Logo

ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிஸியன்ஸ்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 7530
Travellers and Magicians

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

Travellers and Magicians - ட்ராவலர்ஸ் அண்ட் மேஜிஸியன்ஸ்

(பூட்டானிய திரைப்படம்)

2003ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். பூட்டானின் கால் பகுதி மக்கள் Dzongkha என்ற மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கிறார்கள். இப்படம் அம்மொழியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியவர் Khyentse Norbu. Tibetan Buddhism மதத்தைச் சேர்ந்த lama இவர்.

இப்படத்தின் பெரும்பாலான நடிகர், நடிகைகள் தொழில் ரீதியான கலைஞர்கள் அல்ல. இதில் இளம் அரசாங்க அலுவலராக நடித்திருக்கும் Dendup மட்டுமே நடிப்பு அனுபவம் கொண்டவர். அவர் ஒரு வானொலி நடிகர்.

108 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படம்தான் முழுக்க முழுக்க பூட்டானில் படமாக்கப்பட்ட முதல் முழு நீள படம்.

இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் பூட்டானின் கிராமப் பகுதியையும், மலைச் சாலைகளையும், அங்குள்ள மக்களின் சிரமங்கள் நிறைந்த வாழ்க்கையையும் கண்ணாடி என தெளிவாக காட்டியிருக்கும் இந்தப் படம் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

Deauville Asian Film Festival இல் ‘Travellers and Magicians’  திரைப்படம் சிறந்த படத்திற்கான Audience Award ஐப் பெற்றிருக்கிறது. Asian American International Film Festival இல் Best emerging Directorக்கான விருதை இப்படத்திற்காக இயக்குனர் Khyentse Norbu பெற்றிருக்கிறார்.

இத்தகைய சிறப்பு விருதுகள் பெற்ற இப்படத்தின் கதை இதோ...

பூட்டானின் ஒரு சிறிய கிராமம். அங்கு அரசாங்க அலுவலராக வேலை பார்ப்பவன் Dondup. அவன் அந்த கிராமத்தைச் சேர்ந்தவன் அல்ல. வெளியூரிலிருந்து அங்கு பணி செய்வதற்காக வந்திருப்பவன். நாகரீக உடைகள் அணிந்து, நவ நாகரீக பழக்க வழக்கங்களைக் கொண்ட அந்த இளைஞன் அந்த கிராமத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கியிருக்கிறான். அவனுடைய அறையின் சுவர் முழுக்க பெண்களின், நடிகைகளின், மாடல்களின் கவர்ச்சிப் படங்கள். மேற்கத்திய இசையைக் கேட்டுக் கொண்டு... மேற்கத்திய சிந்தனைகளில் மூழ்கிக் கொண்டு அவனுடைய ஒவ்வொரு நாளும் நீங்கிக் கொண்டிருக்கிறது.

ஏதோ பிழைப்பிற்காக அவன் அந்த கிராமத்திற்கு வந்து விட்டானே தவிர, அங்கு இருப்பதற்கு அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அமெரிக்காவிற்குச் சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் இருக்கிறான். அதற்கான முயற்சிகளையும் அவன் செய்து கொண்டிருக்கிறான்.

தினமும் அந்த கிராமத்திலிருக்கும் அஞ்சல் நிலையத்திற்குச் செல்வது, திம்புவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து ஏதாவது தகவல் அடங்கிய கடிதம் வந்திருக்கிறதா என்று விசாரிப்பது என்பது அவனுடைய அன்றாடச் செயலாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அப்படி கடிதம் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டதும், அவன் மிகுந்த கவலையில் மூழ்கி விடுவான். ‘இந்த கிராமம் மிகவும் தூரத்தில் மலை உச்சியில் இருக்கிறது. தகவல் தொடர்புகள் பொதுவாகவே தாமதமாகத்தான் நடக்கும்’ என்று அஞ்சல் நிலையத்தில் கூறுவார்கள். தன் விதியைத் தனக்குத் தானே நொந்து கொண்டு ஏதாவது ஒரு புல்மேட்டில் கவலையுடன் அவன் அமர்ந்திருப்பான்.

ஒருநாள் அமெரிக்க தூதரகத்திலிருந்து அவனுக்கு கடிதம் வருகிறது. ‘விசா’ விஷயமாக நேர்முகத் தேர்விற்கு இரண்டு நாட்களில் அவனை வரச் சொல்லியிருக்கின்றனர். உண்மையான காரணத்தைச் சொல்லாமல், கிராமத்தின் தலைவரிடம் ‘திம்புவில் நடைபெறும் திருவிழாவைப் பார்ப்பதற்காகச் செல்கிறேன். இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும்’ என்று கேட்கிறான். கிராமத்தின் தலைவரும் அதற்கு ஒப்புதல் தருகிறார்.

