Logo

வார் ஹார்ஸ்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4118
War Horse

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

வார் ஹார்ஸ் - War Horse

(அமெரிக்க திரைப்படம்)

2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் - 'War Horse.' போர் பின்னணியைக் கொண்ட, அதே சமயம்- கவித்துவத் தன்மை நிறைந்த ஒரு அருமையான படமிது.

உலக புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரான Steven Spielberg இயக்கி, உலகமெங்கும் உள்ள பட ரசிகர்களாலும், பத்திரிகையாளர்களாலும், விமர்சகர்களாலும் இன்று வரை இப்படம் பாராட்டப்பட்டுக் கொண்டு இருப்பதிலிருந்தே, இப்படத்தின் சிறப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.

1982ஆம் ஆண்டில் 'War Horse' என்ற பெயரில் Michael Morpurgo எழுதிய நாவலே, படத்திற்கான அடிப்படை.

படத்தின் திரைக்கதையை Lee Hall, Richard Curtis இருவரும் சேர்ந்து எழுதினார்கள்.

Kathleen Kennedyயுடன் இணைந்து இப்படத்தை Steven Spielberg தயாரித்தார்.

ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இப்படம் 146 நிமிடங்கள் ஓடிக் கூடியது.

ஆறு அகாடெமி (ஆஸ்கார்) விருதுகளுக்காகவும், இரண்டு Golden Globe விருதுகளுக்காகவும், ஐந்து Bafta விருதுகளுக்காகவும் இப்படம் எல்லோராலும் சிபாரிசு செய்யப்பட்டது.

பரபரப்பாக பேசப்பட்ட 'War Horse' படத்தின் கதை என்ன?

இதோ...

1912ஆம் ஆண்டு. Albert என்ற சிறுவன் ஒரு குதிரையின் பிரசவத்தைப் பார்க்கிறான். தன் தாயின் மடியிலிருந்து வெளியே வந்த அழகான குதிரைக் குட்டியையே அவன் ஆசையுடன் பார்க்கிறான். அந்த குதிரைக் குட்டி படிப்படியாக வளர்ந்து, துள்ளித் துள்ளி ஓடிக் கொண்டிருப்பதையும், தன் தாயுடன் சேர்ந்து வயல் வெளிகளில் ஓசை உண்டாக்கி வேகமாக பாய்ந்து கொண்டிருப்பதையும் அவன் பார்க்கிறான்.. அதே பகுதியில் ஆல்பெர்ட்டும், அவனுடைய தந்தை Tedம், தாய் Roseம் சேர்ந்து வசிக்கிறார்கள்.

ஒரு நாள் ஒரு இடத்தில் படிப்படியாக வளர்ந்த அந்த குதிரை ஏலத்தில் விடப்படுகிறது. நிலத்தை உழுவதற்கு ஒரு குதிரை தேவை என நினைக்கும் ஆல்பெர்ட்டின் தந்தை டெட், ஏலம் நடக்கும் இடத்திற்குச் செல்கிறார். பலரும் அதை ஏலத்தில் எடுப்பதற்காக கேட்கின்றனர். நல்ல ஒரு தொகைக்கு அந்த இளம் குதிரையை ஏலத்தில் எடுத்து, வீட்டிற்குக் கொண்டு வருகிறார் டெட்.

மிகப் பெரிய விலைக்கு குதிரையை ஏலத்தில் எடுத்ததால், பண்ணை வீட்டின் உரிமையாளருக்கு கட்டப்பட வேண்டிய குத்தகைப் பணத்தை அவரால் கட்ட முடியாமல் போய் விடுகிறது. அதனால் கோபமடைந்த அந்த மனிதர் 'இளவேனிற் காலத்திற்குள் குத்தகைப் பணத்தை கட்டவில்லையென்றால், வீட்டையும், நிலத்தையும் நானே எடுத்துக் கொண்டு, உங்கள் அனைவரையும் வெளியே விரட்டி விடுவேன்' என்று கூறுகிறார். அந்த குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் பணத்தை கட்டி விடுவதாக கூறுகிறார் டெட். கற்களும், பாறைகளும் நிறைந்த அந்த நிலத்தை உழுது, அதில் முள்ளங்கி விளைவித்து, எப்படியாவது பணத்தைக் கட்டி விடலாம் என்ற நினைப்பு அவருக்கு.

