Logo

ஆத்மகத

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 6416
Aathmakatha

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ஆத்மகத- Aathmakatha

(மலையாள திரைப்படம்)

2010ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். எல்லோரும் மரியாதையுடனும், மதிப்புடனும் மனதில் நினைக்கும் ஸ்ரீனிவாசன்தான் படத்தின் கதாநாயகன். கண் பார்வை தெரியாத பாத்திரத்தில் வருகிறார். படம் பார்ப்போர் அனைவரையும் கண் கலங்க வைக்கிறார்.

பிரேம்லால் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர்:அல்ஃபோன்ஸ் ஜோசப். பின்னணி இசை: மோகன் சித்தாரா.

நல்ல ஒரு கதையை பலமாக எண்ணி எடுக்கப்பட்ட படம். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. படம் முடிந்து வெளியே வரும்போது, மிகச் சிறந்த ஒரு படத்தைப் பார்த்து விட்டு வருகிறோம் என்னும் உணர்வு அனைவரின் மனதிலும் உண்டாகும்.

அந்த அளவிற்கு அருமையான கதை... தெளிவான திரைக்கதை... பாராட்டக் கூடிய உரையாடல்கள்... மனதில் நிற்கக் கூடிய உயிர்ப்பான கதாபாத்திரங்கள்.

இவை அனைத்தும் இருக்கும் ஒரு படம் நல்ல படமாகத்தானே இருக்கும்?

அந்த நல்ல படத்தின் கதைதான் என்ன?

கொச்சு- கண் பார்வை தெரியாத இளைஞன். தனக்கு சொந்தமென்று கூற உலகத்தில் யாருமே இல்லாதவன். ஆரம்பத்தில் கண் பார்வையுடன் பிறந்தவன்தான். நல்ல பார்வையுடன், மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடியவன்தான். துள்ளி குதித்து திரிந்தவன்தான்.

இடையில் திடீரென்று அவனுக்கு கண் பார்வை தெரியாமல் போய் விடுகிறது. அதற்கான காரணம் என்ன என்று அவனுக்கே தெரியவில்லை.

அவன் ஒரு சிறிய கிராமத்திலிருக்கும் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான். அவனுக்கு கண் பார்வை தெரியவில்லையே தவிர, மற்றவர்களுக்கு நிகராக அவனாலும் திறமையாக வேலை செய்ய முடியும். மெழுகுவர்த்தி செய்வதோடு அவன் நின்று கொள்வதில்லை. மேடுகளிலும், பள்ளங்களிலும், தேயிலைத் தோட்டத்திற்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் ஒற்றையடிப் பாதைகளிலும் நடந்து சென்று, அவற்றை தேவைப்படுபவர்களுக்கு அவன் கொடுத்து விட்டுச் செல்வான்.

அந்த கிராமத்தில் எங்கெங்கு என்னென்ன இருக்கிறது என்று அவனுக்கு நன்றாக தெரியும். முன்னால் மூன்றடிகள் நடந்தால் என்ன இருக்கிறது, பின்னால் இரண்டடிகள் நடந்தால் என்ன இருக்கிறது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். பின்னால் மூன்றடிகள் நடந்தால், கீழே பாய் விரிக்கப்பட்டிருக்கும், அந்த இடத்தில் நின்று மேலே கையை நீட்டினால், உறி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும் என்ற விஷயங்களெல்லாம் அவனுக்கு அத்துப்படி.

தேவாலயத்திற்கு படிகளில் ஏறிச் செல்லும் கொச்சு, கையிலிருக்கும் கழியைக் கொண்டே, எந்த படி சேதமாகியிருக்கிறது என்பதை கண்டு பிடித்து விடுவான். பாதிரியாரிடன் ‘16வது படி உடைந்திருக்கிறது. அதைச் சரி செய்ய வேண்டாமா?’ என்பான் சிரித்துக் கொண்டே. கொச்சுவின் மீது நிறைய அன்பு வைத்திருப்பவர் அந்த கிராமத்து தேவாலயத்தின் பாதிரியாரான புன்னூஸ். கொச்சுவின் ஆற்றலைப் பார்த்து அவர் மிகவும் ஆச்சரியப்படுவார்.

இதற்கிடையில் அந்த மெழுகுவர்த்திகள் செய்யப்படும் தொழிற்சாலைக்கு புதிதாக வேலைக்கு வருகிறாள் ஒரு இளம் பெண். அவளின் பெயர் மேரி. அவளை அங்கு வேலைக்கு அனுப்பி வைத்ததே பாதிரியார் புன்னூஸ்தான். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்- அவளும் கண் பார்வை இல்லாதவள்.

