Logo

படகோட்டி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6715
padakotti

தேங்காய்களை எடை போட்டு கணக்கு முடித்து பணம் கையில் கிடைத்தபோது தெரு விளக்குகள் எரியத் துவங்கி விட்டிருந்தன. “சரி... நாம போகலாம்'' என்று படகோட்டியிடம் கூறிய முதலாளி படகின் நடுப்படியில் ஏறினான்: “உன் விளக்கை இங்கே கொஞ்சம் எடு.''

கார்ளோஸ் தகர விளக்கை எரிய வைத்து ஜானியிடம் நீட்டினான். அவன் அதை வாங்கி அருகில் வைத்துவிட்டு நோட்டுகளை மீண்டும் எண்ணி தாளில் சுற்றி மடிக்குள் பத்திரமாக வைத்தான். பிறகு லாப- நஷ்டங்களை மனதிற்குள் கணக்கு போட்டுப் பார்க்க ஆரம்பித்தான்.

“இவங்ககிட்ட வியாபாரம் பண்ணி லாபம் சம்பாதிக்குறதுன்றது ரொம்பவும் கஷ்டமான விஷயம்.'' துடுப்பைப் போட்டுக் கொண்டே படகோட்டி சொன்னான்: “ஒரு தேங்காய்ல எங்கேயாவது ஒரு மஞ்சள்  புள்ளி விழுந்திருந்தா, அதைத்தான் அவனுங்க எடுத்து பெரிசா காட்டுவானுங்க. பிறகு அவனுங்க போடுறதுதான் விலை...''

ஜானி சொன்னான்: “இனி இந்த வேலை வேண்டாம். பணத்தையும் போட்டு, பத்து பதினைஞ்சு நாட்கள் பாடுபட்டு, கடைசியில வியாபாரம் முடிஞ்ச பிறகு கணக்குப் போட்டுப் பார்த்தால், அப்போதான் உண்மையான விஷயமே வெளியே தெரியுது.''

“பத்திரிகையில நல்ல விலை போட்டிருக்கும். அவங்க என்ன, வாங்கவா போறாங்க? சும்மா எழுதினா போதுமா? சரக்கை எடுத்துக் கொண்டு வியாபாரிக்கிட்ட போனால், பிறகு அவனுங்க சொல்லுறதுதான் விலை.''

“அது எப்படி வேணும்னாலும் போகட்டும்னு கூட வச்சுக்கு வோம். அவங்க கழிவுன்னு ஒண்ணு எடுக்குறாங்களே, அதுதான் தாங்க முடியாத விஷயம். நம்ம சரக்குல ரெண்டு  ராத்தல் கழிவுன்னு எடுத்திருக்குறாங்க!''

“அதுதான் நான் சொன்னேனே! நம்ம சரக்கை கோணியோட கொடுக்குறப்போ, கிலோ கிலோன்னு மணி மாதிரி சத்தம் கேட்டது. அதுல ரெண்டு ராத்தல் கழிவாம். அப்போ எவ்வளவு ரூபாய் நம்மை விட்டு போகுது? அம்பத்தொன்பது ரெண்டு. அறுபது ரெண்டு. ஆறு ரெண்டு பன்னிரெண்டு. நூற்றி இருபது. நூற்றுப் பதினெட்டு. எழுபது ரூபாய் அதுலயே போயிடுச்சே!''

“எழுபதா? பிறகு அந்தக் கழிவுக்கு அவங்க என்ன விலை வச்சாங்க தெரியுமா? அது என்ன எடை இல்லாமலா இருந்தது?''

“அப்படித் தர வேண்டிய அவசியமே இல்ல. நான் இதை அவங்ககிட்ட சொல்லல. இருந்தாலும், அதனால நஷ்டம் வருமா என்ன?''

“இல்லாம எப்படி இருக்கும்? மாசத்துல ரெண்டு தடவை பெரிய அளவுல சரக்கு கொண்டு வர்றவங்களை விட்டுட்டு, காலையில தேங்காயை உடைச்சு சாயங்காலம் அதை எடுத்துட்டு வர்ற ஏழைங்கள் கிட்ட சரக்கெடுத்தா, நஷ்டம் வராம எப்படி இருக்கும்?''

“அதைத்தான் நானும் சொல்றேன். நாம பாதிக்குப் பாதி நல்லா காய்ஞ்ச தேங்காயை எடுத்தாலும், அதை எடை போடுறப்போ நமக்கு நஷ்டம்தான் வருது. பிறகென்ன இது ஒரு தொழில்! அஞ்சாறு குடும்பங்கள் இதை வச்சு பொழைக்குதுன்றதைத் தவிர இதுல வேற என்ன இருக்கு?''

