Logo

ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5968
oru kalathil manithanaga irunthan

னமான சுவரையும் உறுதியான மேற்கூரையையும் கொண்ட இந்த போர்வீரர்கள் தங்கியிருக்கக் கூடிய கட்டிடத்திற்கு ஒரு பங்களாவிற்குரிய மதிப்பு இருந்தது. வெளியே இருக்கும் கருவேப்பிலை, நாவல் மரங்களின் நிழல் படர்ந்திருக்கும் சாலையின் வழியாக நடந்து செல்லும்போது நீங்கள் சற்று பாருங்கள். ஓ... சுவாரசியமற்றதாக இருக்கும்... வெறுப்பைத் தரக் கூடியதாக இருக்கும்.

சுருக்கங்கள் விழுந்த பச்சை நிற ஆடைகள், தொள தொளவென்றிருக்கும் பேண்ட், நிறம் மங்கலாக இருக்கும் தொப்பி ஆகியவற்றுடன் ஆடிக் கொண்டே நடக்கும் பட்டாளக்காரர்கள் படுத்திருப்பது பங்களாவைப்போன்று காட்சியளிக்கும் இந்த "பேரக்”கிற்குள்ளா? அவன் நாற்றமெடுத்த நிலையில் இருப்பான். வியர்வையும் தூசியும் இருக்கும் அவனுடைய உடம்பில் பேனும் ஈரும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும். அவனுடைய கறுத்த முகத்தில் வியர்வை வற்றி உப்புக் கோடு தெரியும். எனினும், அவன் படுத்திருக்கும் இந்தக் கட்டிடத்திற்கு ஒரு பங்களாவின் மரியாதைக்குரிய தோற்றம் இருக்கும்.

கட்டிடத்தின் விசாலமான அறைகளிலும் வராந்தாவிலும் ஒழுங்குபடுத்தப்பட்டு பளபளப்பு உண்டாக்கப்பட்ட பாறைக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அகலமான, அழகான வராந்தாவின் வெளிச் சுவரை நோக்கி பிரதான சுவரில் இருந்து செங்கற்களால் ஆன கனமான மேற்கூரை இறங்கி வந்து கொண்டிருந்தது. கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் அங்குள்ள சூழல் எப்போதும் ஒளி குறைந்த நிலையிலேயே காணப்படும். கோடை காலத்தில் வானமும் பூமியும் ஒன்றோடொன்று சந்தித்துக் கொள்வதைப்போல தூசிப் படலம் உயர்ந்து காட்சியளிக்கும். வெப்பக் காற்று சற்று வீசினால் கூட போதும், மணல் உதிர்ந்து மேலே வரும். கட்டிடத்தின் சுவரும் மேற்கூரையின் சட்டங்களும் தூசியால் மூடப்படும். அதனால் வாரத்தில் ஒரு நாள் அடித்துச் சுத்தம் செய்வோம். விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையின் பாதி நேரம் அந்த வேலையில் செலவாகிவிடும். பங்களாவைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் போர் வீரர்கள் குடியிருக்கும் கட்டிடத்தின் மதிப்பை விட்டுவிட முடியாது.

சில நேரங்களில் கண்ணாடி பதிக்கப்பட்டிருக்கும் கதவுகளின் ஓரங்களிலோ கட்டிலின் பலகைகளிலோ ஒரு இடைவெளியிலோ கரையான் அரித்த அடையாளங்கள் தென்படும். பழமையை அறிவிக்கும் ஒரே ஒரு "நிஷான்” அதுதான். அது அவ்வளவு பெரிய விஷயமல்ல. வேகமாக தூசியைத் துடைக்கும்போது உள்ளங்கையில் படும்போதுதான் நாங்கள் அதை கவனிப்போம்.

இந்தக் கட்டிடம் எந்த அளவிற்குப் பழமையானது என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. இரண்டு பக்கங்களிலும் சுவர் மேற்கூரையுடன் சேரக்கூடிய மேல் மூலையில் கட்டிடம் கட்டப்பட்ட வருடம் கறுப்பு வண்ணத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. யாரும் பார்ப்பதில்லை. பலரும் பார்த்திருக்கமாட்டார்கள். மனிதர்களின் இயல்பான குணமாக இருக்கலாம். பழமையைப் பற்றி எதற்கு நினைத்துப் பார்க்க வேண்டும்? சில நேரங்களில் நினைத்து விடுகிறோம். இந்தக் கால இடைவெளியில் இதற்குள் எவ்வளவு பேர் வந்தார்கள்... வாழ்ந்தார்கள்... போனார்கள். தேவையற்ற சிந்தனைகள் உண்டாகலாம். ஒரு விஷயம் உண்மை. அன்றும் இன்றும் இந்தக் கட்டிடத்திற்குள் இருக்கும் ராணுவ வீரர்கள் தங்களின் ஒவ்வொரு

ஆசைகளையும் நம்பிக்கைகளையும் மனதிற்குள்ளேயே வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பட்டாளத்தைச் சேர்ந்தவன் மனிதன்தான் என்பதை ஒப்புக்கொள்வதாக இருந்தால், காலம் காலமாக இருக்கும் ஒரு தத்துவத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். மனித இனம் மேலும் மேலும் வளர்கிறது. மண்ணுக்குக் கீழே செல்கிறது. எனினும், மனிதனுக்கென்றே இருக்கக் கூடிய சந்தோஷங்கள் மறையாமல்... மறையாமல்... நிரந்தரமாக இருந்து கொண்டே இருக்கின்றன.

தத்துவங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றின்மீது எனக்கு ஆழமான ஈடுபாடு இருந்தது. பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். பெரிய பெரிய விஷயங்களைக் கூற வேண்டும். ஒரு காலத்தில் நான் தலை முடியை வளர்த்துக் கொண்டு பாதி துறவு கோலத்தில் நடந்து திரிந்திருக்கிறேன். ஒரு சிறிய தாகூர்! பிறகு மொட்டை அடித்துக் கொண்டு மஞ்சள் நிற ஆடை அணிந்து, துறவியாக ஆவதற்கு ஆசைப்பட்டேன். பைபிளையும் பகவத் கீதையையும் படித்தேன். வேதாந்தம் என்னை பட்டாளம் வரை கொண்டு போய் விட்டது என்று கூறலாம். தொடர்ந்து நானே ஒரு மன்னிப்பை அளித்துக் கொண்டு தீவிரமான நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன். அதாவது- இங்கு எப்படி வந்தேனோ, அப்படியே திரும்பவும் செல்ல வேண்டும். எனக்கு என்ன ஆனது? எனக்குத் தெரியாது. நான் இப்போது நன்கு புகைக்கிறேன். சிகார், சிகரெட், பீடி... சில வேளைகளில் வீசி எறியப்பட்ட துண்டுகளையும் பொறுக்கி, ஆராய்ந்து பார்த்து விட்டு, வாசனை பிடித்து விட்டு, பிடித்திருந்தால் மீண்டும் பற்ற வைக்கிறேன். பிடிக்காமல் இருக்க முடியாது. முழு பீடியையும் அல்ல. புகைக்க வேண்டும். துண்டுகளைப் பொறுக்குகிறேன். உறுதியான என்னுடைய கருத்தைக் கூறுவதாக இருந்தால், மிகவும் முக்கியமான

சூழ்நிலையில், முதல் தடவையாக நான் குடித்தேன். அன்று நண்பர்கள் தாங்கி எடுத்துக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தார்கள். இப்போது ஐந்தோ ஆறோ பெக் குடித்துவிட்டு, பூமி மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தாலும் தளர்ந்த நிலையில் நடந்து போய்விடலாம்... சொல்லப்போனால், இப்போது குணம் மாறிவிடவில்லை... தவறுக்காக வருந்துவதில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

பங்களாவைப் போன்று காட்சியளிக்கும் எங்களுடைய கட்டிடத்திற்கு எதிரில், பங்களாவைப் போன்று இருக்கும் இன்னொரு கட்டிடத்தில் குடும்பங்களுக்கான க்வார்ட்டர்ஸ் இருக்கின்றன. அந்த நல்ல கட்டிடத்திற்குள் இருக்கும் அறைகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும், மரியாதை காரணமாக அவற்றைப் பற்றிப் பேசக்கூடாது. வரிசையாக அறைகள் இருக்க வேண்டும். மேற்குப் பகுதியில் திறந்த வராந்தா இருக்கிறது. கிழக்குப் பக்க வராந்தாவை ஒட்டிய சுவருக்கு அருகில் அறைகள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. பிறகு... எங்களுக்கு எதிரில் தள்ளிக் கொண்டு நின்றிருக்கும் சதுர அமைப்பில் அமைந்த சமையலறைகள்... அகலமான மேற்கூரையைக் கொண்ட அந்த சமையலறைகளுக்கு புகை வண்டி நிலையங்களில் இருப்பதைப்போன்ற பெரிய சதுரப் பெட்டிகளின் தோற்றம் இருக்கும். இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம்- அவற்றுக்கு சதுர அமைப்பில் இரும்பு வலைகள் கொண்ட கதவு இல்லாத ஜன்னல் இருக்கின்றன. உள்ளே நகர்ந்து கொண்டிருக்கும் சில்க் ஆடைகளின் மினுமினுப்பையும் அது மறைவதையும் இங்கிருந்தே பார்க்கலாம். சில நேரங்களில் வளையல்களின் சத்தங்களையும் கேட்கலாம். வெறுமனே வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது நன்றாக இருக்காது. எங்களுக்கும் சற்று மரியாதை இருக்கிறது. அதனால் கட்டில்களை கதவுக்கு நேராக இழுத்துப் போட்டுக் கொண்டு படுத்திருப்போம்.


க்வார்ட்டர்ஸில் பெரும்பாலும் அகதிகள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது சொந்தமென்று கூறுவதற்கு வீடோ குடிசையோ கிடையாது. அரசாங்கத்தின் நல்ல மனம் காரணமாக இங்கே வந்து வசிக்கிறார்கள். கணவர்கள் ராணுவத்தில் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இந்த இடத்தில் இருந்த ஏதாவது முகாமில் இருந்திருக்கலாம். பிறகு... எங்கெங்கோ போய் விட்டார்கள். அங்கு க்வார்ட்டர்ஸ் இல்லாமல் போயிருக்க வேண்டும் அதனால் குடும்பங்கள் எங்களுக்கு எதிரில் இருக்கும் கட்டிடத்தில் வசித்துக் கொண்டிருக்கின்றன.

அங்கே இருக்கும் சுறுசுறுப்பான பெண் பிள்ளைகள் சைக்கிளில் பள்ளிக் கூடத்திற்குச் செல்கிறார்கள். வருகிறார்கள். பால் வாங்குவதற்காகப் போகிறார்கள். வருகிறார்கள். மார்க்கெட்டிற்குச் செல்கிறார்கள். நடப்பதற்காகச் செல்கிறார்கள்... அவர்கள் போவதை எங்களுடைய கட்டிடத்திற்குள் படுத்திருக்கும் பட்டாளக்காரர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். பெருமூச்சு விடுகிறார்கள். சில நேரங்களில் முணுமுணுக்கிறார்கள்.

"ஜிலேபி போறதைப் பாரு...''

"நீயும் போ.''

"எனக்குத் தேவையில்லை.''

"எனக்குத் தெரியும்.''

"உன் பார்வை சேமியாவிற்குப் பின்னால்தானே?''

"கொஞ்சம் பேசாம இருடா.''

"லு... யாருக்கும் தெரியாது.''

"கொழுக்கட்டை சொல்லியிருப்பான்.''

"சுப்பையா!''

"என்ன சொன்னே?''

"யாத் ரஹ்!''

சுப்பையாவிற்கும் மதன்லாலுக்கும் இடையே சண்டை அதிகமாகிறது.

துடைப்பத்தைப்போல உயரமாகவும் மெலிந்து போயும் இருக்கும் சுப்பையாவிற்கு மூன்றாம் எண் க்வார்ட்டர்ஸில் இருக்கும் மெலிந்து, மஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்கும் பெண் பிள்ளைமீது ஈடுபாடு இருக்கும்போல... அவளுடைய பெயர் தெரியாது. அதனால் சேமியா என்று அழைக்கிறான். உண்மையாகக் கூறப் போனால், அந்த இளம் பெண்ணுடன் சுப்பையா சற்று உரையாடியது கூட இல்லை. எனினும் அவளுக்குத் தன்மீது காதல் இருக்கிறது என்று அவன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறான். இருக்கிறது என்று மற்றவர்களிடம் வாதமும் செய்தான். காரணம் என்னவென்றால், சேமியா சமையலறையின் ஜன்னல் வழியாக அவனைப் பார்த்துக் கொண்டு நிற்பதுண்டு. இடையில் பார்க்க நேர்ந்தால், முகத்தைக் குனிந்து கொள்வாள். எவ்வளவோ ஆதாரங்கள் இருக்கின்றன.

சுப்பையாவால் நீண்டு, முதுகை நிமிர்த்திப் படுக்க முடியாது. கட்டிலுக்கு நீளம் போதாது. சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் அவன் கண் விழித்தவுடன், சோம்பல் முறிப்பான். அப்போது அவனுடைய மெலிந்து போன கால்கள் கொசு வலைகளுக்கு வெளியே நீண்டு காட்சியளிக்கும். சோம்பல் முறித்தவாறு கொசு வலையை உயர்த்தி முகத்தைத் துடைத்துக் கொண்டே அவன் தாழ்வான குரலில் அழைப்பான்: "ஓ... சேமியா...”

