Logo

பாம்பும் கண்ணாடியும்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6570
pampum kanadium

“உங்க யாரோட உடம்புலயாவது பாம்பு சுத்தியிருக்கா? ஸ்டைலான ஒரு நல்ல பாம்பு?''

எல்லாரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இந்தக் கேள்வியைக் கேட்டது ஒரு டாக்டர். ஹோமியோபதி டாக்டர் அவர். பாம்புகளைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தக் கேள்வி வந்தது. நாங்கள் ஆர்வத்துடன் அவரையே பார்த்தோம்.

டாக்டர் தொடர்ந்து சொன்னார்: “பாம்பும் கண்ணாடியும்- இதுதான் சம்பவம்.

நல்ல வெப்பமுள்ள ஒரு ராத்திரி. அப்போ கிட்டத்தட்ட பத்து மணி இருக்கும். நான் ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சிட்டு, அறைக்கு  வந்து கதவைத் திறந்தேன். அப்போ மேலே ஒரு கிருகிரா சத்தம் கேட்டுச்சு. இந்த மாதிரியான சத்தத்தை அப்பப்போ நான் கேக்குறது உண்டு. எலிகளும் நானும்- சொல்லப் போனா- ஒண்ணா அந்த அறையில வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். நான் தீப்பெட்டியை உரசி மேஜைமேல இருந்த விளக்கைக்  கொளுத்தினேன்.

அன்னைக்கு இப்போ மாதிரி மின்சார விளக்கு அந்த வீட்ல இல்ல. அது ஒரு வாடகைக்கு இருக்கிற சின்ன அறை. அப்பத்தான் நான் டாக்டரா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சிருந்தேன். சம்பாத்தியம் அப்ப ஒண்ணும் பெருசா இல்ல. பெட்டியில அறுபது ரூபா வச்சிருந்தேன். கொஞ்சம் சட்டையும் வேஷ்டியும். பிறகு... ஒரு கறுப்பு நிற கோட்- அது அப்போ என் உடம்புல இருந்துச்சு.''

நான் கறுப்பு கோட்டையும், வெள்ளை சட்டையையும், அவ்வளவு வெண்மையா இல்லாத பனியனையும் கழற்றி கொடியில போட்டேன். பிறகு... ஜன்னல்கள் இரண்டையும் திறந்து விட்டேன். வெளிச்சுவரோடு சேர்ந்து இருக்கிற அறை அது. மாடி இல்ல. உத்திரம் வழியே எலிகள் இப்படியும் அப்படியுமாய் ஓடிக்கிட்டே இருக்கும். நான் படுக்கையைத் தட்டி சுவரோடு சேர்த்துப் போட்டேன். உறக்கம் வருவனான்னுது. கொஞ்சம் காத்து வாங்கலாமேன்னு நான் வராந்தா பக்கம் வந்து நின்னேன். ஆனா, வாயு பகவான் விடுமுறையில இருந்தாரு.

நான் திரும்பவும் அறைக்குள்ளே போயி நாற்காலியில அமர்ந்தேன். மேஜைக்குமேல இருந்த பெட்டியைத் திறந்து மெட்டீரியோ மெடிக்கான்ற புத்தகத்தை எடுத்து திறந்து மேஜை மேல வச்சேன். விளக்குப் பக்கத்துல ஒரு பெரிய கண்ணாடியும், ஒரு சின்ன சீப்பும் இருந்துச்சு.

பக்கத்துல கண்ணாடி இருக்குறதைப் பார்த்தா, அதுல நம்ம முகத்தைப் பார்க்கலாம்ன்ற எண்ணம் யாருக்குமே வருமில்ல? நான் கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன். அப்போ நான் அழகை ரசிக்கக் கூடிய ஒரு ஆளா இருந்தேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகாத காலம் அது. நான் ஒரு டாக்டர் வேற ஆச்சே! எப்பவும் மிடுக்கா இருந்தாத்தானே நல்லா இருக்கும்! நான் சீப்பை எடுத்து தலைமுடியை வாரி, ஒழுங்காக வகிடு எடுத்தேன்.

அப்போ மேல மீண்டும் அந்த கிருகிரா சத்தம்!

நான் இப்போ என் முகத்தை கண்ணாடியில பார்த்தேன். அப்போ உடனடியா மனசுக்குள்ளே ஒரு முடிவு எடுத்தேன். இனிமேல் தினமும் முகத்தைச் சவரம் செய்யணும்... ஒரு அரும்பு மீசை வச்சிக்கணும்... இப்படி ஒரு முடிவு எடுத்ததற்குக் காரணம்? தெரிஞ்சதுதானே! நான் ஒரு திருமணம் ஆகாத ஆளு... டாக்டர்...

மேலே மீண்டும் அந்த கிருகிரா சத்தம்!

