Logo

சந்தன மரங்கள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6752
sandhana marangal

விமான நிலையத்திற்கு நானே காரை ஓட்டிக் கொண்டு சென்றபோது, நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன். அவளை அனுப்புவதற்காக நான் போவது என்பது என்னுடைய இரக்க குணத்தின் மிகையான வெளிப்பாடு என்பதே உண்மை. அவள் இறுதியில் தன்னுடைய உண்மையான வடிவத்தையும் வண்ணத்தையும் காட்டிவிட்டாள். என்னையும், இறந்தவர்களும் உயிருடன் இருப்பவர்களுமான என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் முழுமையாக வெறுக்கக்கூடிய ஒரு எதிரியின் உருவம்...

ஆனால், காரைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வரவேண்டும் என்றும்; சிறகற்ற கழுகைப் போல அங்கு ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருக்கும் என்னுடைய வயதான கணவரை வார்த்தைகளாலும் விரல்களாலும் சமாதானப்படுத்த வேண்டும் என்றும் ஒரு தனிப்பட்ட தயக்கம் என்னை அனுமதிக்கவில்லை.

ப்ளாஸ்டிக் வாளிகளும் பல வண்ணங்களில் இருந்த லுங்கிகளும் வேறு பல பொருட்களும் இருந்த கடைகளைத் தாண்டி மூன்று சாலைகள் ஒன்று சேரக்கூடிய சந்திப்பை அடைந்த போது, நான் திடீரென்று என்னுடைய வண்டியை நிறுத்தினேன். பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா என் காரில் வந்து மோதி, ஒரு அழுகையுடன் நின்றது. அதன் டிரைவர் கைகளை ஆட்டுவதையும், உதடுகளை அசைப்பதையும் நான் கண்ணாடி வழியாகப் பார்த்தேன்.  மீண்டும் நான் என்னுடைய பயணத்தைத் தொடர்ந்தேன். ஆவி படர்ந்த கண்ணாடித் துண்டுகளைப் போல என்னுடைய கண்ணீர் வழிந்த கண்கள் ஆகிவிட்டிருந்தன. சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தவர்களின் முகங்கள் எனக்குத் தெளிவில்லாமல் தெரிந்தன. அவர்கள் அணிந்திருந்த ஆடைகளின் நிறங்கள் என்னுடைய கண்களை நோகச் செய்தன. நான் கல்யாணிக் குட்டியை நினைத்துப் பார்த்தேன். பழிவாங்கும் துர்க்கையாக மாறிவிட்ட கல்யாணிக் குட்டியை... ஆனால், என்னுடைய மனதில் தெளிவாக வந்து நின்றது பழைய கல்யாணிக் குட்டிதான். என்னை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு, என் கழுத்திலும் தோளிலும் சூடான கண்ணீரை விழச் செய்த உயிருக்குயிரான தோழி... அப்போது அவள் கிராமத்துப் பெண்ணாக இருந்தாள். சந்தன நிறத்தில் இருந்த இளம்பெண். என் வீட்டு எல்லைக்குள் இருந்த மாமரத்தின் உயரமான கிளையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில், அந்த மெலிந்து காணப்படும் இளம்பெண் மிதித்துக் குதித்துக் கொண்டிருப்பாள். சேகரன் மாஸ்டரின் ஒரே மகள். என்னுடைய பழைய பாவாடைகளையும் ரவிக்கைகளையும் அணிந்து என்னை எப்போதும் பின்பற்றிக் கொண்டிருந்தவள். என் நெருங்கிய தோழியாக இருந்தாலும், என்னுடைய உணவு அறைக்குள்ளோ படுக்கையறைக்குள்ளோ நுழைவதற்கு அவளுக்கு அனுமதியில்லை. ஒருமுறை என்னுடைய வற்புறுத்தலுக்கு சம்மதித்து அவள் என் கட்டிலில் வந்து உட்கார்ந்தாள். அதைப் பார்த்து அறைக்குள் வந்த என்னுடைய பாட்டி அவளை கடுமையாகத் திட்டி வெளியேற்றி விட்டாள்.

"இந்தப் பொண்ணுக்கு அம்முவின் படுக்கையில் வந்து உட்காரும் அளவிற்கு எப்படி தைரியம் வந்தது?"- பாட்டி கேட்டாள். அதற்குப் பிறகு மூன்றோ நான்கோ வாரங்களுக்கு கல்யாணிக் குட்டி என்னைப் பார்ப்பதற்கே வரவில்லை. அவளைப் பார்க்காமல் வாழ்க்கையே மிகவும் வெறுப்பான ஒன்றாகத் தோன்றியது. இறுதியில் நான் அவளுக்காக வாதம் செய்தேன். அவள் என்னுடைய ஜாதியைச் சேர்ந்தவள்தானே! படிப்பில் என்னைவிட திறமைசாலி அவள். பிறகு... அவளுடைய வறுமை- அது ஒரு தொற்றுநோய் இல்லையே! பாட்டி என்னுடைய வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கேட்டாள். முன் பிறவியில் செய்த பாவச் செயல்களுக்குத் தண்டனையாக சிலருக்கு இந்தப் பிறவியில் மிகப் பெரிய அளவில் வறுமையை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்று அவள் சொன்னாள். போன பிறவியில் நடந்த நல்ல செயல்களின் விளைவாக நானும் என்னுடைய தாய்- தந்தையும் மாமாமார்களும் பாட்டியும் சுகத்தையும் அமைதியையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று பாட்டி சொன்னாள். கல்யாணிக் குட்டிக்குத் தொடர்ந்து படிப்பதற்கு பண உதவி செய்ததுகூட என்னுடைய குடும்பம்தான். அவள் படித்து டாக்டராக ஆனதும், என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கருணையால்தான்.

ஆனால், என் தந்தை மரணத்தைத் தழுவியபோது, அவள் என்னுடன் சேர்ந்து கண்ணீர் விட்டு அழவில்லை. என் தந்தையின் இறந்த உடல் தெற்குப் பக்கம் இருந்த நிலத்தில் கிடந்து குளிர்ந்து மரத்துப்போய் கெட்ட நாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருந்தபோது, அவள் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் காணப்பட்டாள். நான் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதவாறு, என்னுடைய கெட்ட நேரத்தைப் பற்றிக் குறைகூறிப் பேசியபோது, அவள் தன்னுடைய கையை உயர்த்தி என்னுடைய முதுகைத் தடவவில்லை. பிறகு ஒருமுறை நான் அவளிடம் அன்றைய உணர்ச்சியற்ற சூழ்நிலையைப் பற்றிப் பேசினேன்.

"உனக்கு ஃபீஸ் கட்டியது என்னுடைய தந்தைதானே! உனக்கு ஆடைகள் வாங்குவதற்கும் ஹாஸ்டலில் தங்குவதற்கும் என்னுடைய தந்தையின் பண உதவி தேவைப்பட்டது அல்லவா? எனினும், என் தந்தை மறைந்தபோது, நீ அழவே இல்லை. நீ கொஞ்சம் கூட நன்றி இல்லாதவள் என்று அன்று பார்த்தவர்கள் எல்லாருமே சொன்னாங்க."

"யார் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். எனக்கு என்ன நட்டம்? அவ்வப்போது என்னிடமிருந்து நன்றியை எதிர்பார்த்து எனக்கு பண உதவி செய்த உன் தந்தையை நான் வெறுத்தேன். பயன்படுத்தாத ஆடைகளை எனக்குத் தருவதற்கு உன் தாய் தயாராக இல்லை. நான் உன்னுடைய நிழலாக, உன்னை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் தோழியாக உன்னைப் பின் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்"- கல்யாணிக்குட்டி சொன்னாள்.

"நிறுத்து... நீ இப்படி பேசுவேன்னு நான் கனவில் கூட நினைத்தது இல்லை. நீ உண்மையில் யார்? என்னுடைய விரோதியா?"- நான் கேட்டேன்.

அடுத்த நிமிடம் அவளுடைய முகத்தில் இருந்த சதைகள் அசைந்தன. அவள் மற்றவர்களைத் தன்பக்கம் இழுக்கப் பயன்படும் அந்த புன்சிரிப்பை மீண்டும் உதட்டில் வெளிப்படுத்தினாள்.

"என் வார்த்தைகளுக்குத் தேவையில்லாத ஒரு கம்பீரம் இருக்கு... ஆனால்..."

நான் அவளை இறுக அணைத்துக் கொண்டு என்னுடைய முகத்தை அவளுடைய தோளில் இளைப்பாறச் செய்தேன். கல்யாணிக்குட்டியின் நட்பு இல்லாத வாழ்க்கையைத் தொடர என்னால் முடியாது. என்னுடைய அனைத்து ரகசியங்களையும் நான் அவளிடம் மனம் திறந்து கூறியிருக்கிறேன். அவளோ? அவள் தன்னுடைய சிந்தனைகளை மறைத்து வைத்தாள். அவள் சிரிக்கும்போது, அந்தச் சிரிப்பு மகிழ்ச்சியிலிருந்து பிறந்தது இல்லை என்று நான் சந்தேகப்பட்டேன். அதேபோல அவளுடைய கண்ணீர் கவலையிலிருந்து உருவானது இல்லை என்றும் நான் நினைத்தேன். நான் மற்ற இளம் பெண்களுடன் நெருங்கிப் பழகுவதை அவள் விரும்பவில்லை. ஏதாவதொரு தோழியுடன் நான் நெருக்கமாகப் பழகினால், உடனே அவள் அந்தப் பெண்ணைப் பற்றி மோசமான முறையில் பேசத் தொடங்கிவிடுவாள். உறவுகளை இல்லாமல் செய்வதற்கு அவளிடம் பல வித்தைகளும் இருந்தன. ஒருமுறை அவள் சொன்னாள்:


"ஷீலா, நீ ஒரு ஆண் பிள்ளையாக இருந்திருந்தால், நீ என்னைக் காதலித்திருக்கலாம். என் தந்தை உனக்குப் பாடம் சொல்லித் தந்திருக்கிறார். அதனால் நான் உன்னுடைய குருவின் மகள். குருவின் மகளைக் காதலித்த இளவரசர்களைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கேல்ல? நீ ஏன் ஒரு ஆணாகப் பிறக்கவில்லை?"

நாங்கள் இருவரும் குளத்தில் நீந்திக் குளித்துக் கொண்டிருந்தோம். அவளுடைய பார்வைக்கு முன்னால் திடீரென்று நான் வெட்கப்பட்டேன். என்னுடைய இடையும் மார்பகமும் அவளுடைய இமைக்காத பார்வையில் சிக்கி நடுங்குவதைப் போல் நான் உணர்ந்தேன்.

"ஏன் இப்படி உற்றுப் பார்க்குறே? எனக்கு உன்னுடைய பார்வை கொஞ்சமும் பிடிக்கல"- நான் வாயிலிருந்த நீரைத் துப்பியவாறு சொன்னேன். அவள் நீரிலிருந்து வெளியே வந்து சலவை செய்யும் கல்மீது உட்கார்ந்து கொண்டு மீண்டும் தன்னுடைய இமை மூடாத கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு அசைவுகளையும் அந்தக் கண்கள் பின்பற்றிக் கொண்டிருந்தன. நான் கழுத்து வரையில் நீருக்குள் மறைந்து நின்றுகொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"கல்யாணிக்குட்டி, நீ இப்படி என்னை எதற்காகப் பார்க்குறே? எனக்கு உன்னுடைய பார்வை கொஞ்சமும் பிடிக்கவில்லை"- நான் அவளைப் பார்த்து மீண்டும் சொன்னேன். கன்னத்தில் குழிகள் தெரிய அவள் சிரித்தாள்.

"உன்னுடைய அழகு இந்த அளவிற்கு அதிகமாகி இருப்பதை நான் இப்போது தான் பார்க்கிறேன். கோவிந்தன் குட்டியும் வேறு சிலரும் உனக்குப் பின்னால் எல்லா நேரங்களிலும் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே திரிவதைப் பற்றிக் குறை கூறுவதற்கில்லை"- அவள் சொன்னாள்.

"வாய்க்கு வந்தபடி பேசாதே. எனக்குப் பின்னால் யாரும் பாட்டுப்பாடி நடப்பதில்லை. எனக்குப் பின்னால் பாட்டுப் பாடி நடப்பதற்கு இந்த ஊரில் யாருக்கும் தைரியம் வராது"- நான் சொன்னேன்.

"நீ பணக்காரியாக இருப்பதாலா?"- கல்யாணிக்குட்டி கேட்டாள்.

அதற்கு நான் பதில் எதுவும் கூறவில்லை. தொடர்ந்து நீரில் நீந்துவதற்கு எனக்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. வேகமாக நீரிலிரந்து கரையில் ஏறியபோது, அவள் என்னை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு என்னுடைய முகத்திலும் கழுத்திலும் மார்பகங்களுக்கு நடுவிலும் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். "நிறுத்து கல்யாணிக்குட்டி... இந்த மாதிரி ஏன் முட்டாள்தனமா நடக்குறே? இந்த நிமிடமே இதை நீ நிறுத்தணும். இல்லாவிட்டால் நான் இனிமேல் எந்தச் சமயத்திலும் உன்னுடன் பேசமாட்டேன்."

நான் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னேன். குளத்திற்கு முன்னால் இருந்த மணல் பாதையில் யாருடைய காலடிச் சத்தத்தையோ நான் கேட்டேன். என் தாயாக இருப்பாளோ? கல்யாணிக்குட்டி என்னை முத்தமிடுவதைப் பார்த்தால், பிறகு எந்தச் சமயத்திலும் அவளை என் வீட்டுக்குள் அவள் நுழைய விடமாட்டாள் என்ற விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும்.

"வெளியே யாரோ நிற்கிறார்கள்"- நான் மெதுவான குரலில் சொன்னேன்.

கல்யாணிக்குட்டியின் கண்களை நான் அப்போதுதான் பார்த்தேன். உயர்ந்த கருமணிகளுக்கு நடுவில் அவை இளம் நீல நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அவளுடைய மேலுதட்டில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. அவளுக்குத் தன்னுடைய கை, கால்கள் மீது சுய கட்டுப்பாடு சிறிதும் இல்லாமலிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்தேன். அவள் தன்னுடைய சகல பலத்தையும் பயன்படுத்தி என்னைக் குளக்கரையின் அருகில் இருந்த சாணம் மெழுகிய தரையில் மெதுவாக விழச் செய்தாள். என்னுடைய உடல் சிலிர்க்கும் வண்ணம் அவள் எல்லா இடங்களிலும் வலியை உண்டாக்கும் முத்தங்களால் ஆக்கிரமித்தாள். நான் வெட்கத்தாலும் அவமானச் சுமையாலும் என்னுடைய கண்களை மூடிக் கொண்டேன். நான் உயிர் இருந்தும் பிணத்தைப் போல அவளுடைய ஆக்கிரமிப்பிற்கு அடிபணிந்து எவ்வளவு நேரம் அங்கு கிடந்தேன் என்று எனக்கே ஞாபகத்தில் இல்லை. நீண்ட நேரம் நான் அவளுடைய துடித்துக் கொண்டிருக்கும் கை, கால்களின் அடிமையாக இருந்தேன். அதற்குப் பிறகு நான் அவளுடைய காதலுக்கான பொருளாக மாறிவிட்டேன். அவளுடைய வாயின் ஈரமும் சுவையும் எனக்குச் சொந்தமாயின. அவளுடைய உடலின் மென்மையும் கடுமையும் எனக்குப் பழக்கமாகிவிட்டன. இறுதியில் எங்களைப் பிரிப்பதற்கு வேறு எந்த வழியும் தெரியாமல் என் தாய் என்னை நல்ல பண வசதி படைத்தவரும், நிறைய படித்தவருமான ஒரு உறவினருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டாள். திருமணம் நடப்பதற்கு முந்தைய நாள் கல்யாணிக்குட்டி என்னைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு சொன்னாள்:

"ஷீலா, நாம இந்த ஊரைவிட்டு வேறு எங்காவது போய் விடுவோம். நான் எந்த வேலையையாவது செய்து உன்னைக் காப்பாற்றுவேன்."