சேமியா சமையலறையின் மூலையில் இருக்கும் முற்றத்தில் உட்கார்ந்திக்கிறாள். கரி போட்டு எரிக்கப்படும் அடுப்பில் நெருப்பை

எரிய வைத்து புகைக்கு மத்தியில் ஊதிக் கொண்டும் இருமிக் கொண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டும் இருக்கிறாள். அவள் துப்பட்டாவின் முனையால் கண்களைத் துடைப்பதற்காக முகத்தை உயர்த்துகிறாள்.

ஓ! அதோ பார்க்கிறாள். சுப்பையா அவளை நினைப்பான். அவனுடைய இதயம் நிறைந்துவிடும்.

"என் சேமியா... என்ன?''

"பேசாம இரு... சுப்பையா...''

மதன் லாலுக்கு கோபம் வருகிறது.

"து தோடா சோனே நஹி தோகே?''

"தானு கீ ஹோந்தோரெ?''

அரைகுறை பஞ்சாபியில் சுப்பையா சண்டை போடுவான்.

தொடர்ந்து மதன்லால் கூறக் கூடிய பதில் மிகவும் ஆபாசம் நிறைந்ததாக இருக்கும். சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால் இதுதான். இப்போது மதன்லாலுக்கு என்ன என்று ஒரே வார்த்தையில் அவன் கூறி முடித்துவிடுவான். தொடர்ந்து "சுபாஸபேரெ”. சுப்பையா சேமியாவை அழைத்துக் கொண்டே கண் விழிப்பதைக் கேட்பதற்கான மன நிலையில் மதன்லால் இல்லை. அவள் சுப்பையாவின் அருகில் வர போவதில்லை. அதனால் கூறுவான்: "கொழுக்கட்டையைக் கூப்பிடுடா, கழுதை.''

கொழுக்கட்டை ஐந்தாம் எண்ணில் இருப்பவள். தடித்து கொழுத்துப்போய் இருக்கும் அந்த இளம் பெண்ணுக்கு எலி வாலைப் போன்ற தலை முடியே இருக்கும். அவள் கருப்பு நிற நூலை கூந்தலுடன் சேர்த்துக் கட்டியிருப்பாள். கட்டிலால் தாங்க முடியாத

அளவிற்கு தடிமனாக இருப்பாள். மதன்லாலுக்கு கொழுக்கட்டையை மிகவும் பிடிக்கும். அவள் பல நேரங்களில் வராந்தாவின் சுவருக்கு அருகில் பின்பக்கமாக சாய்ந்து கொண்டு நின்றிருப்பாள்-. யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல. தன்னையே முழுமையாக மறந்து விட்டதைப்போல... நீண்ட நேரமாக அதே இடத்தில் நின்று கொண்டிருப்பாள். மதன்லாலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதுதான் பேச்சு. உண்மைதான் என்று அவன் ஒத்துக் கொள்ள மாட்டான். கொழுக்கட்டை மிகவும் தாமதமாகத்தான் கண் விழிப்பாள். தூக்கத்திலிருந்து எழுந்து வரும்போது அவளுடைய ஆடையும் தலைமுடியும் மிகவும் அலங்கோலமாக இருக்கும். அவள் வெளியே வந்து சற்று பார்த்த பிறகுதான் தான் படுக்கையிலிருந்து எழுந்திருப்பது என்பது மதன்லாலின் சட்டமாக இருந்தது. மற்றவர்கள் அதைத் தெரிந்து கொள்வதைப் பார்த்து, அவன் மிகவும் கோபப்படுவான்.

சுப்பையாவும் மதன்லாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, வெளியே சென்றிருந்த தனராஜ் "பேரக்”கிற்குள் நுழைந்து வருவான். உடனே பெருமாள் அழைப்பான்: "லில்லி!''

தனராஜ் வளர்க்கும் நாயின் பெயர் அது. எல்லாரின் ஆதரவுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் லில்லி மீது தனராஜுக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அவன் நியாயம் கூறுவான். லில்லியின் தாய் அருகில் இல்லாமலிருந்தது. ராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்து திருப்பத்தில் திரும்பினான். க்யாஸைக் குறைவாகவே வைத்திருந்தான். பாலத்திற்குக் கீழே இருந்து மிகப் பெரிய சத்தம். இறங்கிப் பார்த்தான். ஓ! பச்சைக் குட்டிகளை கட்டெறும்புகள் சூழ்ந்திருக்கின்றன. எல்லாவற்றையும் தூக்கி எடுத்தான். கண்கள் திறக்கப்படாமல் இருந்தன. அவை துடித்துக் கொண்டிருந்தன. எறும்புகளைக் கையால் கிள்ளி எடுத்தான். இடையில் இரண்டு குட்டிகள் இறந்து விட்டன.

இன்னொன்று பெண் குட்டி. அதை இருக்கையில் வைத்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தான். பால் கொடுத்து வளர்த்தான்.

லில்லி தனராஜின் கட்டிலுக்குக் கீழேதான் உறங்கும். கட்டிலிலேயே படுக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. நாம் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாம். மெஸ்ஸுக்கு பால் வண்டி வந்து விட்டால், லில்லி கண் விழிக்கும். கட்டிலின் காலில் தட்டி, சத்தம் உண்டாக்கும். தலையணையில் கைகளை எடுத்து வைத்து அடிக்கும். முனகும். முரண்டு பிடிக்கும். தனராஜ் கண் விழிப்பான். லில்லியுடன் சேர்ந்து மெஸ்ஸுக்குச் செல்வான்.

லில்லிக்கு நல்ல அறிவு இருந்தது. சல்யூட் அடிக்கவும் "ஷேக் ஹேண்ட்” செய்யவும் தெரியும்.

தனராஜ் "பேரக்”கிற்குத் திரும்பி வரும்போது, பெருமாள் தூக்கத்திலிருந்து கண் விழித்திருப்பான். லில்லியைக் கொஞ்சாமல் பெருமாள் எழுந்திருக்க மாட்டான். அவன் கொஞ்சுவான். கொஞ்சிக் கொண்டே பெருமாள் அழைப்பான்:

"லில்லி...''

நாய் வாலை ஆட்டும்.

"இங்கே வா.''


பெருமாள் கவிழ்ந்து படுத்துக் கொண்டு கொசு வலைக்குக் கீழே இரண்டு கைகளையும் நீட்டுவான். தனராஜுக்கு அது பிடிக்காது.

"லில்லி!''

ராஜ் கோபத்துடன் நின்று கொண்டிருப்பான்.

"போகாதே!''

நாய் ராஜின் முகத்தையே பாசத்துடன் பார்க்கும்.

"இங்கே வா மகளே.''

"போகாதே...''

"லில்லி...''

"போகாதே...''

"உனக்கென்னய்யா? நான் அதைக் கூப்பிடக் கூடாதா?''

"நான் வளர்க்கும் இந்த நாய்...''

"உனக்குச் சொந்தமா?''

"உனக்கு என்ன வேணும்?''

"ஷேக் ஹேண்ட்...''

"ஃப்பூ...''

"என்னய்யா... காலம் காத்தால நீ மனஷனைத் திட்டுறே?''

லில்லி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும். தனராஜும் பெருமாளும் மோசமான வார்த்தைகளால் சண்டை போட்டுக் கொண்டிருப்பதற்கு மத்தியில் சுப்பையா தன்னுடைய நீளமான விரல்களால் சொடக்கு போட்டுக் கொண்டே நாயை அழைப்பான்.

"ஷேக் ஹேண்ட்!''

நாய் மூன்று கால்களில் உட்கார்ந்து கொண்டு ஒரு கையை கட்டிலின்மீது தூக்கி வைக்கும். சுப்பையா கையைச் சொறிந்து கொண்டே படுத்திருப்பான்.

"ஆய் ரெ பட்டே... கைஸா ரத்தீரெது?''

மதன்லால் காரித் துப்புவான்.

"சல்...''

அவன் வேகமாக எழுந்து நாயிடம் நெருங்குவான்.

"நிகல் ஜா! இதர்ஸே நிகல்... சுபா ஸபேரெ...''

என்னவொரு மோசமான மனிதன்! மனிதனாக இருந்தால், அடக்கமும் பணிவும் இருக்க வேண்டும். சிறிதளவாவது இருக்க வேண்டும். இந்த கேடுகெட்ட செயல்கள் இந்த அளவிற்கு வெளிப்படையாகவும் வெளிச்சத்திலும்? காரித்துப்ப வேண்டும்போல இருந்தது. அறையின் ஓரத்து மூலையில் படுத்திருக்கும் எனக்கு இறங்கி ஓட வேண்டும்போல இருந்தது.

நான் இங்கு வந்து மூன்று வருடங்களாகி விட்டன. இந்த பங்களாவைப் போன்று காட்சியளிக்கும் "பேரக்”கில் பல இடங்களிலும் இருந்திருக்கிறேன். எல்லா இடங்களிலிருந்தும் இடம் மாறியிருக்கிறேன். என்னுடன் இருந்தவர்கள் எல்லாரும் இடத்தை விட்டே போய் விட்டார்கள். அதற்கு பதிலாக புதிய ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். கேடு கெட்ட செயல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மிகவும் குறைவான வேலையும் நல்ல உணவும் சந்தோஷம் நிறைந்த தங்குமிடமும்.... பலவற்றுடன் வாழ்ந்து கொண்டிருந்த எங்களுக்கு இந்த புதிய இறக்குமதிகளுக்குப் பிறகு சிறிய சிறிய தொந்தரவுகள் வந்து சேர்ந்தன. வெளியே போகும்போது அவுட் பாஸும் அடையாள அட்டையும் வேண்டும். சாயங்காலம் எட்டு மணிக்கு ஆட்கள் கணக்கெடுப்பு இருக்கிறது. தினமும் பி.டி.யும் பரேடும் ஆரம்பமாகி விட்டது. வாரத்தில் ஒரு நாள் பேரக் இன்ஸ்பெக்ஷன் இருக்கிறது.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மிகவும் முக்கியமான விஷயங்கள் தான். எங்களைப் போன்ற பழைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மன நிம்மதி இல்லாத நிலைமை இருந்தது. மனதில் கவலைதான். ஏனென்றால் இவை எதுவுமே இல்லாமல் எவ்வளவோ சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தோம். புதிதாக ஒவ்வொரு ஆள் வரும் போதும், புதிதாக ஒவ்வொரு சட்டத்தையும் உண்டாக்க வேண்டியதிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் புதிய ஆள் வரும்போது, உடனடியாகப் பார்க்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. புறப்படுவதற்கு முன்பே, கம்பெனியிலிருந்து அறிவித்திருப்பார்கள். இதில் ஒரு ஆளுக்கும் திருப்தி இல்லை. கம்பெனியில் வைத்து கவனிக்க முடியாத போக்கிரிகளையும், எப்போதும் உடல் நலக்கேடு பற்றிய ரிப்போர்ட்டிற்காக அலைந்து கொண்டிருக்கும் நோயாளிகளையும் வேலையே தெரியாத காக்கா பிடிக்கக் கூடிய மனிதர்களையும் டிட்டாச்மென்டிற்கு அனுப்பி விடுவது... எனினும், வண்டி வரும் நேரமாகி விட்டால், காத்திருப்போம். அவனுக்காக மெஸ்ஸில் சாப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருக்கும். கட்டில் தயார் பண்ணி வைக்கப்பட்டிருக்கும்.

அம்முனிஷ்யன் சோதனை நடக்கும்போதுதான் அன்மோலக் ராம் வந்தான். க்வார்ட்டர்ஸ் மாஸ்டர் ஸ்டோருக்கு முன்னால் வராந்தாவில் போர்வையை விரித்தோம். குண்டுகள் நிரப்பப்பட்ட பன்டோலியன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் இஞ்சியைக் குவித்து வைத்திருப்பதைப்போல "த்ரீ நாட் த்ரீ” குண்டுகளைக் குவித்து குவியலாகச் சேர்த்து வைத்திருந்தோம். போர்வையின் ஓரத்திலும் மூலையிலும் வட்ட வடிவில் சப்பணம் போட்டு அமர்ந்திருந்த நாங்கள் ஒவ்வொரு குண்டும் தயாரிக்கப்பட்ட வருடத்திற்கேற்றபடி பிரித்து எடுத்து மீண்டும் அடுக்கி பன்டோலியன்களுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தோம். கணக்கு எடுத்துக் கொண்டிருந்தோம்.

"நைன்டீன் ஃபார்ட்டி...''

"கிதர்?''

"என்னிடம்!''

"ஃபார்ட்டி டூ இருக்கிறதா?''

"எவ்வளவு வேணும்?''

"இரண்டு!''

"பிறகு?''

"எறிய வேண்டாம்!''

"ஒய்?''

"வெடித்து விடும்!''

"ஹ... ஹ... ஹ...''

"ஒய்?''

"எவ்வளவு பழையது?''

"எங்கெல்லாம் போயி வந்ததாக இருக்கும்?''

"யாருடைய பன்டோலியத்திலெல்லாம் அவை இருந்திருக்கும்?''

"எனக்குத் தெரியும்.''

"என்ன?''

"சுப் சாப் காம் கரோ.''

"தெரிஞ்சிக்கோ.''

"பேசுறப்போ வேலை நடக்காது!''

"அவன் பேசட்டும்!''

"இந்த குண்டை வெடித்த ஆளுக்கு வீர சக்கரம் கிடைத்தது!''

"இது பாகிஸ்தானிலிருந்து வந்தது!''

"எப்படி?''

"பிடிக்கப்பட்ட ஆளிடமிருந்து கைப்பற்றி இருந்தால்....?''