அறைக்கு வந்து தன்னுடைய தோள் பையை எடுத்துக் கொண்டு அவன் பிற்பகல் வேளையில் அந்த கிராமத்தை விட்டு கிளம்புகிறான். திம்புவிற்குச் செல்வதற்கு எப்போதாவது ஒரு பேருந்து வரும். மிகவும் வேகமாகச் சென்று பேருந்தைப் பிடித்தாக வேண்டும். அவன் பள்ளத்தாக்கில் இருக்கும் அந்த கிராமத்தை விட்டு ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்கிறான். பல நிமிடங்கள் நடந்து சென்ற பிறகு, மேலே பார்க்கிறான். தூரத்தில் - மேலே இருக்கும் சாலையில் பேருந்து வந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறது. இங்கிருந்தே பேருந்தை நிறுத்தச் சொல்லி அவன் உரத்த குரலில் கத்துகிறான். ஆனால், அவனுடைய சத்தம் யாருடைய காதிலும் விழவில்லை. பேருந்து கிளம்பிச் சென்று விடுகிறது.

வேகமாக நடந்து அவன் சாலைக்கு வருகிறான். மலைப் பகுதியில் வளைந்து வளைந்து வரும் சாலை. அவன் ஒரு ஓரத்தில் தன் தோள் பையையும், கையிலிருந்த வானொலி பெட்டியையும் தரையில் வைத்துவிட்டு, ஏதாவது வாகனம் வருகிறதா என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறான். அப்போது அங்கு ஒரு கிராமத்து பழ வியாபாரி வந்து சேர்கிறான். அவன் ஒரு கூடையில் ஆப்பிள் பழங்களை வைத்திருக்கிறான். அவன் அவற்றை திம்புவில் இருக்கும் மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்கிறான். இப்போது நம் இளைஞனும் அந்த பழ வியாபாரியும் ஏதாவது வாகனத்தை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஒரு கார் மலைப் பாதையில் வளைந்து வந்து கொண்டிருக்கிறது. இளைஞன் அதற்கு முன்னால் கையை நீட்டுகிறான். ஆனால், அது நிற்காமல் போய் விடுகிறது. அங்கு நின்று கொண்டிருப்பதை விட, சற்று முன்னால் போய் நிற்பது நல்லது என்று நினைக்கும் இளைஞன், தன் தோள் பையை எடுத்துக் கொண்டு முன்னால் நடக்கிறான். பழ வியாபாரி தன் ஆப்பிள் கூடையில் கால்களை நீட்டி சாய்ந்து கொண்டு ஆப்பிள் பழத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறான்.

சாலையின் இன்னொரு இடத்தில் போய் தன் தோள் பையை தரையில் வைத்து விட்டு, அதன் அருகில் அமர்கிறான் இளைஞன். அவனுடைய சிறிய வானொலி பெட்டியில் மேற்கத்திய இசை முழங்கிக் கொண்டிருக்கிறது. நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கார் வருகிறது. கையை நீட்டுகிறான். காரில் இடமில்லை. அதற்குப் பிறகும் நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. வாகனம் எதுவும் வருவதற்கான அறிகுறியைக் காணோம்.

நேரம் இருட்ட ஆரம்பிக்கிறது. குளிராக இருக்கிறது. குளிரில் நடுங்க ஆரம்பிக்கிறான் இளைஞன். பின்னர் என்ன நினைத்தானோ- நடந்து சென்று முன்பு ஆப்பிள் பழ வியாபாரி அமர்ந்திருந்த இடத்திற்கு வருகிறான். ஆப்பிள் வியாபாரி தலையை கம்பளியால் போர்த்திக் கொண்டு, நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறான். வயதான அந்த ஏழை வியாபாரியுடன், நம் இளைஞனும் கலந்து கொள்கிறான். இருவரும் தாங்க முடியாத குளிரின் கொடுமையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நெருப்பிற்கு முன்னால் அமர்ந்து சுகம் தேடுகின்றனர்.


நேரம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இரவாகி விட்டது. இனி எந்த வாகனம் வரப் போகிறது? அந்த மலைப் பாதையின் ஓரத்திலேயே அவர்களுடைய அன்றைய இரவு கழிகிறது.

பொழுது புலர்கிறது. வெளிச்சம் வர ஆரம்பிக்கிறது. இளைஞனும், ஆப்பிள் பழ வியாபாரியும் பேருந்தோ ஏதாவது வாகனமோ வராதா என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கின்றனர். அப்போது புத்த மத துறவி ஒருவர் சிவப்பு ஆடை தரித்து வருகிறார். அவரின் கையில் ஒரு இசைக் கருவி. திம்புவில் நடைபெறும் திருவிழாவிற்காக அவர் செல்கிறார். அவரும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொள்கிறார். இப்போது மூவராக ஆகிறார்கள்.

