சு போய் பார்த்தேன்னா, நிச்சயம் உனக்கு பெரிய அளவுல சன்மானம் கிடைக்கும்.'

என்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு கொடுக்குற வேலையை, பட்டாளக்காரங்களுக்கு சுகம் தர்றதுக்காக அந்தப் பகுதியில சுத்தித் திரியிற ஒரு ஏழைப் பொண்ணுக்கிட்ட ஒப்படைச்சிட்டேன். ஆனா, நான்  அங்கே இல்லைன்னா இந்த ஆடுகளை யார் பாக்குறது? எனக்கு இந்த ஆடுகளைப் பிரிஞ்சு இருக்குறதுன்றதும் கஷ்டமான ஒரு விஷயம்தான். நான் இந்த ஆடுகளையும் இழுத்துக்கிட்டு, இந்த மூட்டையையும் தூக்கிக்கிட்டு பத்து நாட்களுக்கு முன்னாடியே மலையிறங்கிட்டேன். வர்ற வழியில ஆடுகளை மேய விட்டுக்கிட்டே வந்தேன். பத்து நாட்கள் கழிச்சு இன்னைக்கு இங்கே வந்திருக்கேன். யமுனை நதிக்கரையில இருந்த ஒரு புல்வெளியில நேத்து தங்கினோம். பக்கத்துல ஏதோ ஒரு மகானோட சமாதி இருந்துச்சு. நான் அங்கே வேலை பாக்குற ஆளுங்ககிட்டயும் அங்கே காவலுக்கு நின்ன போலீஸ்காரங்க கிட்டயும் இந்தச் சட்டியோட உரிமையாளரைத் தெரியுமான்னு கேட்டேன். அவங்க என்னை ஒரு மாதிரியா பார்த்தாங்க. போலீஸ்காரங்க அவுங்களுக்குள்ள "குசுகுசு'ன்னு என்னவோ பேசிக்கிட்டாங்க. ஒரு போலீஸ்காரன் கையில இருந்த கம்பால என்னோட ஆடுகளை வேணும்னே குத்தினான். அவங்க தேநீர் குடிக்கப் போயிருந்த நேரம் பார்த்து நான் ஆடுகளோட அந்த இடத்தைவிட்டு தப்பிச்சிட்டேன். என்ன இருந்தாலும், பண விஷயமாச்சே! பயப்படுறது நியாயம்தானே, ஸாப்! நான் இப்பவும் இந்தப் பொருட்களோட உரிமையாளர்  யார்ன்ற தேடல்லதான் இருக்கேன். இதுக்கு மட்டும் பெரிய ஒரு தொகை கிடைச்சிடுச் சுன்னா, என்னோட வாழ்க்கை நிலையே முழுசா மாறிடும். ரெண்டு நேரமும் தீயில சுட்ட, காய்ஞ்சு போன ரொட்டியும், ரெண்டு மிளகாய் வத்தலும், பால்போடாத தேநீரும் சாப்பிட்டு வாழ்ற என்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பாசுமதி அரிசியால செஞ்ச சோறும், வெங்காயமும், எண்ணெய்யும் சேர்த்து சமையல் செய்த பருப்பும், மசாலா சேர்த்த வறுத்த உருளைக் கிழங்கும் நான் கொடுப்பேன். எல்லா பாலையும் விக்காம, கொஞ்சம் பாலை மீதி வச்சு அவங்களுக்கு தேநீரில பால் ஊத்திக் கொடுப்பேன். இந்த ஆடுகளுக்கு ராத்திரி நேரத்துல தங்குறதுக்கு புல் வேய்ஞ்ச ஒரு தொழுவம் உண்டாக்கணும், ஸாப். நீங்கதான் இந்தப் பொருள் களோட சொந்தக்காரர் யார்னு எனக்குக் கண்டுபிடிச்சுத் தரணும், ஸாப். உங்க முகத்தைப் பாக்குறப்பவே தெரியுது, பல ரகசியங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கிற ஆள் நீங்கன்றது...''