"பிணத்தின் நெஞ்சில் இருந்த...''

"அப்படியா? அப்படியென்றால் இந்தியாவில் முன்பு இருந்ததாக இருக்க வேண்டும்.''

"எப்படி?''

"பங்கு போட்டு எடுத்த சமயத்திலேயே...''

"ஹ... ஹ... ஹ....''

"பார்... இதற்கு மேலே ஒரு நட்சத்திரம்!''

"அசோக சக்கரம் கிடைத்த ஆளுடையதாக இருக்க வேண்டும்.''

"இல்லைப்பா.''

"பிறகு?''

"லிபியா...''

"கோஹிமாவாக இருக்கக் கூடாதா?''

"இருக்காது?''

"க்யோம் ஜி?''

"மைனே கஹா!''

"அப்படியா?''

"சுப் சாப் அப்னா காம் கரோ!''

"பாருத் கோயி காதா நஹி!''

"இஸ்ஸெ துஸ்மன் மாரா ஜாதா ஹை!''

"ஓ!''

"என்னடா?''

"எங்கே நிஷான் எடுப்பது?''

"அய்யோ!''

"ஆமா...''

"ஒரு நிஷான்வாலா!''

"அவனுடைய கை நடுங்கும்.''

"சங்கு துடிக்கும்.''

"நான் முதல் முறையாக விசையை அழுத்தியது...''

அது ஒரு கதையாக இருந்தது. எதிரியை எதிர்பார்த்துக் கொண்டு பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து இருந்ததிலிருந்து அவன் ஆரம்பித்தான். கூறிமுடித்தபோது அடுத்த ஆள் தன்னுடைய அனுபவங்களைக்கூற ஆரம்பித்தான். அவர்களுக்கு கூறி முடிக்க முடியாத அளவிற்கு விஷயங்கள் கூறுவதற்கு இருந்தன.

அப்போதுதான் அன்மோலக் ராம் அங்கு வந்தான். அவன் வந்து சேர்ந்து எவ்வளவோ நேரமாகிவிட்டது. புதிய ஆள் வரும் விஷயத்தை எல்லாரும் மறந்து போய் விட்டிருந்தார்கள்.

"பாயிஸாப்.... மேஜர்ஜீனே ஹுக்கும்தியா...''

அவர்கள் புதிய குரலைக் கேட்டு முகங்களை உயர்த்தினார்கள். அவன் வந்தான். பொருட்கள் அனைத்தையும் கட்டிலில் வைத்தான்.

க்வார்ட்டர்ஸ் மாஸ்டர் ஸ்டோருக்கு முன்னால் போகும்படி ஹவில்தார் மேஜர் சொல்லியிருந்தார். இடம் எது என்று தேடிக் கொண்டிருந்திருக்கிறான். இறுதியில் பேச்சுச் சத்தத்தைக் கேட்டு வந்திருக்கிறான்.

"பாயிஸாப்.... நான் எங்கே இருக்க வேண்டும்?''


யாரோ சுட்டிக் காட்டினார்கள். அவன் நடக்கும்போது கால்கள் தளர்ந்து போய் இருப்பதைப்போல தோன்றின. உடல் நடுங்குகிறதோ என்று தோன்றியது. நிக்கரும் பனியனும் அணிந்திருந்தான். நல்ல தடிமனான உடம்பு. உடல் மஞ்சள் நிறத்தில் இருந்தது. வெளிறிப்போய் காணப்பட்டான்.

"பாயிஸாப்... இதர் பைட்தாஹை?''

"என்ன? பைட்டோ!''

அவனுடைய தொண்டை தடுமாறுகிறதோ என்பதைப்போல தோன்றியது. ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி நிறுத்திக் கூறியபோது, உள்ளங்கையில் வைத்து எடையையும் ஓட்டத்தையும் பார்க்கிறான் என்பதைப்போல தோன்றியது.

அமர்ந்தவுடன் அன்மோலக் ராம் கேட்டான்: "பாயிஸாப்.... க்யாகர்னா ஹை தரா து பத்தாவோ?''

யாரோ சிரித்தார்கள். பேசக்கூடிய முறையைப் பார்த்து சிரித்திருக்கலாம். "மூன்றரை வயதை அடைந்திருக்கும் உங்களுடைய தம்பி கேட்பதைப் போல இருக்கிறது!''

யாரோ அருகிலிருந்த ஆளின் காதில் கூறினார்கள்: "நான் என்ன செய்யணும்?''

இன்னொரு ஆள் முணுமுணுத்தான்.:

"எப்படி அதை எடுப்பது?''

"இரண்டு கைகளாலும் எடுக்கணுமா?''

அன்மோலக் ராம் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டு குவியலாகக் குவிக்கப்பட்டிருந்த குண்டுகளில் இருந்து ஒன்றை எடுத்தான். சாயத்தை எடுக்கும் ஓவியனின் முக வெளிப்பாட்டுடன் விரல்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு பார்த்தான்.

அவனுடைய தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது. இடையில் நரை விழுந்திருந்தது. முகம் அகலமாக இருந்தது. நெற்றியிலும் கன்னங்களிலும் சிறு சிறு பருக்கள் இருந்தன. வட்டமான கண்கள் கலங்கிக் காணப்பட்டன. கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தன. கண்மணிகள் உயிர்ப்பே இல்லாமல் சாம்பல் நிறத்தில் இருந்தன.

குண்டை கையில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் அவன் உட்கார்ந்திருந்தான். எதையோ நினைத்திருக்க வேண்டும். அவனுடைய கன்னம் கோணிக் கொண்டும் சுருங்கிக் கொண்டும் இருந்தன. இறுதியில் அவன் சொன்னான்:

"தும் ஹெம், பேடா, கோயி துஸ்மன் நஹி மிலா?''

கூர்மையாக, செல்லமாக, அவன் ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி நிறுத்திக் கூறியபோது எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டு

உட்கார்ந்திருந்தார்கள். அன்மோலக்கின் கண்கள் நிறைந்து கொண்டிருந்தன. சிரிப்பு வலிய ஓரத்தில் வெளிப்பட்டது. கன்னங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.

"இன்ஸான், இன்ஸான்கோ மார்னா நஹி சாஹியே!''

அப்போது நினைவில் வந்த தத்துவத்தைப்போல, அவன் சொன்னான்: "மனிதன் மனிதனைக் கொல்லக் கூடாது என்று....''

எல்லாரும் சிரித்தார்கள்.

"பிறகு, நமக்கு வேலை இல்லை.''

"என் குழந்தைகள் பட்டினி கிடக்கும்.''

"வாழ்ந்து பிரயோஜனமில்லை.''

"டேய்... வாழ்ந்து பிரயோஜனமில்லை என்றில்லை. பிறகு, வாழ முடியாது...''

"பாயிஸாப்!''

"க்யோம்?''

"ஆமாம்... இப்போது எனக்கு என்ன சொல்ல வேண்டுமென்பது ஞாபகத்திற்கு வருகிறது. எனக்கு சற்று உடல் நலக்குறைவு இருக்கிறது. நீங்க மன்னிக்கணும். எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். தேவையான இடத்திற்கு தலை ஓட மாட்டேன் என்கிறது. இடையில் வாழ முடியவில்லை என்று தோன்றுகிறது. பாயிஸாப். உங்களுடைய பெயர் என்ன? ஹ்ஹா! சகாதேவன். ஹா... மைனே கஹா, பாயிஸாப்.. நீங்க சொன்னபோது எனக்கு ஞாபகத்தில் வந்தது. நினைத்துப் பார்ப்பது, நினைப்பதை மறந்து விடுவது... அது ஒரு சாபம்தான். உடல் நலக் கேடுதான். என்னுடைய தலை சரியாக இல்லை. இந்த குண்டுகள் இருக்கின்றனவே! குண்டைச் செலுத்துபவன்

வெறும் கருவிதான். குண்டு துளைத்து நுழைய வேண்டிய மார்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு குண்டைப் பார்த்தால் பயம். ஒரு நாள் குண்டு வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் வாழ முடியாத நம்மை அழைத்து தருகிறார்கள். இந்தா... ஒரு ஐம்பது குண்டுகளைக் கையில் வாங்கிக் கொள். பன்டோலியத்தை மார்பில் விடாமல் பிடித்துக் கொள். பிறகு... உன்னை எதிர்பார்த்து அந்தப் பக்கம் எதிரி அமர்ந்திருக்கிறான். அவனைச் சுட்டுத் தள்ளு... என்ன ஒரு கேவலமான செயல்! அந்தப் பக்கத்தில் இருக்கும் மனிதனும் என்னைப் போன்றவன்தான். வாழ முடியவில்லை. அப்படியென்றால் இதோ... நீயும் கையில் வாங்கிக் கொள். அவர்கள் ஒருவரையொருவர் கொன்று கொள்கிறார்கள். சாக வேண்டிய மனிதன்- மனிதனல்ல- அவன் மேலே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். டே! சுடு... டே! செத்துமடி...! அவன் சந்தோஷப்படுகிறான். என்ன ஒரு தந்திரம் என்பதைப் பார்... பாயிஸாப்...'' "ஆப் கா ஸுப் நாம் க்யா ஹை?''

க்வார்ட்டர்ஸ் மாஸ்டர் கேட்டான்: "உங்களுடைய பெயர் என்ன?''

"ஜி... ஆங்ஜி, மேரோ நாம்...ஆப் மூதே புச்சரஹே ஹை? ம்ஹா மேரே நாம்...''

ஒவ்வொரு சொல்லையும் அவன் நிறுத்தினான். சுவாசம் விடுவதற்காக என்பதைப்போல மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டும் கண்களைச் சிமிட்டிக் கொண்டும் இருந்தான். அவனுடைய கண் இமைகள்கூட சுருக்கங்கள் விழுந்து காணப்பட்டன.

"சரி... அன்மோலக் ராம். ஆப் சலே ஜாயியே!''

க்வார்ட்டர்ஸ் மாஸ்டர் சொன்னான்: "பிறகு... அன்மோலக் ராம், எங்கே போக வேண்டும் என்று தெரியுமல்லவா?''

எழுந்தபோது அவன் முழங்காலில் கையை ஊன்றினான். உடல் நன்றாகவே நடுங்கிக் கொண்டிருந்தது.

"படி படி... ஆப் கீ படி மெஹர் பானீ...'' எழுந்திருப்பதற்கு மத்தியில் அவன் நன்றி கூறினான்.

"ம்.. எங்கே போக வேண்டுமென்று தெரியுமல்லவா? அது போதும். கட்டிலில் போய் படு. என்ன? இனிமேல் ஒரு வேலையும் செய்ய வேண்டாம். தெரியுதா? குழாய் திறந்திருக்கும். இங்கு எப்போதும் நீர் கிடைக்கும். தெரியுதா? நடக்க முடியவில்லையென்றால், குளியலறைக்குச் செல்ல வேண்டாம். வராந்தாவிலேயே அதோ குழாய் இருக்கு. சரியா?''

"து கிதெ ரஹனால ஹை?''

மதன்லால் கேட்டான்: "த்தா, பாயிஸாப், ஜீமை, ஆப் முத்தே புச்ரஹே ஹை? மை ஸிம்லாத...''

அவன் மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. வாடிய வாழை மரத்தைப்போல அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

"அவன்தான் கில்லாடி''

"நம்பர் ஒன்!''

"என்ன?''

"நம்பர் ஒன் கில்லாடி!''

"இப்படி எவ்வளவு பேர் கம்பெனியில் இருக்கிறார்கள்?''

"நீ என்ன மோசமா?''

"அவன் சொன்னது புரிஞ்சிதா?''

"பிறகு நீதானே பட்டாளத்தின்..''

"சுப் சாப்...''

"நான் கேட்கிறேன்- அவன் சொன்னது உங்களுக்குப் புரிஞ்சதா?''

புதிதாகப் பார்க்கும் எந்தவொரு ஆளிடமும் உடனடியாக நெருங்கி விடக் கூடாது என்பது புரிந்திருக்கிறது. பல வேளைகளிலும் அவர்களிடமிருந்து விலகி ஓடுவதற்கு முயற்சிக்க வேண்டும். எனினும், மரியாதை என்ற ஒன்று இருக்கிறதே! அதனால் அம்முனிஷ்யன் சோதனை முடிந்தவுடன், அன்மோலக் ராமைச் சற்று பார்த்தேன். தூக்கத்தில் இருந்திருக்க வேண்டும். கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தான். கண்கள் பாதி மூடியிருந்தன. கண்களின் ஓரங்களில் வாடிய தெச்சுப்பூக்களைப்போல சுருக்கங்கள் விழுந்திருந்தன.


கண்களுக்கும் வெள்ளை நிறம் இருப்பதைப்போல தோன்றியது. மஞ்சள் நிறம் கலந்த கண்மணிகள் கண்களின் ஓரம் வரை உருண்டு நகர்ந்து கொண்டிருந்தன.

காலடிச் சத்தம் காதில் விழுந்ததும், அவன் கண்களைத் திறந்தான். மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். பசை ஒட்டப்பட்ட தாளால் ஆன பூவிதழ்களை பிரித்து எடுப்பதைப் போல சுருக்கங்கள் விழுந்த கண் இமைகள் வலிய நகர்ந்து கொண்டிருந்தன.

"ஹானா நஹி ஹாயெம்கே?''

"பாயிஸாப்!''