“அஞ்சாறு குடும்பங்கள் பொழைக்கணும்ன்றதுக்காக நான் நஷ்டப்பட முடியுமா? அதனால இனி தேங்காய் வியாபாரமே வேண்டாம். இன்னைக்கு நடந்த வியாபாரத்துல எவ்வளவு ரூபாய் நஷ்டம் உண்டாகியிருக்கு தெரியுமா?''

“சொன்னால் தெரியும். இல்லாட்டிகூட ஓரளவுக்கு தெரியும். இனிமேல் நாம கொல்லத்துக்கு சரக்கைத் தர வேண்டாம். ஆலப்புழை இதைவிட பரவாயில்லை...''

முதலாளி வெற்றிலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து வெற்றிலை போட்டான். ஆடையைக் கழற்றி அங்கிருந்த கொக்கியில் தொங்க விட்டான். விளக்கை அணைத்தான். அன்றைய வியாபாரத்தின் லாபத்தை நினைத்த அந்த மனிதனின் மனதும் குளிர்ச்சியான இளம் காற்றை அனுபவித்த உடம்பும் சிலிர்த்தன. வெற்றிலை போட்டது நல்ல ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது.

“பாயைக் கொஞ்சம் விரிச்சிப் போடு... காத்து இருக்குற மாதிரி இருக்கும்.''

கார்ளோஸ் நடுப்பகுதி வழியே முன் பக்கம் சென்று பாய்மரத்தில் கட்டியிருந்த கயிறைப் பிடித்தவாறு திரும்பி வந்தான். காற்று வருவதற்காக அவன் மெதுவாக ஊதினான்.

“அந்தப் பையனிடம் நான் எவ்வளவோ சொன்னேன்- படகுல போறதா இருந்தா திரும்பவும் படகுத்துறையை அடையிறது வரை உனக்கும் பொறுப்பு இருக்கு. அதனால நாம சேர்ந்து போவோம்னு. அப்போ அவனுக்கு வீட்டுக்கு அவசரமா போகணும்போல இருக்கு. இந்தக் கயிறைப் பிடிக்கிறதுக்கு அவன் இருந்திருந்தால்...!''

“அவன் சாயங்காலம் வர்றது வரை இங்கேயே சுற்றிச் சுற்றி நின்னுக்கிட்டு இருந்தது எதுக்கு? அப்படி அவசரமா போறதா இருந்தால்?'' ஜானி கேட்டான்.

“வண்டிக் கூலிக்கு உங்ககிட்ட சக்கரம் (திருவிதாங்கூர் நாணயம்) வாங்கணும்னு நின்னான்.''

“நிலா மறையிறதுக்கு முன்னாடி நாம அங்கே போயிடுவோம்ல?''

“காற்று இருந்தால் நாம போன பிறகுகூட நிலா மறைஞ்சிருக் காது!''

“சாயங்காலம் சாப்பிடுறதுக்கு சாதம் இருந்ததா?''

“படகு... இடது பக்கம் வா. சாதமும் குழம்பும் இருந்தது. நம்மோட ஒரு குழந்தை வந்திடுச்சு. அதுக்குக் கொடுத்துட்டேன்.''

“உன் குழந்தையா? எங்கேயிருந்து வந்தது?''

“என்னோடதுன்னா... நமக்குக் கொஞ்சம் வேண்டியதுன்னு அர்த்தம். நான் படகுல வந்திருக்கேன்னு விஷயத்தைத் தெரிஞ்சிக் கிட்டு, ரெண்டு மூணு ரூபாய் வேணும்னு கேட்டுக்கிட்டு அங்கே வந்தது. நான் அதுக்கு சாதத்தைத் தந்தேன்.''

ஜானிக்கு கார்ளோஸுக்கு நன்றி சொல்ல வேண்டும்போல் இருந்தது. அந்தத் தேவையைச் சொல்லி படகோட்டுவதற்கான கூலி இல்லாமல், அதற்கு மேல் இரண்டு மூன்று ரூபாய் அவன் கடன் கேட்டு, கையில் இவ்வளவு ரூபாய்களை வைத்துக் கொண்டு தான் கொடுக்காமலிருந்தால் அவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப் பான்? இன்னொருத்தன் கையில் பணம் இருப்பதைப் பார்க்கும் போது தேவையை உண்டாக்கிக் கொண்டு கடன் வாங்கி அதை நிறைவேற்றப் பார்க்கும் மனிதர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் இல்லை அவன் என்ற திருப்தி முதலாளியின் மனதில் உண்டானது.