"நீ என்ன வேலை செய்வே? உன் படிப்பே இன்னும் முடியாமல் இருக்கு. நாம் பட்டினி கிடந்து தெருவுல செத்துக் கிடப்போம்"- நான் சொன்னேன்.

"இந்தச் சொந்தக்கார மனிதரை நீ காதலிப்பியா? என்னைக் காதலிக்கும் உன்னால் இந்த மனிதரை சந்தோஷப்படுத்த முடியுமா?"- கல்யாணிக்குட்டி கேட்டாள். உன் கணவருக்கு என்னைவிட இருபத்தோரு வயது அதிகம். காதுக்கு மேலே நரைக்க ஆரம்பித்திருந்த சுருட்டை முடியையும், சற்று பருமனான உடலமைப்பையும் கொண்டிருந்த அவரை ஒரு அழகற்ற மனிதர் என்று கல்யாணிக்குட்டி நினைத்தாள்.

"உன்னைப் போன்ற ஒரு அழகான பெண்ணை ஒரு அழகற்ற மனிதருக்குத் திருமணம் செய்து கொடுத்தது மிகவும் பாவம் பிடித்த ஒரு விஷயம். உன் தாயை கடவுள் தண்டிக்கட்டும்"- அவள் என்னிடம் சொன்னாள்.

"என் கணவர் அழகற்றவர் அல்ல"- நான் சொன்னேன்.

அடுத்த நிமிடம் கல்யாணிக்குட்டி சிவந்த கன்னங்களுடன் என்னுடைய அறையை விட்டு வெளியேறினாள்.

தேனிலவு சமயத்தில் என் கணவர் என்னிடம் கேட்டார்:

"உன்னுடைய அந்தத் தோழி, கல்யாணிக்குட்டி... அவளுக்கு என்மீது ஏன் இந்தக் கோபம்? என்னுடன் ஒரு வார்த்தைகூட இதுவரை அவள் பேசியது இல்லை. நேற்று நாம் பேட்மின்டன் விளையாட அவளை அழைச்சப்போ, அவள் ஓடிட்டாள். என்மீது அவளுக்குப் பொறாமை இருக்குன்னு நான் நினைக்கிறேன். நான் சொல்றது உண்மைதானே?"

நான் அவரை அவளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். பீரும் வெங்காயமும் சிகரெட்டும் மணக்கக்கூடிய அவருடைய வாயுடன் புற்களின் நறுமணத்தைக் கொண்ட அவளுடைய வாயை நான் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவர் தோற்றுப் போனார். எனக்கு சந்தோஷத்தைத் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் அவள் தடவியதையும் விரல்களால் அழுத்தியதையும் உதடுகளால் மகிழ்ச்சி கொள்ளச் செய்ததையும் எவ்வளவு முயற்சித்தும் என்னால் மறக்க முடியவில்லை.


திருமணத்திற்குப் பிறகுதான் நான் மருத்துவம் படிக்கச் சேர்ந்தேன். கல்யாணிக்குட்டியும் வேறொரு நகரத்தில் இருந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாள். அவளுடைய குடும்பத்திற்குத் தேவைப்பட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்ய என்னுடைய தாய் தயாராக இருந்தாள். நான் அதைப் பற்றி ஒருமுறை கேட்டதற்கு என் தாய் சொன்னாள்:

"உன் அப்பாதான் அவர்களைப் பார்த்துக் கொண்டார். என்னுடைய இறுதி நாள் வரை நான் அதைத் தொடாந்து நிறைவேற்றுவேன். நீ டாக்டராக ஆக வேண்டும் என்று தீர்மானித்து விட்டாய். கல்யாணிக் குட்டிக்கும் டாக்டராக வரவேண்டும் என்ற ஆசை உண்டாகும். அவளும் படித்து ஒரு டாக்டராக வரட்டுமே!"

பிறகு அந்த விஷயத்தைப் பற்றி நான் என் தாயிடம் பேசவில்லை. என் தாயின் முடிவுகளில் மாறுதலை உண்டாக்க யார் முயற்சித்தாலும், அதை அவள் வெறுக்கவே செய்வாள். என் தந்தை செய்து கொண்டிருந்த கடமைகளைத் தொடர்ந்து செய்வதற்கு அவள் விரும்பினாள். கர்க்கடக மாதத்தில் சாதுக்களுக்கு கஞ்சி தயார் பண்ணித் தருவது, வறுமையின் பிடியில் சிக்கிக் கிடக்கும் சிறுவர்களுக்கு பள்ளிக்கூட நூல்கள் வாங்கிக் கொடுப்பது, திருவாதிரைக்கு வயதான ஆண்களுக்கம் பெண்களுக்கும் போர்வைகள் வாங்கிக் தருவது போன்ற செயல்களை என் தாயும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருந்தாள். ஒருமுறை கல்யாணிக்குட்டி சொன்னாள்:

"ஷீலா, உன் அப்பா என்னுடைய அப்பாவாகவும் இருந்திருப்பாரோன்னு என் மனசுல ஒரு தோணல்... அவருடைய முகச் சாயல் எனக்கும் இருக்குல்ல? அதே நிறம்... அதே கன்னக் குழிகள்..."

"ச்சே... முட்டாள்தனமா பேசாதே. என் அப்பா எந்தச் சமயத்திலும் வேறொரு மனிதரின் மனைவியைத் தொட்டது கூட இல்லை. என் அப்பா மிகவும் அமைதியான குணத்தைக் கொண்டவர். கடவுள் பக்தி உள்ளவர்"- நான் சொன்னேன்.

"நான் அவரை அவமானப்படுத்தவில்லை ஷீலா. அவர் எனக்காக இவ்வளவு பணம் செலவழிச்சதற்கான உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சி பண்ணிப் பார்க்குறேன். பல நேரங்களில் எனக்குள் தோன்றிய ஒரு சந்தேகத்தை உன்கிட்ட சொல்றேன். அவ்வளவுதான்..."

பிறகு நாங்கள் வருடத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ மட்டுமே ஒருவரையொருவர் சந்திப்போம். அவள் சுதாகரனைத் திருமணம் செய்து கொண்டு, நாங்கள் இருந்த நகரத்தில் வந்து தங்கியபோது, மீண்டும் அவள் என்னுடைய நட்பு வட்டத்திற்குள் நுழைந்தாள். சுதாகரன் அவளைப் போலவே ஒரு டாக்டராக இருந்தார். அழகான தோற்றத்தைக் கொண்டவரும் நல்ல உடலமைப்பைக் கொண்ட இளைஞருமான ஒரு கணவன் கிடைத்ததற்காக கல்யாணிக்குட்டி பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. ஒருநாள் திருமண வாழ்க்கையைப் பற்றிய அவளுடைய கருத்தைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்டபோது அவள் சொன்னாள்:

"இரவுகளைத்தான் என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அந்த மனிதர் என்னுடைய உடல் நலத்தைக் கெடுக்கிறார்."

"உனக்கு சுதாகரனிடம் கொஞ்சம் கூட பிரியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். உண்மையிலேயே நீ அந்த மனிதரைத் திருமணம் செய்து கொண்டது, உனக்கு ஒரு பொருளாதாரப் பாதுகாப்பு உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமா?"

கல்யாணிக்குட்டி தன்னுடைய இடது கையால் என்னுடைய முகத்தை உயர்த்தினாள். கோபத்துடன் அவள் என்னையே உற்றுப் பார்த்தாள்.

"உன் மீது நான் அன்பு வைத்திருக்கிறேன் என்ற காரணத்தால் நீ அளவுக்கு மேல் சுதந்திரம் எடுத்துக் கொண்டு பேசுகிறாய். இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க உனக்கு எப்படி தைரியம் வந்தது?"- அவள் கேட்டாள்.

"மன்னிக்கணும். உன்னுடன் மட்டுமே நான் என்னுடைய மனதைத் திறந்து பேச முடியும்"- நான் சொன்னேன்.

அவளுடைய கை விரல்கள் என்னுடைய கன்னங்களை இறுகத் தடவி வேதனையை உண்டாக்கின.

"ஒரு ஆணின் உடலைப் பார்த்ததும், உணர்ச்சிவசப்பட்டு அடிபணியக்கூடியவள் இல்லை நான்"- அவள் சொன்னாள்.

"உடலைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. பிரியத்தைப் பற்றித்தான் நான் கேட்டேன். நீ சுதாகரன் மீது பிரியம் வைத்திருக்கிறாயா?"- நான் கேட்டேன்.

"நீ உன்னுடைய கணவன் மீது அன்பு வச்சிருக்கியா?"

"நிச்சயமா... நான் அவர் மீது பிரியம் வச்சிருக்கேன்."

"உனக்கு பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டையும் அழகான ஒரு இளைஞனையும் நான் தர்றதா சொன்னால், அதற்கு பதிலாக நீ அந்த ஆளை உதறிவிட்டு வரத் தயாரா இருப்பேல்ல?"- கல்யாணிக்குட்டி கேட்டாள்.

"நீ உண்மையாகவே ஒரு மோசமான பிறவி..."- நான் சொன்னேன்.

"உன் மனதிற்குள் நுழைந்து உன்னுடைய ரகசிய எண்ணங்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்வதால், உன் கண்களில் நான் ஒரு கெட்ட பெண்ணாகத தெரிகிறேனா என்ன? நீ யார் என்று எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் என்பது உனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் என்று உனக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்"- அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

பிறகு நான் அவளை என்னுடைய டிஸ்பென்ஸரியில்தான் பார்த்தேன். அவள் வெளிறி மெலிந்துபோய்க் காணப்பட்டாள். என்னைப் பார்கக வந்த நோயாளிகளை மறந்து நான் அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு என் அறைக்குள் சென்றேன்.

"நீ வந்த விஷயத்தை எனக்கு ஏன் முன்கூட்டியே சொல்லல? நான் எல்லா வேலைகளையும் விட்டுட்டு ஸ்டேஷனுக்கு வந்திருப்பேனே!"- நான் குறைப்பட்டேன்.

தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அந்தக் கர்ப்பதைக் கலைக்க வேண்டும் என்றும் அவள் சொன்னாள். தான் வசிக்கும் நகரத்தில் அதைச் செய்தால் சுதாகரனும் உறவினர்களும் நண்பர்களும் எல்லா வகைகளிலும் அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்ட தன்னைத் தண்டிக்கத்தான் செய்வார்கள் என்றாள் கல்யாணிக்குட்டி. அவளுக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் விஷயத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என்று நான் சொன்னேன். "அப்படியே பிரச்சினைகள் இருந்தால், நான் ஒரு சிசேரியன் செய்து அந்தக் குழந்தையை எந்தவித சிரமமும் இல்லாமல் வெளியில் எடுத்துவிடுவேன்"- என்றேன் நான்.

"நான் சுதாகரனுக்குச் சொந்தமான குழந்தையைப் பெற்றெடுக்க விரும்பவில்லை"- அவள் சொன்னாள்.

"பிறகு எதற்காக நீ இந்தக் குடும்ப வாழ்க்கை வாழ்கிறாய்? சுதாகரனின் குழந்தையை வாழ விடாமல் செய்வது என்பது அந்த மனிதருக்கு நீ செய்யும் துரோகம் என்று உனக்குப் புரியவில்லையா?"- நான் கேட்டேன்.

அவளை மேஜைக்குக் கீழே படுக்க வைத்து நான் சோதனை செய்து பார்த்தேன். இடது பக்கம் சாய்ந்து படுத்திருந்த அந்த முகம் நடுங்குவதை நான் பார்த்தேன்.


"என்னுடைய கர்ப்பப்பை அசுத்தமாகிவிட்டது என்று ஒரு தோணல் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. சுதாகரனை நான் எந்தச் சமயத்திலும் மதிப்புடன் நினைத்தது இல்லை. அவரைப் போன்ற ஒரு சாதாரண மனிதனின் குழந்தையை நான் பத்து மாதங்கள் என்னுடைய உடலில் வளர்க்க மாட்டேன். அவருடைய குழந்தையை நான் எந்தச் சமயத்திலும் பெற்றெடுக்க மாட்டேன்"- அவள் சொன்னாள்.

"பிறகு யாருடைய குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்று ஆசைப்படுறே?"- நான் வெறுப்புடன் கேட்டேன்.

அடுத்த நிமிடம் எழுந்திருந்த அவள் என்னுடைய உதடுகளில் முத்தமிட்டாள். அவளுடைய தோலில் இருந்த அந்த தனிப்பட்ட வாசனை என்னைக் கீழடங்கச் செய்தது- புதிய மழையை ஞாபகப்படுத்தும் நறுமணம்.

"உன்னுடைய குழந்தையை மட்டுமே நான் பெற்றெடுக்க ஆசைப்படுறேன்"- அவள் தழுதழுத்த குரலில் சொன்னாள்.

"அது முடியாத விஷயமாயிற்றே!"- நான் முணுமுணுத்தேன்.

சுதாகரனின் சம்மதம் இல்லாமல் அவருடைய குழந்தையை அழிக்க நான் தயாராக இல்லை. கர்ப்பக் கலைப்பு செய்து சட்டங்களை மீற எனக்கு மனம் வரவில்லை என்று நான் அவளிடம் கூறினேன்.

"சரி... நான் வேற எங்காவது போறேன். தாராளமா பணம் கொடுத்தால், இதைச் செய்யக் கூடிய பலரும் இந்த நகரத்தில் இருக்கத்தான் செய்வாங்க"- அவள் சொன்னாள். திகைத்துப் போய் ஒரு சிலையைப் போல நான் என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது, விடைகூட பெற்றுக் கொள்ளாமல் கல்யாணிக்குட்டி என்னை விட்டுப் போய்விட்டாள். அதற்குப் பிறகு நான் அவளைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருகக முயற்சித்தேன். எனக்கு குற்ற உணர்வை மட்டுமே பரிசாக தரும் அவளை மறந்துவிட வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். அவள் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள் என்ற விஷயத்தை நான் என்னுடைய கணவரிடம் கூறவேயில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு நள்ளிரவு நேரத்தில் என்னுடைய தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. அது சிறிதும் அறிமுகமில்லாத ஒரு குரலாக இருந்தது. என்னுடைய சிநேகிதி ரத்தப் போக்கால் தளர்ந்து போய் ஒரு இடத்தில் படுத்திருக்கிறாள் என்று அந்த ஆள் சொன்னான். முகவரியை வாங்கிய நான் வேகமாக காரில் ஏறினேன். என்னுடைய கணவர் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்தார்.