அவன் முனகினான். மூட்டுகள் நொறுங்கித் தளர்ந்து போய் விட்டதைப்போல கால்களை அசைத்தான். மிகுந்த வேதனை உண்டாயிருக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லையும் அதன் முழுமையான உணர்ச்சிகளுடன் அனுபவித்த உணர்வு வெளிப்பாட்டுடன் அவன் கூறினான். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அவன் உரையாடவில்லை. தன்னுடைய சொற்களை அவனே அனுபவிக்கிறான்.

"நான் சாப்பிடவில்லை.''

"ஏன்?''

"பாயிஸாப்...''

அவனுக்கு உடல் நலமில்லை., சாப்பிடுவதற்கு ஆசையில்லை. ஏன்.. ஆசை உண்டாகவில்லை. அதைச் செய்யக் கூடாது...

"எப்போதும் இப்படித்தானா?''

"எப்போதும் என்றால்...?''

அவன் தத்துவங்களைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கினான். மனிதன் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டானே! இயற்கையையே எடுத்துக் கொள்வோம். குளிர், வெப்பம், மழை.,.. மனிதனும் அதேமாதிரிதான். ஒரு காலத்தில் அவனும் ஒரு ஜவானாக இருந்தான். எந்த மாதிரி என்றால், இதோ நிற்கும் என்னைவிட நல்ல தடிமனாக...

ஏதோ பிரச்சினை உண்டாகியிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நான் சாப்பிடுவதற்குச் செல்லலாம் என்ற நிலை உண்டானது. ஓ... உண்மையாகவே தேவைப்படுபவர்கள் உண்ண வேண்டும். உறங்க வேண்டும். ஓய்வு எடுக்க வேண்டும்.

"என்ன ஓய்வு?''

அங்கு அவன் கோபித்தான்.

"போர் வீரர்களான... வீழ்ச்சியின் வாசற்படி வரை வந்து சேர்ந்து விட்ட போர் வீரர்களான நமக்கு...''

நான் நடந்தபோதும் அவன் படுத்துக் கொண்டே கூறிக் கொண்டிருந்தான். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், தன்னுடைய சொற்களையே அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.

அதற்குப் பிறகு, அன்மோலக் ராமிடம் நேரடியாகப் பேசுவதில்லை. எப்போதும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன். கடந்த பதினொரு வருடங்களாக ஆயிரக்கணக்கான ஆட்களை எனக்குத் தெரியும். இன்னும் சொல்லப்போனால், அப்படிக் கூறுவதே தவறு. மனிதனை அறிவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். இதயத்தின் உள்ளே இருக்கும் அறைகள் மிகவும் ஆழமானவை. எனினும், கடந்த பதினொரு வருடங்களுக்கு நடுவில் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்தேன்.

நட்புணர்வு நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் இதயங்களுடன், என்றென்றைக்குமாக கலந்து விட்டிருந்தேன். ஒன்றும் இரண்டும் கூறி தவறியபோது, எதிரியின் வயிற்றில் ரத்தம் பீறிட வைத்த போக்கிரிகளுடன் நண்பனாகப் பழகினேன். எப்போதும் ரத்த உறவுகளைக் கூறி அழுது கொண்டிருக்கும் பதைபதைப்பான இளைஞர்களின் முடிவற்ற பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்களுடனெல்லாம் இருந்திருந்தாலும், ஒரு சிறிய மாதிரிக்கு முன்னால் இப்போது இருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது.

அன்மோலக்கைப் பற்றி பல விஷயங்களும் கேள்விப்பட்டிருக்கிறேன். புதிய ஒரு மனிதனைப்பற்றி லைசன்ஸ் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பேசலாம். அவன் காட்டுத் திருடன்... திருடன் அல்ல... தனி பைத்தியம்.. பைத்தியமல்ல... அவனுக்கு வெப்ப நோய் இருக்கிறது... வெப்ப நோய் இல்லை... ஏதாவதொன்று சரியாக இருக்கலாம். ஏதாவதொன்று தவறாக இருக்கலாம். மனிதர்கள் விஷயங்களைக் கூறும்போது, கன்னத்தில் விரல்களை வைத்துக் கொண்டிருக்கும் வழக்கமில்லை.

"பேரக்”கின் வாழ்க்கை முறைக்கு மாறுதல் எதுவும் இல்லை. சாயங்கால வேளையில் குளித்து முடித்து அவனவன் தன்னுடைய சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டு "பேரக்”கின் மேற்குப் பக்க வராந்தாவில் உடலை வளைத்துக் கொண்டு நின்றிருப்பார்கள். தெற்கு வடக்காக நடந்து கொண்டிருப்பார்கள். எல்லாருடைய கண் பார்வையும் குடும்ப க்வார்ட்டர்ஸை நோக்கியே இருக்கும்.

வெளியே சமையலறையின் சுவருடன் சேர்ந்திருக்கும் கரி அடுப்பில் தாயும் மகளும் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருப்பார்கள். காற்று வாங்க வேண்டும் என்பதற்காக யாராவது துப்பட்டாவின் முனையால் வீசிக் கொண்டிருப்பார்கள்.

"பார்த்தாயா?''

சுப்பையா சந்தோஷத்தில் திளைத்திருப்பான். சேமியா அவனைப் பார்த்திருக்கிறாள். கையை அசைத்து அழைக்கிறாள். அவனுடைய நாக்கு வரண்டு போய் விடும். தடுமாறித் தடுமாறி ஒரு முனகல் பாட்டு பாடுவான்.

கொழுக்கட்டை எப்போதும் ஓய்வெடுக்கும் நிலையிலேயே இருப்பாள். வெளியே போடப்பட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலில் அவள் எப்போதும் மல்லாக்க படுத்திருப்பாள். பல நேரங்களில் தலையை உயர்த்தி வைத்துக் கொண்டிருப்பாள். மதன்லாலைப் பார்த்தவுடன் எழுந்து நிற்பாள் என்பது பொதுவான பேச்சு. அவன் கடந்து செல்லும்போது, எப்படி இருந்தாலும் அவள் எழுந்து நிற்க வேண்டியதிருக்கும். அவளுக்கு மதன்லால் மீது காதல்...

இருட்டு பரவியுடன் சாளரத்தின் வழியாகவும் திறந்து கிடக்கும் கதவுகள் வழியாகவும் நுழைந்து வரும் ஒளி வெள்ளத்தில் சில்க் ஆடைகளின் நிழல்கள் ஆங்காங்கே மறையத் தொடங்கும். வெளியே நடந்து கொண்டிருக்கும் ஆட்களின் உதட்டில் திரைப்படப் பாடல்கள் சீட்டியடிக்கப்பட்டுக் கேட்கும்.

எங்கிருந்தோ "பேரக்”கிற்குள் நுழைந்து வந்தவுடன், திகைப்படைந்து நின்று விட்டேன். அன்மோலக் ராம் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் "கிட் பாக்”ஸின்மீது சப்பணம் போட்டு உட்கார்ந்திருந்தான். பெட்டியை வாசலுக்கு நேராக இழுத்துப் போட்டு, கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவன் க்வார்டடர்ஸையே பார்த்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில்- அவன் இன்ப உணர்வில் மூழ்கி விட்டிருக்க வேண்டும். காலடிச் சத்தம் கேட்கவேயில்லை. கண் இமைகள் கீழ்நோக்கி இருப்பதாகத் தோன்றியது.

வராந்தாவில் ஒலி பெருக்கி பாடிக் கொண்டிருந்தது. பாட்டின் தாளத்திற்குத் தலையை ஆட்டியவாறு அவன் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுடைய மெல்லிய உதடுகள் விரிந்து சிரிப்பை வெளிப்படுத்தின. ஒருவேளை இப்போது அழுதாலும் அழலாம்.

சற்று நேரம் நின்று, ஒலிபெருக்கி பாட்டின் ஆரம்ப வரிகளை மீண்டும் ஒலிக்கிறது:

"நாசோ சிதாரே... அப் சாந்த் நிகல் நேவாலா ஹை...'' - இலங்கை வானொலி பழைய பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்க வேண்டும். காதலனின் வருகையால் உண்டான சந்தோஷத்தில் தன்னையே மறந்து அவள் பாடுகிறாள். அன்மோலக் ராம் மெதுவாக முழங்காலில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். தலையை ஆட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் நிறைந்திருந்தன. அவனுடைய இதயம் அழுது கொண்டிருந்தது...

அன்று இரவு தூங்குவதற்காகப் படுத்தபோது, முழுமையான பேரமைதியில் யாரோ முனகுவது காதில் விழுந்தது.

"கோன் ஹை?''

ஒரு கேள்வி உயர்ந்தது.

"பாயிஸாப்..''

அன்மோலக் ராம் கூறினான்:

"ஸோ ஜாவோ.''


அங்கு அவன் நிறுத்தவில்லை. அவனுடைய தலைவிதி. உடல் முழுவதும் வேதனை இருந்தது. படுக்க வேண்டும்... படுக்கக் கூடாது... தூங்க வேண்டும்... தூக்கம் வரவில்லை.... அதிர்ஷ்டசாலியான நீங்கள் சுகமாக உறங்குங்கள்..

தூக்கத்திற்கு மத்தியில் ஏதோ ஆரவாரத்தைக் கேட்டு கண் விழித்தேன். விளக்கை எரிய வைத்தேன்.

ஓ!

அன்மோலக் ராம் மதன்லாலின் கழுத்தைப் பிடித்திருந்தான். மதன்லால் முனகிக் கொண்டிருந்தான். இறுக நெரித்திருக்க வேண்டும். கண்களை அகல விரித்துக் கொண்டு அருகில் சென்றேன். மதன்லால் அன்மோலக்கின் கையை பலமாகப் பிடித்திருந்தான். திடீரென்று அன்மோலக் பிடியைத் தளர்த்தினான்.

"சைத்தான்...''

மதன்லால் உரத்த குரலில் கத்தினான். அன்மோலக் மிகவும் வெளிறிப்போயிருந்தான். தலையிலிருந்து கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தது. ஒரு வார்த்தைகூட பேசாமல் அவன் கட்டிலில் வந்து படுத்தான்.

"என்ன ஆச்சு?''

மதன்லால் நின்று கொண்டு மேலும் கீழும் மூச்சு விட்டான். அவனுடைய சிவந்த முகம் முழுமையாக நீல நிறத்தில் இருந்தது. நெற்றியில் வியர்வை அரும்பி விட்டிருந்தது.

அவன் சரியாக மூச்சு விட முடியாமல் விஷயம் என்ன என்பதைக் கூறினான். வெளியிலிருந்து வந்திருக்கிறான். எப்போதும் இந்த நேரத்தில்தான் வருவான். எங்கிருந்து என்பதைக் கூறவில்லை. ஆள் ஒரே தாவல்.. ஆள் தாவியதைப் பார்த்தான். அத்துடன் கழுத்தில் பிடி விழுந்து விட்டது. பிறகு, என்ன நடந்தது, என்ன தோன்றியது எதுவுமே தெரியாது. விளக்கு எரிய வைக்கப்பட்டு விட்டது அல்லவா? இல்லையென்றால் மரணம்தான்!

"சரி... தூங்கு...''

"எனக்கு பயமா இருக்கு!''

அன்மோலக் ராம் மீண்டும் முனக ஆரம்பித்தான். இடையில் முணுமுணுக்கவும் செய்தான். எதுவுமே தெளிவாக இல்லை.

"தூங்கலையா?''

"விளக்கை அணைக்க வேண்டாம்.''

"அது போதுமா?''

"எனக்கு பயமா இருக்கு''.

சற்று நேரம் அவன் நின்றான். நினைத்து ஞாபகம் வந்ததைப்போல இறுதியில் சொன்னான்:

"நான் போகிறேன்.''

"எங்கே?''

"பொழுது விடிவதற்கு முன்னால் வருகிறேன்''

"சரி...''

மறுநாள் காலையில் மதன்லால் தன்னுடைய கட்டிலை எடுத்து அடுத்த அறைக்கு மாற்றினான். பெருமாள் சண்டை போட்டான். "இந்தப் பிசாசு எனக்கு அருகில் படுக்க வேண்டாம்.''

"ச்சே...''

"என்ன சார்? என்னை அவன் கொன்னுட மாட்டானா?''

ஹவில்தார் மேஜர் விஷயத்தை அறிந்தான். அன்மோலக் ராமிடம் கேட்டான்.: “ஜீ... மை... மை... முத்தே தக்லீஃப் ஹை.. முத்தே நீம்த் நஹி ஆதீ..''

அவன் கையையும் காலையையும் ஆட்டிக் கொண்டே பதில் கூறினான். அவன் நாக்கால் விஷயத்தைக் கூறுவது இல்லை என்று தோன்றியது. இதயத்திலிருந்து சத்தம் உண்டாகி வருவதாக இருக்க வேண்டும். கண்கள்தான் பேசின. கண்களுக்கு அடுத்ததாக... முகத்திலிருந்த சதைகள்... வார்த்தைகளுக்கு, ஒவ்வொரு குரல் மாறுதல்களுக்கு, தனிப்பட்ட வகையில் சேர்க்க வேண்டிய ஒவ்வொரு உணர்ச்சிக்கு, வெளிப்பாட்டின் ஒவ்வொரு சிறு சிறு அம்சத்திற்கு... அன்மோலக் ராமின் பேச்சு அப்படித்தான். முகத்திலிருக்கும் ஒவ்வொரு சதையும் வெளிப்பாட்டின் ஒவ்வொரு சிறிய சிறிய விஷயத்திற்கும் வேண்டிய அளவிற்கு அசைந்தன. ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அடங்கியிருந்த உணர்ச்சி கண்களில் தெரிந்தது. அவன் பேசுவது கேட்பதற்காக உள்ளது அல்ல, பார்ப்பதற்காக இருப்பது.