“உன்கிட்ட பணம் கேட்டு அந்தக் குழந்தை வந்திருக்கா? நீ என்ன நிறைய சம்பாதிக்கிறவனா என்ன?''

“அந்தக் குழந்தை அப்படி யார்கிட்டயும் கேக்குற ஆள் இல்லை. அந்த அளவுக்கு அதுக்குக் கஷ்டம்போல...''

“சும்மா பணம் கிடைக்கும்னா இப்படியெல்லாம் கஷ்டம் அது இதுன்னு சொல்லத்தான் செய்வாங்க!''

“அது அப்படிப்பட்டது இல்ல. அதோட புருஷன் ஆலப்புழையில் ஒரு அலுவலகத்துல வேலைக்குப் போயிருக்கான்!''

“உன்கிட்ட பணம் கேட்டது ஒரு பொண்ணா? அவ புருஷனுக்கு அங்கே கிடைக்கிற சம்பளம் செலவுக்குப் பத்தாம இருக்கலாம். இல்லையா? ஆலப்புழையில ஒரு மாசம் இருக்குறதா இருந்தா, அதுக்கு எவ்வளவு ரூபாய் வேணும்?''


“அவன் வந்து போய் அஞ்சாறு மாதங்கள் ஆயிடுச்சு. இங்கே ஒரு பைசாகூட அவன் அனுப்புறது இல்ல. அவளும் மாமியாரும் மட்டும்தான் வீட்டுல இருக்குறாங்க. ஆம்பளையா இருக்கிறவன் ஒரு பொறுப்பே இல்லாம இருந்தா பொம்பளைங்க என்ன செய்ய முடியும்?''

“அவங்க பிறகு எப்படி வாழ்றாங்க?''

“அதைத்தான் நானும் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.''

“ம்... அதுக்குப் பிறகு?''

“அந்தப் பொண்ணு ஆலப்புழைக்குப் போகணும்.''

“அவன் இங்கே வரலைன்றதுக்காக இவ அங்கே போறதா? சரிதான்...''

“அந்தப் பொண்ணை வேற யாராவது ஒரு ஆண் கல்யாணம் பண்ணிக்கலாமே! வரதட்சணைக்குப் பதிலா அவளுக்கு வேற ஏதாவது தந்து கல்யாணம் பண்ணிக்க நல்ல மணி கட்டிய ஆம்பளைங்க அங்கே இல்லாமலா இருப்பாங்க?''

“சரிதான்... அந்த அளவுக்கு அவ நல்ல பொண்ணா என்ன?''

“யாராக இருந்தாலும் அவளைப் பார்த்தவுடனே, அப்படியே நின்னுடுவாங்க. அந்த அளவுக்கு அழகான பொண்ணு. படகு கிழக்கு பக்கம் வரணும். அந்தப் பொண்ணோட அப்பனுக்கும் சொந்தத்துல படகு இருந்தது. அந்த ஆளுக்கு கள்ளு வாங்கிக் கொடுத்து கைக்குள்ள போட்டுத்தான் அந்தப் பொண்ணையே அவ புருஷன் கட்டினான். மூணோ நாலோ மாதங்கள் அவங்க ஒண்ணா வாழ்ந்தாங்க. அப்போத்தான் அவன் ஆலப்புழைக்குப் போனான்.''

“இதெல்லாம் சமீபத்துல எங்கேயாவது நடந்ததா இருக்கும்.''

“படகு வருது. முன்னாடியும் பின்னாடியும் வருது. படகுலயும் பஸ்லயும் என்ன மக்கள் கூட்டம்!''

படகுகள் இரண்டும் தாண்டிச் செல்கின்றன.

“முதலாளி, என்ன கேட்டீங்க? ஆமா... போன வருடம்தான் கல்யாணம் நடந்தது.''

“உனக்கு அந்தப் பொண்ணுக்கிட்ட எப்படி அப்படியொரு நெருக்கம் வந்தது?''

“நெருக்கம்னு சொன்னா... அவ்வளவு சாதாரணமா அதைச் சொல்லிட முடியாது. அவளோட அப்பனுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். ஆரம்பத்துல நான் அந்த ஆள்கூடத்தான் வேலை பார்த்தேன். நான் அடிக்கடி அந்த ஆளு வீட்டுக்குப் போவேன்.''

