Logo

15 பார்க் அவென்யூ

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 5898
15 Park Avenue

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

15 Park Avenue

(இந்திய ஆங்கில திரைப்படம்)

பர்ணா சென் இயக்கிய ஒரு மாறுபட்ட கதைக் கருவைக் கொண்ட குறிப்பிடத்தக்க திரைப்படம்.

2005ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் அந்த ஆண்டின் ‘இந்தியாவில் உருவான சிறந்த ஆங்கிலப் படம்’ என்பதற்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது.

Schizophrenia என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. கதையை அபர்ணா சென்னே எழுதியிருக்கிறார்.

மிட்டாலி என்ற மீத்தி Schizophreniaவால் பாதிக்கப்பட்டவள்.

அவளுக்கு ஒரு அக்கா. அவளின் பெயர் அஞ்சலி. அனு என்று எல்லோரும் அவளை அழைப்பார்கள். அனுவிற்கும் மீத்திக்கும் வயது வித்தியாசம் மிகவும் அதிகம். அவர்களின் அன்னையும் உயிருடன் இருக்கிறாள். அவளின் வயது அதிகம். மீத்தியை ஒரு சிறு குழந்தையைப் போல கவனம் செலுத்தி பார்த்துக் கொள்கின்றனர் அனுவும், அவளின் தாயும். மீத்தி, தன் தாயின் இரண்டாவது கணவருக்கு மகளாக பிறந்தவள். எனினும், அனு அவளின் மீது உயிரையே வைத்திருக்கிறாள். அவளுக்கு ஒரு சிறிய கீறல் உண்டானாலும், அதை அனுவால் தாங்கிக் கொள்ள முடியாது. எச்சிலை ஒழுக விட்டுக் கொண்டு பேசும், சாப்பிடும் உணவு உதட்டுக்கு வெளியே வருவது மாதிரி சாப்பிடும் மீத்தியின் செயல்களை மிகவும் ரசித்துப் பார்ப்பாள் அனு.

30 வயதை எட்டி விட்ட மீத்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனினும், தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி விட்டது என்றும், தனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றன என்றும் அவள் தன் மனதில் ஒரு கற்பனை கோட்டையைக் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

கொல்கத்தா நகரத்தில் 15 பார்க் அவென்யூ என்ற முகவரியில் தனக்கு ஒரு, வீடு இருக்கிறது என்றும், அங்குதான் தன்னுடைய கணவனும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள் என்றும் மீத்தி கூறுகிறாள். தன் கணவனையும், குழந்தைகளையும் பார்க்க விடாமல் தன்னை வீட்டிற்குள்ளேயே சுதந்திரம் தராமல் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அவள் தன் அக்கா அனுவையும், வயதான தாயையும் குற்றம் சுமத்துகிறாள். அவர்கள் என்னதான் விளக்கம் கூறினாலும், அதை ஏற்றுக் கொள்ள அவள் தயாராக இல்லை. திரும்பத் திரும்ப அவர்களின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறாள். தாங்க முடியாத அளவிற்கு கோபத்தை வெளிப்படுத்துகிறாள்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே மீத்தியின் அக்கா அனு காரை ஓட்ட, அருகில் மீத்தி உட்கார்ந்திருக்க, ஒவ்வொரு தெருவாக இருவரும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கண்ணில் படுபவர்களிடமெல்லாம் ‘பார்க் அவென்யூ எங்கே இருக்கிறது?’ என்று கேட்கிறாள் மீத்தி. அப்படி ஒரு அவென்யூவே அங்கு இல்லை என்கின்றனர் எல்லோரும். உண்மையிலேயே அப்படியொரு இடமே இல்லை. மீத்தி தன் மனதில் கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கும் இடம், உண்மையில் எங்கிருந்து வரும்?

கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றும் அனு ‘எனக்காக வகுப்பில் மாணவர்களும் மாணவிகளும் காத்திருப்பார்கள். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம்’ என்று காரைத் திருப்ப, அதற்காக மிகவும் மனம் நொந்து கவலைப்படுகிறாள் மீத்தி.

அனுவிற்கும் அவளுடன் பணியாற்றும் போராசிரியர் ஒருவருக்குமிடையே ஒரு புரிதல் கொண்ட நட்பு இருக்கிறது. ஆனால், மீத்திக்காக தன்னுடைய சொந்த வாழ்க்கையைக் கூட பெரிதாக எண்ணாமல், எல்லாவற்றையும் தள்ளிப் போட்டு விட்டு, வயதை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறாள் அனு.