"நீ அவனைக் கொன்றிருப்பாயே!''

"அ... ஜி... அகர்..''

அன்மோலக் இருப்பதை அறுத்து துண்டாக்கிக் கூறினான். விளக்கு எரிந்ததே! அந்த ஒரே பிடியில் மதன்லாலின் கதை முடிந்திருக்குமே!

தூக்கத்திற்கு மத்தியில் ஆட்கள் எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று ஹவில்தார் மேஜர் சொன்னான். அது எவ்வளவோ உண்மை! அன்மோலக் ராமே பல நேரங்களில் எழுந்திருக்கிறான். அப்போதுதான் மதன்லாலைப் பிடித்து நெரித்ததும்...

"ஆட்கள் வெளியே போக வேண்டாமா?''

"மதன்லால் எழுந்து போகவில்லை...''

"என்ன?''

அன்மோலக் உறுதியான குரலில் சொன்னான். நள்ளிரவு வேளையில் ஒரு மனிதன் எதற்காக அறைக்குள் வர வேண்டும்? அது திருடுவதற்குத்தான். திருடனைத்தான் கழுத்தைச் சுற்றிப் பிடித்தது... எழுந்து வெளியே சென்று, திரும்பி வந்த நண்பனை அல்ல...

ஹவில்தார் மேஜருக்கு சந்தோஷம் உண்டானது. ஆனால், சந்தோஷப்பட முடியுமா? கோபம் வந்தது. கோபப்பட முடியுமா? ஆச்சரியம் இருந்தது...

"பெட் செக்கிங் நடந்ததா?''

"எனக்குத் தெரியாது!''

"யார் நேற்றைய ட்யூட்டி என்.ஸி.ஓ?''

"நாயக் நாராயணன் நாயர்!''

"நான் எங்கே படுப்பது?''

இடையில் பெருமாள் கேட்டான்:

"நம்ம தலையில்!''

அதிகமான கோபத்தில் இருந்த மேஜர் கத்தினான்.

பெருமாள் முழுமையாக எரிந்து விட்டான். எனினும், தைரியத்தை விட்டு விடக் கூடாது. அவனவனுடைய விஷயம் அது.

ஹவில்தார் மேஜர் அப்படி கூறலாம். மேஜர் தூங்குவது மிக மிக தூரத்தில், தன் மனைவியுடன். அங்கு போய் அன்மோலக் ராம் பிடரியைப் பிடிக்கப் போவதில்லை. பெருமாள் படுத்திருப்பது அவனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கட்டிலில்...

பிறகு அன்மோலக் ராம் எங்கே படுப்பான்?''

யாரும் வாய் திறக்கவில்லை.

"என்ன தன்ராஜ்?''

"என்னால் முடியாது?''

"சுப்பையா?''

"வேண்டாம்... வேண்டாம்... மேஜர் ஜி... நானும்...''

"நீயும்?''

"வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.''

தவறு நேர்ந்து விட்டதைப்போல சுப்பையா நின்று கொண்டு விரலைக் கடித்தான்.

"சங்கரன் நாயர்!''

நான் நின்று கொண்டு விழித்தேன். எனக்கு அந்த அளவிற்கு தைரியமெதுவும் இல்லை. ஒரு விஷயம் இருக்கிறது. தூங்கி விட்டால், பிறகு எழுந்திருப்பது பொழுது புலர்ந்த பிறகுதான். அதனால்

என்னுடைய கழுத்தின்மீது பாய்ந்து விழுவதற்கு வழியில்லை. நேரம் தவறி "பேரக்”கிற்குள் நுழைந்து வர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

"படுத்துக் கொள்ளட்டும்!''

அந்த வகையில் அன்மோலக் ராமின் கட்டில் எனக்கு அருகில் மாற்றிப் போடப்பட்டது.

அன்மோலக் ராம் யாரையும் "பாயி ஸாப்" என்றுதான் அழைப்பான். என்னை அழைப்பது "நாயக் ஸாப்" என்று.

"நான் சிக்னல் மேன் ஆச்சே!''

தவறு உண்டாகி விட்டதைப்போல அன்மோலக் நின்றான். நின்று கொண்ட இடத்திலிருந்தே சொன்னான்: "நீங்க... நீங்க ஒரு நாயக்கிற்குப் பொருத்தமான மனிதர்தான்.''

"ஷோல்ஜர் என்ற டைட்டிலுக்குப் பொருத்தமானவனாக இல்லை என்று ரெஸிஸாப் கூறுகிறார்!''

"கோன் ஓஸி?''

அவனுடைய முகம் சிவப்பாக மாறியது. கோபத்தை அடக்குவதற்காகவோ என்னவோ அவன் பெருமூச்சு விட்டுக் கொண்டே நின்றான்.

"உங்களை ஆட்சி செய்பவர்களுக்கு உங்களை மதிப்பீடு செய்வதற்கு முடியவில்லை. காக்காய் பிடித்தால், பதவி உயர்வு கிடைக்கும். அவனவனுடைய வேலையை ஒழுங்காக முடித்தால், அவர்களின் விருப்பப்படி ஆடக் கூடிய பெட்டியாக இருக்கலாம்.''


தேவையான அளவிற்கு அவனைப் பல விஷயங்களைப் பற்றியும் பேச வைக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அதனால் ஒரு வார்த்தைகூட பேசாமல் கேட்டுக் கொண்டு நின்றிருந்தேன்.

அவன் பலவற்றையும் சொன்னான். மேலே இருப்பவர்கள் திறமை கொண்டவர்களை அறிந்து கொள்வதில்லை. ஒத்துக் கொள்வதில்லை. அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். இது எந்தச் சமயத்திலும் நல்லதல்ல. ஆலிவர் க்ராம்வெல்லிடமிருந்து ஆரம்பிக்கலாம்.

அவரவர்களுடைய திறமைகள் செயல்முறைக்கு வருவதற்கு நடைமுறையில் இருக்கும் சட்டம் அனுமதிக்காத நிலை இருக்கும் போது, தைரியம் கொண்ட மனிதன் அதே சட்டத்தை வைத்துக் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கிறான். தகுதி கொண்டது வாழும். மனிதன் அடைந்து கிடப்பதற்கு பிறந்தவன் அல்ல. அவன் நெருக்கி... நெருக்கி... நெளிந்து எழுந்திருப்பான். உயர்வான்.

ஒரு வகையில் கூறுவதாக இருந்தால், அது உண்மையாக இருக்கலாம். ஒரு விஷயம்- எதைப் பற்றிப் பேசும்போதும், அன்மோலக் ராமிற்கு தெளிவான உட்கருத்து தெரியும்.

அவனுக்கு உடல் நலமில்லை. உடல் நலமில்லை என்றால், மன ரீதியான சோர்வு என்று டாக்டர் கூறுகிறார். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், மன ரீதியான தளர்ச்சி என்று அதைக் குறிப்பிடலாமா? ஆனால் எழுந்திருக்க முடியாத நிலை உண்டாகும். படுத்த இடத்தில் படுத்துக் கொண்டே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அறையைச் சுத்தம் செய்பவருக்கு பணம் தருவதுதான் எப்போதும் நடக்கக் கூடியது. இப்போது நிலைமை பரவாயில்லை. சிறிது நடக்கலாம். தலையணைக்கு அடியில் எப்போதும் ஊன்று கோலை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். தனக்கே தெரியாமல்

இடையில் படுத்திருக்கும் இடத்தை விட்டு எழுந்திருக்க முடியாத நிலை உண்டாகும். எப்போது என்று தெரியாது. அது இனிமேலும் வரும். ஓய்வு மட்டும் போதும் என்று டாக்டர் கூறுகிறார். மன அமைதியின் காரணமாக மாற வேண்டும் என்பதே உண்மை. அதனால் "பேரக்"கிற்கு அனுப்பி வைத்தார்கள். கம்பெனி கமாண்டர் இன்ஸ்பெக்ஷனுக்கு வரும்போது, அன்மோலக் ராம் கட்டிலில் தளர்ந்து போய் படுத்திருந்தான். எழுந்திருக்க முடியவில்லை. மேஜர் ஸாபிற்கு கோபம் அதிகமானது.

"ஹூ திஸ் டாம் இடியட் ஈஸ்?''

"பட்டே!''

அன்மோலக் உரத்த குரலில் கத்தினான். தலையணைக்கு அடியில் இருந்து ஊன்றுகோலை எடுத்தான். மேஜரின் பின் பாகத்தில் அடித்தான்.

"என்ன சொன்னாய் நாயே? நான் இந்தியா என்ற இந்தப் மிகப் பெரிய நாட்டின் ஒரு குடிமகன். பட்டாளத்தில் ஒரு ஜவான். உனக்கு தெரியாதா? எனக்கு இப்போது முடியாத நிலை...''

மறுநாள் அன்மோலக் ராமிற்கு டிட்டாச்மென்டிற்குப் போவதற்கான உத்தரவு வந்து சேர்ந்தது.

ஓய்வு நேரம் முழுவதும் அவன் "கிட்பாக்"ஸிற்கு மேலே உட்கார்ந்திருப்பான். இன்னும் சொல்லப்போனால் எப்போதும் ஓய்வு நேரம்தான். அவன் எதற்கும் போவதில்லை. யாரும் அவனை அழைப்பதில்லை. இரவு அதிக நேரமாகி விளக்கை அணைப்பதல்லாமல், அவன் தூங்கச் செல்வதில்லை. அவனுக்கு உறக்கம் என்பதே இல்லை. எப்போதும் "கிட் பாக்"ஸின் மீது உட்கார்ந்து கொண்டு குடும்ப க்வார்ட்டர்ஸ்களையே பார்த்துக் கொண்டிருப்பான்.

யாரையும் தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் இல்லை. குழந்தைகள் அந்தப் பக்கமாக கடந்து செல்லும்போது, உதடுகளைக் கடிப்பான். அழுகிறானோ என்று தோன்றும். இல்லை... கண்களுக்கு உயிர்ப்பு வந்து சேர்ந்திருப்பதைப்போல இருக்கும். சிரிக்க வேண்டும்போல தோன்றும். அந்த நிமிடமே ஒட்ட வெட்டப்பட்ட தலையில் கைகளைக் கொண்டு தடவுவான். முதலில் மெதுவாக... தொடர்ந்து அழுத்தி... அழுத்தி... தலையே சுற்றுவதைப்போல இருக்கும். பற்களைக் கடிப்பதைக் கேட்கலாம். முகம் முழுவதும் சுருங்கி இருண்டு போய் இருப்பதைப் பார்க்கலாம். அவன் கட்டிலில் சாய்ந்து படுப்பான்.

இடையில் எனக்கு ஒரு தவறு உண்டானது. வராந்தாவில் ஒலி பெருக்கி பாடிக் கொண்டிருந்தது. பாடலின் ஆரம்ப வரி இப்போது நினைவில் இல்லை. இதுவரை பகலாக இருந்தது. எப்படியோ என்னுடைய நேரம் நகர்ந்து விட்டது! இதோ வண்ணமயமான சாயங்கால நேரம் வந்துவிட்டது! காதலனைப் பற்றிய விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அப்படி நினைத்து... நினைத்து... உட்கார்ந்து கொண்டிருக்க முடிந்தால்...? இல்லை... மாலை மறைந்து... மறைந்து போகும். இருள் வரும். பயங்கரமான அடர்ந்த இருட்டு வரும். நான் இந்த பயங்கரமான இரவு நேரத்தை எப்படிக் கழிப்பேன்? இதுவோ வேறெதுவோதான் பாடலின் உட்கருத்து. சிறிது நேரம் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னவென்றே தெரியாமல் அந்த ஆரம்ப வரிகளை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.

என்னை பிடித்து நிறுத்தக் கூடிய வேதனை கலந்த பாடல்கள் வேறும் இருக்கின்றன. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது எனக்கு சரஸ்வதியின் ஞாபகம் வரும். எனக்கு உன்மீது காதல் இருக்கிறது என்று நான் அவளிடம் கூறவில்லை. எனக்கு சங்கரன்மீது காதல் இருக்கிறது என்று அவள் என்னிடமும் கூறவில்லை. எங்களுக்கிடையே காதல் இருக்கிறது என்று அவளுடைய வீட்டில்

இருப்பவர்களுக்குத் தெரியும். அவளுடைய தாய் மூத்த அண்ணனின் திருமணத்தைப் பற்றியே என்னிடம் பேசுவாள். அண்ணி நல்லவளா? என்ன படித்திருக்கிறாள்? பழகுவதற்கு இனியவளா? அப்பாவின் பொதுவான அறிவுரை ஒன்றே ஒன்றுதான்: "மணி மேக்ஸ் தி மேன்!''

என்னைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு உலகம் தெரியாது. வெறுமனே எதையாவது உருப்படியற்ற விஷயங்களைச் செய்து கொண்டு நடந்து திரிகிறேன். சன்னியாசம், வேதாந்தம், யாசகம்... இவை எதுவும் வாழக்கூடிய மனிதனுக்கு பொருத்தமானவை அல்ல. அவளுடைய தந்தையின் பொது அறிவுரையின் அர்த்தம் இதுதான். "பணத்தை சம்பாதி.. சரஸ்வதியை எடுத்துக்கோ... "

இரண்டே இரண்டு முக்கிய வழிகள்தான் இருக்கின்றன.

ஒன்று: சரஸ்வதியை மறந்து விட்டு எங்கேயாவது போய் விடுவது. இரண்டு: எதைச் செய்தாவது பணத்தைச் சம்பாதிப்பது.