“அப்படின்னா நீ சாதத்தைச் சாப்பிடாம, அதை அவளுக்குக் கொடுத்தது சரிதான். உன்னோட அவ உன்கிட்ட பணம் கேட்டான்னா காரணம் இல்லாமலா?''

“என் மனதறிய என்கிட்ட பணம் இருந்தா நான் கட்டாயம் கொடுப்பேன்னு அவளுக்குத் தெரியும். அவளுக்குன்னு இல்ல. ஒரு தேவைன்னு சொல்லிக்கிட்டு யார் வந்தாலும் இல்லைன்னு சொல்ல என்னால முடியாது. பதினாறு வயசுல துடுப்பைக் கையில எடுத்தேன். இப்போ பதினாலு வருடங்கள் ஓடிடுச்சு. எட்டு காசுகூட மிச்சம்னு கையில இல்ல. தெரியுமா? அதுக்காக பட்டினி கிடக்கி றேனா என்ன? அதுவும் இல்ல. அடேயப்பா! பதினாறு வருடங்கள் எவ்வளவு சீக்கிரமா ஓடிடுச்சு!''

“உனக்கு முப்பது வயசுதான் ஆகுதா? என்னைவிட நீ ரெண்டு வயது மூத்தவன்.''

முதலாளி வெற்றிலை போட ஆரம்பித்தான்.

“மாகந்தத் தயிர் உண்டு மதித்து பாடும்

கோகில நேர் மொழியாளே...''

கார்ளோஸ் பாடினான். இனிமையான அந்த இரவுப் பொழுதுக்கு பொன்பட்டு நெய்ய முயற்சிப்பதைப்போல அது இருந்தது.

ஜானி விரல்களால் நடுப்படியில் தாளம் போட்டான்.

“தெங்காற்று கிச்சுக்கிச்சு மூட்டும் பூங்குலை

தங்கும் கொன்றைதன் கிளைகள் தோறும்...''

ஜானியும் அவனுடன் சேர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந் தான்.

“தாவி தத்திக் களிக்கும் கிளிகள்

பாடின உன் மேனியழகை...''

சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது.

“பாட்டு பாடினப்போ காற்று வந்ததே! கார்ளோஸ் பையா... மீதி பாட்டையும் பாடு.'' முதலாளி சொன்னான்.

அதற்கு பதில் "சொறு சொர்ர்’’ என்றொரு சத்தம்தான். ஒரு சிறிய குழாயின் வழியாக நீர், நீரில் விழும்போது கேட்கும் சத்தம்.

“என்ன பெரிய பாட்டு!'' கார்ளோஸ் சொன்னான்: “இப்போ பாட்டெல்லாம் போயிடுச்சு. ரேஷன் அரிசி வாங்குறதுக்கான வழி என்னன்றதைப் பற்றித்தான் இப்போ சிந்தனை!''

“முன்பு இதைவிட நல்லா பாட்டு பாடுறவனா நீ இருந்திருப்பியோ?''

“நல்லா பாட்டு பாடுறவனா இருந்தேன். எங்களுக்குன்னு ஒரு நாடகக் குழு இருந்துச்சு. அதுல ரெண்டாம் ராஜபார்ட் நான்தான்.''

“அதுக்குப் பிறகு அதை நீ ஏன் விட்டுட்டே?''

“அதைவிட நல்ல வேலை இதுதான். ஒவ்வொரு நாளும் வேலை இருக்கும். பட்டினி கிடக்காம வாழலாம். நாடகத்துல நடிக்கப் போனா எப்பவாவது ஏதாவது கிடைக்கும். அதை கள்ளு குடிச்சே காலி பண்ணிடுவேன். அதனால நாடகம் எனக்கு சரியா வரல. யாராவது நடிச்சா நான் போய் பார்ப்பேன். அவ்வளவுதான். அப்போ நான் அந்தப் பெண்ணோட வீட்டுக்கு எப்பவாவது போனா, எனக்குத் தெரிஞ்ச பாட்டுகளை நான் பாடினா, அதை அந்தப் பொண்ணு நிறுத்தவே சம்மதிக்க மாட்டா.''

“உன் பாட்டுகள் மேல அந்தப் பொண்ணுக்கு அவ்வளவு விருப்பமா?''