மீண்டும் காத்திருப்பு. நேரம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், வாகனம் எதுவும் வருவதாக தெரியவில்லை. இளைஞன் எதற்காக திம்புவிற்குச் செல்கிறான் என்ற விஷயத்தை துறவி தெரிந்து கொள்கிறார். அப்போது சிரித்துக் கொண்டே அவர் ஒரு கதையைக் கூறுகிறார்:

‘ஒரு கிராமம். அங்கு ஒரு மனிதர். அவருக்கு இரண்டு மகன்கள். அந்த ஊரிலிருக்கும் மேஜிக் வித்தைகளைக் கற்றுத் தரும் ஒரு பள்ளிக் கூடத்தில் அந்த தந்தை தன்னுடைய மூத்த மகனான டாஷியைச் சேர்த்து விடுகிறார். ஆனால், அவனுக்கு அந்த படிப்பில் சிறிதும் ஆர்வம் இல்லை. வகுப்பறையில் அமர்ந்து கொண்டு பெண்களைப் பற்றிய கனவில் அவன் மிதந்து கொண்டிருக்கிறான். ஆனால், அவனுடைய தம்பிக்கு மேஜிக் விஷயத்தில் மிகுந்த ஆர்வம். தன் அண்ணனுக்கு மதிய உணவு கொண்டு வரும் தம்பி, வெளியில் நின்று கொண்டே உள்ளே நடக்கும் பாடத்தைக் காதால் கேட்டு, மேஜிக் வித்தைகள் பலவற்றையும் தெரிந்து கொள்கிறான்.

தனக்கு அந்த கிராமத்தில் இருக்க பிடிக்கவில்லை, மேஜிக் கற்றுக் கொள்வதில் சிறிதும் விருப்பமில்லை என்று தன் தம்பியிடம் கூறும் டாஷி, வேறு ஏதாவது ஊருக்கு பறந்து சென்றுவிட வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் தெரிவிக்கிறான். அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தங்களுக்குச் சொந்தமான கழுதையில் ஏறித்தான் செல்வார்கள். இப்போதும் அப்படித்தான் அவர்கள் வந்தார்கள். ஆனால், டாஷியின் தம்பி அந்த கழுதையை குதிரையாக தெரியும்படி செய்திருக்கிறான்.

அவ்வளவுதான் - உற்சாகத்துடன் குதிரையில் ஏறி பறக்கிறான் டாஷி. அந்த கிராமத்தை விட்டு எப்படியாவது தப்பித்து, வேறு எங்காவது செல்ல வேண்டும் என்பதுதானே டாஷியின் ஆசையே! குதிரை மிகவும் வேகமாக புயலென பாய்ந்து செல்கிறது - காடுகள், மேடுகள், பள்ளத்தாக்குகள், மலைகள் அனைத்தையும் கடந்து சூறாவளியாக பாய்ந்து பயணிக்கும் குதிரையின் மீது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான் டாஷி.’

கதையின் இந்த ஆரம்பப் பகுதியுடன் நிறுத்துகிறார் புத்த மத துறவி.

‘நான் கூறிய கதையில் வரும் டாஷி என்ற கிராமத்து இளைஞனைப் போல நீங்கள் இந்த கிராமத்தை விட்டு தப்பித்து ஓட நினைக்கிறீர்கள்’ என்கிறார் இளைஞனைப் பார்த்து துறவி.

ஏதாவது வாகனம் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு மூவரும் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது தூரத்தில் இரைச்சலை உண்டாக்கிக் கொண்டு ஒரு லாரி வளைவில் வந்து கொண்டிருக்கிறது. கையைக் காட்ட, லாரி நிற்கிறது. ‘லாரி திம்புவிற்குச் செல்லாது’ என்று கூறும் லாரி ஓட்டுனர் வழியில் இருக்கும் ஒரு ஊரின் பெயரைச் சொல்லி அது வரைதான் போகும் என்கிறார். அதற்கு சம்மதித்த மூவரும் லாரியின் பின்பகுதியில் ஏறி அமர்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் அதில் ஒரு ‘இருபத்து நான்கு மணி நேர குடிகாரனும்’ ஒரு வயதான கிராமத்துப் பெண்ணும் அமர்ந்திருக்கிறார்கள்.