"ஒரு பிரச்சினைக்குரிய கேஸ்... நான் திரும்பி வர தாமதமானாலும் கவலைப்பட வேண்டாம்"- நான் காரில் ஏறும்போது அவரைப் பார்த்துச் சொன்னேன். நகரத்தின் எல்லையில் அழுக்கடைந்து போயிருந்த ஒரு தெருவில் இருந்த ஒரு வீட்டில் கல்யாணிக்குட்டி படுத்திருந்தாள். சுய உணர்வற்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அவள், என்னுடைய குரலைக் கேட்டு கண்களை மிகவும் சிரமப்பட்டுத் திறந்தாள். அவள் படுத்திருந்த இடத்தில் இரத்தம் படிந்த விரிப்புகள் இருந்தன. நான் வீட்டின் தலைவி நீட்டிய டார்ச் வெளிச்சத்தில் அவளைச் சோதித்துப் பார்த்தேன். பாதியாக முடித்திருந்த ஒரு கர்ப்பக் கலைப்பு.

"இதை நீங்களா செஞ்சீங்க?"- நான் கேட்டேன். அந்தப் பெண் தலையை ஆட்டினாள்.

"டாக்டர்,  வேணும்னா இவங்களை மருத்துவமனைக்குக் கொண்டு போங்க. ஏதோ பிரச்சினை இருக்குற மாதிரி தெரியுது. என்ன செய்தும் ரத்தம் நிற்கல"- அந்தப் பெண் சொன்னாள்.

"நீ எதற்காக இதைச் செய்ய வச்சே?"- நான் கல்யாணிக்குட்டியிடம் கேட்டேன். என்னுடைய கண்ணீர் வழிதலின் காரணமாக நான் அவளுடைய முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அவள் கண்களைத் திறந்தாளா? அவள் கன்னக் குழிகள் தெரியுமாறு புன்சிரிப்பைத் தவழ விட்டாளா? எனக்குத் தெரியவில்லை. அந்த வீட்டில் எந்த இடத்திலும் அலசிப் போட்ட துணிகளோ, பனிக்கட்டியோ எதுவும் இல்லை. நான் அந்த வீட்டுப் பெண்ணின் உதவியுடன் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து என்னடைய காரில் படுக்க வைத்தேன். அவளுடைய ரத்தம் என் காருக்குள் ஒழுகிக் கொண்டிருந்தது.

கல்யாணிக்குட்டியை வீட்டில் தங்க வைத்து கவனித்த விஷயம் என் கணவரைக் கோபம் கொள்ளச் செய்தது.

"அவள் எங்காவது இறந்து விட்டிருந்தால் போலீஸ்காரர்கள் என்னைக் கம்பிக்குள் இருக்க வைத்து விட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பார்கள்" என்றார் அவர்.

"உனக்கு ஆபத்தை வரவழைக்கக்கூடிய ஒரு நட்பு இது..."- அவர் முணுமுணுத்தார்.

இரவிலும் பகலிலும் சிறிதும் ஓய்வே இல்லாமல் நான் அவளை மிகவும் கவனித்துப் பார்த்துக் கொண்டேன். சுதாகரனைத் தொலைபேசியில் அழைத்து வரவழைத்தாலும், உண்மையான நிலைமையை நான் அவரிடம் கூறவில்லை. கருக்கலைப்பு அவளே விரும்பி வரவழைத்துக் கொண்ட ஒரு செயல் என்பதை நான் வெளிப்படுத்தவில்லை. சுதாகரன் எத்தனையோ தடவை எனக்கு நன்றி கூறினார்.

"நீங்க இல்லாமல் போயிருந்தால், அவளுக்கு ஏதாவது ஆபத்து உண்டாகியிருக்கும்"- அவர் தன்னுடைய தூங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

"இளம் வயதில் ஆரம்பித்த நட்பு இது"- நான் சொன்னேன்.

"எனக்குத் தெரியும். உங்களைப் பற்றி ஒருமுறையாவது குறிப்பிடாத நாட்கள் இருந்ததில்லை. அவளுக்கு உங்கள் மீது அந்த அளவிற்கு பிரியம்"- சுதாகரன் சொன்னார். நான் நிலை கொள்ளாத மனதுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். சுதாகரன் அவளைத் தங்களுடைய வீட்டிற்குக் கொண்டு போன பிறகு, நான் அவளை விட்டு விலகி விட்டேன். அவள் எழுதிய கடிதங்கள் எதற்கும் நான் பதில் எழுதவில்லை. அவள் சுதாகரனுடன் சண்டை போடுகிறாள் என்றும்; அவள் விவாகரத்திற்கு முயற்சிக்கிறாள் என்றும் அவளுடைய மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு டாக்டர் என்னை வந்து பார்த்தபோது சொன்னார்.

"நீங்க அவங்களுக்கு அறிவுரை சொல்லணும். நீங்க சொன்னால், அவங்க இந்த சண்டைகளை நிறுத்திடுவாங்க"- அவர் சொன்னார்.

"நான் எதற்கு இந்த மாதிரியான விஷயங்களில் தலையிட வேண்டும்? அவளுக்கு அந்த மனிதருடன் சேர்ந்து வாழ முடியவில்லையென்றால், அவள் விவாகரத்து செய்துவிட்டு வேறு எங்காவது போய் வேலை பார்க்கட்டும்"- நான் சொன்னேன்.

"சுதாகரனுக்கு அவங்க இல்லாமல் வாழ்வது என்பது மிகவும் சிரமமான ஒர விஷயம். அவர் அவங்கமேல் அந்த அளவுக்கு அன்பு வச்சிருக்காரு"- அவர் சொன்னார்.

"தகுதியில்லாதவர்களுக்கு அன்பை வாரிக் கொடுத்து என்ன பிரயோஜனம்?"- நான் கேட்டேன். என்ன காரணத்தாலோ அவளுடைய திருமண முறிவைப் பற்றித் தெரிய வந்தபோது, எனக்கு எந்தவொரு கவலையும் உண்டாகவில்லை. அவளுடைய குடும்ப வாழ்க்கை தகர்ந்துவிட்டது. என்னுடைய குடும்ப வாழக்கை நன்றாக இருக்கிறது. நான் பெருமையுடன் நினைத்துப் பார்த்தேன். உணர்ச்சிவசப்படும் குணத்தைக் கொண்ட சுதாகரனும் கல்யாணிக்குட்டியும் ஒருவரோடொருவர் சண்டை போட்டுத் தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டபோது, நானும் என்னுடைய கணவரும் மதிப்புடன் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


மருத்துவப் படிப்பில் முதலிடத்தைப் பெற்ற கல்யாணிக்குட்டிக்கு தன்னுடைய இல்லற வாழ்க்கையை வெற்றிகரமான ஒன்றாக ஆக்கிக் கொள்ள முடியவில்லை.

பிறகு அவள் விவாகரத்து பெற்ற பெண்ணாக ஆஸ்திரேலியாவிற்குப் போவதற்கு முன்னால் என்னிடம் விடைபெறுவதற்காக வந்தாள். எனக்கும் ஆஸ்திரேலியாவில் ஒரு வேலை வாங்கித் தருவதாக அவள் சொன்னாள்.

"வேண்டாம் கல்யாணிக்குட்டி. நான் இங்கேயே இருந்துடுறேன்"- நான் சொன்னேன்.

"வா ஷீலா. நான் உன்னைக் காப்பாத்துறேன். என்னுடைய மரணம் வரை நீ என்னுடைய உயிரா இருப்பே"- அவள் மெதுவான குரலில் சொன்னாள்.

"என் கணவரை விட்டுட்டு நான் எங்கேயும் வரமாட்டேன்"- நான் சொன்னேன்.

"உன் கிழட்டுக் கணவர்! அவருக்கு உன்மீது உண்மையிலேயே பிரியம் இருக்குன்னு நான் நம்பல. நல்ல வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த உன்னைத் திருமணம் செய்தால், மேலும் கொஞ்சம் விவசாய நிலங்களும் தென்னந்தோப்புகளும் தனக்கு வரதட்சணையாகக் கிடைக்கும் என்று நம்பித்தான் அவர் உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்காரு."

"போ பெண்ணே... வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதே..."- நான் சொன்னேன். அதைக் கேட்டு கல்யாணிக்குட்டி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

"அந்தக் காலத்துல நீ என்னை எப்பவும் பெண்ணே என்றுதான் அழைப்பே... அது ஞாபகத்துல இருக்குதா?"- அவள் கேட்டாள். "அந்த அழைப்பை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் ஆணாக நடித்தேன். உன்னுடைய பெண்ணும் உன்னுடைய ஆணும் நானே என்றாகிவிட்டேன்."

ஒரு வருடம் கழித்து இந்தியாவிற்கு வருவதாக சத்தியம் பண்ணி விட்டுத்தான் அவள் விமானத்திலேயே ஏறினாள். அவள் வரவும் இல்லை. எனக்கும் கணவருக்கும் பிள்ளைகள் பிறக்கவில்லை. மற்ற பெண்களைத் தாய்களாக ஆக்க முடிந்த வரையில் உதவிய எனக்கு கர்ப்பம் தரிப்பதற்கான அதிர்ஷ்டம் ஒருமுறை கூட உண்டாகவில்லை. ஆனால், என்னுடைய கணவர் அதற்காகக் கவலைப்படவில்லை. அணு ஆயுதப் பெருக்கத்தை நினைக்கும்போது இந்த உலகத்திற்கு குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள் மிகப்பெரிய பாவத்தைச் செய்பவர்கள் என்று அவர் பலமுறை கூறினார். இறுதியில் நான் அவர் கூறுவது உண்மைதான் என்று நம்ப ஆரம்பித்தேன். குழந்தைகளை மிகவும் வாஞ்சையுடன் நெருங்கி அவர்களைக் கொஞ்சக்கூடிய நான் அவர்களை விலக்கப் பழகிக் கொண்டேன். க்ளப்பில் தங்களுடைய வளர்ந்த பிள்ளைகள் உண்டாக்குகிற பிரச்சினைகளைப் பற்றி மற்ற பெண்கள் விவாதிக்கும் போது, இரக்கத்தையும் பரிதாப உணர்வையும் எதிர்பார்த்து தாராளமாகக் கண்ணீர் விடும்போது, நான் எனக்குள் கூறிக் கொள்வேன்: 'ஷீலா, நீ அதிர்ஷ்டக்காரி. உன்னுடைய வயதான காலம் அமைதியானதாக இருக்கும்.'

2

ன்று நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளைச் சோதனை செய்து பார்க்க வேண்டிய நிலை எனக்கு உண்டானது. என்னுடன் பணியாற்றும் டாக்டர் வர்கீஸ் மூன்று நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு சங்ஙனாச்சேரியில் இருக்கும் தன்னுடைய வயதான தாயைப் பார்ப்பதற்காகப் போய்விட்டிருந்தார். சிறிதும் ஓய்வே இல்லாமல் கஷ்டப்பட்டு வேலை செய்யும்போது சாதாரணமாகவே எனக்கு வரக்கூடிய தலைவலி மதியத்திற்கு முன்பே வந்து என்னைப் பாடாயப் படுத்திக் கொண்டிருந்தது. அதனால் மதிய உணவு சாப்பிட நான் வீட்டிற்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்து, டிரைவரிடம் கூறி காப்பியும் ஒரு மசாலா தோசையும், ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலில் இருந்து வாங்கிவரச் செய்தேன். நான் வரவில்லை என்று தொலைபேசியில் கூறியபோது, வரவேண்டும் என்று அவர் வற்புறுத்தவும் இல்லை. முன்பெல்லாம் நான் வரமாட்டேன் என்று கூறும்போது, அவர் கூறுவார்:

“தலைவலி இருந்தால் இங்கே வந்து கொஞ்சம் ஓய்வு எடு. பிறகு தேநீர் அருந்திவிட்டு மருத்துவமனைக்குத் திரும்பப் போகலாம்.’’

“எனக்கு தலைவலி இருக்கு. நான் இன்னைக்கு சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வரல... இங்கேயே ஏதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன்.’’

அவர் வழக்கத்திற்கு மாறாகச் சொன்னார்:

“சரி... சாயங்காலம் நீண்ட நேரம் தாமதிக்க வேண்டாம். நமக்கு இன்னைக்கு அந்த ரோட்டரி வரவேற்பு இருக்கே...! ஏழு மணிக்கு..."

நான் பலவீனமான ஒரு குரலில் சொன்னேன்: "சரி... சாயங்காலம் நான் சீக்கிரமே வீட்டுக்கு வர முயற்சிக்கிறேன்."

டிரைவர் கொண்டு வந்த மசாலா தோசைக்கு ரேஷன் அரிசியின் சுவை இருந்தது. நான் அதைத் திறந்து உருளைக் கிழங்கும் வெங்காயமும் மிளகாயும் கலந்து செய்யப்பட்ட கலவையை மட்டும் தின்றேன். காப்பிக்கும் சுவை எதுவும் இல்லாமலிருந்தது. இறுதியில் தலைவலிக்காக ஒரு நோவால்ஜினை விழுங்கி, நீரைக் குடித்துவிட்டு, நான் மீண்டும் என்னுடைய க்ளினிக்கிற்கு வந்தேன். அப்போதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். நல்ல உடலமைப்பைக் கொண்ட நவநாகரீகமான தோற்றத்தைக் கொண்ட ஒரு நடுத்தர வயதைக் கொண்ட பெண்... இளமையின் வெளிப்பாடுகள் முகத்திலும் முடியிலும் பொய்யாகவாவது தெரியும் வண்ணம் விளங்கச் செய்து கொண்டிருக்கும் அழகான பெண்... அவள் தயங்கியவாறு என்னை நெருங்கி வந்தாள். அவளுடைய உதட்டில் மெல்லிய ஒரு புன்னகை மரப்பாலத்தில் பாதியைக் கடந்த ஒரு ஆளிடம் இருப்பதைப் போல வெளிப்பட்டது.

"என்னைத் தெரியலையா?"- அவள் கேட்டாள்.

"யார்? உங்களுடைய உடம்புக்கு என்ன?"- நான் கேட்டேன்.

"நாம் ஒருவரையொருவர் பார்த்து இப்போது இருபத்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் உனக்கு என்னை யாருன்னு தெரியாமல் இருக்கலாம். நான்தான்... கல்யாணிக்குட்டி... சுதாகரனின் மனைவி..."

"கல்யாணிக்குட்டி! நீ முற்றிலும் மாறிட்டியே! முதல்ல உன் நிறம்... நீ முழுசா வெள்ளை ஆயிட்டே. நீ அப்போ தடியா இருப்பே. இப்போ நீ மெலிஞ்சிட்டே. தலைமுடியோ? முழங்கால் வரை தொங்கிக் கொண்டிருந்த உன்னுடைய கூந்தலை நீ குறைச்சிட்டே... உன் பற்களுக்கும் மாற்றம் உண்டாகியிருக்கு."

"என் பற்களுக்கு அப்போதும் அழகு இருந்தது இல்லை. என் முன்பக்க பற்கள் கொஞ்சம் முன்னோக்கி நீட்டிக் கொண்டு இருந்தன. அவற்றை நான் கம்பி கட்டி உள்ளே போறது மாதிரி செய்தேன். உனக்கு என்னை அடையாளம் தெரிஞ்சிக்க முடியலையே! அப்படின்னா சுதாகரனுக்கும் என்னைப் பார்த்தால் யாருன்னு புரியாது... அப்படித்தானே?"