சரஸ்வதியை மறப்பதா?

உலகத்தைத் தெரிந்து கொள்ளாதவனுக்கு பட்டாளம்தான் கதி. பட்டாளத்தில் சேர்ந்து முதல் விடுமுறையில் நான் சென்றபோது, அவள் இறந்து கிடந்தாள்.

அவள் இறந்து விட்டாள் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. பேருந்து அவர்களுடைய வீட்டைக் கடந்து சென்றபோது முற்றத்திலும் திண்ணையிலும் ஆட்கள் இருப்பதைப் பார்த்தேன். அவளுடைய தந்தை ஊரில் பெரிய மனிதர். யாரோ பஞ்சாயத்து விஷயமாக வந்திருக்க வேண்டும்.

வீட்டிற்குச் சென்றவுடன், நண்பர்கள் பார்ப்பதற்காக வந்தார்கள்.

"சரஸ்வதி இறந்து விட்டாள்.''

"எந்த சரஸ்வதி?''

"அரவிந்தனின் சகோதரி.''

அதற்குப் பிறகு எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை. அந்த நிமிடமே சாய்ந்து கீழே விழுந்து விட்டேன். அன்றுதான் நான் நிலைகுலைந்து போனேன்.


நான் ஒரு பட்டாளக்காரன். எனக்கு முன்னால் எவ்வளவோ ஆட்கள் இறந்து விழுந்திருக்கிறார்கள்! எனக்கு மேலே குண்டுகள் சத்தத்துடன் பாய்ந்து சென்றிருக்கின்றன. எனக்கு அருகில் துப்பாக்கிகள் சீறியிருக்கின்றன. அப்போதெல்லாம் நெஞ்சு மிகவும் திடத்துடன் இருக்கும்.

இந்த வேதனை கலந்த பாடல்கள் என்னைப் பிடித்து நிறுத்துகின்றன. நான் சரஸ்வதியைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். ஏதோ கனவைக் கண்டு கொண்டு உறங்கிய என்னை அவளுடைய கிளியைப்போன்ற கொஞ்சல் கண் விழிக்கச் செய்தது. பல சம்பவங்களும் நிறைந்த இந்த உலகம் என்னவென்று தெரியாமலேயே மரணமடைவது என்பது எவ்வளவு மோசமான விஷயம் என்பதை நினைத்து இப்போது பயப்படுகிறேன். அதைவிட அவளைப் பற்றி நினைக்கும் போது என்னுடைய நெஞ்சின் இடது பக்கம் வெடிப்பதைப்போல இருக்கிறது.

"ஆவாஸ் தே கஹாம் ஹை... துனியா மேரீ வஹாம் ஹை...''

இன்று இது பழைய பாடல். எனக்கோ என்றுமே புதியது. ஓ! இப்போது அவளுடைய கிளியைப்போன்ற கொஞ்சல் எங்கே போயிருக்கும்? எங்கே இருந்தாலும்... யெஸ், இதோ நான் கேட்கிறேன். அவள் பேசிக் கொண்டிருக்கிறாள். இது அவளுடைய குரல்தான்...

பிறகு... பப்பன் கே தின் புலா ந தேனா என்று நான் எவ்வளவோ முறைகள் பாடி விட்டேன்! இரவு ஒன்பதரை மணிக்குப் பிறகு லக்னவ்

வானொலி அந்தப் பாடலை தினமும் ஒலிபரப்பு செய்து கொண்டிருந்த காலத்தில் தூங்குவதற்காக படுத்த நான் ஒலி பெருக்கிக்கு முன்னால் எழுந்து கூறுவேன்!

"பப்பன் கே தின் புலா ந தேனா... "

இன்று யாரைக் கூறி அந்த ஆரம்ப வரிகளைப் பாடுவது?

இதையெல்லாம் எதற்காகக் கூறினேன்? கூறிவிட்டேன். இல்லை... நான் நினைத்துப் பார்க்கிறேன். பட்டாளக்காரன். ஒத்துக் கொள்கிறேன். எனக்கும் மனிதனுக்கு இருக்கக்கூடிய ஒரு இதயம் இருக்கிறது என்பதையும், மனிதனின் மாறிக் கொண்டிருக்கும் மென்மையான உணர்வுகளை நானும் அனுபவிக்கிறேன் என்பதையும் தினமும் கூற வேண்டியதிருந்தது. இல்லாவிட்டால் இன்னொரு ஆளைப் பற்றி எழுதக் கூடிய இந்தக் குறிப்பில் என்னுடைய விஷயங்களைப் பற்றிக் கூற வேண்டியதில்லையே!

இவை எதுவும் அன்மோலக் ராமிற்குத் தெரியாது. அதனால் "இந்த பயங்கரமான இரவு வேளையை நான் எப்படி கழிப்பது?" என்ற அர்த்தத்தைக் கொண்ட ஆரம்ப வரிகளைப் பாடியபோது அவன் விஷயத்துடன் கேட்டான்: "பாடுறது சரி... அர்த்தம் தெரியுமா?''

எனக்கு அப்படி கேட்டது சிறிதும் பிடிக்கவில்லை. என்னுடைய இனிய வேதனைகளை ஒரு மனிதன் போர்வையால் மூடுவதா? எனினும், அந்த மனிதனிடம் பேசலாமே என்ற இன்னொரு ஆசையுடன் பதில் சொன்னேன்: "கொஞ்சம்...''

"என்ன கொஞ்சம்? நீங்கள் மதராஸி... இல்லை... மலையாளி. எது வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்தியின் உள்ளடக்கம் உங்களுக்குப் புரியாது. இந்த அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் எந்தக் காலத்திலும் புரியவே புரியாது...''

அவனுடைய முகத்தில் வெறுப்பும் கிண்டலும் தெளிவாகத் தெரிந்தன. மனதிற்குள் இருப்பதை எந்தச் சமயத்திலும் மறைத்து வைப்பதற்கு அன்மோலக்கால் முடியாது. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அவன் பேசும்போது முகம் முழுவதும் இதயம் வந்து பரவி விடுகிறது.

பிறகு, புரிந்தது. மொழி என்பது கூற நினைக்கும் விஷயத்திற்கான ஒரு வழி. கூற நினைக்கும் விஷயம் இதயத்திற்குச் சொந்தமானது. முதலில் அனுபவிக்க வேண்டும். அனுபவித்து உணர்ந்ததை வெளியில் கூற வேண்டும். அனுபவித்து உணர்ந்தவனுக்குத்தான் அந்தப் பாடலின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டு ரசிக்க முடியும் என்பது அன்மோலக் கூற நினைத்த விஷயம். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், என்ன மொழியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- அனுபவித்து உணர்ந்தவனுக்கு அதிலிருக்கும் உள்ளடக்கத்தை ரசிப்பதற்கு முடியும். அனுபவித்த உணர்வுதானே? அறிவு அல்ல.

ஆச்சரியம் உண்டானது. இந்த கேடு கெட்ட மனிதன் எப்படி பேசுகிறான்? எனினும், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி சிந்திப்பதற்கு அவன் முயற்சிக்கவில்லை. ஒருவேளை, அவனே அந்தப் பாடலில் மூழ்கிவிட்டிருக்க வேண்டும். நானும் அதைப் பற்றி அந்த அளவிற்கு கவனம் செலுத்தவில்லை. ஒருவன் தன்னையே மறந்து விடக்கூடிய அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இன்னொருவன்மீது கவனம் செலுத்த முடியாது. அன்மோலக் ராம் பாடலின் அர்த்தத்தைக் கூறினான். ஆனால், விளக்கம் அல்ல. அவன் அனுபவித்த உணர்ச்சிகளை அவன் விளக்கிக் கூறினான். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அவனுடைய துடித்துக் கொண்டிருந்த இதயத்தில் அலையடித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகள் அந்த பரந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட

கன்னங்களிலும் மெல்லிய, சிறிய உதடுகளிலும் உயிர்ப்பற்ற கண்களிலும் தெரிவதை நான் கண்டேன்.

என்னுடைய பொறுமையும் அக்கறையும் அன்மோலக்கிற்குப் பிடித்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், அப்போது தான் அவன் என்னை நெருக்கமாகத் தெரிந்து கொண்டிருக்கிறான். எது எப்படி இருந்தாலும், அப்போதிருந்து அவன் என்னுடன் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருப்பது என்பது வழக்கமாகிவிட்டது.

அன்மோலக்கிற்கு இடையில் அவ்வப்போது எதைப்பற்றியோ ஞாபகம் வரும். உடனே அமைதியாக உட்கார்ந்துவிடுவான். அது ஒரு வகையான சமாதி நிலைதான். ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. பிறகு கூறுவான்: "மேரே நஸரோ மெ ஸப் லால்லால் நஸராதா ஹை.''

கூறிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் அதே உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குச் சென்று விடுவான். கண்கள் பிரகாசமாகும். கன்னங்கள் சிவக்கும்.

"பாருங்க... நான் இதோ பார்க்கிறேன். என் கண்களில் அனைத்தும் தெரிகின்றன. இந்த உலகம் முழுவதும் லால்லால்தான்.''

உலகம் முழுவதும் எப்படி சிவப்பாகத் தெரிகிறது என்று எனக்கு இதுவரை புரியவில்லை. மனித இயல்பைப் பற்றி மிகவும் குறைவாக மட்டுமே அறிந்திருக்கும் எனக்கு அது புரியவில்லை. பல நேரங்களிலும், ஆரம்பத்திலிருந்து இருக்கும் அவனுடைய வார்த்தைகளையும் செயல்களையும் பிரித்தெடுத்துப் பார்க்கிறேன். பிறகு இந்த சிவப்பு நிறம் தெரிவதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி சிந்திக்கிறேன். ஒரு காரணமும் கிடைக்கவில்லை. அது மன நோயாக இருக்கலாம்.

தொடர்ந்து அவன் மிகுந்த விரக்தியடைந்த மனிதனாக ஆகி விடுவான். எதற்காக வாழவேண்டும் என்று கேட்பான். இறப்பதற்கு முடியவில்லை. அவனுக்கு கோபம் வரும். புகை வண்டி தண்டவாளத்திலிருந்து அவனை போலீஸ்காரர்கள் தூக்கி எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.


இப்படித்தான் சம்பவம்: தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் விடுமுறை எடுத்தான். பாதையின் ஒரு ஓரமாக நடந்தான். பாதை உயர்ந்து இறங்கக் கூடிய இடத்தில் ஒரு பெரிய திருப்பம் இருந்தது. இரண்டு பக்கங்களிலும் மேடுகள். மேட்டை வெட்டி தாழ்த்தித்தான் பாதையே போட்டிருக்கிறார்கள். அங்கு இருந்து கொண்டு தூரத்திலிருந்து வரும் வண்டியின் சத்தத்தைக் கேட்டான். தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்தான். தண்டவாளங்கள் பயங்கரமாக ஓசை உண்டாக்கின. இறுதியில் கன்னத்தில் அடித்ததைப்போல இருந்தது. மூளை சத்தம் போட ஆரம்பித்தது. அவனே ஒரு பயங்கரமான சத்தமாக ஆனான். கண் விழித்துப் பார்த்தபோது வெளிச்சம் இருந்தது. ஆட்களின் நடமாட்டம் இருந்தது. பார்த்தான். காவல் நிலையம்.

மேட்டிலிருக்கும் வளைவில் பல நேரங்களிலும் தற்கொலை சம்பவங்கள் நடப்பதுண்டு. அதனால் தேவையற்ற நேரங்களிலெல்லாம் வண்டி கடந்து செல்வதற்கு முன்னால் போலீஸ் ரோந்து சுற்றுவார்கள்.

சிக்கிக் கொண்டான்.

ஆனால், சுய உணர்வுடன் அவன் பேசினான். இப்படிப்பட்ட காரணங்களுக்காக எனக்கு வாழ்வதற்கு விருப்பமில்லை. நியாயம் என்று படுகிறதா? உங்களில் ஒருவன் என்று வைத்துக் கொண்டால் என்ன செய்வீர்கள் என்று கூறுங்கள். இறப்பதற்கு சட்டம் அனுமதிக்க மாட்டேன் என்கிறது. வாழ்வதற்கு அனுமதிக்கக் கூடிய சட்டம்

இருக்கிறதா? இருக்கிறதே! வாழ அனுமதிக்கக் கூடிய சட்டம் என்றால், குடிமகன்களுக்கு எல்லா வகைகளிலும் சந்தோஷமும் அமைதியும் வாழ்க்கை மீது பிரியமும் உண்டாகின்றன- சரிதானே? முதலாவதாக வாழ்க்கைமீது பிரியம் இருக்க வேண்டும். எவ்வளவு அருமையான வார்த்தைகள்! வாழ்க்கையை நேசிப்பது... தகராறு இன்னொரு இடத்தில்தான். இன்றைய சட்டப்படி அவரவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை மீதுதான் அக்கறை. அதனால்தான் சுய நலத்தில் தொடங்கி சொத்துக்களைக் குவிப்பது, கள்ளச் சந்தை ஆகியவை உண்டாகின்றன. இன்னொருவனுக்கு வாழ முடியாமல் போகிறது. தற்கொலை செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அவரவர்களுடைய வாழ்க்கை என்ற விஷயத்தை மறந்து விட்டு சமூகத்தின் வாழ்க்கை, நலம், அமைதி என்று வரும்போது, அதற்கு சட்டம் இருக்கிறதா? இப்போது தலைக்கு தெளிவு இருக்கிறது அல்லவா? சரி... அப்படியென்றால், தொலைந்து போ. நல்லது நடக்கிறது. அந்தவகையில் சிறைக்குள் நுழையாமல் தப்பித்தாகி விட்டது. அதற்குப் பிறகு தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. இறக்கவில்லை. இறக்க இயலாது.