தான் மனதில் அளவற்ற அன்பு வைத்து நேசித்த குதிரையை தன் தந்தை ஏலத்தில் எடுத்து வீட்டிற்குக் கொண்டு வந்தது குறித்து ஆல்பெர்ட்டுக்கு மிகவும் மகிழ்ச்சி. அவன் அதற்கு Joey என்று பெயரிட்டான். அதனுடனே எப்போதும் அவன் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டான். அதற்கு பல பயிற்சிகளையும் அவன் தந்தான். அவன் ஏதோ ஒரு இடத்தில் நின்று கொண்டு 'வா' என்று கூறுவான். உடனே அந்த இளம் குதிரை தாவித் தாவி ஓடி வந்து, அவனுக்கு முன்னால் நிற்கும். அவன் தன் இரு கைகளையும் குவித்து வைத்துக் கொண்டு, ஆந்தை கத்துவதைப் போல, ஓசை எழுப்புவான். அதைக் கேட்டு அவனை நோக்கி வேகமாக பாய்ந்து வரும் ஜோய். ஆல்பெர்ட்டின் மிகவும் நெருங்கிய நண்பனான Andrew, அந்தக் காட்சிகள் அனைத்தையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பான்.

டெட் முன்பு ராணுவத்தில் இருந்தவர். அவர் எப்போதும் தன் கையில் வைத்திருக்கும் ஃப்ளாஸ்க்கிலிருந்து மதுவை ஊற்றி பருகிக் கொண்டே இருப்பார். Second Boer War தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற்றபோது, அதில் அவர் ஈடுபட்டு, பல பதக்கங்களையும் வாங்கியிருக்கிறார். அவற்றையெல்லாம் ரோஸ், தன் மகன் ஆல்பெர்ட்டிடம் ஆர்வத்துடன் காட்டுகிறாள். போரின்போது நெருப்பு விபத்து ஏற்பட்டு, மிகுந்த காயத்திற்கு உள்ளாகிறார் டெட். அதற்காக அவருக்கு ஒரு சிறப்பு விருது தரப்படுகிறது. அப்போது தரப்பட்ட ஒரு முத்திரை பதிக்கப்பட்ட கொடியை ரோஸ், தன் மகனிடம் கொடுக்கிறாள். போரில் தான் செய்த சாகசங்கள் குறித்த பெருமை அவனுடைய தந்தைக்கு இப்போது இல்லை என்றும், போர் தந்த வெறுப்பில் கொடிகளையும், தான் பெற்ற பதக்கங்களையும் அவர் வீசி எறிந்து விட்டார் என்றும் தான் அவற்றை எடுத்து இதுவரை பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகவும் அவள் கூறுகிறாள்.

ஆல்பெர்ட் குதிரை ஜோய்யை நிலத்தை உழுவதற்கு பயிற்சி தருகிறான். பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு, அந்த கட்டாந்தரையை அது மிகவும் அருமையாக உழுகிறது. அதில் முள்ளங்கியை விளைய வைக்கிறார்கள். இதற்கிடையில், ஒரு பலத்த மழை பெய்கிறது. அது வளர்ந்து நின்றிருந்த பயிர்களை முழுமையாக அழித்து விடுகிறது. அதனால் தான் தர வேண்டிய குத்தகை பணத்திற்காக, ஆல்பெர்ட்டிற்கே தெரியாமல் டெட், குதிரை ஜோய்யை குதிரைப் படையைச் சேர்ந்த Captain James Nichollsக்கு விற்று விடுகிறார்.