அவன் என் கால்களில் விழுந்தான். நான் ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போனேன். ரகசியங்களைத் தெரிந்து வைத்திருக்கும் முகம்! எனக்கா? அப்படியானால், என்னைக் கண்டால்? நான் எனக்குள் உண்டான பரபரப்பை அடக்கிக்கொண்டு நிதான நிலைக்கு வந்தேன். மலைகளில், குளிர்ச்சியான புல்வெளிகளில் சுதந்திரமாக அலைந்து திரிந்த ஆடுகள் என்னுடைய நாற்பத்து மூன்று டிகிரி உஷ்ணமுள்ள தோட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றன. நான் என் மனைவியிடம் சொன்னேன்: “இந்த ஆளுக்கு ஒரு கப் தேநீர் கொண்டு வா. இந்த ஆடுகளுக்கு தண்ணி கொண்டு வா.''

அவள் கறுத்துப்போன முகத்துடன் தேநீர் கொண்டு வந்து வைத்தாள். ஆடுகளைப் பார்த்து தலையை ஒரு மாதிரி ஆட்டிய வாறு திரும்பிப் போனாள். நான் ஒரு தண்ணீர் தொட்டியை முன்னால் கொண்டு வந்து வைத்தேன். ஆடுகள் வயிறு நிறைய தண்ணீரைக் குடித்தன. அவை ஒவ்வொன்றும் தண்ணீர் குடித்து முடித்ததும் என் கண்களையே பார்த்தன.

இடையன் தேநீர் குடித்து முடித்ததும் நான் அவனிடம் சொன்னேன்: “நண்பனே... இது ஒரு பெரிய பொக்கிஷமா எனக்குத் தோணல. யாருடைய அஸ்திக் கலசத்தோட உடைஞ்ச பாகமோ இது, தெரியல... இதுக்கு யார் பணம் தருவாங்க?'' என் மனதில் கடந்துபோன சில சந்தேகங்களை நான் அவனிடம் கூறவில்லை. என்ன இருந்தாலும் நான் ஒரு ரகசிய போலீஸ்காரன் ஆயிற்றே!

“ஆகாயத்துல இருந்து விழுந்த பொருட்கள் இவை, ஸாப்...'' அவன் சொன்னான்: “என்னையே தேடி இந்தப் பொருட்கள் வந்துச்சுன்னு கூட சொல்லலாம். ஒரு ஏழையோட கஷ்டத்தைப் பார்த்து கடவுளே பரிசாகத் தந்த பொருட்களாச்சே! எதுவுமே இல்லாம நான் மறுபடியும் இந்த ஆடுகளைக் கூட்டிட்டு திரும்பவும் மலைஏறி வறுமை வாழ்க்கை வாழணுமா? இங்கேயிருந்துதானே ஸாப் இந்த இந்துஸ்தானியையே ஆளுறாங்க! அவங்கள்ல யாரோ ஒருத்தரோட பொக்கிஷங்கள்தான் இந்தப் பொருட்கள், ஸாப். இந்தக் கரிக்கட்டைகளும், எலும்புத் துண்டுகளும் ஒருவேளை வைரமும், மாணிக்கமுமா இருக்கலாம். அவுங்க இதை வாங்கிக் கிட்டு ஒரு சின்ன தொகை தந்தாலும் போதும்- நான் இந்த ஆடுகளைக் கூட்டிக்கிட்டு மலை ஏறிப் போறப்பவாவது பட்டினி இல்லாம போய்ச் சேருவேன்!''


நான் வீட்டுக்குள் போய் மனைவிக்குத் தெரியாமல் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து கைக்குள் வைத்தவாறு அந்த ஆளிடம் கேட்டேன். “உனக்கு திரும்பி மலைக்குப் போகணும்னா எவ்வளவு ரூபா வேணும்.''

அவன் சொன்னான்: “ஸாப்... திரும்பி மலை ஏறணும்னா அதுக்கு பதினைஞ்சு நாள் ஆகும். ஆடுகளுக்கு வழியில புல் வாங்கணும். எனக்கு ரொட்டி வாங்கணும்னா, நாளொண்ணுக்கு நிச்சயம் மூணு ரூபா ஆகும்.'' அவன் என் முகத்தையே பார்த்தான்.