“மல்லி செண்பகம் செவ்வந்தி செத்தி

முல்லை ரோஜா குறுமொழி ஆம்பல்

எல்லாம் உன் பார்வைக்கு ஏங்கி

வெம்பி விரியுது தினமும்...''

“இப்படிப்பட்ட பாட்டுகளைக் கேட்ட பிறகு, அதுக்குப் பிறகும் பாடச் சொல்லி அவள் வற்புறுத்துறதுல என்ன தப்பு இருக்கு?''

“எல்லாம் மறந்து போயிடுச்சு!''

“அவளைப் பற்றித்தான் இந்தப் பாட்டு. அப்படித்தானே? இந்த அளவுக்கு பிரியம் வச்சிருக்குற அந்தப் பொண்ணு வந்து உன்கிட்ட ரெண்டு ரூபாய் கேட்டதுக்கு, நீ கொடுக்கலையேடா!''

“ரெண்டு ரூபாயா? ரெண்டு ரூபாயை வச்சு என்ன செய்ய முடியும்? ஆலப்புழைக்குப் போயி அவனைத் தேடிக் கண்டுபிடிக்கணும். ஒரு வேளை திரும்பி வர்றதுக்கும் கையில காசு இருக்க வேண்டியிருக்கும். ஒரு இளம் பொண்ணு அது இல்லாம போகத் தயாரா இருப்பாளா? அஞ்சு ரூபாய் கையில இல்லாம ஒண்ணுமே நடக்காது.''

“திரும்பி வர்றதுக்கு எதுக்குடா பணம்? புருஷனைப் பார்க்குறதுக்குத்தானே அவ போறா?''

“அந்த விஷயத்துக்குத்தானே அவ அங்கே போறதே! அவன் இங்கே வந்து அஞ்சாறு மாசமாச்சுன்னு சொன்னேனே!''

“இங்கே அவளுக்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருக்கும்னு அவன் நினைச்சிருக்கலாம்.''

“அப்படிப்பட்ட பொண்ணு இல்ல அது.''

“அதுக்குப் பிறகு நீ அவள்கிட்ட என்ன சொன்னே?''

“பொய் சொல்லி தப்பிக்கிற விஷயமில்ல அது. இருந்தாலும் கையில காசு இல்லைன்றப்போ என்ன செய்ய முடியும்?''

“இதெல்லாம் நீ சும்மா பேச்சுக்காக பேசுறது... உனக்கு அந்த அளவுக்கு கட்டாயம் பணம் வேணும்ன்றது மாதிரி இருந்ததுன்னா, என்கிட்ட கேட்டிருந்தா நான் கடனா அஞ்சு ரூபா கொடுத்திருப்பேனே!''

“ஆமா... நான் உங்கக்கிட்ட கேட்கணும்னு தான் இருந்தேன். அங்கு போன பிறகு கேட்கலாம்னு நினைச்சேன். முதலாளி உங்ககிட்ட இந்த விஷயத்தைச் சொல்லல... அவ்வளவுதான்.''


“அவள்கிட்ட பணம் இல்லைன்னு சொல்லி அனுப்பிட்டே இனிமேல் உனக்கு எதுக்கு பணம்? நீ இந்த படகுல ஏறின பிறகு சொன்னதெல்லாம் பொய். உனக்கு தூக்கம் வராம இருக்குறதுக்காக, எதையாவது பேசிக்கிட்டு இருக்கணும். நான் படுத்து உறங்காம அதைக் கேட்டுக்கிட்டு இருக்கணும். அப்படியே இல்லைன்னாகூட நான் படுத்து உறங்கப் போறதும் இல்ல. நாம சேர்ந்து இருக்குறப்பவே நாலஞ்சு தடவை தேங்காய்களைத் திருடிக் கொண்டு போகல? ஒரு தடவையாவது இந்த நடுப்படியில இப்படி உட்கார்ந்து இருக்குறதைத் தவிர வேற மாதிரி என்னை எப்பவாவது பார்த்த ஞாபகம் இருக்கா?''

“நான் சொன்னது பொய் இல்ல முதலாளி. அந்தப் பொண்ணு வந்து ஆலப்புழைக்குப் போறதுக்கு ரெண்டு மூணு ரூபாய் வேணும்னு கேட்டா. அவளை தனியா போக வேண்டாம். நானே அழைச்சிட்டுப் போறேன்னு சொன்னேன். அவள் அதுக்கு சரின்னு சம்மதிச்சிட்டா. "முதலாளிக்கிட்ட அஞ்சு ரூபா கடன் வாங்குறேன். அதை படகோட்டி நான் கழிச்சிடுறேன். நாளைக்குக் காலையில ஆலப்புழைக்குப் புறப்படுவோம். இங்கே அந்தக் கோணிகள் அடுக்கி வச்சிருக்குற இடத்துக்குப் பக்கத்துல ஏறி படுத்துக்கோ'ன்னு நான் அவள்கிட்ட சொன்னேன்.''