நான் எந்திரிச்சு ஒரு பீடியை உதட்டுல வச்சுக்கிட்டு அறையில இப்படியும் அப்படியுமா நடந்தேன். அப்போ மனசுல ஒரு இனிமையான எண்ணம் தோணுச்சு. கல்யாணம் செஞ்சிக்கணும்... நிறைய பணமும் நல்ல ப்ராக்டீஸும் நல்ல தடிமனாவும் இருக்குற ஒரு அழகான பெண் டாக்டர்தான் எனக்கு மனைவியா வரணும். கட்டாயம் அவள் நல்ல தடியா இருக்கணும். வர்ற மனைவி ஏன் அப்படி இருக்கணும்னு நான் நினைக்கிறேன் தெரியுமா? அப்படின்னாதான் ஏதாவது பிரச்சினை வந்து அவள்கிட்டே இருந்து நாம தப்பிச்சு ஓடினாக்கூட அவளால பின்தொடர்ந்து ஓடி வந்து நம்மளைப் பிடிக்க முடியாது.

இப்படி பலவிதப்பட்ட சிந்தனைகளோட நான் திரும்பவும் நாற்காலியில வந்து உட்கார்ந்தேன். அப்போ இதுக்கு முன்னாடி கேட்ட கிருகிரா சத்தம் மாடியில கேட்கல. அதுக்கு பதிலா ஒரு ரப்பர் குழாய் விழுந்தா எப்படி மென்மையா சத்தம் கேட்கும்... அப்படியொரு சத்தம் கேட்டது. அதுக்கு மேல பெருசா எதுவும் நடக்கல. இருந்தாலும் என்னையும் மீறி பின்னாடி திரும்பிப் பார்த்தேன். திரும்பிப் பார்த்தா... நாற்காலி வழியே ஒரு தடிமனான நல்ல பாம்பு என் உடம்புல ஏறிக்கிட்டு இருக்கு.

நான் பயந்து போய் குதிக்கல; நடுங்கல; கூப்பாடு போடல. காரணம்- மேல சொன்ன எதையும் செய்ற அளவுக்கு நேரமில்ல. பாம்பு என் தோள்மேல ஏறி இடது கை முட்டிக்குமேல சுத்திக்கிட்டு படத்தை விரிச்சுக்கிட்டு இருக்கு. என் முகத்துல இருந்து மூணு நாலு அங்குலம் தூரத்துல அதோட முகம் இருக்கு.

என்னால மூச்சுவிட முடியலைன்னு சொல்றதுகூட தப்பு. நான் ஒரு கருங்கல் சிலை மாதிரி உட்கார்ந்திருந்தேன்னு சொல்றதுதான் சரி. மனசு முழுக்க ஒரே பயம் ஆக்கிரமிச்சிருந்துச்சு. என்னைச் சுற்றி மரணம் சூழ்ந்துகிட்டு இருப்பதை என்னால தெளிவா உணர முடிஞ்சது. இருட்டுல திறந்து கிடக்கிற வாசல்... இருட்டுல மூடியிருக்கிற அறை. எரிஞ்சிக்கிட்டு இருக்கிற விளக்குக்கு முன்னாடி கண்ணாடியிலும் வெளியிலும் நல்ல பிரகாசம். கற்சிலைபோல உட்கார்ந்திருக்கேன்.

இதுதான் எல்லா உலகங்களையும் படைச்ச கடவுளோட மகா சந்நிதி. கடவுள் இங்கே இருக்கார். ஏதாவது சொல்லி அவருக்கு அது பிடிக்காமப் போயிட்டா... நான் என்னோட சின்ன இதயத் துக்கு வெளியே "தெய்வமே'ன்னு பிரகாசமான எழுத்துகளால் எழுதணும்னு நினைச்சேன். கருணை வடிவமான கடவுளே!

இடது கையில் பயங்கர வேதனை. பெரிய ஒரு தடிமனான ஈயக் கம்பி... இல்லை இல்லை... தீக்கட்டையால் உண்டாக்கப்பட்ட ஒரு கம்பி என்னோட கையில் மிகவும் பலமா கொஞ்சம் கொஞ்சமா இறுக்குவதைப்போல நான் உணர்ந்தேன். கை தன்னோட சக்தியை மெதுவா இழந்துக்கிட்டு இருந்துச்சு. என்ன செய்வது?

கொஞ்சம் அசைஞ்சாலும் பாம்பு கொத்தும்.

மரணம் நாலு அங்குல தூரத்துல நின்னுக்கிட்டு இருக்கு. அப்படி அது கொத்திட்டா, உடனடியா என்ன மருந்தைச் சாப்பிடுவது? அறையில தற்போதைக்கு எந்த மருந்தும் இல்ல. அப்பாவியான பலவீனமான முட்டாளான டாக்டர்... எல்லாவற்றையும் மறந்து என் மனம் லேசாக சிரித்தது.