லாரி புறப்படுகிறது. மலைப் பாதையில் வளைந்து வளைந்து அது பயணிக்கிறது. சிறிது தூரம் பயணித்ததும், ஒரு ஊரில் லாரி நிற்கிறது. அவர்களுடன் பயணம் செய்த வயதான கிராமத்துப் பெண் அங்கு இறங்கிக் கொள்கிறாள். ‘குடிகாரன்’ இப்போதும் மது புட்டியை கையில் வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அருந்திக் கொண்டிருக்கிறான். இப்போது புதிதாக இருவர் லாரியில் ஏறுகிறார்கள் ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய தாள் வியாபாரியும் அவருடைய இளம் பெண்ணான மகளும். அந்த அழகான இளம் பெண் லாரியில் ஏறுவதற்கு கை கொடுத்து உதவுகிறான் நம் இளைஞன்.

லாரியில் ஏறியவுடன் தாள் வியாபாரி இளைஞனிடம் ‘நீங்கள் கிராமத்தில் வேலை பார்க்கும் அரசு அலுவலராயிற்றே! உங்களை நான் பார்த்திருக்கிறேன்’ என்கிறார் மரியாதையுடன். தன் மனைவியை தான் இழந்து விட்டதாகவும், நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளுக்கு படிப்பு சரியாக வரவில்லையென்றும், அதனால் படிப்பை நிறுத்தி விட்டதாகவும், இப்போது அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட தாளை விற்பதற்காக நகரத்திலிருக்கும் சந்தைக்குச் செல்வதாகவும், துணைக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் செல்வதாகவும் அவர் கூறுகிறார்.

லாரி கிளம்புகிறது. பயணம் தொடர்கிறது. வெறுமனே லாரியில் அமைதியாக எவ்வளவு நேரத்திற்குத்தான் உட்கார்ந்து கொண்டே இருக்க முடியும்? அதனால் தான் கூறிக் கொண்டிருந்த கதையை, முன்பு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்கிறார் புத்த மத துறவி:

‘காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாக ஓடிய குதிரையிலிருந்து ஒரு அடர்ந்த காட்டிற்குள் தவறி கீழே விழுகிறான் டாஷி. அவனை தூக்கி எறிந்து விட்டு, குதிரை எங்கோ போய் விடுகிறது. காலில் காயம் பட்ட டாஷி மெதுவாக மரங்களுக்கு மத்தியில் நடந்து, காட்டுக்குள் இருக்கும் ஒரு வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கிறான். அந்த வீடு ஒரு வயதான மர வெட்டிக்குச் சொந்தமானது. அந்த வீட்டில் அந்த கிழவனும், அவனைவிட வயதில் மிகவும் குறைவான இளம் மனைவியும் வாழ்கிறார்கள். பக்கத்தில் பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லை. அவனுக்கு துணை அவள். அவளுக்கு துணை அவன். இப்படித்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டைத் தேடி வந்திருக்கும் முதல் வெளி ஆளே டாஷிதான்.

அவனுடைய நிலையைப் பார்த்து மிகவும் வருத்தப்படுகிறான் மரவெட்டி கிழவன். அவனை உள்ளே அழைத்து, அவனுக்கு உணவளிக்கின்றனர். அவனுடைய காலில் பட்ட காயங்களுக்கு மருந்து போடப்படுகிறது. கிழவனுடைய இளம் மனைவி தேகி அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அன்று இரவு அவன் அங்கு தங்குகிறான். மறுநாள் காலையில் அவன் புறப்படுகிறான். தேகி இன்னொரு நாள் அங்கு தங்கி விட்டு, மறுநாள் போகலாமே என்கிறாள். ஆனால், அவன் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை காட்டிற்குள் வந்து அவனை விடுவதாக கூறுகிறான் மர வெட்டி கிழவன். அதன்படி கிழவன் முன்னால் நடக்க, அவனைப் பின்பற்றி நொண்டிக் கொண்டே நடந்து செல்கிறான் டாஷி. அவன் போவதையே பார்த்துக் கொண்டு வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருக்கிறாள் கிழவனின் இளம் மனைவி தேகி.


கிழவனும்  டாஷியும் அடர்ந்த காட்டுக்குள் நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள். நீண்ட நேரம் பயணித்த பிறகு, ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைகிறார்கள்.

‘இனி நான் கிளம்பி வீட்டிற்குச் செல்கிறேன். நீ உன் பயணத்தைத் தொடங்கு...’ என்று கூறிவிட்டு மர வெட்டி கிழவன் அங்கிருந்து பின்னோக்கி கிளம்பிச் செல்கிறான். டாஷி தன் பயணத்தைத் தொடர்கிறான்.’

புத்த மத துறவி கூறிய கதையின் பகுதியை ஆர்வத்துடன் அந்த இளைஞனும், ஆப்பிள் பழ வியாபாரியும், அரிசியின் மூலம் தாள் தயாரிக்கும் வியாபாரியும், அவருடைய பேரழகு பெட்டகமான மகளும் கேட்கின்றனர்.