முதல் உலகப் போர் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அந்த குதிரை வியாபாரம் நடக்கிறது. விஷயத்தைத் தெரிந்து கொண்ட ஆல்பெர்ட், கேப்டனிடம் சென்று 'ஜோய்யை போருக்கு அழைத்துச் செல்லக் கூடாது' என்று கெஞ்சுகிறான். 'நீ அந்த குதிரையைப் பற்றி கவலைப் படாதே. நான் மிகவும் கவனமாக அதைப் பார்த்துக் கொள்வேன். போர் முடிந்த பிறகு- நானே குதிரையைத் திருப்பித் தருகிறேன்' என்று கூறுகிறார் அவர். ஆல்பெர்ட் ராணுவத்திற்குள் நுழைய முயற்சிக்கிறான். ஆனால், வயது குறைவு காரணமாக அவன் மறுக்கப்படுகிறான். கேப்டன் குதிரை ஜோய்யுடன் கிளம்புவதற்கு முன்னால், ஆல்பெர்ட் தன் தந்தை போரின்போது பெற்ற முத்திரை பதித்த கொடியை அதன் சேணத்தில் கட்டி விடுகிறான்.


ஜோய்க்கு ராணுவ பயிற்சிகள் தரப்படுகின்றன. அப்போது அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் Topthorn  என்ற இன்னொரு குதிரை, அதற்கு அறிமுகமாகிறது. அது ஒரு உயரமான கருப்பு குதிரை. அந்த இரு குதிரைகளும் நண்பர்களாக ஆகிறார்கள். அந்த இரு குதிரைகளும் France, Flanders ஆகிய நாடுகளுக்கு போரில் ஈடுபடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. போரில் Nicholls பலருடனும் சேர்ந்து கொல்லப்படுகிறார். ஜெர்மனியர்கள் குதிரைகளைக் கைப்பற்றுகிறார்கள்.

14 வயது சிறுவனான Michael, ராணுவ உயர் அதிகாரியிடம் 'இந்த குதிரைகளை ஆம்புலன்ஸ் வண்டியை இழுத்துச் செல்வதற்கு பயன்படுத்தலாம் என்கிறான். அதைத் தொடர்ந்து அவனும், அவனுடைய சகோதரன் Guntherம் குதிரைகளை ஓட்டிச் செல்கிறார்கள். இருவரும் அந்த குதிரைகளுடன் இத்தாலிக்குத் தப்பித்துச் செல்ல முயல்கிறார்கள். ஒரு பண்ணையின் காற்றாலையில் அவர்கள் இருவரும் இரவில் தங்கியிருக்க, ஜெர்மனிய வீரர்களால் அவர்கள் 'துரோகிகள்' என்று கண்டு பிடிக்கப்பட்டு, சுட்டு கொல்லப்படுகிறார்கள்.