“என்ன? இந்த படகுலயா?''

“அந்த அப்பிராணி பொண்ணு அந்த இடத்துல சுருண்டு படுத்து தூங்கிக்கிட்டு இருக்கா. நாம பேசினது எதுவும் அவ காதுல விழுந்திருக்காது. குஞ்ஞமர்ஸலியே!''

ஓடு பாய் ஒன்று வளைந்து, சுருங்கி மறு பக்கமாகப் புரண்டு விரிந்து நீள்வதற்கு இடையில் படகு இப்படியும் அப்படியுமாக ஆடியது.

அவனுடைய மர்ஸலி அழைப்பை யாரும் கேட்கவில்லை.

 

படகு ஏரியைத் தாண்டி ஒடுகலான வாய்க்காலுக்குள் நுழைந்தது.

யாரும் எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் தாண்டின.

“கார்ளோஸ் அண்ணே.'' முதலாளி அழைத்தான்.

“படகு கிழக்குப் பக்கம் வரட்டும்.''

“இந்தப் படகுல வேற ஒரு ஆளு இருக்குன்னு இதுவரை ஏண்டா சொல்லல?'' அந்தக் குரல் அவ்வளவு பலமுள்ளதாக இல்லை.

“அதைச் சொல்றதுக்குத்தான் இருந்தேனே!''

“என்கிட்ட கேட்காம ஒரு ஆளை இந்த ராத்திரி நேரத்துல படகுல ஏறச்சொல்லி படுக்க வச்சது அவ்வளவு சரியான ஒரு விஷயம் இல்ல. உன் கையில தீப்பெட்டி இருக்கா? இல்லாட்டி வேண்டாம். இங்கே இருக்கு!''

ஜானி விளக்கைப் பற்ற வைத்தான். நடுப்படிக்குப் பின்னால் சிறிது தாண்டி மடித்து வைக்கப்பட்டிருக்கும் அறுபது காலி சாக்கு களுக்கு அருகில் விளக்கை நீட்டி அந்த இளைஞன் பார்த்தான். அப்படி சிறிது நேரம் அவன் குனிந்து நின்றிருப்பதற்கு மத்தியில், அங்கு படுத்திருந்த பெண் அந்த இடத்தை விட்டு எழுந்தாள்.

“நான் பொய் சொல்லலை, முதலாளி.'' கார்ளோஸ் சொன்னான்: “குஞ்ஞமர்ஸலி நல்ல தூக்கத்துல இருக்கணும். பாவம் அந்தப் பொண்ணு...''

அவள் முகத்தைக் குனிந்து கொண்டிருந்தாள். விளக்கை கோணியின்மீது வைத்துவிட்டு, ஜானி நடுப்படிக்கு வந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வரதட்சணைக்குப் பதிலாக அவளுக்கு ஏதாவது கொடுத்து திருமணம் செய்துகொண்டு போக நல்ல மணி கட்டிய ஒரு இளைஞன் இல்லாமலா போவான் என்று கார்ளோஸ் சொன்னது ஒரு விதத்தில் பார்த்தால் சரிதான். ஜானி சிரிக்க முயற்சித்தான்.

படகைக் கரைக்குக் கொண்டு வந்த படகோட்டி ஓடு பாயைச் சுருட்டினான். பாயை எடுத்து படகுக்குள் வைத்தான். முதலாளியின் அருகில் சென்ற அவன் பல்லைக் காட்டினான்.

“கொஞ்சம் தண்ணி குடிக்கணுமே!''

“என்ன வேணும்?''

“உனக்கு காபி வேணுமா, கண்ணு?''

“எனக்கொண்ணும் வேண்டாம்.'' அவள் கீழே பார்த்தவாறு சொன்னாள்.

“நீ என்ன மனிதன்டா? வேணுமான்னு கேட்காம வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தா, குடிக்காம இருப்பாளா?''

கார்ளோஸ் பல்லைக் காட்டினான்.

ஜானி சிரித்தான்.

அவள் அசையவில்லை.

“சரி... அரை ரூபா தாங்க. முதலாளி, உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா?''

