Logo

கே.பாலசந்தர் என் ஜூனியர் - ஜெயகாந்தன்

Category: பொது
Published Date
Written by சுரா
Hits: 4876

மறக்க முடியுமா?சுரா (Sura)

கே.பாலசந்தர் என் ஜூனியர் - ஜெயகாந்தன்

மிழ் இலக்கியத்தின் தலைமகன் ஜெயகாந்தன் நம்மிடமிருந்து பிரிந்து சென்று விட்டார். நான் என்னுடைய பள்ளிப் பருவ நாட்களிலிருந்து கேட்டுக் கேட்டு, மனதிற்குள் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த சிங்கத்தின் குரல் அடங்கி விட்டது. என்னுடைய இளம் வயதிலிருந்து வணக்கத்திற்குரிய கதாநாயகனாக நான் ஏற்றுக் கொண்டிருந்த கம்பீர உருவம் இந்த மண்ணை விட்டு இறுதி விடை பெற்றுச் செல்கிறது. எனக்குள் இலக்கிய வேட்கையை உண்டாக்கிய ஒரு மாபெரும் மனிதர் தன்னுடைய இறுதி மூச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, வேறொரு கண்ணுக்குத் தெரியாத உலகிற்கு நிரந்தரமாக பயணமாகி விட்டார்.

என் ஆருயிர் நண்பர் இளையபாரதிதான் ஜெயகாந்தனின் மரணச் செய்தியை எனக்கு முதலில் தெரிவித்தவர். என்னைப் போலவே ஜெயகாந்தன் என்ற அந்த இலக்கியச் சிற்பியின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, கவலைக் கடலில் மூழ்கி, கண்ணீருடன் உலகமெங்கும் கோடிக் கணக்கான தமிழ் நெஞ்சங்கள் உறைந்து போய் நின்று கொண்டிருக்கும் இந்த அவல வேளையில் என் மனக் குதிரையை பின்னோக்கி பயணிக்கச் செய்கிறேன். என்னுடைய கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறேன். எனக்குள் இலக்கிய ரசனையை உண்டாக்கி, அதை மேம்படுத்தி முன்னோக்கி நகரச் செய்த அந்த எழுத்து வேந்தரை இரு கரம் கூப்பி வணங்கி நன்றி தெரிவித்தவாறு, கடந்து சென்ற பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறேன்.

நினைக்க நினைக்க மனதில் பெருமிதமும், உற்சாகமும், கவலையும், கண்ணீரும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக தோன்றி மர்ம நடனம் ஆடிக் கொண்டிருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எனக்குள் ஒரு எழுத்தாளனின் பெயர் ஆணி அடித்ததைப் போல உறுதியாக நிலைத்து நின்றது என்றால், அது ஜெயகாந்தனின் பெயர்தான். நான் அவர் மீது காந்தமென ஈர்க்கப்பட்டதற்கு அந்தப் பெயர் கூட ஒரு காரணமாக இருக்க வேண்டும். 'ஜெயகாந்தன்' என்ற பெயரை வாயால் உச்சரிக்கும்போதே இனம் புரியாத ஒரு கம்பீரம் தானாகவே வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்வதைப் போல என்னால் உணர முடிந்தது.

என்னுடைய பத்து வயதிலிருந்தே நான் ஜெயகாந்தனின் படைப்புகளைப் படிக்க ஆரம்பித்து விட்டேன். நான் முதன் முதலில் படித்த அவருடைய நாவல் 'யாருக்காக அழுதான்?' அதை படிக்க ஆரம்பித்து, ஒரு நிமிடம் கூட கீழே வைக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முழுமையாக ஒன்றிப் போய் நான் நூலுடன் இரண்டற கலந்து விட்டேன் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். அதன் கதாநாயகனான ஜோசப் என் மனதில் ஆழமாக நுழைந்து விட்டான். அவனுடைய சிரிப்பு, அழுகை, மவுனம் ஒவ்வொன்றிலும் நான் என்னையே இழந்தேன். 'இப்படியொரு அருமையான நாவலை ஒருவரால் எழுத முடியுமா?' என்று ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று, ஜெயகாந்தன் என்ற அந்த படைப்பாளியை நான் வானத்திற்கு நிகராக வைத்து அண்ணாந்து பார்த்தேன். ஜோசப்பைப் போன்ற மனிதர்களைத்தான் நாம் தினமும் பல இடங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! வாழ்க்கையில் அன்றாடம் நாம் காணும் ஒரு கதாபாத்திரத்தை இந்த அளவிற்கு இரத்தமும் சதையுமாக ஒரு எழுத்தாளரால் உலாவ விட முடியுமா என்ற வியப்புடன் நான் ஜெயகாந்தனைப் பார்த்தேன். அந்த நாவலை வாசித்த கணத்திலேயே நான் ஜெயகாந்தனின் தீவிர வாசகனாகவும், பரம ரசிகனாகவும் ஆகி விட்டேன்.