எங்கிருந்தோ சொந்தமென்று யாருமே இல்லாத அனாதைப் பெண்ணாக வந்த மேரியின் மீது அன்பு வைக்கிறான் கொச்சு. அவளின் மீது அவனுக்கு காதல் உண்டாகிறது. தனக்கென்று யாருமே இல்லாமலிருந்த தான் காதலிக்க ஒரு உயிர் இருக்கிறதே என்ற ஆனந்தம் அவனுடைய மனதில் உண்டாகிறது. மேரியைப் பார்க்கும்போதும், அவளுடைய குரலைக் கேட்கும்போதும் தன்னையே மறக்கிறான் வான். இதற்கு முன்பு அனுபவித்திராத ஒரு புதிய சுகமான உணர்வு அவனுடைய மனதிற்குள் உண்டாகிறது.

கொச்சு, மேரியின் மீது வைத்திருக்கும் காதலை உடன் பணியாற்றுபவர்கள் உணர்கிறார்கள். மேரிக்கும் கொச்சுவின் மீது அதே போன்ற காதல் இருப்பதும் அவர்களுக்குத் தெரிய வருகிறது. பிறகென்ன? எல்லோரும் சேர்ந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். அந்த ஊரின் தேவாலயத்தில், கொச்சு மீது உண்மையான பாசம் வைத்திருக்கும் பாதிரியார் புன்னூஸின் முன்னிலையில் அந்தத் திருமணம் நடைபெறுகிறது.

அந்த கண்பார்வை தெரியாத இரு உள்ளங்களும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், சந்தோஷத்தின் அடையாளமாகவும், நிம்மதி தரும் நிழலாகவும் இருக்கின்றனர். உலகில் சொந்தமென யாருமே இல்லாமலிருந்த கொச்சுவிற்கு சொந்தமென்று கூற மேரி இருக்கிறாள். தன்னை அனாதை என்று நினைத்து நித்தமும் அழுது கொண்டிருந்த மேரிக்கு ‘சொந்தமென்று கூறிக் கொள்வதற்கு ‘நான் இருக்கிறேன்’ என்று கூறி வாழ்க்கையில் அவளுடன் சேர்ந்து பயணிக்கிறான் கொச்சு. அந்த இனிய தம்பதிகள் வாழ்க்கையில் இதுவரை பார்த்திராத, உணர்ந்திராத சந்தோஷத்தையும், குதூகலத்தையும், உற்சாகத்தையும் முதல் முறையாக உணர்கின்றனர்.

இரவு நேரத்தில் தங்களுடைய வீட்டிற்கு முன்னாலிருக்கும் செடிகளுக்கு அருகில் நிலவு வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பற்றியும் சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் பார்வை சக்தி இல்லை என்ற ஒரு குறையைத் தவிர, வேறு எந்த குறைபாடும் அவர்களுக்கு இல்லை. அது கூட, அவர்களைப் பார்ப்பவர்களுக்குத்தான். அவர்களுக்கு அந்த குறைபாடு கூட மனதில் இல்லை. கண் பார்வை இல்லாமலே தினமும் சந்தோஷமாக வாழத்தான் அவர்கள் நன்கு பழகிக் கொண்டு விட்டார்களே!

மாதங்கள் ஓடுகின்றன. பகல் நேரத்தில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில், மாலை வேளைகளில் வீட்டிற்கு முன்னால் அமர்ந்து கொண்டு சுவாரசியமான உரையாடல் என்று அந்த இரு அன்பு இதயங்களின் வாழ்க்கை குதூகலமாக நடந்து கொண்டிருக்கிறது. மேரி கர்ப்பமாகிறாள்.

குறிப்பிட்ட காலத்தில் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை. லில்லி மலரைப் போன்ற அழகான தோற்றத்துடன் பிறந்த அக்குழந்தைக்கு லில்லிக்குட்டி என்று பெயரிடுகிறான் கொச்சு. குழந்தை பிறந்தவுடன் அவனுக்கு ஒரே பதற்றம். எங்கே தங்கள் இருவரையும் போல அந்தக் குழந்தையும் கண் பார்வை இல்லாமல் பிறந்து விட்டதோ என்ற பயம்தான். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. நல்ல பார்வையுடன்தான் குழந்தை பிறந்திருக்கிறது. அது தெரிந்ததும், கொச்சுவிற்கும் மேரிக்கும் உண்டாகும் சந்தோஷம் இருக்கிறதே! அப்பப்பா... அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அந்த இனிய தம்பதிகள் தங்களுக்குப் பிறந்த அந்த அழகுச் சிலையை மிகுந்த பாசத்துடன் வளர்க்கின்றனர். வெறுமனே இருக்கும் நேரங்களில் இருவரும் தங்களின் மடிகளில் குழந்தை லில்லிக்குட்டியை வைத்துக் கொண்டு உலகையே மறக்கின்றனர்.