அவள் தன்னுடைய 'குச்சி' பேக்கில் இருந்து ஒரு கருப்பு நிற கண்ணாடியை எடுத்து முகத்தில் அணிந்து கொண்டாள்.

"இப்போ என்னைப் பார்த்தால் அப்போ இருந்த நண்பர்களுக்கெல்லாம் அடையாளம் தெரியாது. அப்படித்தானே ஷீலா? நான் இப்போ முன்பு இருந்த கல்யாணிக்குட்டி இல்லை. உள்ளேயும் வெளியேயும் முற்றிலும் மாறிவிட்டேன். உண்மையைச் சொல்லு... உனக்கு இப்போ இருக்குற என்னைப் பிடிச்சிருக்கா? இல்லாவிட்டால் பழைய என்னையா?"- கல்யாணிக்குட்டியின் கேள்விக்கு பதிலாக நான் வெறுமனே சிரித்தேன். அவள் என்னை நெருங்கி வந்து என்னுடைய காதிலும் கழுத்திலும் முத்தமிட்டாள்.


"உன்னுடைய தோலில் இருக்கும் நறுமணம் அப்போதும் இப்போதும் ஒரே மாதிரி இருக்கு. நீ முன்பு பயன்படுத்திய 'ஈவ்னிங் இன் பாரீஸ்'ஸத்தான் இப்பவும் பயன்படுத்துறியா?"

"அது இப்போ உலகத்தில் எங்கேயும் கிடைப்பது இல்லை. நான் வேறு பலவற்றையும் பயன்படுத்துறேன். ஏதாவது ஒரு வாசனைப் பொருளுடன் எனக்குத் தனிப்பட்ட ஈடுபாடு எதுவும் இல்லை. என்னுடைய நோயாளிகள் வெளிநாட்டுப் பயணம் முடிந்து ஊருக்குத் திரும்பி வர்றப்போ எனக்கு ஓப்பியம், ஜாய், சார்லி போன்ற வாசனைப் பொருட்களைப் பரிசாகக் கொண்டு வந்து தருவாங்க. என்னுடைய ஒப்பனை மேஜைக்கு மேலே பத்தோ பதினைந்தோ உடைக்காத சென்ட் புட்டிகள் இருக்கு. உனக்கு வேணுமா?"

கல்யாணி மீண்டும் என்னை முத்தமிட்டாள். தொடர்ந்து வரிசை தவறாமலும் வெள்ளை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டும் இருந்த பல் வரிசை தெரியும்படி உரத்த குரலில் சிரித்தாள்.

"உனக்கு எந்தவித மாற்றமும் உண்டாகவில்லை. என் ஷீலா. நீ இப்போதும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவே இருக்கிறாய். உனக்கு கொடுப்பதற்குத் தெரியும். சின்ன வயதிலிருந்தே நீ கொடுக்கும் குணத்தை வளர்த்துக் கொண்டாய். அதோடு பொறுமை குணத்தையும். நீ பிறந்தது அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில். கொடுக்கும் குணமும் தர்ம எண்ணங்களும் கொண்ட ஒரு பழமையான குடும்பம். நீ நல்ல வசதி படைத்த பெண்ணாகப் பிறந்தாய். அதனால்தான் உன்னால் மன அமைதியுடன் வாழ முடிஞ்சது. நான் அதைப் பார்த்து பொறாமைப்பட்டு என்ன பிரயோஜனம்? நான் விவசாயிகளுக்கு மத்தியில் பிறந்தவள். இரண்டு ரவிக்கைகளும் இரண்டு பாவாடைகளும் மட்டுமே என்னுடைய மொத்த ஆடைகளாக இருந்தன. என்னை நீ படித்த பள்ளிக்கூடத்திலும் பிறகு கல்லூரியிலும் சேர்த்தது என்னுடைய வறுமையில் உழன்று கொண்டிருந்த தந்தை அல்ல. எஜமானர்தான் என்னை அங்கு சேர்த்துப் படிக்க வைத்தார். அந்த எஜமானருக்கும் எங்களுடைய குடும்பத்திற்கும் இடையில் ரகசியமான வேறு ஏதாவது தொடர்பு இருந்திருக்குமோ என்று நான் பல நேரங்களில் எனக்குள் நானே கேட்டிருக்கிறேன். அந்த எஜமானரின் மூக்கைப் போல என்னுடைய மூக்கு இருக்குன்னு ஒரு காலத்தில் நான் சந்தேகப்பட்டிருக்கேன்."

கல்யாணிக்குட்டி திரும்பத் திரும்ப சிரித்தாள். சிரிக்கும்போது தோள்வரை தொங்கிக் கொண்டிருந்த தலைமுடி விடைபெறும் கை விரல்களை ஞாபகம் கொள்ளச் செய்தது.

"உனக்கு இப்போது என்னுடைய வயது என்று யாரும் கூற மாட்டார்கள். உன் தலைமுடியில் ஒரு நரையைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை"- நான் சொன்னேன்.

"நீ சொல்றது உண்மைதான் ஷீலா. எனக்கு ஐம்பத்தி இரண்டு வயது என்ற விஷயம் என்னுடைய புதிய நண்பர்களுக்குத் தெரியாது. நான் அவர்களுடன் தினமும் இரவில் டென்னிஸ் விளையாடுவது உண்டு. சாயங்காலம் நடப்பதற்காகச் செல்வேன். உடல் ஆரோக்கியத்தைப் பற்றி எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை."

தான் ஆஸ்திரேலியாவில் பார்த்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, டில்லிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன என்றும்; தான் ஒரு ஆஸ்திரேலியாக்காரரின் விதவை என்றும் கல்யாணிக்குட்டி என்னிடம் சொன்னாள்.

"நல்ல பண வசதியும் சந்தோஷமும் கொண்ட ஒரு விதவை"- அவள் ஒரு உரத்த சிரிப்புடன் சொன்னாள்.

"சந்தோஷத்துடன் இருப்பதாக இருந்தால், நீ எதைத் தேடி சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கே?"- நான் கேட்டேன்.

அவள் தன்னுடைய கருப்பு நிறக் கண்ணாடியை மெதுவாகக் கழற்றி என்னுடைய மேஜைமீது வைத்தாள். பிறகு தன்னுடைய கண்களை விரல் நுனியால் தடவினாள். அவளுடைய முகத்திலிருந்து புன்னகை முழுமையாக மறைந்துவிட்டிருந்தது.

"நீ கேட்பது வரை நான் இந்த திரும்பி வந்த பயணத்திற்கான காரணங்களை என்னிடமே கேட்டுப் பார்த்ததில்லை. வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த சிறுமியாக இருந்த நான் இப்போது நல்ல பண வசதி கொண்டவளாகவும் வெற்றி பெற்றவளுமாக இருக்கிறேன் என்ற விஷயத்தை, இறக்காமல் இப்போதும் உயிருடன் இருக்கும் ஊர்க்காரர்களுக்குத் தெரியும்படிக் காட்ட வேண்டும் என்பதற்காக நான் வரவில்லை. உன்னைப் பொறாமைப்படச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அல்ல. ஒருவேளை, நான் சுதாகரனை மீண்டும் காண்பேன் என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம். திரும்பவும் அவருடன் சில நாட்களின் இரவுகளைப் பங்கிட வேண்டும் என்பதும்... சொல்லு ஷீலா... அவர் இங்கே எங்கேயாவது இருக்கிறாரா? அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டாரா? அவர் என்னை நினைக்கிறாரா?"

"சுதாகரன் இந்த நகரத்தில்தான் இருக்கிறார். அவருடைய இப்போதைய மனைவிக்கு நான்தான் சிகிச்சை செய்யறேன். போன மாதம் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் ஒரு வாரம் அவள் இருந்தாள். அவளுக்கு புத்திசாலியான ஒரு மகன் இருக்கான். இந்த வருடம் ரேங்க் வாங்கி போபாலில் இருந்து வந்திருக்கிறான்- ஒரு ஆர்க்கிடெக்ட்."

மீண்டும் நோயாளிகள் என்னைப் பார்ப்பதற்காக வந்தபோது, கல்யாணிக்குட்டி என்னிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், என்னுடைய வீட்டிற்கு வருவதாக அவள் சொன்னாள். சுதாகரனை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை அவள் பல தடவை என்னிடம் வெளியிட்டாள்.

"வேண்டாம் கல்யாணிக்குட்டி. அந்த அப்பாவி மனிதர் வாழ்ந்து விட்டுப் போகட்டும். அவருடைய மனைவி ஒரு நோயாளி. அவளுக்கு இனிமேல் கவலைகளைத் தாங்கிக் கொள்ள சக்தி இல்லை. நீ போய் சுதாகரனுக்கு ஆசை வலை விரித்தால், அந்தக் குடும்ப வாழ்க்கை ஒட்டு மொத்தமாக நாசமாயிடும்."

"அந்தக் குடும்ப வாழ்க்கை நாசமானால் எனக்கு என்ன இழப்பு?"- கல்யாணிக்குட்டி கேட்டாள். அவளுடைய உரத்த சிரிப்பு என்னிடம் வெறுப்பை மட்டுமே உண்டாக்கியது.

3

ல வருடங்களாக நீடித்திருக்கும் ஒரு குடும்ப வாழ்க்கை நவநாகரீகமான வாழ்க்கை வாழ்பவர்களால் உண்மையாகவே சகித்துக் கொள்ள முடியாததுதான். ஒரே கட்டிலில் அருகருகே படுத்துக் கொண்டு ஒருவரோடொருவர் வியர்வை நாற்றத்தைப் பரிமாறிக் கொள்வது, சூரியன் உதிக்கும் நேரத்தில் கழிவறையில் நீர் ஊற்ற மறந்த ஜோடியின் மறதித் தன்மையைப் பார்ப்பது, அருள் தருவதற்காக என்றே உண்டாக்கப்பட்டவை என்று தோற்றம் தரும் அழகான கண்களால் சுய இன்பம் நடப்பதைப் பார்த்தவாறு அதன் தாளத்தை கவனித்துக் கொண்டு தூங்குவதைப் போல் நடிப்பது.... வேண்டாம்... எனக்கு வேண்டாம்... பெரிய மனிதர்களால் புகழப்பட்ட இல்லற ஆசிரமம் எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம். இன்னொரு ஆளின் வாயிலிருந்து வழியும் எச்சில் என்னுடைய வாய்க்குத் தேவையில்லை. வேலை செய்து சோர்ந்து போன என்னுடைய உடலால் காமத்தின் கொடிய சுமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் எனக்குள் கூறிக் கொண்டேன்.


"டாக்டர் ஷீலா, நீ தூங்கவில்லை. அப்படித்தானே?"- அவர் தன்னுடைய வயதான குரலில் என்னைப் பார்த்துக் கேட்டார். நான் அதற்கு பதில் சொல்லவில்லை. என்னை டாக்டர் என்று அழைக்கும் வழக்கத்தை அவர் பதினேழு வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து வைத்தார். அவர் தன்னுடைய அரசாங்க வேலையிலிருந்து ஓய்வூதியம் வாங்கி விலகிய பிறகு அது நடந்தது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வீட்டிற்குப் பணம் கொண்டு வந்திருந்த காலத்தில் அவர் என்னை ஷீலா என்றோ அம்மு என்றோ அழைப்பார். நான் ஒரு டாக்டர் என்ற விஷயத்தில் அவர் பெருமைப்பட்டுக் கொண்டதும் இல்லை. என்னுடைய மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி அப்போது அவர் ஒருமுறை கூட என்னிடம் கேட்டதும் இல்லை. அது காரணமாக இருக்கலாம். சமீப காலமாக அவருடைய கேள்விகள் என்னை அமைதியற்றவளாக ஆக்குகின்றன. முன்பே அவர் என்னுடைய வாழ்க்கை விஷயங்களில் ஈடுபாடு காட்டியிருந்தால், நான் இப்போது ஒரு கருங்கல் சிலையைப் போல உணர்ச்சியற்றவளாக மாறியிருக்க மாட்டேன். அமைதியாக இருந்திருக்க மாட்டேன். நான் மவுனமாக இருக்க பழகிக் கொண்டேன். எனக்கும் என் கணவருக்கும் நடுவில் ஒரு சந்தன மரத்தைப் போல- சந்தோஷ சின்னத்தைப் போல அது வளர்ந்து நின்றது.

"நீ தூங்கவில்லை அப்படித்தானே? இன்னைக்கு ஆப்பரேஷன் நடந்த நாளாச்சே! இன்னைக்கு நீ என்ன ஆப்பரேஷன் பண்ணினே?"- அவர் கேட்டார். தூக்கக் கலக்கம் இல்லாத அந்தக் குரல் ஒரு சாட்டை வாரைப் போல என் மீது விழுவதை நான் உணர்ந்தேன்.

"இன்னைக்கு பெரிசா ஒண்ணும் நடக்கல. சாதாரண ஒரு அப்பென்டிக்ஸ்... வயிற்று வலியும் இருப்பதாக புகார். அப்பென்டிசைட்டீஸாக இருக்கும் என்று நினைத்தேன். ஆப்பரேஷன் செய்தபோது, அதற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இருந்தாலும், அதை எடுத்து நீக்கிட்டேன்."- நான் சொன்னேன்.

"டாக்டர்களைப் பார்த்து பயப்படணும். அவர்களின் தவறுதலுக்கான விலையை நோயாளிதான் தரவேண்டியதிருக்கு."

"தவறு செய்யாதவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா?"

நான் முகத்தைத் திருப்பிக் கண்களை மூடிக் கொண்டேன். தூக்கம் வரவில்லையென்றாலும், அவருடன் பேசிக் கொண்டு படுத்திருக்க விருப்பம் உண்டாகவில்லை. அவர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பைப் போல் ஆகியிருந்தார். என்னிடமிருந்து அறுத்து நீக்கப்பட வேண்டிய ஒரு உறுப்பு. விவாகரத்து செய்ய அவர் எந்தச் சமயத்திலும் தயாராக இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்கு நன்றாக தெரியும். அவரைப் பற்றி நீதிமன்றத்தில் புகார் கூற எனக்கும் கஷ்டமாக இருந்தது. அவர் எந்தச் சமயத்திலும் உடல் ரீதியாக எனக்குத் துன்பங்கள் உண்டாக்கவோ, பிற பெண்களுடன் உறவு கொள்ளவோ இல்லை. என்னை இறுகக் கட்டிப் பிடித்தார் என்பதை ஒரு குற்றமாக நீதிமன்றத்தில் கூற முடியாதே! அன்பால் ஆதிக்கம் செய்வது என்பது சட்டப்படி ஒரு குற்றமல்ல. அன்பை வெளிப்படுத்துவதும் குற்றமல்ல.

ஒருமுறையாவது அவர் என்னிடம் கோபப்பட்டு நடக்கவோ, என்னைத் தாக்கவோ செய்தால் நான் விடுதலை பெற்ற பெண்ணாக ஆகிவிடுவேன் என்ற விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். கோபப்பட வைக்கப் பல முயற்சிகளையும் நான் செய்தேன். என்னுடன் சேர்ந்து பணியாற்றும் ஒரு டாக்டரை நான் வீட்டிற்கு வரவழைத்தேன். என் கணவரை முன்னால் வைத்துக்கொண்டு அந்த மனிதரைக் கண்களால் பார்த்துக் கொண்டே அவருக்கு அருகில் உடல்கள் ஒன்றோடொன்று தொடுவது மாதிரி உட்காரவும் செய்தேன். அவர் சொன்னார்: "இனி இரண்டு பேரும் டி.வி.யில் திரைப்படம் பாருங்க. நான் தூங்குகிறேன். என் வயதில் இருப்பவர்களுக்கு தூங்காமல் இருப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம்."