மறுநாள் காலையில், ஒரு ஃப்ரெஞ்ச் இளம் பெண் காற்றாலைக்குள் அந்த இரு குதிரைகளையும் பார்க்கிறாள். அவள் பெயர் Emilie. அவள் அங்கு தன் வயதான தாத்தாவுடன் வசிக்கிறாள். அப்போது அங்கு வந்த ஜெர்மனிய போர் வீரர்கள், அங்கிருக்கும் உணவுப் பொருட்களை அபகரித்துச் செல்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல், எமிலி இரு குதிரைகளையும் தன் படுக்கையறையில் மறைத்து வைத்து விடுகிறாள். அதன் மூலம் ஜெர்மனியர்களிடமிருந்து குதிரைகள் தப்பி விடுகின்றன. எமிலி எலும்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். எங்கே குதிரைச் சவாரி செய்தால், அவள் கீழே விழுந்து விடுவாளோ என்று அவள் அதிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறாள். எனினும், அவளுடைய பிறந்த நாளை முன்னிட்டு, அவளை குதிரை ஜோய்யின் மீது ஏறி, சவாரி  செய்ய அவளுடைய தாத்தா அனுமதிக்கிறார். தங்களுடைய நிலத்தையொட்டி இருக்கும் மலையை நோக்கி அவள் குதிரையைச் செலுத்துகிறாள். ஆனால் நீண்ட நேரமாகியும் எமிலி திரும்பி வரவில்லை. அப்போதுதான் தான் எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டோம் என்பதையே அந்த தாத்தா உணர்கிறார். கருப்பு குதிரையான Topthorn மலையை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்க, அதற்குப் பின்னால் தாத்தா செல்கிறார். அப்போதுதான் அவருக்கே தெரிகிறது - ஜெர்மனிய போர் வீரர்கள் அவர்களைச் சுற்றி வளைத்திருக்கிறார்கள் என்ற விஷயம். எமிலி எவ்வளவோ மன்றாடுகிறாள். ஆனால், அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இரு குதிரைகளையும் ஜெர்மனிய வீரர்கள் கைப்பற்றிக் கொண்டு செல்கிறார்கள். ஜோய்யின் சேணத்தில் ஆல்பெர்ட்டால் முன்பு கட்டப்பட்ட, முத்திரை பதிக்கப்பட்ட கொடி இப்போது தாத்தாவிடம் இருக்கிறது. ஜோய்யின் சேணத்தில் கட்டப்பட்டிருந்த அதை, அவர் எடுத்துக் கொள்கிறார்.

ஜெர்மனிய போர்க் கருவிகளை இழுத்துச் செல்வதற்கு Joey, Topthorn என்ற அந்த இரு குதிரைகளையும் பயன்படுத்துகின்றனர். அந்த கடுமையான வேலையில் ஈடுபட்ட பல குதிரைகள் இதற்கு முன்பு இறந்திருக்கின்றன. எனினும், Friedrich என்ற குதிரைகளின் மீது அன்பு வைத்திருக்கும் அதிகாரி அந்த இரு குதிரைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்.

1918 ஆம் ஆண்டில் ஆல்பெர்ட் போருக்குச் செல்வதற்கு தேந்தெடுக்கப்படுகிறான். அவனுடன், அவனுடைய நெருங்கிய நண்பனான Andrewவும். இருவருக்கும் தலைமை தாங்கும் அதிகாரியாக இருப்பவன், ஆல்பெர்ட்டின் நிலத்திற்குச் சொந்தக்காரரான Lyonsஇன் மகன் David. Albert, Andrew இருவரும் மற்ற போர் வீரர்களுடன் சேர்ந்து, ஜெர்மனிக்குச் சொந்தமான ஒரு பாலைவனப் பகுதிக்குள் நுழைகிறார்கள். அங்கு ஒரு வாயு குண்டு வெடித்து, விஷ வாயு பரவுகிறது.

மற்ற குதிரைகளை விட, மிக அதிகமான காலம் Joey, Topthorn என்ற அந்த இரு குதிரைகளும் ஜெர்மனிய ராணுவத்திற்குச் சேவை செய்கின்றன. இறுதியில் கம்பீரமான அந்த கருப்பு குதிரையான Topthorn ஒரு நாள் களைப்படைந்து, மரணத்தைத் தழுவுகிறது. Friedrichஐ மற்ற ஜெர்மனிய வீரர்கள் இழுத்துக் கொண்டு செல்கிறார்கள். ஜோய் அங்கிருந்து தப்பி, யாருக்கும் சொந்தமற்ற (no man's land) இடத்திற்குள் நுழைகிறது. முற்றிலும் முட் கம்பிகளால் சூழப்பட்டிருக்கும் அந்த இடத்தில் புயலென பாய்ந்தோடுகிறது ஜோய். முட் கம்பிகள் ஜோய்யின் உடலில் குத்தி, காயம் உண்டாக்குகின்றன.