அந்தச் சிரிப்பு தெய்வத்துக்குப் பிடிச்சதுன்னு நினைக்கிறேன். பாம்பு மெதுவா திரும்பிப் பார்த்துச்சு. அடுத்த நிமிடம் கண்ணாடி யைப் பார்த்துச்சு.  தன் உருவம் கண்ணாடியில தெரிஞ்சதைப் பார்த்துச்சு. அதற்காக கண்ணாடியைப் பார்க்குற முதல் பாம்பே இதுவாகத்தான் இருக்கும்னு நான் சொல்லல. ஆனா, கண்ணாடியையே அது சில நிமிடங்கள் அசையாம பார்த்துக்கிட்டு இருந்த தென்னவோ உண்மை. தன்னோட அழகைப் பார்த்து அது ரசிக்குதோ என்னவோ? சின்ன அரும்பு மீசை வச்சுக்கலாம்னோ, வாலை வச்சு கண்மை பூசலாம்னோ, பொட்டு வச்சுக்குலாம்னோ- சில தீர்மானங்களை அது ஒருவேளை எடுத்திருக்குமோ?

எனக்கு எதுவுமே தெரியல. இந்தப் பாம்பு ஆணா பெண்ணா? எது எப்படியோ- அது சுத்திக்கிட்டு இருந்ததை லேசா விட்டு, மெதுவா என்னோட மடியில இறங்கி, மேஜை மேல ஏறி கண்ணாடியை நோக்கி நகர்ந்து போச்சு. தன்னைக் கண்ணாடியில பார்த்து ரசிக்கிறதுக்காக இருக்கலாம்.

நான் கருங்கல் சிலை இல்ல... ரத்தமும் எலும்பும் உள்ள மனிதன்தான். மெதுவா நான் எந்திரிச்சு நின்னேன். வாசல் வழியே வராந்தாவுக்குப் போயி- அங்கேயிருந்து படுவேகமா ஒரு ஓட்டம்!''

“அப்பாடா- தப்பிச்சுட்டீங்க. எல்லாம் கடவுளோட கருணை!'' நாங்கள் சொன்னோம். ஒவ்வொருவரும் பீடியை உதட்டில் வைத்துப் புகைத்து இழுத்தோம். ஒரு ஆள் கேட்டார்:

“டாக்டர்... உங்க மனைவி இப்போ தடிமனாத்தான் இருக்காங் களா?''

“இல்ல...'' டாக்டர் சொன்னார்: “கடவுள் நினைச்சது வேற மாதிரி. படுவேகமா ஓடக்கூடிய ஒரு ஒல்லியான பெண் எனக்கு மனைவியா வந்திருக்கா!''

இன்னொரு ஆள் கேட்டார்:

“டாக்டர்... நீங்க ஓடின பிறகு, உங்களை பாம்பு துரத்துச்சா?''

டாக்டர் சொன்னார்:

“நான் வேகமா ஓடி என் நண்பன் ஒருவனோட வீட்டுக்குள்ளே நுழைஞ்சிட்டேன். உள்ளே போன உடனே குளிச்சு, துணியை மாத்தினேன். உடம்புல தைலத்தைத் தேய்ச்சேன். மறுநாள் காலை எட்டரை மணியாகுறப்போ, அறையில இருக்குற சாமான்களை எல்லாம் எடுத்திடலாம்னு நண்பனையும், வேற ரெண்டு ஆளுகளையும் அழைச்சிக்கிட்டு நான் போனேன். ஆனால், எடுத்துட்டு வர்ற அளவுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமே இல்ல. நாங்க அங்க போறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் திருடன் எடுத்துட்டுப் போயிருந்தான். அறை காலியா இருந்துச்சு. போறதுக்கு முன்னாடி அந்தத் துரோகி ஒரு அவமானத்தை அறையிலயே விட்டுட்டு போயிட்டான்!''

“என்ன அவமானம்?'' நான் கேட்டேன்.

டாக்டர் சொன்னார்:

“என்னோட பனியன்... அது பயங்கர அழுக்கா இருந்துச்சு. அந்த ராஸ்கல் அதைப் பேசாம எடுத்திட்டுப் போய் சோப் போட்டு துவைச்சு பயன்படுத்த வேண்டியதுதானே! அதைச் செய்யாம அறையிலயே விட்டுட்டுப் போயிட்டான்!''

“அந்தப் பாம்பை மறுநாள் பார்த்தீங்களா டாக்டர்?''

டாக்டர் சிரித்தார்:

“அதற்குப் பிறகு நான் அந்தப் பாம்பைப் பார்க்கவே இல்ல... என்ன இருந்தாலும் அந்தப் பாம்பு ஒரு அழகை ரசிக்கக்கூடிய ஒரு நல்ல பாம்புன்றது மட்டும் உண்மை.''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.