அந்த சந்தோஷம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்குமா? லில்லிக்குட்டிக்கு மருத்துவமனையில் போலியோ ஊசி போட்டு விட்டு, தேயிலைத் தோட்டத்திற்கு மத்தியில் இருக்கும் சாலையில் கொச்சுவும், மேரியும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். ஒரு இடத்தில் வரும்போது குழந்தை கொச்சுவின் மீது சிறுநீர் பெய்து விடுகிறது. அதை சிரித்துக் கொண்டே தன் மனைவியிடம் கூறும் கொச்சு, சாலையின் மறுபக்கத்தில் இருக்கும் குழாயில் நீர் மொண்டு கொண்டு வரும்படி கூறுகிறான். நீர் எடுப்பதற்காக மேரி சாலையைக் கடக்கும்போது, வளைவிலிருந்து திரும்பி வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரி, அவள் மீது மோத, மேரி சாலையின் ஓரத்தில் வீசி எறியப்படுகிறாள். லாரி ஓட்டுனர் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, ஓடி விடுகிறான்.

அதற்குள் அங்கு கூட்டம் கூடி விடுகிறது. சாலையின் ஓரத்தில் வீசி எறியப்பட்ட மேரியின் உயிர் அந்த கணத்திலேயே பிரிந்து விடுகிறது. இறந்து பரிதாபமாக கிடக்கும் தன் அன்பு மனைவியின் உடலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு தாங்க முடியாமல் அழுகிறான் கொச்சு.

மனைவியே உலகம் என்று வாழ்ந்த கொச்சுவின் வாழ்க்கையில் மனைவி இல்லாமற் போக, மகளே உலகம் என்ற சூழ்நிலை உண்டாகிறது. தன் பாசத்திற்குரிய மகளை மிகவும் கவனம் செலுத்தி வளர்க்கிறான் கொச்சு, லில்லிக்குட்டிக்கும் தன் தந்தையின் மீது அளவற்ற அன்பு. தன் தாய் இறந்த பிறகு, தன்னுடைய தந்தை எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் தன்னை வளர்த்திருக்கிறான் என்பதை அவளும் உணர்ந்தே இருக்கிறாள்.

லில்லிக்குட்டி படிப்படியாக வளர்ந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியாக ஆகிறாள். தன் மகள் பள்ளிக் கூடத்திற்குச் செல்லும் அழகை, அன்புத் தந்தை கொச்சு மனதில் ஆனந்தம் குடி கொள்ள பார்த்துக் கொண்டிருக்கிறான்.

லில்லிக்குட்டியின் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனுக்கு அவளின் மீது ஒரு ஈர்ப்பு. அந்த அழகு தேவதையையே அவன் வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருப்பான்.

ஒரு நாள் வீட்டில் கொச்சு இல்லாமல், லில்லிக்குட்டி மட்டும் தனியாக இருக்கும் நேரம் பார்த்து, அந்த மாணவன் அங்கு வருகிறான். தன் உள்ளத்தில் இருக்கும் ஆசையை அவன் வெளியிடுகிறான். தன் மனதில் சிறிய அளவில் சலனம் உண்டானாலும், அதற்கு என்ன பதில் கூறுவது என்ற தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருக்கிறாள் லில்லிக்குட்டி. அப்போது அங்கு கொச்சு வந்து விடுகிறான். பையன் அங்கிருந்து மெதுவாக ஒரு ஓரத்தின் வழியாக நகர்கிறான். என்ன நடக்குமோ என்று பயந்தவாறு நடுங்கி நின்று கொண்டிருக்கிறாள் லில்லிக்குட்டி. ‘என்ன சத்தம்?’ என்று கொச்சு வினவ, ஏதோ காரணம் சொல்லி நிலைமையைச் சமாளிக்கிறாள் லில்லிக்குட்டி. அடுத்த நிமிடம்- மிகவும் அருகிலேயே மோட்டார் சைக்கிள் ‘ஸ்டார்ட்’ செய்யப்பட்டு, புறப்படும் சத்தம் கேட்கிறது. அப்போதுதான் கொச்சுவிற்கு சந்தேகமே வருகிறது. அந்த சந்தேக எண்ணத்துடன் அவன் தன் மகளின் முகம் பக்கம் திரும்புகிறான். அவனுடைய முகத்தில் இனம் புரியாத கவலையின் அடையாளங்கள் பரவுகின்றன.