தங்களுக்கென்று இருக்கும் பதுங்கு குழிகளுக்குள் அமர்ந்து, பிரிட்டிஷ் வீரர்களும், ஜெர்மனிய வீரர்களும் இரவு நேர பனிப் படலத்திற்கு மத்தியில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் அந்த உயரமான குதிரையைப் பார்க்கின்றனர். இவ்வளவு பெரிய போரில் ஒரு குதிரை உயிருடன் தப்பித்திருக்கிறதா என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. Colin என்ற பிரிட்டிஷ் படை வீரன் ஒரு வெள்ளை நிற கொடியை அசைத்தவாறு, அந்த நிலப் பகுதிக்குள் நுழைகிறான். குதிரையைப் பிடித்துக் கொண்டு வந்து, பிரிட்டிஷ் படையில் சேர்த்து விட வேண்டும் என்பது அவனுடைய நோக்கம். அதே நேரத்தில் - Peter என்ற ஜெர்மனிய வீரர் கம்பிகளை முறிக்கும் 'wire cutter' உடன் வருகிறார். உடல் முழுக்க முட் கம்பிகள் சுற்றியிருக்க, சிறிதும் அசைய முடியாமல், மாட்டிக் கொண்டிருக்கும் ஜோய்யை அந்த கொடுமையிலிருந்து அவர்கள் இருவரும் விடுதலை செய்கிறார்கள். அந்த குதிரையை யார் எடுத்துக் கொள்வது என்பதற்காக காசை போட்டுப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த Colin வெல்கிறான். மீண்டும் பிரிட்டிஷ் பக்கம் வந்து சேர்கிறது ஜோய். எதிர்பாராத ஒரு நட்பு அந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே அந்த இடத்தில் உண்டாகிறது.


விஷ வாயு பரவியதில் ஆன்ட்ரூ கொல்லப்படுகிறான். ஆல்பெர்ட் தப்பிக்கிறான். தற்காலிகமாக அவனுடைய கண் பாதிக்கப்படுகிறது. தன் கண்களை அவன் 'பேன்டேஜ்' மூலம் மூடியிருக்கிறான். அவன் பிரிட்டிஷ் மருத்துவ முகாமில் இருக்கிறான். யாருக்கும் சொந்தமற்ற இடத்திலிருந்து மீட்கப்பட்ட வினோதமான குதிரையைப் பற்றி அவன் கேள்விப்படுகிறான். ராணுவ டாக்டர், காயம் பட்டிருக்கும் குதிரை ஜோய்யைக் கீழே படுக்க வைக்கும்படி கூறுகிறார். ஆனால், ராணுவ அதிகாரியோ குதிரையைச் சுட்டுக் கொல்வதற்கு முயற்சிக்கிறார். அப்போது எங்கிருந்தோ ஒரு ஆந்தையின் குரல் வருவதைக் கேட்கிறது ஜோய். தன் சிறு வயதில் கேட்ட அதே ஆந்தையின் சத்தம். ஆல்பெர்ட் படை வீரர்களுக்கு மத்தியில், ஆந்தையின் ஓசையை உண்டாக்கியவாறு வேகமாக நடந்து வருகிறான். ஜோய் தன் இளமைக் கால நண்பன் ஆல்பெர்ட்டை நோக்கி பாய்ந்தோடுகிறது. தான் வளர்த்த குதிரை அது என்று எல்லோரிடமும் கூறுகிறான் ஆல்பெர்ட். அவர்கள் அதை நம்ப மறுக்க, 'பேன்டேஜ்' போடப்பட்ட கண்களுடன் அவன் குதிரையின் உடலில் இருக்கும் அடையாளங்களைக் கூறுகிறான். நான்கு கால்களின் கீழ்ப் பகுதியிலும் வெள்ளை நிற அடையாளம் இருக்கும் என்கிறான். அதன் நெற்றிப் பகுதியில் வெள்ளை நிற நட்சத்திரம் இருக்கும் என்கிறான். சேறு படிந்த நிலையில் இருக்கும் ஜோய்யை நீர் விட்டு கழுவிப் பார்க்கிறார்கள். அவன் சொன்ன அடையாளங்கள் அப்படியே இருக்கின்றன.

