Logo

ஆஃப்டர்ஷாக்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 6434
Aftershock

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

Aftershock

(சீன திரைப்படம்)

சில திரைப் படங்களை, பார்த்த சில நிமிடங்களிலேயே மறந்து விடுவோம். சில திரைப்படங்கள் சில நாட்கள் நம் மனங்களில் தங்கி நிற்கும். சில சிறந்த திரைப் படங்கள் மட்டுமே எத்தனை வருடங்கள் ஆனாலும், நம் மனங்களை விட்டு சிறிதும் நீங்காமல், அப்படியே சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தகைய ஒரு படமே இது.

2010ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் Feng Xiaogang. 1976ஆம் ஆண்டு சீனாவில் உள்ள Tangshan என்ற ஊரில் உண்டான பயங்கரமான பூகம்பத்தையும், அதனால் உண்டான மோசமான விளைவுகளையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதே இப்படத்தின் கதை. மிகப் பெரிய செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வர்த்தக ரீதியாக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. சீனாவில் பெரிய வெற்றியைச் சந்தித்த படங்களில் இது ஒன்று.

படத்தின் கதை இது:

1976ஆம் ஆண்டில் Tangshan என்ற ஊரில், Li Yuanni என்ற பெண் தன் கணவனுடனும், தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுடனும் ஒரு சிறிய வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறாள். அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று ஆண். இன்னொன்று பெண். லீ தன் கணவன் Fang Daqiang இடம் தனக்கு இன்னொரு குழந்தையும் வேண்டும் என்கிறாள். அதைத் தொடர்ந்து அவர்கள் தங்களுடைய‘ட்ரக்’வண்டிக்குப் பின்னால் போய் ஒதுங்குகிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் வீட்டில் படுத்திருக்கிறார்கள். அப்போது திடீரென்று பூகம்பம் உண்டாகிறது. பூமி பிளக்கிறது. அங்கிருந்த கட்டிடங்கள் தரை மட்டமாகி பெயர்ந்து கீழே விழுகின்றன. எங்கு பார்த்தாலும் இடிந்து கிடக்கும் கட்டிடங்கள்…

தங்களின் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக அந்த பெற்றோர் பாய்ந்தோடுகிறார்கள். லீயைக் கையைப் பிடித்து பின்னால் இழுத்த அவளுடைய கணவன் முன்னால் ஓடுகிறான். ஆனால், கட்டிடம் இடிந்து விழுந்து, அவன் நசுக்கப்பட்டு இறக்கிறான்.

அவர்களுடைய வீடு இடிந்து கிடக்கிறது. குழந்தைகள் இரண்டும் ஒரு காங்க்ரீட் தூண் மேலே விழ, கீழே கிடக்கின்றனர். உயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு குழு வருகிறது. குழந்தைகளின் மீது விழுந்து கிடக்கும் காங்க்ரீட் தூணை அகற்ற வேண்டியது முதல் வேலை. ஆனால், அந்தத் தூணை அகற்றினால் இரு குழந்தைகளில் யாராவது ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும்- இன்னொருவர் அதன் கீழ் நசுங்குவதை தவிர்க்க முடியாது என்கிறது காப்பாற்ற வந்த குழு, லீ என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறாள். சிறிது நேர யோசனைக்குப் பின், தன் மகன் Fang Da வைக் காப்பாற்றும்படி லீ கூறுகிறாள். அவள் கூறுவதை கண்களை மூடிக் கொண்டு, காங்க்ரீட் தூணுக்குக் கீழே பாதி மயக்க நிலையில் படுத்திருக்கும் பெண் குழந்தை Fang Deng கேட்கிறாள். பையன் காப்பாற்றப் படுகிறான்.

பூகம்பத்தில் இறந்த உடல்கள் குவியல் குவியலாக அடுத்தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கில்… அவற்றில் Fang Dengம் இருக்கிறாள். மழை விடாமல் பெய்கிறது. இறந்த உடல்கள் மழை நீரில் நனைந்து மண்ணில் கிடக்கின்றன. கீழே கிடக்கும் Fang Dengஇன் உடலில் மழைத் துளிகள் விழ, உடலில் ஒரு சிலிர்ப்பு… சிறிய அசைவுகள்…Fang Deng மெதுவாக தன் கண்களைத் திறக்கிறாள். அவள் சாகவில்லை. சுய உணர்வற்ற நிலையில் அவள் இருக்க, இறந்து விட்டாள் என்று நினைத்து அவளைப் பிணங்களுடன் சேர்த்து போட்டுவிட்டு போய் விட்டனர்.