அவரை அவமானப்படுத்துவதற்காக நான் குறுக்கு வழிகளைத் தேடினேன். நான்தான் வீட்டை ஆட்சி செய்கிறேன் என்ற விஷயத்தை அவர் மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் பல நேரங்களில் கூறினேன்: "செலவுகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் தேவைப்படும் பணத்தை நான் தான் சம்பாதிக்கணும். அதை மறந்துவிடக்கூடாது."

அந்தக் காரணத்தால்தான் இருக்க வேண்டும்- க்ளப்பின் உறுப்பினர் என்ற தகுதியை மீண்டும் அவர் புதுப்பித்துக் கொள்ளவில்லை. ஒரு மாலை நேரத்தில் புல்வெளியில் பிரம்பு நாற்காலியில் உரோம சால்வையை மூடிக் கொண்டு அவர் உட்கார்ந்திருப்பதை நான் பார்த்தேன்.

"என்ன இன்னைக்கு க்ளப்பிற்குப் போகலையா?"- நான் கேட்டேன்.

"இல்லை... நான் க்ளப்பின் உறுப்பினர் தகுதியைப் புதுப்பிக்கவில்லை."

"ஏன் இப்படி கஞ்சத்தனமா இருக்குறீங்க? க்ளப்பிற்கு மட்டும்தான் நீங்க போறதே... அந்த போக்குவரத்தையும் வேண்டாம்னு ஒதுக்கிட்டா, உங்களுக்கு வாழ்க்கையே வெறுப்பானதா தோணிடும்."

"நான் எதற்குப் போகணும்? என்னுடைய டென்னிஸ் விளையாட்டு அந்த அளவுக்கு சிறப்பானது ஒண்ணுமில்லை. என்னைக்காவது இதைவிட நன்றாக விளையாடுவேன் என்று நினைத்துக் கொண்டு இந்த விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. அவனவனைப் பற்றிய வீணான எதிர்பார்ப்புகளை விட்டெறிய வேண்டிய காலம் எனக்கு வந்துவிட்டது."

"அப்படியென்றால், நீங்க எப்படிப் பொழுதைக் கழிப்பீங்க? உங்களுக்கு வெறுப்பு தோணிடாதா? புத்தகங்கள் வாசிக்க விருப்பம் இருக்கா? நான் நூலகத்திலிருந்து நான்கு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வர்றேன். கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள் வேணுமா?"

"நான் எதற்கு கிருஷ்ணமூர்த்தியின் நூல்களைப் படிக்கணும்? எனக்கு அப்படிப்பட்ட நூல்கள் சந்தோஷத்தைத் தராது. எனக்கு நேரத்தைப் போக்குவதற்கு சாதாரண கதை புத்தகங்கள் போதும். குற்ற விசாரணைக் கதைகள்..."

தன்னுடைய அனைத்து நடிப்புகளையும் விட்டெறியும் முயற்சியில் அவர் இருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இனம் புரியாத ஒரு கவலை என்னுடைய உடலைச் சோர்வடையச் செய்தது. ஆன்மிக சார்பு கொண்ட ஒரு ஆயுதத்தை எடுப்பதற்கு அவர் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தார். நான் முதல் தடவையாக பதறிப் போய்விட்டேன். என்னுடைய கண்களுக்கு முன்னால் ஒரு முறை தெளிவாகத் தெரிந்த பாதைகள் தெளிவில்லாமல் தெரிந்தன. படிப்படியாக அவை பார்வையிலிருந்து மறைந்து போயின.

இளமையை இழந்த ஆண்கள் வெட்கமில்லாதவர்களாக ஆகிறார்கள் என்று அவர்களுடைய மனைவிமார்கள் குறைப்பட்டுக் கொள்வதுண்டு. பெண்களுக்கு அந்த வயதில் வெட்கம் அதிகரிக்கும். தங்களுடைய உடலின் அழகற்ற விஷயங்கள் அதிகரிக்கத் தொடங்கியவுடன், அதை வெளியில் காட்ட அவர்கள் தயங்குவார்கள். அதே நேரத்தில், தையல் பிரிந்து தளர்ந்து கிடக்கும் மறைவு உறுப்புகளை வயதானவர்கள் முட்டாள்தனமாக வெளியே தெரியும்படி காட்டுவது சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். அப்படிப்பட்ட மோசமான காட்சிகள் பெண்களிடம் உண்டாக்கக்கூடிய வெறுப்பை ஆண்கள் உணர்வதில்லை.


அவர் தன்னுடைய கோவணத்தை அவிழ்த்து, அழுகிப் போன பாகற்காயைப் போல இருந்த ஆண் உறுப்பை ஒரு பெண்டுலத்தைப் போல மெதுவாக ஆடுமாறு செய்து கொண்டு, என்னுடைய அறையில் இங்குமங்குமாக நடந்தபோது எனக்குப் பல நேரங்களில் வாந்தி எடுக்க வேண்டும் போல இருக்கும். ஒருமுறை அவர் கேட்டார்:

"டாக்டர் ஷீலா, நீ ஏன் வாந்தி எடுக்குறே? இரத்தப்போக்கு நின்று விட்ட பெண்களும் கர்ப்பம் தரிக்க முடியுமா?"

தன்னுடைய நகைச்சுவைப் பேச்சில் தான் மட்டுமே சிரிக்க முடியும் என்பது தெரிந்தும் அவர் மிகவும் உரத்த குரலில் சிரித்தார். ஆபாசம் தவிர, ஏதோ ஒன்று அந்தச் சிரிப்பில் இருந்தது. நான் மீண்டும் என்னுடைய விதியை நினைத்து நொந்து கொண்டேன். அழகான ஒரு ஆணின் அணைப்பில் இருந்து கொண்டு இரவு நேரத்தைக் கழிக்கும் பெண்களிடம் எனக்குப் பொறாமை உண்டானது. பொறாமை உடல் வேதனையைப் போல என்னை முற்றிலும் பாடாய்ப்படுத்தியது. என்னுடைய வாயில் எச்சில் வற்றியது.

ஒரு நாள் அவர் சொன்னார்:

"டாக்டர் ஷீலா,  உன்னுடைய நோயாளிகளுக்கு மத்தியில் உன்னை வழிபடும் ஆண்கள் இருக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டினால், உன்னுடைய பதில் செயல் எப்படி இருக்கும்?"

"என்னிடம் உணர்ச்சியைக் காட்ட யாருக்கும் தைரியம் வராது. நான் யாரிடமும் நெருங்குவது இல்லையே! நோயாளிகளைப் பார்ப்பதும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சையை முடிவு செய்வதும் என்னுடைய பார்வையில் வெறும் கடமையை நிறைவேற்றல் மட்டுமே. அவர்களைச் சோதித்துப் பார்க்குறப்போ, நான் அவர்களுடைய நோய்களை மட்டுமே பார்ப்பேன். அவர்களுடைய சொந்த வாழ்க்கைகளில் எனக்கு என்ன ஆர்வம்?"

"உன்னைப் போன்ற ஒரு பெண் வாழ்க்கையில் ஒருமுறையாவது உணர்ச்சிவசப்படுவது நடக்கத்தான் செய்யும். உனக்கு ஏற்ற ஆணை நீ இதுவரை பார்க்கல. அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எப்போது அவனை நீ சந்திப்பேன்னு சொல்ல மட்டும் என்னால் முடியாது."

"என்னிடம் இப்படி சொல்றதுக்கு உங்களுக்கே வெட்கமாக இல்லையா? மனைவி இன்னொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடுவாள் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நான் இந்த மாதிரியான பேச்சுக்களை விரும்பவில்லை. செயலில் என்றல்ல- வெறும் வார்த்தைகளில் கூட அப்படிப்பட்ட உறவில் ஈடுபட நான் விரும்பவில்லை."

அவர் மீண்டும் சிரித்தார். சிரித்தபோது அந்த வாய்க்குள் அசிங்கமாக இருந்த பற்கள் வெளியே தெரிந்தன. சிவந்தும் உடைந்தும் தாறுமாறாக இருந்த பற்கள். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவர் தன்னுடைய பற்களைச் சுத்தம் செய்து பாதுகாக்காமல் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது. அவரை வெறுக்கிறேன் என்றால் அந்த வெறுப்பும் அவரே மனப்பூர்வமாக உண்டாக்குகிற ஒன்றுதானே?

அவரை வஞ்சிக்க, அந்த வகையில் என்னுடைய பதிவிரதத் தனத்தை விட்டெறிய நான் முயற்சிகள் செய்யாமலில்லை. ஆனால், என்னுடன் நெருங்குகிற ஒவ்வொரு ஆணிடத்திலும் நான் அவரை மட்டுமே கண்டேன். கண்டபோது நான் பின்னோக்கி விலகினேன். நடுக்கத்துடன் நான் பதிவிரதத் தன்மைக்குள்ளேயே வழுக்கி விழுந்தேன். விருப்பத்துடன் உணவு உண்பதைப் போல, விருப்பப்பட்ட உணவை எப்போதும் சாப்பிடுவதைப் போல நான் என்னுடைய மனைவி தர்மத்தை முறைப்படி செய்தேன். எனக்கு மன வேதனை உண்டானது. அவருடன் சேர்ந்து உணவு சாப்பிட உட்காரும்போதும், அவருடன் கட்டிலில் படுக்கும் போதும் நான் மனதில் வேதனைப்பட்டேன். நாங்கள் பேசியபோது, மருத்துவமனையின் சவக்கிடங்கின் அடுக்குகளிலிருந்து நழுவி விழும் பிணங்களைப் போல வார்த்தைகள் வந்து விழுவதாக நான் உணர்ந்தேன். அவற்றைவிட மவுனம் எவ்வளவோ மேலானது. ஒருவரையொருவர் தட்டி எழுப்ப மவுனத்தால் முடிந்தது. அது தட்டி எழுப்பியது. ஆனால் ஆறுதல் அளிக்கவில்லை. என்னைத்தேடி நான் அலைந்தேன். இறுதியில் தாழ்ந்துபோன தோள்களுடன் நான் மற்றவர்களை நோக்கித் திரும்பி நடந்தேன்.

"நமக்குக் குழந்தைகள் இருந்திருந்தால், ஒருவேளை நீ இப்பவும் சிரித்துக் கொண்டிருப்பாய். உன் சிரிப்பைப் பார்த்து எவ்வளவு நாட்களாச்சு டாக்டர் ஷீலா! உண்மையாகச் சொல்லப்போனால், அது எந்தச் சமயத்திலும் நடக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். உன் சிரிப்பு முன்பு ஒரு முறை நான் கனவில் கண்ட காட்சி மட்டும்தானா?"- அவர் கேட்டார்.

நான் ஆச்சரியத்துடன் அவருடைய முகத்தைப் பார்த்தேன். எவ்வளவு இனிக்க இனிக்க அவர் பேசுகிறார்! அவர் கோமாளி அல்ல என்ற சூழ்நிலை வந்துவிடுமோ? இறுதியில் ஒரு தத்துவஞானியாகவோ கவிஞராகவோ அவர் வடிவமெடுத்துவிடுவாரோ?

அந்தக் கண்களில் பனியின் மூடலை நான் பார்த்தேன். மூடிய பனிக்குப் பின்னால் எதுவுமே தெரிந்திராத ஒரு மனிதர் எனக்காகக் காத்து நின்றிருப்பாரோ? காமத்தை எடுத்துக் கையாள விருப்பமில்லாத காதலர்! என்னுடைய அழைப்புகளுக்கு அடிபணிந்து மனமில்லா மனதுடன் காமத்திற்குக் கீழ்ப்படியும் ஒரு மனிதர்! முன்பு நான் குழந்தைகள் இல்லாததைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டிருக்கிறேன். இனி எனக்கு அந்த இழப்பைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லை. ஒரு குழந்தையிடம் பாசத்தைக் காட்டுவதற்கு எனக்கு முடியுமா என்று நான் சந்தேகப்படுகிறேன். பாசத்தைக் காட்டுவதற்கும் ஒரு தனிப்பட்ட பயிற்சி தேவைப்படுகிறது. நான் நல்ல ஒரு டாக்டராக இருக்க முயற்சிக்கிறேன். வேறு எந்த பாத்திரத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை.

அவருடைய உதடுகள் மேலும் வெளிறிப்போய்க் காணப்பட்டதாக எனக்குத் தோன்றியது. பேசியபோது அந்தக் குரல் சற்று இடறியது.

"நல்ல மனைவியாக இருக்க நீ எப்போதாவது ஏங்கியது இல்லையா டாக்டர் ஷீலா?"- அவர் கேட்டார்.

நான் எதுவும் கூறாமல் படுத்துவிட்டேன். என்னுடைய மார்பகம் அதிகரித்த மூச்சின் அளவிற்கு ஏற்றபடி உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. அவர் குனிந்து நின்று தன்னுடைய முகத்தை என்னுடைய முகத்துடன் நெருக்கமாக வைத்தார். நீரிழிவு நோயாளிகளின் மூச்சுக்கும் வியர்வைக்கும் பழுத்த வாசனை இருந்தது. இனிமையானதுதான் என்றாலும், மனதில் வெறுப்பை உண்டாக்கக்கூடிய வாசனை அது. நான் தாங்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

"என் கேள்விக்கு நீ ஏன் பதிலே கூறவில்லை டாக்டர் ஷீலா?"- அவர் கேட்டார்.

"உங்களுக்கு என்னைவிட இருபத்தோரு வயது அதிகம். நான் எந்தச் சமயத்திலும் உங்களை ஒரு கணவராக நினைத்ததே இல்லை"- நான் சொன்னேன்.

"நீ சொன்னது உண்மை அல்ல. நீயும் ஆர்வத்தை வெளிப்படுத்திய நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்"- அவர் சொன்னார். அவருடைய குரலில் கலந்திருந்த காம உணர்ச்சி என்னைக் கோபம் கொள்ளச் செய்தது. நான் வேகமாக கட்டிலை விட்டு எழுந்திருக்க முயற்சித்தேன்.


அவர் என்னைப் படுக்கையிலேயே படுக்க வைக்க ஒரு முயற்சி செய்தார். நான் கைகளை விலக்கியபோது, அவருடைய கண்ணாடி தரையில் விழுந்து உடைந்தது. அதை அவர் தேடி எடுத்தபோது எந்தவொரு இரக்கமும் இல்லாமல் நான் அந்த மெதுவான அசைவுகளைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவருடைய வேட்டிக்கு அடியில் தெரிந்த கோவணம் எனக்குள் வெறுப்பை உண்டாக்கியது. வேட்டி சிறிது விலகிய போது, வாரிக்கோஸ் நரம்புகள் பலாவின் வேர்களைப் போல வீங்கியும் பின்னியும் தெரிந்தன. 'கிழவன்... படு கிழவன்...'- என் மனம் முணுமுணுத்தது. ஆனால் என்னுடைய உதடுகள் அசையவில்லை.

