Logo

எம்.ஜி.ஆர். உயரத்தில் பறக்கும் பறவை -சிவாஜி கணேசன்

Category: பொது
Published Date
Written by சுரா
Hits: 2958

மறக்க முடியுமா?சுரா (Sura)

எம்.ஜி.ஆர்.  உயரத்தில் பறக்கும் பறவை -சிவாஜி கணேசன்

க்டோபர்-1. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த புனித நாள். அவரைப் பற்றி நினைக்கும்போது சில விஷயங்கள் ஞாபகத்தில் வந்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

1) எம். ஜி. ஆர். மறைந்த பிறகு, 'மக்கள் குரல்' மாலை நாளிதழ் நடிகர் திலகத்தை நேர் காணல் செய்தது. முழுக்க, முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள். அவற்றில் ஒரு கேள்வி இது:

'எம். ஜி. ஆர், நீங்கள் இருவரும் திரையுலகம், அரசியல் களம் இரண்டிலுமே இருந்திருக்கிறீர்கள். அரசியலில் எம். ஜி. ஆர். மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகவே ஆகி விட்டார். உங்களால் சட்டமன்ற உறுப்பினராகக் கூட வர முடியவில்லை. அதற்கான காரணம் என்ன?'

அதற்கு சிவாஜி கூறிய பதில்:

'பறவைகளில் பல வகை இருக்கின்றன. சில பறவைகள் மிகவும் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும். சில பறவைகள் அதற்கு மிகவும் கீழே நடுத்தரமாக பறந்து கொண்டிருக்கும். சில பறவைகள் தரைக்கு மேலே சிறிது தூரத்தில் பறந்து கொண்டிருக்கும். எம். ஜி. ஆர். மிகவும் உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவை. கடவுள் அவருக்கு அந்த ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். நான் தரையிலிருந்து மிகவும் குறைந்த தூரத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவை. கடவுள் எனக்கு கொடுத்திருக்கும் பறக்கும் சக்தியே அவ்வளவுதான். தேட் ஈஸ் மை லிமிட். '

2)சென்னை கமலா திரையரங்கத்தின் உரிமையாளர் திரு. சிதம்பரம் அவர்களுடன் பல விஷயங்களைப் பற்றியும்  உரையாடியிருக்கிறேன். அவர் இப்போது உயிருடன் இல்லை. சிவாஜிக்கு மிகவும் நெருக்கமான நண்பர் அவர். அவர் கூறிய தகவல் இது.

சிதம்பரம் சிவாஜியிடம் 'எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'என்று கேட்டிருக்கிறார். அதற்கு சிவாஜி கூறிய பதில்:'நான் நடிப்பில் எனக்கென்று ஒரு பாணி வைத்திருக்கிறேன். அதை நான் வெளிப்படுத்துகிறேன். எம். ஜி. ஆர். நடிப்பில் அவருக்கென ஒரு பாணி வைத்திருக்கிறார். அதை அவர் வெளிப்படுத்துகிறார். அவரும் ஒரு மிகச் சிறந்த நடிகரே. '

3)இயக்குநர் மகேந்திரன் முக்தா சீனிவாசன் இயக்கிய 'நிறைகுடம்' என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதினார். படத்தின் கதாநாயகன் நடிகர் திலகம். முதல் நாள் படப்பிடிப்பு நடைபெறும்போது, மகேந்திரனை முக்தா சீனிவாசன் சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதற்கு சிவாஜி 'ஓ. . . நீங்கள்தான் கதாசிரியரா?நிறைய புத்தகங்களைப் படியுங்கள்'என்றிருக்கிறார். இதை இயக்குநர் மகேந்திரன் என்னிடம் கூறியபோது, நான் மிகவும் சந்தோஷப் பட்டேன். 'சார். . . சிவாஜி ஒரே வரியில் எவ்வளவு பெரிய உண்மையைக்  கூறியிருக்கிறார்!'என்றேன் நான். தொடர்ந்து மகேந்திரன் அவர்களிடம் 'சிவாஜியின் பல படங்களுக்கு நீங்கள் கதை, வசனம் எழுதியிருக்கிறீர்கள். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவே இல்லையா?'என்று நான் கேட்டேன். அதற்கு மகேந்திரன் கூறினார்:'ஆரம்பத்தில் அப்படியொரு எண்ணம் எனக்கு தோன்றவே இல்லை. ஆனால், 'முதல் மரியாதை' படத்தைப் பார்த்தபோது எனக்கு தோன்றியது. 'அடடா. . . எப்படிப்பட்ட ஒரு அருமையான நடிகரை நாம் இயக்காமல் மிஸ் பண்ணி விட்டோம் என்று நினைத்தேன். அதற்காக நான் உண்மையிலேயே மிகவும் வருத்தப்பட்டேன். '

இப்போது மணி இரவு இரண்டரையைத் தாண்டி விட்டது. நான் எப்போதுமே நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகன். அந்த நடிப்பு மாமேதை பற்றிய இனிய நினைவுகளுடன் துயிலச் செல்கிறேன். 

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.