சனிக்கிழமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புதன் கிழமை. ஏனென்றால், அன்று நான் குடித்திருந்தேன். சனிக்கிழமையும் புதன் கிழமையும் மெஸ்ஸில் மாமிசம் உண்டு. மாமிசம் இருக்கும் நாளன்று ரம் தருவார்கள்.

குடிப்பதைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது. முன்பு குடிக்கவில்லை என்று கூறியிருக்கிறேன். இப்போது குடிக்கிறேன். அதற்குப் பிறகு ஒவ்வொருவரும் அவரவர்களுடைய பெட்டியின் மீதோ கட்டிலிலோ வந்து அமர்வார்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லா எதிர்ப்புகளையும் சந்திப்பதற்கு நெஞ்சுக்கு தைரியம் இருக்கிறது. எந்த எதிர்ப்பும் புல்தான். பாதையில் இருக்கும் தடைகள் சாதாரணமானவை. எது

வேண்டுமானாலும் வரட்டும். வாழ வேண்டும். எதைப் பற்றியெல்லாமோ நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். குடித்து விட்டால் அப்படித்தான்.

அப்போது அன்மோலக் ராம் வந்தான். அவன் விழ இருந்தான். கையில் கண்ணாடிக் குவளை இருந்தது. குவளைக்கு இரண்டு நிறங்கள் இருந்தன. அடியில் இருந்த பாதி வரை வைலட். பாதிக்கு மேலே வெள்ளை. ஓ... ரம் கொண்டு வருகிறான்.

குவளையை பெட்டியின்மீது வைத்து விட்டு, அவன் கட்டிலில் குத்த வைத்து உட்கார்ந்தான். நீண்ட பெருமூச்சு விட்டான். முகம் மிகவும் சிவந்து காணப்பட்டது. கண் இமைகள் கனத்துப்போய் தொங்கிக் கொண்டிருந்தன. கண்கள் கலங்கியிருந்தன.

கட்டிடத்திற்குள் குடிக்கக்கூடாது என்பது சட்டம்.

"அன்மோலக்!''

நான் தாழ்ந்த குரலில் அழைத்தேன். விருப்பமில்லாததைப்போல அவன் முகத்தை உயர்த்தினான். உடல் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது.

"நடைமுறையில் இருக்கும் உத்தரவைப் படிக்கவில்லையா?''

நான் மனதில் வைத்திருக்கும் விஷயத்தை அன்மோலக் புரிந்து கொண்டிருக்க வேண்டும். சற்று கூர்ந்து பார்த்து விட்டு, அவன் தன்னுடைய போக்கிலேயே உட்கார்ந்திருந்தான். கீழ்ப்படிவதற்கு எனக்கு விருப்பமில்லை.

"மைனே கஹா ஜி. ஸ்டாண்டிங் ஆர்டரைப் படிக்கலையா?''

"இருக்கலாம். அதனால் உனக்கு என்ன?''

"சரியில்லை என்று தோன்றுகிறது!''

"அது உன்னுடைய காரியமில்லை!''

"என்னுடைய காரியம்தான்!''

"அதை வைத்துக் கொண்டே நடந்து திரி...''

"அப்படி நடந்து திரிய முடியாது என்றால்...?''

"பிறகு?''

"நீ இங்கே குடிக்கக் கூடாது!''

"அப்படியா?''

அவன் வேகமாக எழுந்தான். பற்களையும் உதட்டையும் கடித்துக் கொண்டே நின்றான்.

"ஹச்சா ஜி!''

சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் உரத்த குரலில் கத்தினான். அந்த கண்களில் நெருப்பு பரவுவதை நான் பார்த்தேன்.

"க்யா ஸமஸ்தே ஹோ சங்கர்?''

அவள் உள்ளங்கைகளை சேர்த்து வைத்து பிசைந்து கொண்டே நின்றான். நெற்றியில் சுருக்கங்கள் தெளிவாக தெரிந்தன. புருவங்கள் நடுங்கின. பற்களை நெரித்துக் கொள்வதற்கு மத்தியில் ஆவேசத்துடன் கூறினான்:

"யாத்ரக்! து மெ பீஸ் கர் இஸ் மிட்டீமெ மை மிலா ஸக்தாங்ஙம். க்யா கஹா தும்னெ?''

அவன் தரையில் செருப்பால் அழுத்தி மிதித்தான். என்னை அடித்து உதைத்தான். மிதித்து விடப் போவதைப்போல கையை விரித்து வைத்துக் கொண்டு முஷ்டியைச் சுருட்டிக் கொண்டு நின்றான். ஒருவேளை என்மீது எந்த நிமிடத்திலும் பாய்ந்து விழலாம்.

அது பரவாயில்லை. எனக்கு பலமான சந்தேகம் இருந்தது. எனினும் அது நல்லதல்ல. சிறிது நேரம் நினைத்து விட்டு திருப்பி அடித்தேன்.

"அன்மோலக், ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள். வீட்டை விட்டுக் கிளம்பி வரும்போது திரும்பி வருவேன் என்று நான் யாரிடமும் வாக்குறுதி அளிக்கவில்லை. என்னை எதிர்பார்த்து யாரும் இல்லை. நீ என்ன நினைக்கிறாய்?''

அப்போதைய என்னுடைய குணமும் நடந்து கொண்ட விதமும் எப்படி இருந்தனவோ? அன்மோலக் அதே இடத்தில் நின்று கொண்டு சிரித்து விட்டான்.

"வாரே தோஸ்த்... தும் இத்னா பேகெஸ் ஹோகயே ஹோ?''

அவன் முற்றிலும் தளர்ந்து போய் காணப்பட்டான். தொடர்ந்து ஒரு சொற்பொழிவு ஆற்றினான்! நமக்குள் என்னவெல்லாம் பேசிக் கொள்கிறோம். நீ என்னுடைய தோழன்! நீதான் என் தோழன்! வா... நாம் போகலாம். நான் போகிறேன். இதோ.. என்னிடம் முன்னூற்று நாற்பத்திரெண்டு ரூபாய் இருக்கிறது. இதை வைத்துக் கொள்.''

சட்டையின் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு கவரை எடுத்து அவன் என் மடியில் எறிந்தான்.


"நாம் இதையும் எடுத்துக் கொண்டு போவோம். குடித்து விட்டால், பிறகு... தனியாகப் படுத்திருக்க முடியாது. வா... எழுந்திரு!''

"நண்பரே! "

"என்ன?''

"நீங்க போங்க...''

"வரலையா?''

"இல்லை!''

"ஹச்சா?''

அவன் அழுத்தமாகச் சொன்னான்: "உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். பணம்தானே? இதோ... இந்த கவர் முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். பயமா? நான் உங்களுடன் இருக்கிறேன். தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய பிரச்சினையா? நமக்கு இடையே என்ன தனிப்பட்ட விஷயம் இருக்கிறது?''

இயல்பாகவும் உற்சாகத்துடனும் எதையோ பாடிக் கொண்டே அன்மோலக் ராம் திரும்பி வந்தபோது, நான் படுத்து விட்டிருந்தேன். "பேரக்"கை அடைந்த பிறகும், அவன் பாடலை நிறுத்தவில்லை.

"என்ன... இந்த அளவிற்கு குஷி?''

தாமோதரன் பிள்ளை கேட்பது காதில் விழுந்தது.

"ஓ... மேரா தோஸ்த்!''

அன்மோலக் ராமின் தொண்டை இடறியது.

"க்யா பதாவும்?''

"பதாவோ து ஸஹி.''

"ம்ஹா.... தோஸ்த்!''

அவன் பிள்ளையின் கட்டிலை நோக்கி நடந்தான். மிகவும் மெதுவான குரலில் அவன் பேசினான். எனினும், என்னால் இந்த அளவிற்கு யூகிக்க முடிந்தது.

அன்மோலக் ராம் விலைமாதர்கள் இருக்கும் தெருவிற்குச் சென்றிருக்கிறான். இடையில் மிலிட்டரி போலீஸ் பிடித்து விட்டது. "உன் நம்பர் என்ன குழந்தை?'' என்று ஒரு கேள்வி.

"என்ன நம்பர்?''

"உன் நம்பர் என்ன?''

"என் ஊரில் மனிதனுக்கு நம்பர் கிடையாதே! இங்கே இருக்குதா? இங்குள்ள மனிதர்களுக்கு எப்போதிருந்து நம்பர் போட ஆரம்பித்தார்கள்? என் ஊரில் கழுதைகளுக்கு நம்பர் இடுவார்கள்!''

"ஆனால், நீ பட்டாளத்தைச் சேர்ந்தவனாச்சே?''

"அரே வா!''

அவர்கள் பேந்தப் பேந்த விழித்தார்கள். அங்கிருந்து தட்டுத் தடுமாறி நேராக வீட்டிற்குச் சென்ற அவன் கூறிய விஷயங்கள் எனக்கு தெளிவாகக் கேட்கவில்லை. தேடிப் பிடித்து தொகை எவ்வளவு என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறான். இறுதியாக அறைக்குள் நுழைந்திருக்கிறான். ஆனால், அவனுடைய உடம்பு மிகவும் சோர்வடைந்து போய் இருந்திருக்கிறது. "இன்னொரு முறை வா" என்று அவள் கூறியிருக்கிறாள்.

தாமோதரன் பிள்ளை என்னவோ கேட்டிருக்க வேண்டும். நன்றாகவே ஏமாந்து விட்டோமோ என்ற நினைப்புடன் அன்மோலக் ராம் கூறுவதைக் கேட்டேன்.

"ஒவ்வொரு ஆசையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு குழந்தையின் தந்தையாக ஆக வேண்டும். பாபு! என்ன ஒரு இனிமையான வார்த்தை! அதற்குத் தகுதி இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் சென்றேன். எவ்வளவு

வருடங்களாகி விட்டன! இல்லை... நான் முற்றிலும் தகர்ந்து போய் இருக்கிறேன். விழுந்து கிடக்கும் நாற்றமெடுத்த சாக்கடையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு என்னுடைய உடல் தகர்ந்து போய் விட்டிருக்கிறது. இன்று எனக்கு அது தெளிவாகத் தெரிந்து விட்டது...''

இடைக்காலத்தில் என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சிறிய சிறிய சம்பவங்களைப் பற்றி எழுதிய இந்தக் குறிப்பு மிகவும் நீண்டு போய் விட்டது. எழுத வேண்டியதை தெளிவாக எழுதி விட்டேன் என்ற பெருமை இல்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், எனக்கு அந்த அளவிற்குப் புரியவில்லை. அதனால் முடிப்பதற்கு முயற்சிக்கிறேன்.

அன்மோலக் ராமின் கடந்த காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதை மட்டும் அவன் கூறவில்லை. சற்று கூறு என்று கேட்கவில்லை. ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து கதை கூறக்கூடிய ஆளல்ல. பிறகு எதற்குக் கேட்கப் போகிறேன்?

அவன் சிம்லாவிலிருந்து வந்தவன். மாவட்ட மருத்துவ அதிகாரியின் கம்பவுண்டராக இருந்திருக்கிறான். இதை மட்டும் எப்படியோ கூறியிருக்கிறான். மற்ற எதைப் பற்றியும் கேட்கவில்லை. கூறவில்லை.

அன்மோலக் ராம் வெறும் ஒரு விடுகதையாகவே இருந்தான். ஆனால், இடையில் விடுதலைக்கான உத்தரவு வந்தது. தேவைப்படுபவர்கள் போகலாம். விருப்பமிருந்தால், அலுவலகத்திற்குச் சென்று பெயரைத் தர வேண்டும்.

"பேரக்" முழுமையாக ஒளி குறைந்ததைப்போல ஆகிவிட்டது. எல்லாருடைய முகங்களும் வாடிவிட்டன. மனதிற்குள் கவலை உண்டானது.

"எங்கே செல்வது?''

"என் ஊரில் மூன்று வருடங்களாக மழை இல்லை.''

"நான் ஒரு வெற்றிலை, பாக்கு கடை ஆரம்பிக்கப் போகிறேன்.''

"போகாத குறைதான். சீக்கிரமா போ...''

"என் வீட்டில் பதினொரு கிண்ணங்கள் பரிமாற வேண்டும். சம்பாதிப்பது நான் மட்டுமே!''

"என் வீடு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது!''

"என்ன?''

"ராயலஸீமா என்று கேள்விப்பட்டதில்லையா?''

யாருக்கும் பட்டாளத்தை விட்டுப் பிரிந்து போகும் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால், அப்படிப்பட்ட ஒன்றைப்பற்றி இன்று வரை அவர்கள் நினைத்துப் பார்த்ததே இல்லை.

அன்மோலக் ராம் பெருமூச்சு விட்டுக் கொண்டே ஓடியவாறு கட்டிடத்திற்குள் வந்தான்.

"பாயிஸாப்!''

வந்தவுடன் பெட்டியின்மீது உட்கார்ந்து கொண்டு அவன் அழைத்தான். அவனுடைய முகத்தில் ஆர்வம், சந்தோஷம் ஆகியவற்றின் பொன் நிற நிழல் பரவி விட்டிருந்தது.

"அன்மோலக் ராம் போகப் போகிறான். அன்மோலக் ராம் போவான். ஒன்று, இரண்டு, மூன்று... ஐந்து நாட்கள். இல்லாவிட்டால் ஆறு. இந்த நெரித்துக் கொண்டிருக்கும் குகைக்குள் இருந்து அன்மோலக் எழுந்து குதிப்பான். அதற்குப் பிறகு...''