"இன்னைக்கு ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. ரோட்டரி க்ளப்பைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் சொன்னார்கள். மாதிரி தம்பதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு போட்டியை அவர்கள் நடத்தப் போகிறார்களாம். நானும் நீயும் அந்தப் போட்டியில் பங்கு பெற வேண்டுமென்று அவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். முதல் பரிசு உலகப் பயணத்திற்கான இரண்டு விமான டிக்கெட்டுகள். மாதிரி தம்பதிகளாக உலகம் முழுவதும் பயணம் செய்யலாம். உனக்கு அது பிடிச்சிருக்குல்ல டாக்டர் ஷீலா?"- அவர் கேட்டார்.

"என் நோயாளிகளை விட்டு நான் எந்தப் பயணத்திற்கும் வர்றதா இல்ல"- நான் சொன்னேன்.

"வெற்றி பெற்றால்தானே உலகப் பயணத்திற்குப் போக முடியும். நாம் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியுமா?"- அவர் கேட்டார்.

"ஏன் வெற்றி பெற முடியாது? மிகவும் அதிக வருடங்கள் நீடித்திருக்கும் ஒரு குடும்ப வாழ்க்கைதானே நம்முடைய குடும்ப வாழ்க்கை? நான் உங்களுக்கு துரோகம் செய்தது இல்லை. நீங்கள் எனக்குத் துரோகம் பண்ணியது இல்லை. ஒரு இரவு நேரத்தில் கூட நாம் பிரிந்து படுத்து உறங்கியதில்லை. உண்மையிலேயே அந்தப் போட்டியில் நாம் வெற்றி பெறுவோம்"- நான் சொன்னேன்.

அவர் என்னுடைய முகத்தையே சோர்வடைந்துபோய் காணப்பட்ட கண்களால் ஆராய்ந்தார். 

"நீ உண்மையாகத்தான் பேசுகிறாயா? சில நேரங்களில் என்னை நீ கேலி செய்கிறாயோ என்று எனக்கு சந்தேகம் வந்திடுது"- அவர் சொன்னார்.

"கேலி செய்வதா? எதற்கு? உண்மையாகவே நம்முடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி எல்லோரும் புகழ்ந்து சொல்லியே ஆக வேண்டும். நாம் மற்ற தம்பதிகளைப் போல அல்ல. என்னுடைய சினேகிதி கல்யாணிக்குட்டி திருமணம செய்து இரண்டரை வருடங்கள் கடந்தபோது, விவாகரத்து வாங்கிவிட்டாள். அவளுடைய குடும்ப வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டது என்று எல்லோரும் சொன்னாங்க. இன்னைக்கு அவள் என்னைப் பார்ப்பதற்காக வந்தாள். அவள் தன்னுடைய கணவரைப் பற்றி விசாரிப்பதற்காகத்தான் திரும்பவும் இந்த நகரத்திற்கே வந்திருக்கிறாள். முப்பது வருடங்களுக்கு முன்னால் தான் உதறி விட்டுப்போன மனிதரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக அவள் என்னைத் தேடி வந்தாள்"- நான் சொன்னேன்.

"பிறகு?"

"சுதாகரனின் இரண்டாவது மனைவி என்னுடைய சிகிச்சையில் இருக்கிறார் என்று நான் சொன்னேன். அவளுடைய குடும்ப வாழ்க்கை ஒரு பெரிய வெற்றியாக இருந்தது என்று அவள் சொன்னாள். அந்த மனிதரைப் பற்றிய இனிய நினைவுகள் மட்டுமே இப்போது அவளிடம் இருக்கின்றன. ஒருவரையொருவர் வெறுப்பதற்கு முன்பே அவர்கள் பிரிந்து விட்டார்களே!"

"அப்போது நீ என்ன சொன்னாய்?"

"நான் என்ன சொல்றது? எனக்கு அவள் மீது பொறாமை தோன்றியது. அவ்வளவுதான்."

"நீ எந்தச் சமயத்திலும் என்னை விரும்பினது இல்லையா டாக்டர் ஷீலா?"- அவர் கேட்டார். அந்தக் கிழட்டுக் கண்களில் ஈரம் படர்ந்தபோது நான் வெட்கப்பட்டு தலையைக் குனிந்து கொண்டேன்.

"உன் அழகான முகத்தைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. நாளைக்கே நான் ஒரு புதிய கண்ணாடிக்காக ஏற்பாடு செய்யிறேன்."

மறுநாள் காலை பதினோரு மணிக்கு அவர் க்ளப்பிற்குப் போயிருந்த நேரத்தில் கல்யாணிக்குட்டி வீட்டிற்கு வந்தாள். என்னுடைய வீட்டிற்கு முன்னாலிருந்த பூந்தோட்டமும் வரவேற்பறையில் இங்குமங்குமாக வைக்கப்பட்டிருந்த உலோகத்தாலான சிலைகளும் மிகவும் அழகாக இருப்பதாக கல்யாணிக்குட்டி சொன்னாள்.

"நீ கலை உணர்வு கொண்ட ஒரு பணக்காரி"- அவள் சொன்னாள்: "உண்மையிலேயே நீ எப்போதும் இப்படி இருந்தே- கலை உணர்வு கொண்ட பணக்காரியா..."

"கலை உணர்வு உண்டாவதும் பணம் உண்டாவதும் ஒரு குற்றம் என்ற தவறான எண்ணத்துடன் நீ பேசுகிறாய் என்று நான் நினைக்கிறேன்."

"அதெல்லாம் வெறும் தோணல்.அவ்வளவுதான். உன் மீது எனக்கு எப்போதும் பொறாமை மட்டுமே தோணியிருக்கு. இருபது வயது அதிகமாக இருக்கும் ஒரு மனிதரை நீ கணவராக ஏற்றுக் கொண்டபோது நான் பொறாமைப்பட்டேன். காரணம்- உன் கணவர் என் சுதாகரனைப் போன்ற ஒருவராக இல்லை. உன் கணவர் தன்னுடைய நீலநிற ட்ரெஸ்ஸிங் கவுனை அணிந்து வெளியே வராந்தாவில் அமர்ந்து செய்தித்தாள்களைப் படிக்கிறப்போ நான் உன்னுடைய அதிர்ஷ்டத்தை நினைத்து பொறாமைப்பட்டிருக்கேன். என்னுடைய சுதாகரன் இளைஞரா இருந்தார். ஆண்மைத்தனம் கொண்டவராக இருந்தார். ஆனால், தன்னுடைய குற்ற உணர்வு அவரை ஒரு மிருகமாக மாற்றியது. பழகும் விஷயங்களில் எப்படி நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. பெரிய மனிதர்கள் இருக்கும் அரங்கில் அவரை அழைத்துக் கொண்டு செல்ல நான் தயங்கினேன். அவர் என்னை அடியே பெண்ணே, தேவடியாள் என்றெல்லாம் அழைப்பார். அவருக்கு என் மீது மதிப்பு இல்லை என்பதை நான் உறுதியாகத்தான் தெரிந்து கொண்டேன். பாசத்துடன் இருக்கும் ஒரு கணவரைத் தேடி நான் சுதாகரனை விட்டுப் பரிந்து சென்றேன். ஆனால், எப்போதும் சுதாகரனை மட்டுமே நான் என்னுடைய படுக்கையில் எதிர்பார்த்திருக்கிறேன்... உன்னையும்..."

கல்யாணிக்குட்டி அழ ஆரம்பித்தபோது, எனக்கு அவள் மீது இரக்கம் உண்டானது. அவளுக்கு சுதாகரனை மீண்டும் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுக்க நான் தயாராக இருப்பதாகச் சொன்னேன்.

"வேண்டுமென்றால் நான் அவரை இங்கு உணவுக்கு அழைக்கிறேன். மனைவியுடன்..."- நான் சொன்னேன்.

"அய்யோ! மனைவியை அழைக்க வேண்டாம். எனக்கு அவருடைய மனைவியைப் பார்க்க சிறிதும் விருப்பமில்லை..."- அவள் சொன்னாள்.

மறுநாள் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் சுதாகரன் வந்தார். என்னுடைய தோட்டத்தில் ஒரு ஃபெமினா இதழை வாசித்துக் கொண்டு கல்யாணிக்குட்டி அமர்ந்திருந்தாள். அவர்கள் இருவரும் மவுனமாக இருந்து கொண்டு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். ஏங்கிக் கொண்டிருக்கும் கண்களுடன் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். நான் உள்ளே போனேன்.

அன்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வாடகைக் காரில் போன பிறகு, அதுவரையில் அவர்களிடம் விருந்தினருக்கான மரியாதைகளைக் காட்டிய என்னுடைய கணவர் என்னைத் திட்ட ஆரம்பித்தார்.


"எந்தச் சமயத்திலும் நீ இதைச் செய்திருக்கக்கூடாது. உன்னுடைய ஒரு நோயாளியான அந்த மனிதரின் மனைவியை நினைத்தாவது நீ அவரைக் காட்ட மாட்டாய் என்று நான் நினைத்தேன். அவள் இந்த விஷயத்தைத் தெரிய நேர்ந்தால், அழுது அழுது படுக்கையில் விழுந்து விடுவாள். உன்னுடைய இளம் வயது சினேகிதியின் கவர்ச்சி ஒரு ஏழைப் பெண்ணுக்கு இருக்காதே!"

"எனக்கு கல்யாணிக்குட்டி மீது இருக்கும் அக்கறை வேறு யாரிடமும் கிடையாது. அதை நீங்க புரிஞ்சிக்கணும்"- நான் சொன்னேன்.

"அப்படின்னா அவள் சுதாகரனை அபகரித்து தன்னுடன் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு போனால் நீ சந்தோஷப்படுவே. அப்படித்தானே?அந்த அப்பிராணிப் பெண்ணும் அவளுடைய ஒரே மகனும் ஆதரவு இல்லாமல் போவது குறித்து உனக்கு எந்தக் கவலையும் இல்லை. சுதாகரனின் மகளைப் பற்றி நீ எத்தனை முறை புகழ்ந்து பேசியிருக்கிறாய்! அவளுக்கு ஒரு தந்தை இல்லாமல் போவதில் உன்னுடைய பங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நீ நினைத்துப் பார்த்திருக்கிறாயா?"- அவர் கேட்டார்.

"நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும். தேவைப்பட்டால் சுதாகரனின் மனைவியையும் மகள் அம்மிணியையும் பார்த்துக் கொள்கிற பொறுப்பை நானே ஏற்றுக் கொள்வேன். அவளைப் படிக்க வைத்து ஒரு நல்ல வேலையைத் தேடித் தருவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. அவசியமென்றால் நான் அம்மிணியை ஒரு டாக்டராக ஆக்குவேன். நமக்குப் பிள்ளைகள் இல்லை எனற குறையை அவள் தீர்த்து வைக்கட்டும்."

அவர் அதற்குப் பிறகு எதுவும் கூறாமல் போய்விட்டார்.

சுதாகரனின் பத்தொன்பது வயது கொண்ட மகள் எங்களுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள். உண்மையாக சொல்லப்போனால் அவளுக்கு கல்யாணிக்குட்டியின் சாயல் இருந்தது. கல்யாணிக்குட்டியைப் பார்க்கக்கூட செய்திராத திருமதி சுதாகரனால் அவளுடைய நிறத்தையும் அவளுடைய கன்னக் குழிகளையும் கொண்ட ஒரு பெண் குழந்தையை எப்படிப் பெற்றெடுக்க முடிந்தது என்ற கேள்விக்கு பதில் கூற யாரால் முடியும்? சுதாகரனுக்கு கல்யாணிக்குட்டிமீது இருக்கும் ஈர்ப்பு காரணமாக, அப்படிப்பட்ட ஒரு மகள் அவருடைய மனைவிக்குப் பிறந்திருக்கலாம் என்று என்னுடைய கணவர் சொன்னார். சுதாகரனும் குடும்பமும் இரண்டோ மூன்றோ மாதங்கள் ஆகும்போது, எங்களை வந்து பார்ப்பதுண்டு. அந்தச் சந்திப்பு வேளைகளில் என்னுடைய கணவர் அம்மிணியிடம் உரையாடுவதையும் அவளுடைய பொழுதுபோக்கான பேச்சுக்களைக் கேட்டு சிரிப்பதையும் நான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.

சுதாகரனின் மனைவி நவ நாகரீகமானவள் இல்லை என்றாலும், அவள் நல்ல ஒரு குடும்பப் பெண் என்று அவர் பல முறை கூறியிருக்கிறார். என்ன காரணத்தாலோ எனக்கு அந்தப் பெண்ணைப் புகழ்ந்து கூற முடியவில்லை. கல்யாணிக்குட்டியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவளுடைய தோற்றம் பிரகாசம் குறைந்ததாக இருந்தது. எனக்கு அவள் மீது அன்பு செலுத்த முடியவில்லை. ஒரு நோயாளியிடம் டாக்டருக்குத் தோன்றக்கூடிய சாதாரண உணர்வுகள் மட்டுமே அவளுக்காக எனக்குள் தோன்றின. அந்த உறவின் முக்கிய விஷயம் இரக்கம் தான். இரக்கத்துடன் கலந்திருந்த ஒரு வெறுப்பும் இருந்தது. அந்தக் காரணத்தால் இருக்க வேண்டும், கல்யாணிக்கட்டி சுதாகரனுடன் நாட்களையும் இரவுகளையும் செலவழித்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தும் எனக்கு கோபமே வரவில்லை. அவளுக்கு முப்பது வருடங்களுக்குப் பிறகு அந்த மனிதருடன் ஒரு தேனிலவு தேவைப்படுகிறது என்றால் நான் எதற்கு அவளுக்கு சமூக சட்டங்களை ஞாபகப்படுத்த வேண்டும்? கல்யாணிக்குட்டி வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்த பிறகுதான் சுதாகரனின் மனைவி மீண்டும் என்னைப் பார்ப்பதற்காக க்ளினிக்கிற்கு வந்தாள். ஒரு காலின் பெருவிரலை நான் நீக்கிவிட்டிருந்தேன். ஆனால், மற்ற கால்களிலும் பழுப்பு ஆரம்பித்திருக்கிறது என்று அவள் குறைபட்டாள்.

"விரலை நீக்கியதை நான் பெருசா எடுக்கலை டாக்டர் ஷீலா. பழுப்பும் வேதனையும் இருக்கு..."- அவள் சொன்னாள்.

நான் அவளுடைய கால்கள¬ சோதித்துப் பார்த்தபோது, அவள் வேதனைப் படுவதைப் போல் எனக்குத் தோன்றியது. அவளுடைய கண்கள் நீரால் நிறைந்திருந்தன.

"என்ன ஆச்சு?"- நான் கேட்டேன்.

"என் மனதில் கொஞ்சம் கூட அமைதி இல்லை."

"என்ன நடந்தது?"

"அவள் என் கணவரையும் மகளையும் வசீகரித்துவிட்டாள். என் மகளைத் தன்னுடன் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துக் கொண்டு போகப் போவதாக அவள் என்னிடம் சொன்னாள். அம்மிணி சின்னக் குழந்தை. அவளுக்கு எது சரி எது தவறு என்பதெல்லாம் தெரியாது. நான் உயிருடன் வாழ்வதே அம்மிணிக்காகத்தான். அவளை அந்தப் பெண் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துக் கொண்டு போனால், நான் கவலையில் செத்தே போவேன்."

"சுதாகரன் அம்மிணியின் செயலைப் பற்றி என்ன சொல்கிறார்?"