அதற்குப் பிறகு அவருடைய 'வாழ்க்கை அழைக்கிறது' என்ற முதல் நாவலைப் படித்தேன். அதில் இடம் பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதை திரும்பத் திரும்ப பத்து தடவைகளாவது நான் படித்திருப்பேன். முதல் நாவலையே இந்த அளவிற்கு யதார்த்தமாக படைக்க முடியுமா என்று அப்போது நான் நினைத்திருக்கிறேன்.

ஜெயகாந்தனின் எழுத்தாற்றலை உலகமெங்கும் பரவச் செய்து, அவரை தலையில் வைத்து கொண்டாட வைத்த அவருடைய படைப்புகள் 'பாரிஸுக்குப் போ', 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' என்ற இரண்டும். தீவிர இலக்கியவாதிகளாலும், விமர்சகர்களாலும், இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்களாலும் இந்த இரண்டு நாவல்களும் உயரத்தில் வைத்து இன்று வரை நினைக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம்- ஜெயகாந்தனின் அபார எழுத்துத் திறமையும், அவர் படைத்த மாறுபட்ட கதாபாத்திரங்களும்தான்.

அவர் எழுதிய 'கை விலங்கு' என்ற புதினத்தை ஐந்து தடவைகளாவது நான் மீண்டும் மீண்டும் வாசித்திருப்பேன். அந்தக் கதையில் கள்ளு இறக்குபவராக வரும் சாமுண்டி என்ற முரட்டு மனிதன் இப்போது கூட என் உள்ளத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். சிறைக் கைதியாக இருக்கும் ஒரு இளைஞனை மனிதாபிமான அடிப்படையில் சிறையில் அதிகாரியாக இருக்கும் ஒரு மனிதர் ஒரு இரவு வேளையில் தன் பொறுப்பில் வெளியே அனுப்பி வைப்பது என்பதும், வெளியே சென்ற இளைஞன் ஊரிலிருக்கும் தன் அன்னையைப் பார்த்து விட்டு, உரிய நேரத்திற்கு திரும்பி வருகிறான் என்பதும்... அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டிராத விஷயங்கள். ஜெயகாந்தனால் மட்டுமே இப்படிப்பட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களைப் படைக்க முடியும்.

அதே கதையை நடிகர் எஸ்.வி.சுப்பையா 'காவல் தெய்வம்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்தார். கே.விஜயன் இயக்கிய அந்தப் படத்தில் சிவகுமார், லட்சுமி, அசோகன், எஸ்.வி.சுப்பையா ஆகியோர் நடித்தார்கள். 'மரமேறி' சாமுண்டியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்தார். தூக்குத் தண்டனை கைதியாக நடித்து, படம் பார்ப்போர் அனைவரையும் கண்ணீர் விட்டு அழ வைத்தார். சிவாஜி கணேசனுக்காக ஜெயகாந்தன் 'இருப்பதும் போறதும் இயற்கை' என்றொரு பாடலை எழுதினார். டி.எம்.சவுந்தர்ராஜன் தன்னுடைய அபாரமான பாடும் திறனால் அதன் ஒவ்வொரு வரிக்கும் உயிரூட்டினார். மதுரையில் நான் அந்தப் படத்தை 37 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். அதன் ஒவ்வொரு காட்சியும் இப்போது கூட எனக்குள் ஒன்று விடாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது.


ஜெயகாந்தனே எழுதி, இயக்கிய படம் 'உன்னைப் போல் ஒருவன்' மத்திய அரசாங்கத்தின் விருது பெற்ற படமது. தமிழ் திரையுலகிற்கு கருப்பு - வெள்ளை பட காலத்திலேயே எப்படிப்பட்ட ஒரு பெருமையை ஜெயகாந்தன் வாங்கித் தந்திருக்கிறார்!