மீத்தியின் உடல் நிலையில் தீவிர கவனம் செலுத்துகிறார் புதிய டாக்டரான குணால் பருவா. சிறு வயதிலிருந்தே Schizophreniaவிற்கான அறிகுறிகள் இருந்தாலும், 20 வயது வரை சாதாரண பெண்களைப் போலவே மீத்தியும் இருந்து வந்திருக்கிறாள் என்று டாக்டரிடம் கூறுகிறாள் அனு. ஆனால். பத்திரிகை ரிப்போர்ட்டராக பணி புரிந்த காலத்தில் நடைபெற்ற ஒரு கொடூர சம்பவத்திற்குப் பிறகுதான், மீத்தியின் வாழ்க்கையே திசை மாறிப் போகிறது. அதற்குப் பிறகுதான் அவள் மற்றவர்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டு, தனக்கென்று ஒரு உலகத்தைப் படைத்துக் கொண்டு கற்பனை உலகத்தில் வாழ ஆரம்பிக்கிறாள்.

தான் ‘ஜர்னலிஸ்ட்’ ஆக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவள் ஒரு அறையில் தங்கியிருக்க, தனிமையில் இருக்கும் அந்த கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் அமர்ந்திருந்த ரவுடிகள் சிலர் அவளின் கற்பைச் சூறையாடி, இரத்தம் வழிய அவளை வெளியே போட்டு விட்டு போய் விடுகின்றனர். சுய உணர்வு இல்லாமல், மயங்கிக் கிடந்த அவளைத் தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனையில் கவனமாகப் பார்த்துக் கொண்டவளே அனுதான்.

அந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு அவளுக்கும் ஜாய் தீப் என்ற இளைஞனுக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. அரசியல் பின்புலம் கொண்ட சமூக விரோதிகளால் கற்பழிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகி, கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மீத்தியுடன் நடத்திய திருமண நிச்சயதார்த்தத்தை ரத்து செய்து விடுகிறான் ஜாய்தீப்.


டாக்டரின் அறிவுரைப்படி, அனு தன் தங்கை மீத்தியை ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்று எண்ணி பூட்டானுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அப்போது ஜாய்தீப் தான் திருமணம் செய்து கொண்ட பெண்ணுடனும், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடனும் சுற்றுலா வந்திருக்கிறான். சிறு குழந்தையைப் போல நடைபோட்டுக் கொண்டிருக்கும் மீத்தியை ஜாய்தீப் பார்த்து விடுகிறான்.

இப்போதைய நிலையில், ஜாய்தீப்பை மீத்திக்கு அடையாளம் தெரியவில்லை. அவனை இப்போதுதான் முதல் தடவையாக பார்ப்பதாக அவள் நினைக்கிறாள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்- அவள் தன் மனதில் கணவன் என்று கற்பனை பண்ணி வைத்துக் கொண்டிருப்பது அவனைத்தான். கற்பனை உலகத்தில் அவனுடைய பெயர் ஜாய்தீப் அல்ல – ஜோஜோ. அவளுடைய கற்பனை உலகத்தில் அவளுடைய ஐந்து குழந்தைகளுக்கும் தந்தை அவன்தான். எனினும், அவனே நேரில் வந்து அவளுடன் பேசும்போது, யாரோ ஒரு மூன்றாவது மனிதருடன் உரையாடுகிறோம் என்பதைப் போலத்தான் அவள் நடந்து கொள்கிறாள்.

அவனிடம் தான் தேடிக் கொண்டிருக்கும் 15, பார்க் அவென்யூ முகவரியைப் பற்றியும், அங்கிருக்கும் தன்னுடைய வீட்டிற்குப் போக விடாமல் தன்னை தன சகோதரி அனுவும், அன்னையும் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறாள் மீத்தி. அந்த முகவரியைக் கண்டு பிடிப்பதற்கு தான் அவளுக்கு உதவுவதாக வாக்குறுதி அளிக்கிறான் ஜாய்தீப்.

அவர்கள் அனைவரும் மீண்டும் கொல்கத்தாவிற்குத் திரும்பி வருகிறார்கள். மீத்தி தன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் முகவரி இருக்கும் இடத்தை அவளுக்கு காட்டுவதாகக் கூறி, காரில் அவளை அழைத்துச் செல்கிறான் ஜாய் தீப்.