நான் கையில் இருந்த நூறு ரூபாய் நோட்டை அவனிடம் நீட்டியவாறு சொன்னேன். “நண்பனே... நீ டில்லியில ஆள் தேடி அலையிற வேலை பிரயோஜனமில்லாத ஒண்ணுன்றது என்னோட கருத்து. ஒருவேளை இந்த முயற்சி ஆபத்துலகூட போய் முடியலாம். இந்த எலும்புக் கலசத்தை, பொக்கிஷம்னு பொய் சொல்லி இருக்காங்க அந்தப் பட்டாளத்தைச் சேர்ந்தவங்க. இதுக்கு யாரும் காசு தர மாட்டாங்க. இதோட உபயோகம் ஏற்கெனவே முடிஞ்சு போன ஒண்ணு. நான் சொல்ற அறிவுரை என்னன்னா, இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாம நீ திரும்பி மலைக்குப் போறது நல்லதுன்றதுதான். இன்னொரு முறை அஸ்திகலசம் ஆகாயத்துல இருந்து உன்னோட தலையில விழாம இருக்கணும்னு நான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். பட்டாளக்காரங்க இதைப் பார்த்துச் சிரிக்கலாம். காரணம்- இந்த அஸ்தி கலசங்களை எறியிறதே அவங்கதானே!''

அவன் என்னை வியப்புடன் பார்த்தவாறு கேட்டான்: “நீங்க சொல்றது உண்மையா, ஸாப்?''

“ஆமா...'' நான் சொன்னேன். “இந்த உண்மைகள் தெரியாததுனாலதான் டில்லியில இருக்குற எலும்புக் கலசங்கள் உன்னோட தலையில விழுறதும், உன்னையும் ஆடுகளையும் பல நாட்கள் பட்டினி போடுறதும் நடக்குது. சீக்கிரம் திரும்பிப் போய் பட்டாளக்காரங்களை சந்தோஷப்படுத்துற அந்தப் பொண்ணுக் கிட்ட இருந்து உன்னோட அம்மா அப்பாவை விடுவிக்கப்பாரு. இல்லாட்டி அவங்களுக்குச் சாப்பாடு கொடுக்க, அவளைப் போக விடாமல்கூட அந்தப் பட்டாளக்காரங்க தடுக்கலாம்.''

அவன் தயங்கியவாறு நான் தந்த பணத்தை வாங்கினான். பிறகு... தலை நிலத்தில் படுகிற மாதிரி வணங்கினான். முதலில் நின்றிருந்த ஆட்டுக்குட்டியைக் கையில் எடுத்து என்னிடம் நீட்டினான். “ஸாப், இந்த ஆட்டுக்குட்டியை நான் காட்டும் நன்றின்னு நினைச்சு நீங்க வச்சுக்கோங்க. இவள் வளர்ந்து உங்களுக்கும் அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் நிறைய பால் தருவா. அருமையான- சாதுவான ஒரு தாய்க்குப் பிறந்த நல்ல மகள் இவ...''

நான் சொன்னேன்: “வேண்டாம்... இவ இந்தப் பட்டணத்தோட உஷ்ணத்துல காய்ஞ்சு கருகிப்போய்டுவா. ஒரு பிராணியையோ, மிருகத்தையோ எப்படி வளர்க்கணும்னு இங்கே இருக்குற யாருக்குமே தெரியாது. இவ மலையில குளிர்ந்த காத்துல பசும்புல் தின்னு ஆனந்தமா இருக்கட்டும். இந்த வறண்டுபோன வாழ்க்கை இவளுக்கு வேண்டவே வேண்டாம்...'' என் மனைவி இருண்டுபோன முகத்துடன் கதவுக்குப் பின்னால் நின்று என்னையே பார்த்தாள்.

இடையன் சொன்னான்: “நான் அப்ப... கிளம்புறேன், ஸாப்... நான் இனிமே டில்லிக்கு எந்தக் காலத்திலயும் வரமாட்டேன். இது ஒரு பெரிய பட்டணம்தான். இந்துஸ்தானத்தோட பிரபுக்கள் வாழ்ற இந்தப் பட்டணத்தைத் தேடி இப்பவாவது வர முடிஞ்சதே! ஸாப்... என்னைக்காவது நீங்க மலைஏறி வந்தா, கட்டாயம் என்னோட மலைச்சரிவுப் பக்கம் வரணும்- கிராமத்துக்குப் பின்னாடி அது இருக்கு.'' அவன் துணி மூட்டையைக் கட்டினான்.