லில்லிக்குட்டி 10வது வகுப்பு தேர்வு எழுதுவதற்காக சென்று, எழுதிக் கொண்டிருக்கிறாள். அப்போது அவளுடைய பார்வையில், எழுத்துக்கள் மங்கலாக தெரிகின்றன. பதறிப் போன லில்லிக்குட்டி, வீட்டிற்கு வந்து தன் தந்தையிடம் நடந்த சம்பவத்தைக் கூறுகிறாள். அவ்வளவுதான். ஆடிப் போகிறான் கொச்சு. மருத்துவமனைக்கு அவளை உடனடியாக அழைத்துச் செல்கிறான். அவளைப் பரிசோதித்த டாக்டர் அவளுக்கு குணப்படுத்த முடியாத நோய் வந்திருப்பதாகவும், அவளுடைய நரம்புகள் அந்த நோயால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகவும், வெகு சீக்கிரமே அவள் தன்னுடைய கண் பார்வையை இழந்து விடுவாள் என்றும் கூறுகிறார்.

அதைக் கேட்டு கொச்சு, லில்லிக்குட்டி இருவரும் தாங்க முடியாமல் அழுகின்றனர். தன் மகள் நல்ல கண் பார்வையுடன் இருக்கிறாள் என்ற ஒரே நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருந்த கொச்சுவின் இதயத்தில் ஒரு இடி விழுந்ததைப் போல இருக்கிறது.

மீதி தேர்வுகளை லில்லி எழுதவில்லை. கண் பார்வை முன்பு போல இல்லாமல், மங்கலாக ஆகி விட்ட பிறகு, அவள் எப்படி தேர்வு எழுத முடியும்? வெறுமனே வீட்டில் அமர்ந்து கொண்டு, தன் நிலைமையை நினைத்து அழுவதே அவளுடைய அன்றாடச் செயலாகி விட்டது. அவளுக்கு இந்த நிலைமை உண்டான பிறகு, அவளை வட்டமிட்டுக் கொண்டிருந்த அந்த மாணவன் கூட இந்தப் பக்கம் வருவதில்லை. ‘இதுதான் உலகம்!’ என்று மனதைத் தேற்றிக் கொள்கிறாள் லில்லிக்குட்டி.

தன் வீட்டிலிருந்து சற்று தூரத்திலிருக்கும் தன்னுடைய தோழியின் வீட்டிற்கு ஒருநாள் செல்கிறாள் லில்லிக்குட்டி. தன் வீட்டை விட்டு வெளியே அவள் சென்றதே அன்றுதான்.

ஒரு இரவு நேரம். மின்சாரம் திடீரென்று இல்லாமற் போனதால், வீடே இருட்டாக இருக்கிறது. தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்கலாம் என்பதற்காக கொச்சு தீப்பெட்டியைத் தேடுகிறான். அப்போது ஒரு பெட்டிக்குப் பின்னால் கையில் ஏதோ சிக்குகிறது. என்னவென்று தடவிப் பார்த்தால், அது - செடிகளுக்கு அடிக்கப்படும் பூச்சி மருந்து. தன் தோழியைப் பார்க்கச் சென்ற லில்லிக்குட்டி, அவளின் தோட்டத்திலிருந்து அதை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து, அங்கு மறைத்து வைத்திருக்கிறாள். தன் அன்பு மகள் அந்த பூச்சி மருந்தைச் சாப்பிட்டு, உயிரை விட தீர்மானித்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்கிறான் கொச்சு. அடுத்த நிமிடம்- அந்த புட்டியை அவன் அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கிறான்.

அன்று முழுவதும் அவனுக்கு தூக்கமே வரவில்லை. தன் உயிருக்கு உயிராக இருந்த மனைவிதான் தன்னை விட்டு போய் விட்டாள், மகள் ஒருத்தி இருக்கிறாளே என்ற நிம்மதியுடன் வாழ்ந்தால், இப்போது அந்த சந்தோஷத்திற்கும் முற்றுப் புள்ளி உண்டாகும் நிலைமை வந்து விட்டதே என்பதை நினைத்து கண்களில் கண்ணீர் மல்க அவன் கவலையுடன் படுத்திருக்கிறான்.