அவர் எழுதிய 'சினிமாவுக்குப் போன சித்தாளு' யாருமே தொடுவதற்கு அஞ்சக் கூடிய கதை. எம்.ஜி.ஆரை மனதில் வைத்து அந்த நாவலை ஜெயகாந்தன் எழுதியிருந்தார். கட்டிய கணவன் அருகில் இருக்க, ஒப்பனை பூசி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சினிமா நடிகரை கனவு நாயகனாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ரிக்‌ஷாக்காரனின் மனைவியை தமிழ் மக்களுக்கு முன்னால் உயிர்ப்புடன் உலாவ விட்டார் ஜெயகாந்தன்.

'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' திரைப்படங்களாக வந்தன. மாறுபட்ட முயற்சிகள் என்று அனைவரும் பாராட்டினர். நானும் அந்தப் படங்களை அப்போது பார்த்தேன். வெறும் பொழுது போக்கிற்காகவும், பணம் சம்பாதிக்கவும் படமெடுத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட படங்கள் உருவாகுவதற்கு அச்சாணியாக இருந்த ஜெயகாந்தனின் எழுத்தாற்றலையும் கதாபாத்திரங்களையும் மனதிற்குள் பெருமையாக நினைத்துப் பார்த்தேன்.

அவர் எழுதிய 'கருணையினால் அல்ல' புதினம் 'கருணை உள்ளம்' என்ற பெயரில் திரைப்படமாக வந்தது. அதுவும் ஒரு நல்ல படமே.

தமிழ்மணி நடத்திய 'நயனதாரா'வில் மாத நாவலாக வந்த ஜெயகாந்தனின் 'கரு' நாவல், 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' என்ற பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. நடிகை ஶ்ரீப்ரியா நடித்தார். ஜெயகாந்தனின் 'புது செருப்பு கடிக்கும்' அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

ஊருக்கு நூறு பேர், எங்கெங்கு காணினும், மூங்கில் காட்டு நிலா, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, ஒரே கூரைக்குக் கீழே, மனவெளி மனிதர்கள் - ஜெயகாந்தனின் இந்த ஒவ்வொரு நாவலிலும் அவருடைய முற்போக்கு சிந்தனைகளை மிகவும் பலமாக நம்மால் உணர முடிந்தது.

நாவல்களில் மட்டுமல்ல - சிறுகதைகளைப் படைப்பதிலும் அவர் அரசராகவே இருந்தார். அதனால்தான் அந்தக் காலத்தில் அவரை 'சிறுகதை மன்னன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சிலுவை, அந்தரங்கம் புனிதமானது, சாளரம், போர்வை, நிக்கி, குரு பீடம், பிரம்மோபதேசம், அக்னி பிரவேசம், தவறுகள் குற்றங்கள் அல்ல, நான் இன்னா செய்யட்டும் சொல்லுங்கோ, இருளைத் தேடி, ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டியில் என்று அவர் எழுதிய சிறுகதைகளை நான் வாசித்து எவ்வளவோ வருடங்கள் கடந்தோடி விட்டன. இப்போதும் அவை ஒவ்வொன்றும் புதிதாக படித்தவை போன்றே மனதில் தோன்றுவதற்குக் காரணம் - ஜெயகாந்தனின் அந்த அபார எழுத்தாற்றலும், அவர் படைத்த மாறுபட்ட உலகங்களும், இதற்கு முன்பு நாம் பார்த்திராத கதைக் களங்களும், இயல்பான கதாபாத்திரங்களும்தான்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்படி என்னுடைய ஆதர்ஷ கதாநாயகனாக என் மனதிற்குள் தன்னுடைய நினைத்துப் பார்க்க முடியாத அபார திறமையால் நுழைந்தாரோ, அதே மாதிரி ஜெயகாந்தனும் எனக்குள் நுழைந்து மிடுக்காக சிம்மாசனம் போட்டு என் பள்ளிக் கூட நாட்களிலேயே உட்கார்ந்து விட்டார். இன்று வரை அவருக்குத்தான் என் மனதிற்குள் முதல் இடம். அதற்குப் பிறகுதான் மற்ற எழுத்தாளர்கள்... அதுதான் உண்மை.