என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று அந்த காரைப் பின்பற்றி இன்னொரு காரில் வருகிறார்கள் அனுவும், அவளுடைய தாயும்.

ஒரு இடத்தில் கார்களுடன் எல்லோரும் நின்றிருக்க, மெதுவாக முன்னோக்கி ஒரு தெருவில் நடந்து செல்கிறாள் மீத்தி. அவளுடைய கண்களில் ‘பார்க் அவென்யூ’ என்ற பெயர் பலகை படுகிறது. ‘15’ என்ற எண்ணும் (ஆனால், அப்படி ஒரு எண்ணும் இல்லை... தெருவும் இல்லை). அந்த எண் கொண்ட பங்களாவிற்குச் செல்லும் ‘கேட்’டிற்குள் நுழைந்து நடக்கிறாள் மீத்தி. அங்கிருக்கும் மிகப் பெரிய நவீன பங்களாவிற்கு முன்னால் அவளை எதிர்பார்த்துக் கொண்டு, அவளுடைய ஐந்து குழந்தைகளும் ஆவலுடன் இருக்கின்றனர். அவளைப் பார்த்ததும், அவர்கள் ‘மம்மி... மம்மி...’ என்று பாச மழை பொழிகின்றனர். மீத்தி அவர்களை பாசத்துடன் அணைத்துக் கொள்கிறாள். அப்போது அன்புடன் அங்கே வருகிறான் அவளுடைய கற்பனை கணவனான ஜோஜோ. அவன் அவளின் தோளில் காதலுடன் கை வைக்க, அவர்கள் குழந்தைகளுடன் வீட்டிற்குள் செல்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க, கார்களுடன் நிற்கும் அனுவும், அவளின் தாயும், ஜாய் தீப்பும் மீத்தியைத் தேடுகின்றனர். அவளின் பெயரைக் கூறி அழைக்கின்றனர். எவ்வளவு தேடியும் அவள் கிடைக்கவில்லை. அவள் எங்கே போனாள்? எங்கு போய் மறைந்தாள்? அவர்கள் செயலற்ற நிலையில், திகைத்துப் போய் நிற்கின்றனர்.

‘Surrealistic’ பாணியில் இப்படத்தின் climax அமைக்கப்பட்டிருக்கிறது.

மிட்டாலி என்ற மீத்தியாக வாழ்ந்திருப்பவர் கொங்கொனா சென்ஷர்மா (என்ன அபாரமான நடிப்புத் திறமை!)

அவளின் சுயநலமற்ற, தியாக குணம் கொண்ட அக்கா அஞ்சலி என்ற அனுவாக ஷபனா ஆஸ்மி. (இவரைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தங்கையின் மீது பாசத்தைக் கொட்டும்போதும், அவள் படும் கஷ்டங்களைப் பார்த்து கண்ணீர் விடும்போதும், தன் தங்கையைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால், கோபமடைந்து ஆவேசமாக பேசும்போதும், டாக்டரிடம் தன் தங்கையைப் பற்றி விளக்கி கூறும்போதும் தான் ஒரு பண்பட்ட நடிகை என்பதையும், நடிப்புக் கலையில் பல பரிமாணங்களையும் தன்னால் காட்ட முடியும் என்பதையும் வெளிப்படுத்தி, நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் ஷபனா ஆஸ்மி. பல இடங்களில் நான் ஷபனா ஆஸ்மியின் நடிப்பைப் பார்த்து, என்னை மறந்து கை தட்டினேன். என்ன அருமையான நடிகை!)

மீத்தி, அனு – இருவரின் அன்னையாக மூத்த நடிகை வஹீதா ரஹ்மான். பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தம்!

டாக்டராக Dhritiman Chatterjee. அவரின் அனுபவ நடிப்பு, எல்லா காட்சிகளிலும் நன்கு தெரிகிறது.

மீத்தியை திருமணம் செய்ய வந்து, நிச்சயம் செய்து, அதிலிருந்து விலகிய ஜாய் தீப்பாகவும், அவளின் கற்பனை உலகத்தில் அவளுடைய கணவன் ஜோஜோவாகவும் – ராகுல் போஸ். வழக்கம்போல மிகையற்ற, இயல்பான நடிப்பு!

புதுமையான கோணத்தில் உருவாக்கப்பட்ட கதையைக் கொண்ட படம் – அதற்காகவும், பல அற்புத கலைஞர்களின் திறமைக்காகவும் இப்படத்தைப் பார்க்கலாம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.