இரவு நேரம்… ஒரே இருட்டு… மருந்துக்குக் கூட வெளிச்சம் இல்லை. தான் படுத்திருந்த இடத்தை விட்டு Fang Deng மெதுவாக எழுகிறாள். மெல்ல நடக்கிறாள்.

மயானத்தைப் போல இருக்கும் அந்த பரந்து கிடக்கும் இடத்தில் அந்தச் சிறுமி தான் மட்டும் தனியே செயலற்ற நிலையில் மெதுவாக நடந்து செல்கிறாள். கலைந்த தலை முடியுடன், உடல் முழுவதும் களைத்துப் போய், எல்லாவற்றையும் இழந்து விட்ட மன உணர்வுடன் உயிரற்ற நிலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் அவளை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் பார்க்கிறார்கள். அவர்கள் தங்களின் பிள்ளைகளை பூகம்பத்திற்கு பறி கொடுத்து விட்டார்கள். எல்லோரையும் பூகம்பத்தில் இழந்துவிட்ட அனாதை என்று அந்தச் சிறுமியை நினைக்கும் அவர்கள், அவளைத் தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர்.

Fang Deng வாய் திறந்து எதுவும் பேச மாட்டேன் என்கிறாள். ஆனால், காலப் போக்கில் பேச ஆரம்பிக்கிறாள். அவளைத் தத்தெடுத்து தங்களின் ஊருக்கு அழைத்துச் சென்ற அந்த கணவனும், மனைவியும் அவளைத் தங்களின் செல்ல மகளாக, பொன்னைப் பாதுகாப்பதைப் போல பாதுகாத்து பொக்கிஷமென வளர்க்கின்றனர்.

பத்து வருடங்கள் கடந்தோடுகின்றன. Fang Deng இன் இப்போதைய பெயர் Wang Deng (Wang என்பது வளர்ப்பு தந்தையின் பெயரின் முதல் பகுதி). அவள் மருத்துவக் கல்வி கற்கிறாள். அங்கிருந்து வெளியேறிய பிறகு, அவள் Yang Zhi என்ற ஒரு பட்டதாரி இளைஞனைப் பார்க்கிறாள். அவர்களுக்கிடையே காதல் அரும்புகிறது. Fang Deng மூன்றாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது, அவளுடைய வளர்ப்புத் தாய் உடல் நலம் பாதிக்கப்படுகிறாள். தான் இறப்பதற்கு முன்னால், தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு தன்னுடைய உண்மையான குடும்பத்தைக் கண்டு பிடிக்கும்படி அவள் Fang Deng இடம் கேட்டுக் கொள்கிறாள்.


Fang Deng  தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள். Yang கர்ப்பத்தை உடனடியாக கலைத்து விடும்படி கூறுகிறான். அதற்கு மறுத்து விடுகிறாள் Fang Deng. அவள் பல்கலைக் கழகத்தை விட்டு, யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறாள். Yang ஐயும், தன் வளர்ப்புத் தந்தையையும் விட்டு (தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தால், அவர் மிகவும் கவலைப்படுவார் என்று அவள் நினைக்கிறாள்) அவள் வெகுதூரம் போய் விடுகிறாள்.

இதற்கிடையில் Fang Da படிப்படியாக வளர்கிறான். தன் அன்னையுடன்தான் அவன் இருக்கிறான். பூகம்பத்தின் இடிபாடுகளுக்குக் கீழே கிடந்ததால், அவனுடைய இடது கரத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி விடுகிறது. பல்கலைக் கழகத்தின் நுழைவுத் தேர்விற்குச் செல்லாமல், அவன் தனக்கென்று ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கிறான். தன்னுடைய ‘பை’க்கில் ஆட்களை ஏற்றிக் கொண்டு போய், அவர்கள் போக நினைக்கும் இடத்தில் இறக்கி விடுவது – இதுதான் அவனுடைய வேலை.

காலப் போக்கில் அவன் தன்னுடைய தாயை விட்டு நீங்கி, ஒரு பெரிய ‘ட்ராவலிங் ஏஜென்ஸி’யின் உரிமையாளராக ஆகிறான். அவனுக்குத் திருமணம் நடக்கிறது. ஒரு மகனும் பிறக்கிறான். அவனுக்கு Fang Da வைக்கும் பெயர் – Diandian.