அவன் அமர்ந்து கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்க ஆரம்பித்தான். முகத்தின் வெளிப்பாடு பேசிக் கொண்டிருந்த விஷயத்திற்கேற்ப மாறிக் கொண்டிருந்தது. இடையில் பணத்தைப் பற்றிய கணக்குகளைப் போட்டான். பன்னிரண்டு வருடங்களுக்கு மூன்று, பன்னிரண்டை மூன்றால் பெருக்கினால் முப்பத்தாறு. பாரா குணா சத்தீஸ்... பிறகு இந்த வருடத்திற்கான விடுமுறை எடுக்கவில்லை. எங்கே போவது? யாரைப் பார்ப்பதற்கு?

அங்கு அவன் நிறுத்தினான். முகம் முழுவதும் நீல நிறமாக ஆகி விட்டதை நான் பார்த்தேன். பிறகு... கண்களில் உயிர் இல்லை. கண்மணிகள் உருண்டு உருண்டு மேல் நோக்கி ஏறிக் கொண்டிருந்தன. மூளைக்குள் நடக்கக் கூடிய ஏதோவொன்றைப் பார்ப்பதற்காக இருக்க வேண்டும்.

அப்போது அவனிடம் எதையும் பேசக் கூடாது.

நீண்ட நேரம் அமர்ந்திருந்து விட்டு, அவன் கேட்டான்: "காட்டைத் தேடிப் போகட்டுமா?''

"என்ன?''

"நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏதாவது காட்டிற்குச் சென்று வாழலாமா என்று நினைத்தேன்.''

நான் எதுவும் பேசவில்லை.

"ம்... என்ன ஒரு வாழ்க்கையாக இருக்கும்? பழங்கள், கிழங்குகள், அருவிகள்... சுதந்திரமான வாழ்க்கை... மரநிழலில் ஒரு குடிசை... பழங்கள், கிழங்குகள், அருவிகள்...

திடீரென்று அவன் எழுந்து நடந்து கொண்டே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்:


அன்று பகல் முழுவதும் அவனைப் பார்க்கவே முடியவில்லை. இரவு சாப்பிட்டு முடித்து கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். அன்மோலக் ராம் ஆடி ஆடி நடந்து கொண்டே உள்ளே வந்தான். கைகளை வீசியவாறு வந்தான். அந்த அளவிற்கு சந்தோஷத்துடன் இதற்கு முன்பு அவனைப் பார்த்ததில்லை. கிடைக்க வேண்டியது எதுவோ கிடைத்து விட்ட சிறு குழந்தையைப்போல அவன் வந்தான்.

"பாயிஸாப்!''

"என்ன?''

எனக்கு அறுநூறு ரூபாய் வரை கிடைக்கும்.''

"அப்படியா?''

"அறுநூறு ருபாய்...''

அவன் ஆச்சரியத்துடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். உள்ளங்கையை விரித்து முழங்காலில் வைத்தான். பிறகு பேசவில்லை. அமர்ந்து அமர்ந்து முகத்தின் இயல்பே மாறிவிட்டது. அது சமாதி நிலை. எதையும் பார்க்கவில்லை. கேட்கவில்லை.

அன்மோலக் ராம் விரைவிலேயே போகப் போகிறான். எனக்கு அவனைப் பற்றி எதுவுமே தெரியாது.

சுய உணர்வு வந்தபோது அவன் வழக்கம்போல தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தான்.

"பிறகு... பிறகு... நான் வளையல் வியாபாரம் ஆரம்பிப்பேன்... வளையல் வியாபாரம் ஆரம்பிப்பேன்!''

முணுமுணுப்பதற்கு மத்தியில் அவன் கண்களைத் திறந்தான். ஏதாவது காட்டைத் தேடிப் போக வேண்டும் என்று மதியத்திற்கு முன்னால் உறுதியான குரலில் கூறிய அன்மோலக்தான் அது.

சிறிது சிறிதாக அவன் கண்களை அகல விரித்தான். அந்தக் கண்கள் நிறைந்திருந்தன. அவனுடைய மெல்லிய உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.

"ஃபிர் மை ஜப் தக் இன்கா ஹாத் மேரா ஹாத்மே லே கர்...''

அவனுடைய வார்த்தைகளை அப்படியே கூறும்போது தவறாக வந்துவிடும். அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்குத் தெரியாதே!

அன்மோலக் ராம் கூறுகிறான்: வளையல் வியாபாரத்தை ஆரம்பிப்பான். பிறகு சிறு குழந்தைகளின் சதைப் பிடிப்பான கைகளைத் தன்னுடைய கையில் எடுத்து வருடி, வளையல் அணிவிப்பான். அவனுடைய கண்களில் இருந்து இரண்டு துளி வெப்பமான கண்ணீர் அந்தக் கையில் விழும். அப்போது கள்ளங்கபடமற்ற தன்மை ததும்பிக் கொண்டிருக்கும் விழிகளை உயர்த்தி அவர்கள் அவனைப் பார்ப்பார்கள். ஓ! அன்று வாழ்க்கை முழுமையானதாக ஆகும்.

அன்மோலக் ராம் அழுதுகொண்டிருந்தான். அவனுடைய மஞ்சள் நிறத்தைக் கொண்ட அகலமான கன்னங்கள் வழியாக அடர்த்தியான கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் தேம்பித் தேம்பி அழுதான்.

அதை எந்தச் சமயத்திலும் நினைத்ததில்லை. சற்று கேட்டுப் பார்க்கலாமா? இனி தன்னைப் பற்றிய தகவலைக் கூறுவானா?

"அன்மோலக்...?''

கண்ணீரில் பிரகாசித்துக் கொண்டிருந்த கண்கள் என் பக்கம் திரும்பின.

"என்ன அன்மோலக்?''

"பாயிஸாப்!''

தொண்டை தடுமாறியது.

"அன்மோலக்!''

"உங்களுக்குத் தெரியாது!''

"என்ன?''

"என்னால் கூறுவதற்கு முடியாது. நினைத்துப் பார்ப்பதற்கு சக்தி இல்லை. ஓ... என் நெஞ்சு வெடித்து விடும்போல இருக்கிறது. தெரிகிறதா? கிரு கிரா கிரு கிரா... என்று வெடிக்கிறது. நான் எப்படித் தாங்குவேன்?''

அப்போதும் அவன் அழுது கொண்டிருந்தான். தேம்பிக் கொண்டிருந்தான். ஏதாவது கூற வேண்டும். எதைக் கூறுவது?

அதே கண்ணீருடன் அன்மோலக் ராம் சொன்னான்: "மனிதன் எப்படித் தகர்ந்து போகிறான் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன். மனிதனைப் பற்றி நான் நினைத்திருந்த எல்லா கருத்துக்களும் சூறாவளிக் காற்றில் சருகுகள் பறப்பதைப்போல பறந்து போய் விட்டன.

இன்றுவரை என்னுடன் பழகக் கூடிய நண்பர்களிடம் எனக்கு வெறுப்புத்தான் இருக்கிறது. அதில் நியாயம் இருக்கிறது. வெறுப்பை அளிப்பது எதுவோ, அதைத்தான் அவர்கள் செய்வார்கள். நாற்றமெடுப்பது எதுவோ, அதைத்தான் கூறுவார்கள். அவர்களுக்கு முன்னால் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு இளம் பெண் நடந்து போய் விடக்கூடாது. அவர்கள் காதுகளில் விழுகிற மாதிரி மற்றவர்கள் தங்களின் இரத்த உறவுகளைப் பற்றி பேசக்கூடாது. இவர்கள்தான் என்னுடைய நண்பர்கள் என்று என் இளம் வயது நண்பர்களிடம் கூற முடியாது.

என்னைப் பற்றி என்னிடம் இருந்த கண்மூடித்தனமான மதிப்பைப் பற்றி நான் சற்று கவலைப்படுகிறேன். இன்னொரு வகையில் கூறுவதாக

இருந்தால் கவலை எதை அளிக்கிறது? என்னுடைய குருட்டுத்தனமான மதிப்பீட்டை இப்போதிருந்து அழிப்பதற்கு முயற்சிக்கட்டுமா?

மனிதன் மதிப்புடன் பிறந்தான். அந்த மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவனுக்கு முடியவில்லை. ஒன்று இல்லையென்றால் இன்னொன்று. பொருத்தமான காரணங்களை எப்படிப்பட்ட பிச்சைக்காரனின் வாழ்க்கையிலும் பார்க்க முடியும் என்பதை இப்போது நான் உறுதியுடன் நம்புகிறேன். அதனால் சுப்பையாவின் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ராயலஸீமாவைப் பற்றிய விஷயங்கள்... கிராமத்தை விட்டுச் சென்ற குடும்பம்... கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. தனராஜின் இளம் வயது கதைகளைக் கேட்கும்போது, அவரவர்கள் தங்களுடைய இளம் வயது காலத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்...

மிகையோ குறைவோ இருந்தாலும், அவர்கள் என்னை மாதிரிதான் பிறந்தார்கள். வளர்ந்தார்கள். அவர்கள் ஆசைகளை வளர்த்தார்கள். எங்களுடைய ஆசைகள் என்ன ஆயின என்று யாருக்காவது தெரியுமா? இல்லையா? வேண்டாம்... கூறட்டுமா? நாங்கள் இறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.''

எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- எழுத வேண்டியதை மறந்து விடுகிறேன்.

அன்மோலக் ராமிற்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகள் இருந்தார்கள்.

அன்பான மனைவி, பிரியமான குழந்தைகள்.

பனியும் குளிர் வெயிலும் நிறைந்த சிம்லாவில் அவன் குடும்பத்துடன் சந்தோஷத்துடன் இருந்தான். போதும் என்றே தோன்றாத இனிமையான நிமிடங்கள். அன்று அவனுக்கு வாழ்க்கை நிறைகுடமாக இருந்தது. இடையில் குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்தான். புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் அலமாரிக்கு மேலே சுவரில் ஆணி அடித்து புகைப்படத்தைத் தொங்கவிட வேண்டும். அவன் ஆணி, சுத்தியல் ஆகியவற்றுடன் அலமாரிக்கு மேலே ஏறி நின்று கொண்டிருக்கிறான்.

தாய் வராந்தாவில் இளைய குழந்தைக்கு பட்டு ஆடை தைத்துக் கொண்டிருக்கிறாள். குழந்தைகள் அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் சாலையில் இறங்கியதை தாய் பார்க்கவில்லை. இளைய குழந்தை சாலையின் மத்தியில் உட்கார்ந்து கொண்டு சிறிய கற்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

அப்போது தூரத்தில் காரின் ஹார்ன் சத்தம்!

மூத்த பெண் தங்கையைத் தூங்குவதற்காக சாலையின் ஒரு பகுதிக்கு வேகமாகச் செல்வதை இறுதியாகத் தாய் பார்த்தாள். பிறகு மின்னலைப் போல அங்கு வந்தது கருப்பு நிற கார்.

பயங்கரமான ஒரு கூச்சல் கேட்டது. அன்மோலக் அலமாரிக்கு மேலே இருந்து உடனடியாகத் திரும்பிப் பார்த்தான்.

என் குழந்தைகள்!

அவர்களைப் பிடிக்க வேண்டுமே என்ற ஆவலுடன் தாய் சாலையை நோக்கிப் பாய்ந்தாள்.

மின்னலைப் போல அவன் எல்லாவற்றையும் பார்த்தான்.

குழந்தைகள்.

அவர்களின் அன்னை.

அவர்களுக்கு இடையில் காரின் மின்னல் வெளிச்சம். வேறு எதுவுமே அவனுக்கு ஞாபகத்தில் இல்லை. சுய உணர்வு வந்தபோது மருத்துவமனையில் இருந்தான்.

என் குழந்தைகள்!

அடுத்த வார்டில் குழந்தைகளின் தாய் இருந்தாள். பார்க்க வேண்டுமா?

என் குழந்தைகள்!

கண்ணீருடன் அவன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். மூன்றாம் எண்ணைக் கொண்ட வீட்டின் திறந்துவிடப்பட்டிருந்த கதவு வழியாக வெளியே பாய்ந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் பட்டாடையின் மின்னல் ஒளி தெரிந்தது. அன்மோலக் சற்று தேம்பினான்.

"அவள் இருந்திருந்தால், இதோ பாருங்க! இந்த அளவிற்குப் பொன்னைப்போல இருந்திருப்பாள்! பாருங்க.. நான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பாபு! என்ன இனிமையான வார்த்தைகள்! எனக்கு உணர்ச்சி வசப்படத் தோன்றுகிறது. இனி யாரும் என்னை அழைக்க மாட்டார்கள். பாபு...''

பிறகு அவன் என் பக்கம் திரும்பவில்லை. குவார்ட்டர்ஸிலிருந்து சாயம் தேய்க்கப்பட்ட கண்ணாடிகளின் வழியாக வண்ணமயமான வெளிச்சம் தெரிந்தது.

ஒரு மனிதனை பாதத்திலிருந்து தலை வரை படித்து விட்டோம் என்ற தேவையற்ற தற்பெருமையுடன் இந்தக் குறிப்பை முடிக்கவில்லை. சுற்றிலும் இருக்கும் மனிதர்களை அவர்களுடைய சூழ்நிலைகளில் நின்று கொண்டு பார்க்க வேண்டும் என்பதை மட்டும் புரிந்து கொள்கிறேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.