ஒரு இடத்தில் லாரி நிற்கிறது. ‘இனி லாரி வேறு திசை நோக்கி செல்கிறது. நீங்கள் எல்லோரும் இங்கு இறங்கிக் கொள்ளுங்கள். இங்கிருந்து பேருந்திலோ, வேறு ஏதாவது வாகனத்திலோ திம்புவிற்கு பயணத்தைத் தொடருங்கள்’ என்கிறார் லாரி ஓட்டுனர். எல்லோரும் தங்களின் உடைமைகளுடன் கீழே இறங்குகிறார்கள். லாரியில் அமர்ந்திருக்கும் குடிகார இளைஞனின் கையில் இப்போதும் மது புட்டி இருக்கிறது. அதை பருகிக் கொண்டே சிரித்தவாறு அவர்களுக்கு ‘டாட்டா’ காட்டி விடை பெற்றுக் கொள்கிறான் அவன். லாரி அங்கிருந்து இடது பக்கமாக திரும்பி, தன் பயணத்தைத் தொடர்கிறது.

எல்லோரும் அந்த இடத்திலிருந்து சற்று நடந்து தனியாக இருக்கும் ஒரு இடத்திற்கு வருகிறார்கள். இருட்டி விட்டது. ஏதாவது சாப்பிட வேண்டுமே? புத்த மத துறவி தன் பைக்குள்ளிருந்து அடுப்பை எடுத்து வைக்கிறார். சமையல் செய்வதற்கான உணவுப் பொருட்கள், காய்கறிகள் அனைத்தும் இருக்கின்றன. எல்லோரும் சமையல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த இளம் பெண் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொடுக்கிறாள். சமையல் தயாராகிக் கொண்டிருக்கிறது. சுற்றிலும் கடுமையான குளிர். நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டு எல்லோரும் குளிர் காய்ந்து, ஆறுதல் அடைகின்றனர்.

நெருப்பின் வெளிச்சத்தில் இளைஞனையே ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்த இளம் பெண். பதிலுக்கு இளைஞனும் அவளை ஆர்வத்துடன் பார்க்கிறான். அந்த காட்சியை புத்த மதத் துறவி கடைக்கண்களால் பார்த்து ரசிக்கிறார்.

எல்லோரும் புத்த மத துறவியிடம் மீதி கதையை கூறுமாறு கூறுகின்றனர். துறவி கதையைத் தொடர்கிறார்:

‘அடர்ந்த காட்டிற்குள் நடந்து சென்ற டாஷி நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு இடத்திற்கு வந்து சேர்கிறான். அது மரவெட்டி கிழவனுக்குச் சொந்தமான இடமே. கிழவன் மரத்தை வைத்துக் கொண்டு வீட்டிற்கு முன்னால் ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய இளம் மனைவி வீட்டிற்கு அருகில் இருந்தவாறு ஆச்சரியத்துடன் டாஷியையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். வழி தெரியாமல் காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது, தனக்கே தெரியாமல் சிறிதும் எதிர்பாராமல் திரும்பவும் அங்கு வந்து சேர்ந்தானா? இல்லாவிட்டால் மரவெட்டியின் இளம் மனைவி இன்னொரு நாள் தங்கிச் செல்லும்படி கூறியும், அதைக் காதில் வாங்காமல் கிளம்பி வந்து விட்டோமே என்பதை மனதில் நினைத்து, அவள் மீது கொண்ட மோகத்தால் மீண்டும் அங்கு வந்து சேர்ந்தானா? இவ்விரண்டு காரணங்களில் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

பிறகென்ன? மரவெட்டியின் வீட்டிற்கு மீண்டும் வந்து சேர்கிறான் டாஷி. மரவெட்டி கிழவனின் மனைவி தேகி உணவு தயாரித்துத் தர, அதை சாப்பிடுகிறான் டாஷி. வீட்டில் சில நாட்கள் இருந்து, நொண்டிக் கெண்டிருக்கும் காலை சரி பண்ணும்படி கூறுகிறான் கிழவன். அவனுடைய மனைவி தயாரித்துத் தரும் மதுவை அளவே இல்லாமல் எப்போது பார்த்தாலும் குடித்துக் கொண்டே இருக்கிறான் கிழவன். அந்த இளம் பெண் கயிறைக் கொண்டு ஏதோ கலைப் பொருளைச் செய்து கொண்டிருக்கிறாள். அதை அவள் செய்து முடித்து, நகரத்திலிருக்கும் சந்தைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதைக் கொண்டு போகும்போது டாஷியும் அங்கிருந்து கிளம்பலாம் என்கிறான் கிழவன். ஆனால், அதை அவள் சீக்கிரம் செய்து முடித்தால்தானே! வழக்கத்தை விட அவள் அதை மிகவும் தாமதமாகவே செய்கிறாள். அப்படி இழுத்தால்தானே அதிக நாட்கள் டாஷி அந்த வீட்டில் இருக்க முடியும் என்ற எண்ணம் அவளுக்கு. அது தெரியாமல் ‘இந்த பெண்ணுக்கு இப்போது என்ன ஆச்சு? வேலையை முடிக்காமல், நாட்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கிறாளே!’ என்று டாஷிக்கும் கேட்கும்படி முனகுகிறான் கிழவன். அந்த வார்த்தைகள் அந்த இளம் மனைவியின் காதுகளிலும் விழுகின்றன. ஆனால், அவள் அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.’