நான் சொன்னேன்: “இந்தக் கரிக்கட்டைகளைத் திரும்பவும் சுமந்து செல்ல வேண்டாம். அதோ அங்கே இருக்குது என்னோட உரக்குழி. அதுல இதைத் தூக்கி ஏறி. அப்படியாவது ஒரு நன்மை இதை வச்சு நடக்கட்டும்.''

அவன் கரிக்கட்டைகளையும் எலும்புத் துண்டுகளையும் அந்தக் குழியில் வீசி எறிந்துவிட்டு, போர்வையைத் தோளில் இட்டான்.

“மனசுல இருந்தும் உடலை விட்டும் ஒரு பெரிய பாரம் இறங்கிடுச்சு, ஸாப்...'' அந்த ஆள் சொன்னான். “இப்பத்தான் மனசு சுத்தமா இருக்கு!'' இதைச் சொல்லிவிட்டு, என்னை மீண்டும் தொழுத அவன், ஆடுகளுடன் கேட்டைத் திறந்து வெளியே போனான்.

எழுத்தாளனே... இந்த ஆட்டிடையனின் பயணம் உனக்கு எந்தவிதத்திலாவது பிரயோஜனம் உள்ளதாக இருக்கின்றதா என்று பார். நீ என்றைக்காவது உன்னுடைய அந்த மாளிகையை விட்டு வெளியே வந்தால், டில்லியையும் கண்டு, தேவைப்பட்டால் கங்கோத்ரியைத் தாண்டி உள்ள அந்த இடையனின் கிராமத்திற்கே கூட நாம் ஒருமுறை போய் வரலாம். அந்த ஆட்டுக்குட்டி இப்போது எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. இப்படிக்கு- உன்னுடைய அன்பு நண்பன்.'

நான் ஒரு பேப்பரை எடுத்து எழுதினேன்: "போலீஸ்காரனான என்னுடைய நண்பனே, உன்னுடைய ஆட்டு இடையன் பற்றிய கதையைப் படித்தேன். ஆகாயத்தில் இருந்து வந்த ஓசையையும், ராட்சசத்தனமான ஒலியையும் நினைத்துப் பார்த்தபோது பயங்கர மாகத்தான் இருந்தது. அந்த ஆட்டுக்குட்டி நல்ல ஒரு கதாபாத்திரம். ஆனால், என்னுடைய படைப்புகளுக்கு இது எந்தவிதத்திலும் பிரயோஜனமாக இருக்காது. என்னுடைய துப்பறியும் கதைகளுக்குத் தேவை நீதான். ரகசிய போலீஸ்காரனே, மனம் திறந்து கூறு. உண்மையிலேயே அந்தக் கலசத்தில் என்ன இருந்தது? எது வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அந்த அஸ்தி கலசத்தைத் தொடர்ந்து ஒரு பேய் உன் வீட்டுக்குள் நுழைவதும், ரகசிய போலீஸ்காரனான உனக்கும் அந்த பேய்க்கும் ஏற்படும் மோதலும்... இது ஒரு அருமையான கதைக்கு உரிய விஷயம்.  டில்லிக்கு வர பிரியம் இல்லாமல் இல்லை. நான் அங்கு பயணமாகிவிட்டால் கதைகள் எழுதுவது கிடக்கட்டும்- இங்குள்ள விவசாய வேலைகளை யார் பார்ப்பது? உன்னுடைய அன்பு நண்பன்!'

கடிதத்தை தபால் பெட்டியில் போடும்போது நான் மகிழ்ச்சி யுடன் நினைத்துப் பார்த்தேன். அவன் ஒரு போலீஸ்காரனாக இருந்தால் என்ன? ஆகாயத்தில் இருந்து அஸ்திகலசம் விழுந்தது என்பதை நம்பவும் ஆட்டுக்குட்டியைப் பற்றிக் கவலைப்படவும் அவனால் முடிகிறதே! அந்த வகையில் சந்தோஷமே. ஹா... ஹா... அஸ்திகலசம்! ஆகாயத்தில் இருந்து...!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.