"அவர் அதை ஏற்றுக் கொள்கிறார். ஒருவேளை, தாமதமாகாமல் அவரும் அங்கே போனாலும் போகலாம். அவளுடைய இரண்டாவது கணவர் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அதனால், அவள் என் கணவரைத் தேடி இந்தியாவிற்கு வந்திருக்கலாம்."

"ச்சே... அழக்கூடாது. சுதாகரன் உங்களை விட்டு எங்கும் போக மாட்டார். சுதாகரனும் கல்யாணிக்குட்டியும் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் ஒத்துப் போகவில்லை என்று நினைத்துப் பிரிந்தவர்கள். இனி அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழப் போவது இல்லை. கல்யாணிக்குட்டிக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் உங்களுடைய மகளை அழைத்துக் கொண்டு போய் காப்பாற்ற வேண்டுமென்று அவள் விரும்பியிருக்கலாம். உங்களுக்கு அம்மிணியைப் பிரிந்து வாழ முடியாது என்று நான் அவளுக்குப் புரிய வைக்கிறேன். போதுமா?"- நான் கேட்டேன்.

"அவளுக்கும் நல்லதைச் சொல்லி அறிவுறுத்துங்க..."-அவள் சொன்னாள்.

"நீங்கள் பயப்பட வேண்டாம். நான் சின்ன பிள்ளையா இருந்த போதிருந்தே கல்யாணிக்குட்டியை எனக்குத் தெரியும். அவள் அறிவு இல்லாதவளா இருக்கலாம். ஆனால் இரக்கம் இல்லாதவள் இல்லை. நான் அவளிடம் பேசுகிறேன்."

அன்று மாலை நேரத்தில் கல்யாணிக்குட்டி என்னைப் பார்ப்பதற்காக வந்தாள். அவள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். அம்மிணியை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்று நான் சொன்ன போது அவளுடைய முகம் சிவந்து விட்டது.

"இந்த மாதிரியான விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் யாரும் தேவையில்லாமல் நுழைவதை நான் விரும்பவில்லை." அவள் சொன்னாள்.

"அம்மிணி உன்னுடைய சொந்த வாழ்க்கையா?"

"அம்மிணி என்னை விரும்புகிறாள். அவளுக்கு என்னுடன் வாழ்வது பிடிக்கிறது. அந்த விருப்பத்தை நிறைவேற்றித் தர என்னால் முடியும்."


"ஆனால், அம்மிணிக்கு இப்போது பத்தொன்பது வயது நடக்கிறது. அவளை நோயாளியான தாயிடமிருந்து பிரித்து ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துக் கொண்டு போவது என்ற விஷயம்... அவளுக்கு சிகிச்சை செய்யும் டாக்டர் என்ற நிலையில் நான் கூறுகிறேன்- கொஞ்சம் கூட சரியில்லாதது. அவளால் தன்னுடைய மகளைப் பிரிந்து வாழ முடியாது."

"அம்மிணி திருமணம் செய்து வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டால் அவளுடைய அம்மா என்ன செய்வாள்? திருமணம் நடக்கும்போது எனக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் உறவு காணாமல் போய்விடும்."

"இந்த விஷயத்தைப் பற்றி இனிமேலும் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. நீ அவளைக் கெடுப்பதற்கு முயற்சி பண்ணுறே."

"ஷீலா, நீ பொய்யான விஷயங்களைத் திரும்பத் திரும்ப சொல்றே. இறுதியில் நீதான் உன் பொய்களை நம்புறே. நீயாக இருக்க உனக்கு தைரியம் இல்லை. என்னை விரும்புகிறேன் என்று மனம் திறந்து கூறுவதற்கு உனக்கு எந்தச் சமயத்திலும் தைரியம் வந்ததில்லை. என்னுடன் சேர்ந்து வாழும்போது மட்டுமே உனக்கு ஓய்வும் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று உனக்கும் தெரியும். எனினும், நீ பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வரும் அந்த வழியை உனக்காகத் தேர்ந்தெடுத்துவிட்டாய். சிதிலமடைந்த வழி. உன்னுடைய அவலட்சணமான கணவரையும் அவருடன் படுப்பதையும் அவருடைய  கிழட்டுத் தனமான வார்த்தைகளையும் விரும்புவதாக நீ நடித்தாய். இறுதியில் நீ யாருமே இல்லாதவளாக ஆகிவிட்டாய். யாருக்கும் தேவையில்லாதவளாக ஆகிவிட்டாய். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு பழுத்து அழுகிய உறுப்புகளை அறுத்து நீக்குவதற்கும், கர்ப்பப்பையிலிருந்து அறுவை சிகிச்சை செய்த குழந்தையை வெளியே எடுப்பதற்கும் சிலருக்கு நீ தேவைப்பட்டாய். அவர்களுக்குத் தவிர வேறு யாருக்கு இப்போது நீ வேண்டும்?"- கல்யாணிக்குட்டி கேட்டாள். சலவைக்குப் போகாத புதிய வேட்டியின் சத்தத்தைப்போல இருந்தது அவளுடைய குரல். அதில் தன்னம்பிக்கை துடித்து நின்று கொண்டிருந்தது. என்னுடைய கண்களில் நீர் நிறைந்து விட்டது.

"என்னுடைய கணவருக்கு நான் வேண்டும். அவர் என்மீது உண்மையாகவே அன்பு வைத்திருக்கிறார்"- நான் சொன்னேன்.

"அவர்- உன்னுடைய படு கிழவரான அவர் உன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்றால், எதற்காக நேற்று மதியம் முழுவதும் என்னுடைய ஹோட்டல் அறையில் அவர் இருக்க வேண்டும்? என்னிடம் காதல் மொழிகளை அள்ளி வீசிக் கொண்டு அந்த முட்டாள் என் அறையில் நான்கு மணி நேரங்கள் இருந்தார். உன்னுடைய கணவராக இருந்ததால் மட்டுமே நான் அந்த மனிதரை மிதித்து வெளியே அனுப்பாமல் இருந்தேன்."

"அய்யோ! நீ இப்படிப்பட்ட கதைகளைக் கற்பனை பண்ணிச் சொல்லாதே. கல்யாணிக்குட்டி உனக்குத் தெய்வம் தண்டனை தரும். எந்தச் சமயத்திலும் வேறொரு பெண்ணைப் பார்க்காத என்னுடைய கணவர் உன்னைக் காதலிப்பதா? இந்தக் கதையை யார் நம்புவார்கள்?"- நான் கேட்டேன்: "உன்னைப் போன்ற ஒரு முட்டாளை நான் பார்த்ததே இல்லை."

"ஷீலா, அவர் உன்னை எந்தச் சமயத்திலும் காதலித்தது இல்லை. உன்னுடன் நடந்த திருமணம் அவருக்கு சமூகத்தில் ஒரு மரியாதையை உண்டாக்கித் தந்தது. மதிப்புமிக்க மனிதராக நடிப்பதற்கு அப்போது அவர் முடிவு எடுத்தார். அந்த நடிப்பு ஏமாற்றியது உன்னை மட்டுமல்ல; இந்த நகரத்திலுள்ள பெரிய மனிதர்கள் எல்லோரையும் அது ஏமாற்றியது. ஒரே ஒரு பார்வையில் நான் அந்த மனிதரின் இதயத்தின் அடித்தளத்தில் இருக்கும் மோசமான ஆசைகளைத் தெரிந்து கொண்டுவிட்டேன் என்பதை அவர் புரிந்து கொண்டுவிட்டார். நடிப்பை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் எனக்கு அருகில் இருக்க பாவம், அந்த மனிதர் ஆசைப்பட்டார். ஆனால், எனக்கு இப்படிப்பட்ட ஆண்கள் தேவையே இல்லை. இவர்கள் மோசமான மிருகங்கள் ஷீலா. நான் உன்னை வேதனைப்படுத்திவிட்டேன். ஒரு காலத்தில் நீ என்னை வேதனைப்படச் செய்தாய். தொடர்ச்சியாகவும் வேதனை கொள்ளச் செய்தாய். இனி அந்த விளையாட்டை நான் விளையாடப் போகிறேன் ஷீலா"- கல்யாணிக்குட்டி சொன்னாள்.

என்னுடைய கணவர் க்ளப்பிலிருந்து திரும்பி வந்ததால் எங்களுடைய உரையாடல் வேறு விஷயங்களை நோக்கிப் போக ஆரம்பித்தது. எனக்கு அவள் மீது உடல் ரீதியான ஒரு ஈர்ப்பு முன்பு உண்டாகியிருந்தது. அது பிரமை என்று நினைத்துக் கொண்டு வாழ்வதற்கு நான் பல வருடங்களாக முயற்சித்தேன். ஆனால், அது பலிக்கவில்லை. ஆனால், அவள் என்னுடைய கணவரின் காதல் வெளிப்பாட்டைப் பற்றி என்னிடம் கூறிய நிமிடத்திலிருந்து நான் அவளுடைய காந்த வட்டத்திற்கு வெளியே வந்துவிட்டேன். பல வருடங்களாக இருந்த மனப்போராட்டங்களில் இருந்தும் குற்ற உணர்வுகளில் இருந்தும் நான் விடுதலை அடைந்து விட்டதைப் போல் எனக்குத் தோன்றியது.

விமான நிலையத்தை அடைந்தபோது நான் கல்யாணிக்குட்டியைப் பார்த்தேன். அவள் ஒரு வாடகைக் காரிலிருந்து தலையைக் குனிந்து கொண்டு இறங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய சுதாகரனோ அம்மிணியோ யாரும் இல்லை. நான் காரை நிறுத்திவிட்டு வந்தபோது, அவள் உள்ளே நுழைந்து விட்டிருந்தாள். நான் உரத்த குரலில் அழைத்தேன்: "கல்யாணிக்குட்டி..."

அவள் நடப்பதை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தாள். தொடர்ந்து தன் கடிகாரத்தில் கண்களை ஓட்டினாள்.

"எனக்கு நேரம் ஆகவில்லை. வா, ஷீலா... நாம் பத்தோ பதினைந்தோ நிமிடங்கள் வெளியே இருந்து தேநீர் அருந்தலாம்"- அவள் சொன்னாள். பிறகு சக்கரங்கள் கொண்ட தன்னுடைய தோல் பெட்டியை உருட்டியவாறு என்னுடைய தோளில் கை வைத்துக் கொண்டு அவள் நடந்தாள். அவளை எல்லோரும் விரிந்த கண்களால் பார்த்தார்கள். அவளுடன் சேர்ந்து நடக்கும்போது என்னுடைய வயதான அடையாளங்கள் முன்பு இருந்ததைவிட அதிகமாக வெளியே தெரிவதைப்போல் நான் உணர்ந்தேன். என்னுடைய நரை ஏறிய முடி, என்னுடைய மெதுவான நடை என் தோள்களுக்கு முன்னாலிருந்த வளைவு... ஒருவேளை எங்களைப் பார்த்தவர்கள் நான் அவளுடைய தாயாக இருக்க வேண்டும் என்று தவறுதலாக நினைத்திருக்கலாம்.

"நான் உன்னுடைய தாய் என்று எல்லோரும் நினைத்திருப்பார்கள்"- நான் சொன்னேன்.

"உருவ ஒற்றுமை இருக்கிறது என்று எனக்கு எப்போதிருந்தோ தெரியும். உன்னுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகுதான் அதற்கான காரணம் எனக்குத் தெரிய வந்தது."

-"நீ என்ன சொல்ற?"- நான் தாங்க முடியாமல் கேட்டேன்.

"உன் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அவர் எழுதி வைத்த ஒரு கடிதத்தையும் கொஞ்சம் பணத்தையும் உங்களுடைய கணக்குப் பிள்ளை என்னிடம் தனிப்பட்ட முறையில் கொண்டு வந்து கொடுத்தார். எந்தச் சமயத்திலும் நான் உன்னுடைய தந்தை என்று கூறத் தயங்கிய அந்த மனிதரை நான் அந்த நிமிடத்தில் மிகவும் கடுமையாக வெறுத்தேன்"- கல்யாணிக்குட்டி பேச்சை நிறுத்திவிட்டு தேநீர் அருந்துவதில் மூழ்கினாள்.


"என்னால் இதை மட்டும் நம்ப முடியவில்லை. என்னுடைய தந்தையும் தாயும் எந்த அளவிற்கு இனிமையாக வாழ்ந்தார்கள்! என் தந்தை என் தாயை ஏமாற்றினார் என்பதை நான் எப்படி நம்புவேன்?"- நான் கேட்டேன்.

"நான் அந்தக் கடிதத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன். வேண்டுமென்றால் நீ வாசிப்பதற்காக நான் அதனுடைய பிரதியை எடுத்து அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன். நீ என்னுடைய சகோதரி என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்ட பிறகும் என்னால் என்னையே கட்டுப்படுத்த முடியவில்லை. நான் உன்னை அந்த அளவிற்கு விரும்பினேன் ஷீலா! உன்னிடம் தோன்றிய அன்பு எனக்கு வேறு யாரிடமும் தோன்றவில்லை. என்னுடைய இரண்டாவது கணவர் ஒரு நல்ல மனம் கொண்டவராக இருந்தார். என்னை மனைவியாக அடைந்தபோது தனக்கு கோஹினூர் வைரமே கிடைத்து விட்டது என்ற எண்ணம் அவருக்கு உண்டானது. வசதியான வாழ்க்கை வாழ அவர் எனக்குக் கற்றுத் தந்தார். எல்லா வகைப்பட்ட சுகங்களும் எனக்குக் கிடைத்தன. ஆனால், எந்தச் சமயத்திலும் பசியென்ற ஒன்றுக்கான வாய்ப்பே தரப்படாமல் வாழ நேர்ந்தது குறித்து நான் கவலைப்பட்டேன். பசி இல்லையென்றால் ருசி எப்படி நீடித்திருக்கும்? இறுதியில் அவர் இறந்தபோது, மீண்டும் நான் சுதந்திரமானவளாக ஆனேன். என்னுடைய கவலைகளை நோக்கி நீண்ட பயணங்களை மேற்கொள்ள எனக்கு சுதந்திரம் கிடைத்தது. எனக்கு அழுவதற்கு விருப்பம் உண்டானது. முன்பு செய்ததைப் போல தலையில் அடித்துக் கொண்டு அழ வேண்டும் போல இருந்தது. பக்குவத்தை வீசி எறிந்து விட்டு, மீண்டும் நீ அறிந்திருந்த கல்யாணிக்குட்டியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீ என்னை 'போ பெண்ணே' என்று கூறி மீண்டும் திட்டுவாய் என்று ஆசைப்பட்டேன். இளம் வயது காலத்தின் கள்ளங்கபடமற்ற தன்மையை நோக்கித் திரும்பச் செல்ல வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்."

கல்யாணிக்குட்டி தன்னுடைய கன்னங்களை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்தாள். அவளுடைய கண்களுக்கு ஆழம் அதிகரித்து விட்டிருப்பதைப் போல் நான் உணர்ந்தேன்.

"நீ அம்மிணியை உன்னுடன் அழைத்துக் கொண்டு போகப் போவதாகச் சொன்னாயே!"- நான் கேட்டேன்.

"அம்மிணியை அழைத்துக் கொண்டு போக நினைத்தேன். ஆனால், அவளுடைய பயணத்தை உறுதி செய்தபோது, அவளுடைய தாய் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள். சுதாகரன் அந்த விஷயத்தைச் சொன்னபோது, நானே அம்மிணியின் பயணத்தை நிறுத்தி விட்டேன்"- கல்யாணிக்குட்டி சொன்னாள்.