புத்த மத துறவி தான் கூறிக் கொண்டிருந்த கதையை இந்த இடத்தில் நிறுத்துகிறார். அதற்குள் உணவும் தயாராகி விடுகிறது. எல்லோரும் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அந்த இளைஞனையே ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்த இளம் பெண். ‘நீ ஏன் தொடர்ந்து படிக்கவில்லை?’ என்று அக்கறையுடன் அவன் கேட்க, அதற்கு ‘நான் தேர்வில் நல்ல மதிப்பெண்களை வாங்கியிருக்கிறேன். மதிப்பெண்கள் குறைவாக வாங்கியிருப்பதாக என் தந்தையிடம் பொய் சொன்னேன். அவருக்கு உதவிக்கு அருகில் யாரும் இல்லை. அவருக்கு அருகில் இருந்து உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அப்படிச் சொன்னேன்’ என்கிறாள் அந்த இளம் பெண் – புன்னகை தவழும் உதடுகளுடன். அவளையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் நம் இளைஞன்.

பொழுது புலர்கிறது. எல்லோரும் தங்களின் உடமைகளுடன் ஏதாவது வாகனம் வராதா என்ற எதிர்பார்ப்புடன் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது வளைவைத் தாண்டி ஒரு பேருந்து வருகிறது. கையை நீட்ட, பேருந்து நிற்கிறது. ஒரே இடம்தான் அதில் இருக்கிறது என்கிறார் ஓட்டுனர். புத்த மத துறவியை அதில் ஏறச் சொல்கிறார்கள். அவரோ இளைஞனைப் பார்த்து ‘நீங்கள்தான் அமெரிக்க தூதரகத்திற்கு அவசரமாக போக வேண்டிய நபர். ஏற்கெனவே தாமதமாகி விட்டது. நீங்கள் ஏறிச் செல்லுங்கள்’ என்கிறார். ஆனால், அவனோ ‘ஆப்பிள் வியாபாரி செல்லட்டும். பாவம்… அவர் கூடையில் ஆப்பிள் பழங்களை வைத்திருக்கிறார். இனி மேலும் தாமதித்தால், அவை அழுகிப் போனாலும் போகலாம்’ என்கிறான். அது சரிதான் என்று எல்லோருக்கும் படுகிறது. அதைத் தொடர்ந்து எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு ஆப்பிள் வியாபாரி தன் பழக் கூடையுடன் பேருந்திற்குள் ஏறுகிறார். பேருந்து புறப்படுகிறது.

அங்கிருந்து நால்வரும் சிறிது தூரம் நடக்கின்றனர். அந்த இளம் பெண் முன்னால் நடக்க, அவளைப் பின்பற்றி இளைஞன் நடந்து செல்கிறான். அவர்களுக்குச் சற்று தூரத்தில்…. பின்னால்…. புத்த மத துறவியும், தாள் வியாபாரியும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். நடந்ததால் உண்டான வேதனையால், ஓரத்திலிருந்த ஒரு பாலத்தின் கல்லில் களைப்புடன் அமர்கிறாள் இளம் பெண். சுற்றிலும் அழகான மலைகள், மரங்கள், செடிகள், கொடிகள், வயல்கள்… அவள் மிகவும் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, ‘என்ன கவலை? இதுவரை நம்முடன் இருந்த ஆப்பிள் வியாபாரி நம்மிடமிருந்து பிரிந்து போய் விட்டாரே என்பதாலா?’ என்று கேட்கிறான் இளைஞன். அதற்கு ‘ஆமாம்…’ என்று தலையை ஆட்டுகிறாள் அந்த அழகுச் சிலை.