நான் மதுரை ஜெயராஜ் நாடார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அனேகமாக எட்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன். அருகில் இருந்த வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிக்கு ஜெயகாந்தன் வந்திருக்கிறார் என்றொரு தகவல் கிடைத்தது. அப்போது எனக்கு 13 வயது. கம்பி வேலியைத் தாண்டி, யாருக்கும் தெரியாமல் சென்று நான் அந்தக் கல்லூரிக்கு வந்திருந்த ஜெயகாந்தனைப் பார்த்தேன். ஜெயகாந்தனுக்கு அப்போது வாலிப வயது. தலைமுடியை ஸ்டைலாக சிலுப்பியவாறு மேடையில் சிங்கமென கர்ஜித்துக் கொண்டிருந்தார் ஜெயகாந்தன். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழி வார்த்தைகளையும் அருமையான உச்சரிப்புடனும் அழுத்தத்துடனும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஜெயகாந்தன் அப்போதே என் மனதில் கூடு கட்டி வாழ ஆரம்பித்து விட்டார். 'ஒரு எழுத்தாளன் என்றால் இப்படித்தான் ஆண்மைத் தனத்துடன், கம்பீரமாக, சிங்கத்தைப் போலும் இருக்க வேண்டும்' என்று அந்த நிமிடத்திலிருந்தே நான் மனதில் தெளிவாக தீர்மானித்து விட்டேன்.

அதற்குப் பிறகு மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஜெயகாந்தனை நான் மிகவும் அருகிலிருந்து பார்த்தேன். என் நெருங்கிய நண்பரும், கவிஞருமான பரிணாமன் என்னை அழைத்திருந்தார். அங்கு வந்திருந்த ஒவ்வொருவரின் கேள்விக்கும் நகைச்சுவையுடனும், நேரடியாகவும், துணிச்சலுடனும் பதில்கள் கூறிய ஜெயகாந்தனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யாரோ ஒருவர் 'இயக்குநர் கே.பாலசந்தரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த கேள்வியை நீங்கள் பாலசந்தரிடம் போய் கேளுங்கள்- 'நீங்கள் ஜெயகாந்தனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று அவரைக் கேளுங்கள். பாலசந்தர் ஈஸ் மை ஜூனியர்' என்றார் ஜெயகாந்தன்- மிடுக்கான குரலில். அதுதான் ஜெயகாந்தன்!

அது நடந்து சில மாதங்களில் நான் சென்னைக்கு வந்து விட்டேன். ஜெயகாந்தன் கலந்து கொண்டு பேசிய எவ்வளவோ கூட்டங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் - ஜெயகாந்தனைப் பார்ப்பதற்காகவும், அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவும்தான் நான் செல்வதே, பார்வையாளர்களுக்கு மத்தியில் அமைதியாக உட்கார்ந்து அவரையே வைத்த கண் எடுக்காது நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.


வருடங்கள் கடந்தோடிக் கொண்டிருந்தன.

ஜெயகாந்தனின் உடல் நலம் பலமாக பாதிக்கப்பட்டது. பல நாட்கள் மருத்துவமனையில் இருந்து, திரும்பி வந்தார். அதற்குப் பிறகு நண்பர் இளையபாரதி 'இயல் இசை நாடக மன்றம்' சார்பில் வாணி மஹாலில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவின் சிறப்பு அழைப்பாளரே ஜெயகாந்தன்தான். அவர் பேசுவதைக் கேட்பதற்காக பலரும் வந்திருந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அமர்ந்து கொண்டே ஜெயகாந்தன் பேசலாம் என்றார்கள். ஐந்து நிமிடம்தான் பேசியிருப்பார். அதற்கு மேல் பேச்சு வரவில்லை. அவரே முடித்துக் கொண்டார். 'இப்படி உட்கார்ந்து பேசி எனக்கு பழக்கமில்லை. நின்று பேசித்தான் பழக்கம். அதனால், இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்' என்று கூறி விட்டார் ஜெயகாந்தன். அத்துடன் கூட்டமும் முடிந்து விட்டது. ஒரு மணி நேரம் கூட எந்தவித தடங்கலும் இல்லாமல், ஆற்றொழுக்கு போல தமிழ் மழை பொழியும் ஜெயகாந்தனைப் பல கூட்டங்களிலும் பார்த்த எனக்கு இப்போதைய ஜெயகாந்தனைப் பார்த்தபோது, கண்களில் நீர் நிறைந்து விட்டது.

'நக்கீரன்' கோபால் அண்ணன், ஜெயகாந்தன் 75 வயதை அடைந்ததையொட்டி ஒரு விழாவை உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் நடத்தினார். அப்போது ஒரு மலர் வெளியிடப்பட, அதில் நான் ஜெயகாந்தனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். என் மனதில் நான் ஜெயகாந்தன் மீது வைத்திருந்த அன்பு, ஈடுபாடு அத்தனையையும் அந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தினேன்.