“எதுவும் வேண்டாம்.''

கார்ளோஸ் போனான்.

“அங்கே போயி கதை அளந்துக்கிட்டு இருக்கக் கூடாது. சீக்கிரமா வரணும்.'' ஜானி சொன்னான்.

இளம் முதலாளி அந்த இளம் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு ஒரு ஆசை. அவனுடைய கைகளும் கால்களும் பரபரத்தன. ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்தால் என்ன என்று அவன் நினைத்தான். ஆனால், அவன் அதைச் செய்யவில்லை. தன் கணவனை அவள் விரட்டியடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவளை உதறிவிட்டுப் போக அவனுக்கு எப்படி மனம் வந்தது?

அந்தப் பெண் என்ன நினைத்துக்கொண்டிருப்பாள்? எது எப்படியிருந்தாலும் அவளும் ஏதோ சிந்தனையில்தான் இருப்பாள். ஒரு இளைஞன். நல்ல உடல்நலத்துடன் இருப்பவன். கையில் நல்ல பணம் இருக்கிறது. நள்ளிரவு நேரம். படகுக்குள் வலையறைக்குள் இருக்கிறான். முழுமையான தனிமை. கார்ளோஸ் அண்ணனுக்கு தான் யாருமில்லை என்று அவன் ஏற்கெனவே கூறி விட்டான். திருமணம் செய்யாத பெண்ணும் அல்ல. ஒரு தேவைக்காக இந்த இடத்தில் இருக்க வேண்டிய நிலை அவளுக்கு. கார்ளோஸ் அண்ணன் நம்பி இருப்பது இந்த இளம் வயது முதலாளியைத்தான்.

“கார்ளோஸ் அண்ணனைக் காணோமே?'' அவள் வெளியே பார்த்துக் கொண்டே முணுமுணுத்தாள்.

“அவன் எப்பவும் இப்படித்தான்.'' வெளியே பார்த்தவாறு ஜானி சொன்னாள்: “அங்கே போயி எதையாவது பேசிக்கிட்டு இருப்பான். நாலு மணிக்கு முன்னாடி அவன் திரும்பி வரவே மாட்டான்.''

முதலாளி வெற்றிலைப் பொட்டலத்தை அவிழ்த்து வெற்றிலை போட ஆரம்பித்தான். சத்தம் வரும் வண்ணம் அதைத் துப்பினான்.

மர்ஸலி கொட்டாவி விடுவதை அவன் பார்த்தான்.

ஒரு ஆபத்தான சூழ்நிலையில் தான் இருப்பதைப்போல் ஜானி உணர்ந்தான். மர்ஸலி தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள். அவனுடைய பார்வை ஏற்கெனவே அவள் மீதுதான் இருந்தது. அவள் மனதிற்குள் கார்ளோஸைத் திட்டியிருக்கலாம். இல்லா விட்டால் இந்த இளம் முதலாளியுடன் இருக்கும்படி செய்து விட்டு போனதற்காக அவனுக்கு மனதிற்குள் நன்றி கூறிக்கொண்டிருக்கலாம். ஜானியின் தலைக்குள் ஒரு தெளிவற்ற நிலை நிலவிக் கொண்டிருந்தது. "கார்ளோஸ் சொன்னவை அனைத்தும் உண்மையாக இருக்குமா? கட்டிய கணவனைத் தேடி ஒரு அன்னிய இளைஞனுடன் சேர்ந்து ஒரு பெண் புறப்படுவது என்பது... அவள் என்ன வெறும் ஒருத்தியா? இருபது வயது உள்ள ஒரு அழகி! புறப்பட்டிருப்பதோ இரவு நேரத்தில். இதில் ஏதோ திருட்டுத் தனங்கள் இருக்கின்றன. அவன் அவளை ஏதோ பேசி மயக்கி திருட்டுத்தனமாகக் கொண்டு போகிறான்.