அதற்குள் புத்த மத துறவியும், அந்த இளம் பெண்ணின் தந்தையும் மெதுவாக நடந்து, அங்கு வந்து சேர்கிறார்கள். நால்வரும் அந்த இடத்தில் அமர்ந்து, வாகனம் வருவதை எதிர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். அப்போது துறவியைப் பார்த்த அந்த இளம் பெண் ‘மீதி கதையையும் கூறி முடித்து விடுங்கள்…’ என்கிறாள். அதைத் தொடர்ந்து துறவி மீதி கதையை கூற ஆரம்பிக்கிறார்:

‘நாட்கணக்கில் டாஷி அந்த வீட்டில் தங்கியிருக்கிறான். இதுவரை அந்த வீட்டில் அவர்களுடன் வந்து தங்கிய முதல் வெளி மனிதனே அவன்தான். தன் இளம் மனைவி தேகி தயாரித்துத் தரும் மதுவை அருந்தி, எப்போதும் போதையிலேயே இருக்கிறான் கிழவன். இதற்கிடையில் டாஷிக்கும், கிழவனின் மனைவிக்குமிடையே ஒரு நெருக்கமான உறவு உண்டாகி விடுகிறது. உடல் ரீதியான உறவு கூட பலமுறைகள் அவர்களுக்கிடையே நடந்து விடுகின்றன.

ஒருநாள் டாஷியிடம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைக் கூறுகிறாள் அந்த இளம் பெண் தேகி. அவ்வளவுதான் - அதிர்ந்து போகிறான் டாஷி. கிழவனுக்கு விஷயம் தெரிந்தால் இருவரையும் அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான் என்ற உண்மையை இருவரும் நன்கு தெரிந்தே இருக்கிறார்கள். ‘இப்போது என்ன செய்வது?’ என்று இருவரும் சிந்திக்கின்றனர். அதைத் தொடர்ந்து டாஷி தனக்குத் தெரிந்ததை வைத்து, ஏதோ விஷ செடியைக் கொண்டு வந்து நசுக்கி, சாறு பிழிந்து தருகிறான். அந்தச் சாற்றை தான் தயாரித்த மதுவில் கலந்து கிழவனுக்குத் தருகிறாள் அந்தப் பெண்.

விஷயம் தெரியாமல் கிழவன் அதை பருகுகிறான். இரவு முழுவதும் முனகிக் கொண்டும், தினறிக் கொண்டும், உளறிக் கொண்டும் இருக்கிறான். உயிர் பிரியவில்லை. ‘அவன் சாவானா என்பது எனக்குத் தெரியாது. நான் எனக்குத் தெரிந்ததைச் செய்தேன்’ என்கிறான் டாஷி. எங்கே போதை முடிந்ததும், கிழவன் சுய உணர்விற்கு வந்து, தன்னை ஒரு வழி பண்ணி விடுவானோ என்று பயப்படுகிறான் டாஷி. அந்த பயத்தில், அவன் அங்கிருந்து தப்பிச் செல்கிறான். கிழவனின் மனைவி தேகி ‘டாஷி… டாஷி… என்னை விட்டுப் போகாதே’ என்கிறாள் உரத்த குரலில். சிறிது நேரத்தில் அந்த குரல் நின்று விடுகிறது.

பதைபதைத்துப் போன டாஷி பின்னால் திரும்பி வருகிறான். மலை ஆறு மிகவும் வேகமாக ‘சளசள’த்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீருக்குள் அந்த இளம் பெண்ணின் ஆடைகள் மிதந்து கொண்டிருக்கின்றன. அவள் ஆற்று நீருடன் போய் விட்டாள். என்ன செய்வது என்று தெரியாத தவிப்புடன் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நிற்கிறான் டாஷி.

அவன் தன் கிராமத்திற்கு வருகிறான். தன் தம்பியைப் பார்க்கிறான். ‘நான் ஒரு உயிரைக் கொன்று விட்ட பாவி’ என்கிறான் கண்ணீர் மல்க.’

கதையை முடிக்கிறார் புத்த மத துறவி. இளம் பெண்ணின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, பாவச் சின்னமாக நின்று கொண்டிருக்கும் டாஷியின் கதை அத்துடன் முடிகிறது. மீண்டும் காத்திருப்பு தொடர்கிறது..

சிறிது தூரத்தில் ட்ராக்டர் ஒன்று வருகிறது. கையை நீட்ட, ட்ராக்டர் நிற்கிறது. இரண்டு பேர் மட்டுமே அதில் ஏற முடியும் என்கிறார் ஓட்டுனர். இளைஞனும் புத்த மத துறவியும் அந்த வியாபாரியையும் அவருடைய ஆசை மகளையும் ட்ராக்டரில் ஏறும்படி கூறுகின்றனர். அதற்கு ‘நாங்கள் பின்னர் போய்க் கொள்கிறோம். நீங்கள் திம்புவில் நடைபெறும் திருவிழாவிற்குச் செல்ல வேண்டும். இவர் அமெரிக்க தூதரகத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் முதலில் செல்லுங்கள்’ என்கிறார் தாள் வியாபாரி புத்த மத துறவியிடம்.