அது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு எழுத்தாளர் ஜெகாதா, என் ஆருயிர் நண்பர் மா.முருகன் இருவரும் ஜெயகாந்தனின் இல்லத்திற்குச் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்களுக்கு அவரை மிகவும் நன்றாகவே தெரியும். அவருக்கும். எனக்கு மட்டும்தான் ஜெயகாந்தன் நேரடியாக பழக்கமில்லை. நண்பர்கள் இருவரும் என்னை ஜெயகாந்தனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். 'நீங்கள் மொழி பெயர்த்த பல படைப்புகளை நான் படித்திருக்கிறேன்' என்றார் ஜே.கே. நான் சந்தோஷ மழையில் நனைந்து மூழ்கி விட்டேன். என் எழுத்துக்களை ஜெயகாந்தன் படித்திருக்கிறாரா? இதற்கு மேல் எனக்கு வேறு என்ன பெருமை வேண்டும்?

எனக்கு எதிரில் அமர்ந்திருந்த ஜெயகாந்தனின் காலைத் தொட்டு நான் வணங்கினேன். தொடர்ந்து 'யாருக்காக அழுதான்?' காலத்திலிருந்து ஜெயகாந்தனை நேசிக்க ஆரம்பித்தது, உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது அவருடைய பேச்சைக் கேட்பதற்காக வேலியைத் தாண்டி வந்தது, சிங்கமென தலை முடியைச் சிலுப்பியவாறு அவர் கம்பீர குரலில் பேசியது, தொடர்ந்து அவருடைய பல கூட்டங்களுக்கும் பார்வையாளனாக வந்து அவரை விடாமல் பார்த்தது... ரசித்தது, இறுதியாக பார்த்த கூட்டத்தில் அவருடைய உடல் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டது - இப்படி ஒவ்வொன்றையும் மிகுந்த ஈடுபாட்டுடன், என்னையே மறந்த நிலையில் நான் ஜெயகாந்தனிடம் கூறினேன். சுமார் அரை மணி நேரம் நான் பேசியிருப்பேன். சொல்லப் போனால் - நான் மட்டுமே பேசினேன். நண்பர்கள் இருவரும் அமைதியாக இருந்தார்கள். ஜெயகாந்தன் நான் பேசுவதை மலர்ந்த முகத்துடனும், புன்னகைக்கும் உதட்டுடனும் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். நான் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதை அவரின் முக வெளிப்பாட்டிலிருந்தே நான் தெரிந்து கொண்டேன். மாடியிலிருந்த அறையில் காமராஜருடன் மெத்தையில் தான் சாய்ந்து அமர்ந்திருந்த கருப்பு - வெள்ளை புகைப் படத்தை எடுத்து ஜெயகாந்தன் என்னிடம் காட்டினார். 'காமராஜருக்கு அருகில் இப்படி 'ஹாய்' ஆக உங்களால் மட்டுமே உட்கார முடியும்' என்றேன் நான் ஜெயகாந்தனிடம்- புன்னகைத்துக் கொண்டே. அதற்கு பதிலாக ஜெயகாந்தனும் என்னைப் புன்னகையுடன் பார்த்தார்.

அதற்குப் பிறகு ஜெயகாந்தனை நான் பார்க்கவில்லை. இடையில் சில வாய்ப்புகள் வந்தும், நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உடல் நலமற்ற நிலையில், அவருக்கு தொந்தரவாக இருக்க வேண்டாம் என்று நினைத்தது கூட காரணமாக இருக்கலாம்.

ஜெயகாந்தன் மரணத்தைத் தழுவி விட்டார். இந்த பூமியிலிருந்து விடை பெற்றுக் கொண்டார். எனினும், தன்னுடைய சாகா வரம் பெற்ற உயர்ந்த படைப்புகளின் மூலம் அவர் காலத்தைத் தாண்டி வாழ்ந்து கொண்டே இருப்பார். இந்த பிறவியில் அவர் சாதிக்க வேண்டியவை அனைத்தையும் என்றோ சாதித்து முடித்து விட்டார். இலக்கியத்தின் மீதும் எழுத்துக்களின் மீதும் ஆர்வமும், ஈடுபாடும், வெறியும் உள்ள ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஜெயகாந்தனின் குரல் எப்போதும் இடை விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.