மறுநாள் பொழுது புலர்கிறது. ஆரம்ப காலத்திலிருந்து தான் அனுபவித்த சிரமங்கள் அனைத்தையும் லில்லிக்குட்டியிடம் கூறுகிறான் கொச்சு. தானும் தன் மனைவி மேரியும் அவளை கஷ்டப்பட்டு வளர்த்தது, சிரமங்களுக்கு மத்தியிலும் அளவற்ற பாசத்தை அவள் மீது செலுத்தியது, எதிர்பாராமல் தன் மனைவி மரணத்தைச் சந்திக்க, தான் மட்டும் பலவித போராட்டங்களுக்கு மத்தியில் அவளை சிறு கஷ்டம் கூட தெரியாமல் வளர்த்தது, அவளே தன் உலகம் என்று வாழ்ந்தது- இப்படி ஒவ்வொன்றையும் அவன் கண்ணீர் மல்க கூற கூற, தன் தந்தையையே கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் லில்லிக்குட்டி.

‘நான் இனி இறக்கும் முடிவை எந்த காரணத்தைக் கொண்டும் எடுக்கவே மாட்டேன்’ என்று தன் தந்தைக்கு சத்தியம் பண்ணி கூறுகிறாள் லில்லிக்குட்டி. அப்போது அவள் தைரியம் கொண்ட ஒருத்தியாக மாறுகிறாள். தன் தந்தை இத்தனை வருடங்களாக கண் பார்வை இல்லாமல், சிரித்த முகத்துடன் சந்தோஷமாக வாழும்போது, தன்னால் வாழ முடியாதா என்று அவள் நினைக்கிறாள். எது நடந்தாலும், வாழ்க்கையை நேரடியாக சந்திப்பது என்ற முடிவுக்கு வருகிறாள். அதைத் தொடர்ந்து தன் கண்களை தானே மூடிக் கொண்டு, ஒவ்வொரு செயலையும் செய்ய பழகுகிறாள்.

மெழுகுவர்த்தி தொழிற்சாலைக்கு அவளை அழைத்துச் சென்று எப்படி மெழுகுவர்த்தி செய்வது என்பதை அவளுக்கு கொச்சு செய்து காட்டுகிறான். தன் தந்தை கற்றுத் தந்தபடி, அருமையாக மெழுகுவர்த்தி செய்கிறாள் லில்லிக்குட்டி.

படத்தின் இறுதி காட்சியில் லில்லிக்குட்டிக்கு கண் பார்வை முழுமையாக இல்லாமற் போகிறது. ஆனால், அவள் அதற்காக சிறிதும் அழவில்லை. மாறாக, வாய் விட்டு சிரிக்கிறாள். கண் பார்வை இல்லாமற் போனதற்காக, தனக்கு கவலையோ பயமோ எதுவுமே இல்லை என்கிறாள். தன் அன்பு மகள் அப்படி கூறுவதை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் அந்த அருமைத் தந்தை.

அவர்களுக்கு கண் பார்வை இல்லாமற் போகலாம். ஆனால், அவர்கள் உலகிற்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திகளை இனியும் உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.

மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தைப் பார்க்கும்போது, அந்தக் கள்ளங்கபடமற்ற உயர்ந்த உள்ளத்திற்குச் சொந்தக்காரனான கொச்சுவும், அவனின் இறந்த கண் பார்வையற்ற மனைவி மேரியும், அவர்களின் செல்ல மகள் லில்லிக்குட்டியும் கட்டாயம் ஞாபகத்தில் வரவேண்டும்... வருவார்கள்!

கொச்சுவாக படம் முழுக்க வாழ்ந்திருப்பவர் ஸ்ரீனிவாசன். இவரைத் தவிர, வேறு யாருமே இந்த கதாபாத்திற்கு இந்த அளவிற்கு உயிர் தந்திருக்க முடியாது. நூறு சதவிகிதம் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அருமையாக பொருந்தியிருக்கிறார் ஸ்ரீனி.

கொச்சுவின் அன்பு மனைவி மேரியாக- ஷர்பானி முகர்ஜி. இயல்பான நடிப்பு!

அவர்களின் செல்ல மகள் லில்லிக்குட்டியாக ஷாஃப்னா. என்ன அழகு முகம்! அந்த கபடமற்ற முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றுகிறது! மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

பாதிரியார் புன்னூஸாக- ஜகதி ஸ்ரீகுமார்.

ஒளிப்பதிவு : சமீர் ஹக்

படத் தொகுப்பு: மகேஷ் நாராயணன்

ஒரு தரமான, யதார்த்தமான கதையை எழுதி, அதை திறமையாக இயக்கியிருக்கும் பிரேம்லால் அவர்களே... உங்களின் முதுகைத் தட்டி பாராட்டுகிறேன், உங்களின் அருமையான முயற்சிக்காக! உங்களின் இத்தகைய நல்ல முயற்சிகள் இனியும் தொடரட்டும்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.