1918ஆம் ஆண்டு, 11வது மாதமான நவம்பர் மாதத்தில், 11ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு போர் முடிவுக்கு வருகிறது. அப்போது ஆல்பெர்ட்டிற்கு கண் பார்வை மீண்டும் கிடைக்கிறது. அதிகாரிகளின் குதிரைகள் மட்டுமே வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட அனுமதிக்கப்படும் என்ற தகவல் தெரிந்து, தன் நண்பர்களிடம் பண உதவி பெற்று தன் குதிரை ஜோய்யை ஏலத்தில் எடுக்க நினைக்கிறான் ஆல்பெர்ட். ஆனால், ஒரு ஃப்ரெஞ்ச் கசாப்பு கடைக்காரர் அதிகமான தொகைக்கு அந்த குதிரையை ஏலத்தில் கேட்கிறார். அப்போது எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில், மிகப் பெரிய ஒரு தொகைக்கு அதை ஏலத்தில் எடுக்கிறார் திடீரென்று அங்கு வந்த ஒரு மனிதர் அவர்- எமிலியின் தாத்தா. அவர் அந்த குதிரையை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்ல தீர்மானித்திருக்கிறார். தன் பேத்தி எமிலி இறந்து விட்டதாக அவர் ஆல்பெர்ட்டிடம் கூறுகிறார். தன் பேத்தி பாசம் வைத்திருந்த குதிரை ஜோய்யைப் பெறுவதற்காக, மூன்று நாட்கள் அவர் நடந்தே அங்கு வந்திருக்கிறார்.

குதிரையைத் தனக்கு தரும்படி கெஞ்சுகிறான் ஆல்பெர்ட். முதலில் அவர் மறுத்து விடுகிறார். ஆனால், குதிரை ஜோய் ஆல்பெர்ட்டைப் பார்த்தவுடன் பாசத்துடன் ஓடி வருகிறது. அதைப் பார்த்ததும், அவர் ஆச்சரியப்படுகிறார். தான் வைத்திருந்த முத்திரை பதிக்கப்பட்ட கொடியை அவனிடம் அவர் காட்டுகிறார். தன் தந்தைக்குச் சொந்தமானது அது என்கிறான் ஆல்பெர்ட். அந்தக் குதிரை அவனுக்குச் சொந்தமானதுதான் என்பதைப் புரிந்து கொண்டு, அவனிடமே குதிரையை ஒப்படைக்கிறார் அவர். அவனிடம் அதை ஒப்படைப்பதுதான், தன் பேத்தி எமிலிக்குச் செய்யும் பொருத்தமான நினைவு அஞ்சலியாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார்.

ஆல்பெர்ட் தன் செல்ல குதிரை ஜோய்யுடன் தன் வீட்டை நோக்கி வருகிறான். அவன் தன் பெற்றோரைப் பாசத்துடன் இறுக தழுவுகிறான். ராணுவத்தில் கொடுக்கப்பட்ட முத்திரை பதித்த கொடியைத் தன் தந்தையிடம் தருகிறான். ஆல்பெர்ட்டின் வயதான தந்தை தன் மகனை நோக்கி கையை நீட்டுகிறார். இப்போது அவரைப் போலவே, அவனும் ஒரு முன்னாள் போர் வீரன்.

அத்துடன் படம் முடிவடைகிறது. அருமையான ஒரு படத்தைப் பார்த்த முழு திருப்தியுடன் நாம் 'Steven Spielberg'இன் பெயரைப் பார்த்ததும், நம்மை மறந்து கைகளைத் தட்டுகிறோம்.

இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்- ஜோய்யாக நடித்திருக்கும் குதிரையும்தான்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.