இந்தப் படகில் வந்து இவள் ஏறுவதை யாராவது நிச்சயம் பார்த்திருப்பார்கள். இப்போது யாராவது வந்து என்னைக் கண்டுபிடித்துவிட்டால்? படகோட்டி ஓடி ஒளிந்து கொள்வான். இவள் மனதில் கெட்ட எண்ணம் இருந்து, நாங்கள் தனியாக படகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஏற்கெனவே பேசி வைத்துக்கொண்டு இவளுடைய ஆட்கள் வந்து கண்டு பிடிக்கிறார்கள் என்ற சூழ்நிலை உண்டானால்... இல்லை... இந்த படகுத் துறையில் இவளை இறக்கி விட்டு விடுவேன். என்னிடம் கேட்காமல் எதற்கு கண்ட பெண்ணையெல்லாம் படகில் ஏற்ற வேண்டும்? கார்ளோஸ் இங்கு வரட்டும். இவளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் அவன் விட்டு வரட்டும். அதற்குப் பிறகு படகுத் துறையில் இருந்து படகு நீங்கினால் போதும். அவனைக் காணவில்லையே!'' ஜானி தனக்குள் கூறிக்கொண்டான்.

மர்ஸலி மனதிற்குள் நினைத்திருக்க வேண்டும். "முதலாளி ஒரு நல்ல மனிதராக இருக்கிறார். அதனால்தான் கார்ளோஸ் அண்ணன் எங்களை தனியாக இருக்கும்படி விட்டுப் போயிருக்கிறார். இல்லாவிட்டால் என்னதான் ஆனாலும் தான் அன்பு வைத்திருக்கும் ஒரு இளம் பெண்ணை இன்னொரு மனிதனிடம் விட்டு விட்டு அந்த நள்ளிரவு நேரத்தில் போக மாட்டார். சரி... அது இருக்கட்டும்... இந்த ஆள் எதற்கு இந்த வெளிச்சத்தில் உட்கார வைத்து என்னையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? விளக்கை அணைத்து விட்டால், நான் இங்கேயே படுத்துக் கொள்வேனே!'

“காப்பி போடுறதுக்கான நீர்ல சூடு இல்லாம இருந்திருக்கும். நெருப்பு எரிய வச்சிருப்பாங்க.''

“வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க?'' இளைஞன் கேட்டான்.

“கார்ளோஸ் அண்ணன் சொன்னாருல்ல... அதெல்லாம் உண்மைதான்.''

“இந்த ராத்திரி நேரத்துல...''

“....''

“என்ன புழுக்கம்!''

“இதுக்குள்ளே ஒரே புகையா இருக்கு!''

“விளக்கை அணை.''

“கார்ளோஸ் அண்ணன் ஏதாவது நினைப்பாரு...''

ஜானிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

கார்ளோஸ் திரும்பி வந்தான். அவளுக்கு தின்பதற்கு என்னவோ வாங்கிக் கொண்டு வந்திருந்தான். அவள் அதை வாங்கிச் சாப்பிட்டாள்.

அதற்குப் பிறகு பாட்டு, பேச்சு எதுவும் இல்லை. அந்த விளக்கிற்கு அங்கு வேலையே இல்லாமல் இருந்தது. "நான் படுக்க போகிறேன்பா’’ என்று கூறுவது மாதிரி மர்ஸலி அங்கு படுத்துக் கொண்டாள். படகு கரையை அடைந்தது. ஜானி கரையில் இறங்கினான்.

“ஒரு அஞ்சு ரூபாய் வேணுமே, முதலாளி!'' படகோட்டி சொன்னான்: “இந்தப் பெண்ணைக் கொண்டு போகணும்ல...''

“பொழுது விடியட்டும்.'' பணம் கேட்டது அவனுக்குச் சிறிதுகூட பிடிக்கவில்லை என்பது மாதிரி இருந்தது அந்த பதில். “நீ இப்போ என்ன செய்யப் போற?''

“இந்த நடுராத்திரி நேரத்துல எங்கே போறது? இந்தப் படகுல எங்கேயாவது படுக்க வேண்டியதுதான்.''

அவனுடைய முகத்தில் ஓங்கி ஒரு அடி கொடுத்தால் என்ன என்று நினைத்த ஜானி ஒரு நிமிடம் அங்கேயே நின்றுவிட்டு, பேசாமல் நடந்து தன் வீட்டுக்குச் சென்றான்.

காலையில் கார்ளோஸ் அவனிடம் படகு ஓட்டிய கூலி இல்லாமல் ஐந்து ரூபாய் கடனாகப் பெற்றான்.

இரவு நேரத்தில் முதலாளி ஒரு இளம்பெண்ணைப் படகில் அழைத்து வந்திருந்தான் என்றும், கார்ளோஸுக்கு ஐந்து ரூபாய் பரிசாகக் கிடைத்தது என்றும் கண்டவர்களெல்லாம் கூறி முதலாளியின் மனைவியின் காதுக்கு அந்தச் செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு உண்டான பிரச்சினைகள்...!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.