"எனக்கு எதுவும் தெரியாது."

"உனக்கு எதுவும் தெரியாது. உன்னுடைய கணவர் உன்னை ஏமாற்றுவதும் உனக்குத் தெரியாது. நீ நடந்து கொண்டிருக்கும் பிணம் மட்டுமே ஷீலா..."

"சரிதான்... நான் உயிருடன் இருப்பதாக எல்லோரும் சொல்றாங்க. காரணம்- என்னுடைய பெயர் இதுவரை செய்தித்தாள்களில் மரண அறிவிப்பில் வந்தது இல்லை. விருந்தாளிகள் வர்றப்போ இப்போதும் நான் என்னுடைய முன் கதவைத் திறக்கிறேன். அதனால், நான் இதுவரையில் இறக்கவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்"- நான் சொன்னேன்.

கல்யாணிக்குட்டி எழுந்து நின்றாள். அவள் மீண்டும் முன்பு செய்ததைப் போல என்னை முத்தமிடுவாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவள் புன்னகைக்க மட்டுமே செய்தாள்.

"சுவாரசியமான ஒரு ஓய்வுக்காலம் முடிந்து நான் செல்கிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி. மீண்டும் எப்போதாவது பார்ப்போம்."

அவள் தன்னுடைய நீளமில்லாத தலை முடியை அசைத்தவாறு நடந்து போவதைப் பார்த்தவாறு நான் ஒரு சிலையைப் போல எந்தவித அசைவும் இல்லாமல் நின்றிருந்தேன். இறுதியில் அவள் இல்லாமல் போனபோது இழப்பு உணர்வுடன் நான் விமான நிலையத்திற்கு வெளியே நடந்தேன். என்னுடைய கால்கள் சோர்வு காரணமாக தளர்வதைப் போல் உணர்ந்தேன். என்னுடைய வீடும் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகான பொருட்களும் என்னுடைய கிழட்டுக் கணவரும் என்னுடைய நோயாளிகளும்- எல்லாம் அடங்கியிருக்கும் அந்தப் பழக்கமான உலகத்தை நோக்கி மீண்டும் செல்வதற்கு எனக்கு மனமில்லாமல் இருந்தது. ஆனால், எனக்கு வாழ்வதற்கு வேறு ஒரு இடம் இல்லையே! நான் எனக்குள் கூறிக் கொண்டேன். என் மீது அன்பு செலுத்த இனி யாரும் இல்லையே...

நான் என்னுடைய கணவருடன் சேர்ந்து சுதாகரனின் வீட்டை அடைந்தபோது, அங்கு அம்மிணி மட்டுமே இருந்தாள்.

"அம்மாவை நாளைக்கு வீட்டுக்குக் கொண்டு வருவாங்க"- அவள் சொன்னாள்.

"மயக்கம் தெளிஞ்சிருச்சா?"

"ம்..."

மருத்துவமனைக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்னால் ஐந்தோ பத்தோ நிமிடங்கள் அங்கு ஓய்வெடுகக நான் விரும்பினேன். என்னுடைய தோள்கள் வலிப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.

"அம்மிணி, நீ ஏன் இப்போதும் அழுது கொண்டிருக்கிறாய்? உன்னுடைய தாய் மரணத்திலிருந்து தப்பித்து விட்டாளே!"- நான் அவளிடம் கேட்டேன்.

அவள் தன்னுடைய கையால் கண்ணீரைத் துடைத்தாள்.

"நான் என் தாயை வெறுக்கிறேன். என்னுடைய வாழ்க்கையையும் என் தந்தையின் வாழ்க்கையையும் அவங்க நாசமாக்கிட்டாங்க"- அம்மிணி சொன்னாள்.

அதைக் கேட்டு நான் பதைபதைத்துப் போய்விட்டேன். அவளுக்கு சுய உணர்வு இல்லாமல் போய்விட்டதோ என்று நான் சந்தேகப்பட்டேன். எப்போதும் அமைதியாகக் காட்சியளிக்கும் அந்த இளம் பெண்ணுக்கு என்ன ஆனது? நான் அவளை வாரி அணைத்துக் கொண்டேன்.

"என்ன காரணத்தால் நீ உன்னுடைய சொந்தத் தாயை இப்போ இந்த அளவிற்கு வெறுக்கிறாய்? பாவம்... அவள் உங்க இரண்டு பேரையும்... கல்வி எதுவும் இல்லை என்றாலும்... உங்களை உயிருக்குயிரா நேசிக்கிறாள்... அவளை நீ எந்தச் சமயத்திலும் வெறுக்கக்கூடாது. சுதாகரனுக்காக மட்டுமே அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்."

"அவள் உயிருடன் இருக்கும் வரை நானும் என் அப்பாவும் சுதந்திரமானவர்களாக இருக்க முடியாது. எனக்கு ஆஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கும் அங்கு நல்ல வசதிகள் கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் வாய்ப்பு கிடைத்தபோது, அவள் அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சித்தாள். அவளுடைய முக்கிய ஆயுதமே கண்ணீர் தான். கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும் அந்த முகத்தை நான் எத்தனை தடவை கண்டு கொண்டிருக்கிறேன்! கண் விழித்திருக்கும்போதுகூட வந்து சேரும் ஒரு கெட்ட கனவைப் போல அநத் முகம் இருக்கிறது. அது என்னுடைய ஆசைகளைக் கெடுக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டுதான் நான் வளர்ந்தேன். என்னுடைய தந்தைக்கும் வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் சந்தோஷம் கிடைத்தது இல்லை. அவர் வாய்விட்டு சிரிப்பதைக்கூட நான் பார்த்தது இல்லை. காரணம்- அவருடைய சிரிப்பு என் தாய்க்குப் பிடிக்காது. 'இன்னைக்கு சந்தோஷத்தின் அடையாளம் முகத்தில் தெரிகிறதே!' என்று என் தாய் என் தந்தையிடம் மிடுக்கான குரலில் கேட்பதை நான் கேட்டிருக்கிறேன்.


மகிழ்ச்சியுடன் இருப்பது கூட ஒரு பெரிய பாவம் என்று அவள் எங்களை நம்ப வைக்க முயற்சித்தாள். அவள் இறந்தால்கூட நான் அழமாட்டேன்."

அம்மிணியின் முகத்தை வருடுவதற்காக நீட்டிய கையை நான் அடுத்த நிமிடம் பின்னோக்கி இழுத்துக் கொண்டேன்.

"என் சந்தோஷத்தைக் கெடுப்பதற்கு என் தாய் முயற்சித்தாள். என் மீது டாக்டர் கல்யாணிக்குட்டி பிரியம் வைக்க ஆரம்பித்தபோது, அவள் ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்டவளைப் போல ஆகிவிட்டாள். அந்த மதிப்புமிக்க பெண் என்னையும் என் தந்தையையும் வசீகரித்து தன்னுடைய ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துக் கொண்டு போக நினைத்திருக்கிறாள் என்று சொன்ன என் தாய், தன் தலையை நிலத்தில் மோத வைத்து உரத்த குரலில் அழ ஆரம்பித்து விட்டாள். அழகு இல்லாத பெண்களின் பொறாமையைப் போல அவலட்சணமான வேறொரு உணர்வு பூமியில் இருக்கிறதா? எனக்கும் டாக்டர் கல்யாணிக்குட்டிக்கும் இடையில் இருப்பது இயற்கைக்கு விரோதமான உறவு என்று கூட என் தாய் சொன்னாள். அவங்க மீது எனக்குத் தோன்றிய அன்பு இயற்கைக்கு விரோதமானதா? உண்மையைச் சொல்லுங்க."

திடீரென்று என்னுடைய முகத்தைப் பார்த்தவாறு என் கணவர் சொன்னார்: "நீ மிகவும் வெளிறிப் போயிட்டே. வீட்டுக்குப் போய் சிறிது நேரம் படுத்துத் தூங்கு. அதற்குப் பிறகு மருத்துவமனைக்குப் போ..."

நான் அவர் கூறியபடி நடந்தேன். எனக்கு அம்மிணியின் கண்களைச் சந்திப்பதற்கான தைரியம் இல்லாமல் போய்விட்டது. அவளுடைய இறுதிக் கேள்வி என்னுடைய மனக் குளத்தில் தூண்டில் விழுந்ததைப் போல நான் உணர்ந்தேன்.

காரில் இருக்கும்போது அவர் சொன்னார்: "போன மாதம் வரை மன அமைதியுடன் வாழ்ந்த குடும்பம்..." அவருடைய கன்னங்களுக்குக் கீழே வெள்ளை நிறத்தில் முடி வளர்ந்திருப்பதை நான் அப்போதுதான் பார்த்தேன்."

"நீங்க இன்னைக்கு சவரம் செய்யலையா?"- நான் கேட்டேன்.

"நான் சவரம் செய்தாலும் செய்யாவிட்டாலும் யாருக்குக் கேடு? என்னுடைய முகத்தை யாரும் பார்க்காமல் போய் எவ்வளவு காலம் ஆயிடுச்சு! இருக்கக்கூடிய வாழ்நாட்களை விட அதிக நாட்கள் வாழ்ந்துவிட்ட ஒரு கிழவன் நான். சொந்த மனைவியின் கண்களில் வெறும் ஒரு கோமாளியாக ஆகிவிட்ட அதிர்ஷ்டமில்லாதவன்."

எனக்கு அவருடைய கையைத் தொட வேண்டும் போல இருந்தது. முன்பு செய்ததைப் போல அந்தக் கண்களை உற்றுப் பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால், மன்னிக்கக்கூடிய பெரிய மனது எனக்கு இல்லை. என்னையே மன்னிக்கக்கூடிய மனதும் எனக்கு இல்லை. நான் நடந்து கொண்டிருக்கும் பிணமாக ஆகிவிட்டேன். கல்யாணிக்குட்டியின் வார்த்தைகளை நான் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.

"இருபத்து இரண்டு நாட்கள் விடுமுறையில் அவள் வந்தாள். திரும்பிப் போகும்போது அவள் எல்லோருடைய வாழ்க்கையையும் தாறுமாறாக ஆக்கிட்டா..."- நான் தாழ்வான குரலில் சொன்னேன்.

"பெண்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். ஒரு வகையைச் சேர்ந்தவர்கள் வெறும் தாய்மார்களாக மட்டும் இருப்பார்கள். அவர்களால் நிம்மதி அளிக்க முடியும். மன்னிப்பு தருவதற்கும். இன்னொரு வகையைச் சேர்ந்தவர்கள் கேடு உண்டாக்குபவர்கள். பத்ரகாளிகள். கேடு உண்டாக்காமல் இருக்க அவர்களால் முடியாது"- அவர் சொன்னார். கல்யாணிக்குட்டி கேடு விளைவித்த உறவுகளை ஒவ்வொன்றாக நான் நினைத்துப் பார்த்தேன். சிறு வயதிலிருந்து முதுமைக் காலம் வரை அவளால் நான் எத்தனையோ தடவை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்!

"அவள் இனிமேல் இந்தியாவிற்கு வராமல் இருந்தால் போதும்"- நான் சொன்னேன்.

"அவள் வருவாள். உன்னை மறப்பதற்கு அவளுக்கு எந்தச் சமயத்திலும் முடியாது."

"என்னையா? அப்படியெல்லாம் இல்லை. இன்று விமான நிலையத்தில் இருக்கும்போது அவள் என்னுடன் ஒரு உற்சாகமற்ற நிலையில் இருந்துகொண்டுதான் பிரிந்து சென்றாள். இனி எந்தச் சமயத்திலும் அவள் என்னைப் பார்க்க வரமாட்டாள் என்பது மட்டும் உறுதி."

"நீ அவள்மீது பிரியம் வைத்திருக்கும் காலம் வரையில் அவள் உன்னை விட்டுப் போக மாட்டாள்"- அவர் சொன்னார்.

அவர் சிரிக்கிறாரோ என்று நான் சந்தேகப்பட்டேன். பார்த்தபோது ஒரு கம்பீரமான வெளிப்பாட்டை மட்டுமே என்னால் அந்த முகத்தில் காண முடிந்தது.

"நீங்கள் என்னை கேலி செய்கிறீர்களா?"

"விளையாடக்கூடிய குணம் எனக்கு இல்லையே டாக்டர் ஷீலா! ஒரேயொரு எதிரியை மட்டுமே நான் சந்தித்திருக்கிறேன்- டாக்டர் கல்யாணிக்குட்டியை. அவளால் மட்டுமே உன்னை என்னிடமிருந்து  பிரிக்க முடியும் என்பதை நான் எப்போதோ புரிந்து கொண்டுவிட்டேன். தேன்நிலவு காலத்தில் கூட அவளுடைய நிழல் நம் இருவருக்குமிடையில் இடம் பிடித்திருந்தது. என்னுடைய ஒவ்வொரு காதல் வெளிப்பாட்டையும் அவளுடைய செயலுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவளுக்குப் பின்னால் வந்தவன் நான். ஒரு சூறாவளி முடிந்தபிறகு, தயங்கித் தயங்கி வந்து சேர்ந்த வெறும் சாரல் மழையாக இருந்தேன் நான்."

அதற்குப் பிறகு அவருடைய முகத்தைப் பார்ப்பதற்கு எனக்கே வெட்கமாக இருந்தது. கண்ணாடியில் தெரிந்த என்னுடைய முகம் இதற்கு முன்பு நான் பார்த்திராத முகம் என்பதைப் போல எனக்கு அந்த நிமிடத்தில் தோன்றியது. அழியாமல் இருந்த செந்தூரப் பொட்டும் வெள்ளி இழைகள் ஓடிய தலைமுடியும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் கன்னங்களும் உள்ள அந்தப் பெண் நானா? நிச்சயமாக இல்லை. சினேகிதியைக் கட்டிப் பிடித்து அவளுடைய முகத்தில் நிம்மதி தேடும் ஒரு பெண்ணாக மட்டுமே நான் தோன்றினேன். பலமணி நேரங்கள் குளத்தில் நீந்திக் குளித்ததால் சேற்றின், பாசியின், இலையின், சருகின், ஆம்பலின் வாசனையையும் சுவையையும் கொண்டிருக்கும் காதலியின் உடல் தொடலில் சொர்க்க இன்பங்களைக் கண்டடைந்தவள்.

"ஓ... என் செல்லமே! நான் இனி எப்படி வாழ்வேன்?"- காரில் மெதுவாக நிறைந்து கொண்டிருந்த இருட்டை நோக்கி நான் முணுமுணுத்தேன்.

"என்ன? நீ என்னிடம் ஏதாவது சொன்னியா டாக்டர் ஷீலா?"- அவர் கேட்டார்.

"இல்லை. நான் உங்களிடம் எதுவும் கூறவில்லை"- நான் தலையை ஆட்டிக் கொண்டு சொன்னேன்.

சாலையின் இரு பக்கங்களிலும் நீல நிற விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வாகனங்கள் ஓசைகளை உண்டாக்கியவாறு வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. பாலத்தைக் கடந்து ஃபோர்ட் கொச்சியை நோக்கி காரை ஓட்டும் போது, மீன் வாசனை காற்றில் கலந்து வந்தது. இருண்ட வெளிச்சத்திற்குள்ளிருந்து கல்யாணிக்குட்டியின் சிறுவயது சிரிப்புச் சத்தம் கேட்டது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.