நான்கு வருடங்களுக்குப் பிறகு, Fang Deng மீண்டும் தன்னுடைய வளர்ப்புத் தந்தையைப் பார்ப்பதற்காக வருகிறாள். இப்போது அவளுடன், அவளுடைய மகளும் இருக்கிறாள். மகளுக்கு அவள் வைத்திருக்கும் பெயர் Diandian. (Fang Da தன் மகனுக்கு வைத்திருக்கும் அதே பெயர்தான்.) தான் செய்த தவறைக் கூறி, தன் வளர்ப்புத் தந்தையிடம் மன்னிப்பு கேட்கிறாள் Fang Deng.  புதிய வருடத்தின் மாலை நேரத்தில், தான் ஒரு வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொண்டிருக்கும் தகவலை தன் வளர்ப்புத் தந்தையிடம் கூறும் அவள், தன்னுடைய மகளுடன் கனடாவில் இருக்கும் Vancouver  என்ற இடத்திற்குப் போய், அங்கேயே குடியிருக்கப் போவதாக கூறுகிறாள்.

2008ஆம் ஆண்டு. Sichuan என்ற இடத்தில் பூகம்பம் உண்டாக, அந்த சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்க்கிறாள் Fang Deng.  உடனடியாக சம்பவம் நடைபெற்ற அந்த இடத்திற்குச் சென்று, பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவள் முடிவெடுக்கிறாள். அதைத் தொடர்ந்து அவள் சீனாவிற்குக் கிளம்புகிறாள்.

பூகம்பம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும் என்று Fang Da வும் தீர்மானிக்கிறான். அண்ணனும், தங்கையும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள்- யார் என்று தெரியாமலே. Fang Da தன்னுடன் இருந்தவர்களிடம், Tangshanஇல் உண்டான பூகம்பத்தைப் பற்றி கூறிக் கொண்டிருப்பதை, Fang Deng கேட்கிறாள். அவன் தன் அண்ணன் என்பது அவளுக்குத் தெரிகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஒரே வயிற்றில் பிறந்த அந்த அண்ணனும், தங்கையும் ஒன்று சேர்கின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து, தங்களின் அன்னையைப் பார்க்கச் செல்கின்றனர். முதலில், தன் தாயின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் Fang Deng. தன்னை கை விட்டவள்தானே அவள் என்று Fang Deng  நினைக்கிறாள்.

ஆனால், இத்தனை வருடங்களும் தன் மகளுக்கு தான் செய்த கெடுதலுக்காக மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டும், குற்ற உணர்வால் வேதனைப்பட்டுக் கொண்டும், அதற்காக காலம் முழுவதும் கண்ணீர் விட்டுக் கொண்டும், புகைப்படத்தில் இருக்கும் தன் செல்ல மகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் இருந்திருக்கிறாள் அந்த அன்பு தாய். இந்த உண்மை தெரிந்ததும், தன் அன்னை மீது தான் கொண்டிருந்த கோபத்தை அக்கணத்திலேயே Fang Deng  விட்டொழிக்கிறாள்.

Tangshan பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவிய மக்களின் நினைவாக உண்டாக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு முன்னால் தங்களின் அன்னையுடன் நின்று கொண்டிருக்கிறார்கள் Fang Daவும் Fang Dengம். பூகம்பத்தில் இறந்த 2,40,000 பேரின் பெயர்களும் அந்த நினைவுச் சின்னத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் அவர்களுடைய தந்தை  Fang Daqiangன் பெயரும் இருக்கிறது. அந்த நினைவுச் சின்னத்திற்கு முன்னால் தலையைக் குனிந்து கொண்டு அவர்கள் மரியாதை செலுத்திக் கொண்டிருக்க, படம் முடிவடைகிறது.

‘Aftershock’ஐ ஒரு திரைப்படம் என்றே என்னால் நினைக்க முடியவில்லை. மனித வாழ்க்கையையும், மனிதர்களையும், அவர்களின் உணர்வுகளையும் என்ன அருமையாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர் Feng Xiaogang!

Fang Deng என்ற குழந்தையாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் Zhang Zifeng இன் நடிப்பும், முகத்தில் பரவிக் கிடக்கும் சோகமும் இப்போது கூட என் மனதில் பசுமையாக நின்று கொண்டிருக்கின்றன.

அண்ணனும், தங்கையும், தாயும் பல வருடங்களுக்குப் பிறகு இணையும் காட்சி இருக்கிறதே! அதை நம்மால் மறக்க முடியுமா?

எந்தவித காரணத்தைக் கொண்டும் பார்க்காமல் இருக்கக் கூடாது என்று கூறுவார்கள் அல்லவா? அத்தகைய ஒரு படமாக ‘Aftershock’ படத்தை நான் எப்போதும் கூறுவேன். என் மனதின் அடித்தளத்தில் நிரந்தரமாக உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காவியம் இது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.