சிறிது நேரம் இனம் புரியாத மவுனம். அந்த இளம் பெண் என்ன சொல்வது என்று தெரியாமல் கவலை நிறைந்த முகத்துடன் இருக்கிறாள். அடுத்த நிமிடம் தன் தோள் பையையும் வானொலிப் பெட்டியையும் கையில் எடுக்கிறான் இளைஞன். புத்த மத துறவியும் தன் பையையும் இசைக் கருவியையும் எடுத்துக் கொள்கிறார். இருவரும் வியாபாரியிடமும், அந்த இளம் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு ட்ராக்டரில் சென்று அமர்கின்றனர். அவர்களைப் பார்த்து கைகளை அசைத்துக் கொண்டு அந்த வியாபாரியும் அவருடைய அழகு மகளும் சாலையின் ஓரத்தில் நின்றிருக்கின்றனர்.

ட்ராக்டர் புறப்படுகிறது. வளைவு ஒன்றில் ட்ராக்டர் திரும்புகிறது. அந்த வியாபாரியும், அந்த இளம் பெண்ணும் அவர்களின் பார்வையிலிருந்து இப்போது மறைந்து விட்டார்கள். புத்த மத துறவி இளைஞனைப் பார்த்து ‘நான் இப்போது இன்னொரு கதை கூறுகிறேன். இந்த கதையில் கிராமத்தில் அரசாங்க வேலை பார்த்த ஒரு இளைஞன் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதற்காக, நேர்முகத் தேர்விற்கு திம்புவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்குச் செல்வதற்காக பல சிரமங்களுடன் பயணிக்கிறான். வழியில் அவன் ஒரு இளம் பெண்ணைப் பார்க்கிறான்…’ என்கிறார். - சிரித்துக் கொண்டே. அதைக் கேட்ட அந்த இளைஞன் தொடர்ந்து கூறுகிறான்: ‘அந்த இளம் பெண்ணைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு ஊசலாட்டம்… அமெரிக்காவிற்குச் செல்வதா? அல்லது திரும்பவும் அந்த இளம் பெண் இருக்கும் கிராமத்திற்கே திரும்பி விடுவதா? இதுதானே அடுத்து நீங்கள் கூறப் போவது?’ என்கிறான் தன்னை மறந்து சிரித்துக் கொண்டே. அவன் சிரிப்பதைப் பார்த்து புத்த மத துறவியும் சிரிக்கிறார். ட்ராக்டர் அவர்களைச் சுமந்து கொண்டு தன் பயணத்தைத் தொடர்கிறது.

படத்தின் முடிவு இதுதான் என்று காட்டப்படவில்லை. அந்த இளைஞன் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று, நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு விசா பெற்றானா… அல்லது… அந்த இளம் பெண்ணால் ஈர்க்கப்பட்டு, மீண்டும் அந்த மலைப் பகுதி கிராமத்திற்கே திரும்பி வந்து, தன் அரசு வேலையைத் தொடர்ந்தானா என்பதை படத்தின் இயக்குனர், படம் பார்ப்போரின் முடிவுக்கே விட்டு விட்டார். புதுமையான முடிவு!

இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு மிகப் பெரிய தேர்வே நடைபெற்றது. விவசாயிகள், பள்ளிக் கூட சிறுமிகள், பூட்டான் வானொலி நிலைய ஊழியர்கள், அரசாங்க ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என்று பலதரப்பட்டவர்களையும் அழைத்து நடிகர் – நடிகை தேர்வு நடத்தினர். அமெரிக்க மோகத்துடன் இருக்கும் இளைஞனாக நடித்தவர் மட்டுமே நடிப்பு அனுபவம் கொண்டவர்.

கதைக்குள் கதை கூறும் புதுமையான உத்தி கையாளப்பட்டிக்கும் இப்படத்தைப் பார்த்து பல நாட்கள் ஆன பிறகும், பூட்டானையும், அதன் மலைப் பிரதேசத்தையும், இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் இடங்களையும், வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதைகளையும், அதில் செல்லும் வாகனங்களையும், கள்ளங்கபடமற்ற மனிதர்களையும், அவர்களின் சிரமங்களையும், அடர்ந்த காடுகளையும், மலர் செடிகளையும், மக்களின் நல்ல மனங்களையும் நம்மால் மறக்கவே முடியாது… அவை ஒவ்வொன்றும் நம் இதயத்திற்குள் பசுமையாக தங்கிக் கொண்டு, ஒரு சுகமான அனுபவத்தைத் தந்து கொண்டிருக்கும் – என்றென்றைக்கும்…

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.